Mulla Sadra - Persian philosopher and theologian
முல்லா
சத்ரா என்று பிரபலமாக அறியப்படும் முஹம்மது இப்னு இப்ராஹிம் கவாமி ஷிராசி ஒரு முன்னணி
பாரசீக தத்துவஞானி, இறையியலாளர், ஷியா அறிஞர் மற்றும் சட்ட வல்லுநர் ஆவார், சஃபாவிட்
ஷா அப்பாஸ் I இன் கீழ் தத்துவத்தின் மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த இவர் அவரது
சொந்த ஊரான ஷிராஸில் உள்ள மதரஸா-யி கான் இல் மிகவும் செல்வாக்கு மிக்க ஆசிரியரும் ஆவர்.
முல்லா சத்ரா புனித குர்ஆன் மற்றும் ஹதீஸ்களைப் பற்றிய ஆழமான அறிவைக் கொண்டிருந்தார்,
மேலும் அவர் சந்தித்த தத்துவ சிக்கல்களின் தீர்வுக்கு அவற்றின் ஆழமான கருத்துக்களை
நாடினார்.
முல்லா
சத்ராவின் வாழ்க்கை அறிவுசார் நோக்கங்கள் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பால்
தனித்துவம் பெற்றது. 1571 இல் பிறந்த இவர் ஷிராஸின் ஒரு உன்னத குடும்பத்தின் ஒரே மகனாக
இருந்தார். இவரது தந்தை குவாஜா இப்ராஹிம் கவாமி ஒரு மார்க்க அறிஞர் மற்றும் மார்க்கப்பற்றுள்ள
அரசியல்வாதி. செல்வம், மரியாதை மற்றும் அந்தஸ்து இருந்தபோதிலும், அவருக்கு குழந்தைகள்
இருக்கவில்லை, இறைவனிடம் மனமுகர்ந்த பிரார்த்தனையின் விளைவாக, அவருக்கு ஒரு மகன் பிறந்தார்,
இந்த ஒரே மகனே பின்னர் முல்லா சத்ரா என்று அறியப்பட்டார். ஃபார்ஸ் எனும் பரந்த பிராந்தியத்தின்
ஆளும் அமைச்சரின் ஒரே மகனாக இருந்த முல்லா சத்ரா, தனது குழந்தை மற்றும் இளமைப் பருவத்தில்
மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ்ந்தார்.
சிறுவயதிலிருந்தே
அவர் கற்றலில் அதிக திறனை வெளிப்படுத்தினார், அக்கால அறநெறி கல்லூரிகளில் கற்பிக்கப்பட்ட
பொதுவான பாடநெறிகளுக்கு மேலதிகமாக, பாரசீக மற்றும் அரபு இலக்கியங்கள், வானியல், தர்க்கம்,
நீதித்துறை, இறையியல் மற்றும் தத்துவம் போன்ற பாடங்களிலும் அவர் தேர்ச்சி பெற்றார்,
மருத்துவம் மற்றும் இஸ்லாமிய சட்டம் ஆகியவற்றிலும் தேர்ச்சி மட்டத்தை அடைந்திருந்தார்.
இருப்பினும், அவரது உண்மையான ஆர்வம் தத்துவக் கல்வியில் வெளிப்பட்டது. அக்காலத்தில்,
தத்துவத்தில் அவரது சொந்த ஊர் ஷிராஸ் மகிமையைப் பெற்றிருந்தாலும், அது அவரது அறிவு
தாகத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட இடமாக அவர் கருதினார். மேம்பட்ட மத மற்றும் தத்துவப்
பயிற்சியை நாடி, அவர் 1591 இல் ஷிராஸை விட்டு காஸ்வின் நகருக்கு (ஈரானின் முன்னாள்
தலைநகரம்) சென்றார். இறுதியில், அவர் 1597 இல் இஸ்ஃபஹானில் குடியேறினார், அங்கு அவர்
அன்றைய மிகச் சிறந்த புத்திஜீவிகளான மிர் தமாத் மற்றும் ஷேக் பஹாய் ஆகியோரிடம் கல்வி
கற்றார், அவர்கள் அவருக்கு தத்துவம், இறையியல், மற்றும் ஹதீஸ் ஆகியவற்றைக் கற்றுக்
கொடுத்தார்கள்.
கற்றலின்
பின் ஷிராஸ் நகருக்கு திரும்பிய முல்லா சத்ரா, அங்கு அவரின் தர்க்க ரீதியான தத்துவத்திற்கு
விரோதமான மற்றும் அடக்குமுறையான சூழலைக் கண்டார். அவர் தர்க்கரீதியான பகுத்தறிவு, ஆன்மீக
உத்வேகம் மற்றும் முக்கிய வேத ஆதாரங்கள் ஆகியவற்றின் கலவையின் மூலம் யதார்த்தத்தைப்
புரிந்துகொள்வதன் அவசியத்திற்காக வாதிட்டார். சில நீதித்துறை சார்ந்த பிரச்சினைகள்
குறித்த அவரது கருத்துக்கள் அக்காலத்தின் பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்துக்களிலிருந்து
வேறுபட்டதால், முல்லா சத்ரா மதத்திற்கு எதிரான கொள்கை கொண்டவர் என்று குற்றம் சாட்டப்பட்டு,
மதக் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, இஸ்ஃபஹானிலிருந்து மத்திய ஈரானின்
புனித நகரமான கும் பிராந்தியத்திற்கு அருகிலுள்ள அமைதியான கிராமமான கஹாக் என்ற கிராமத்திற்கு
தனிமை மற்றும் சிந்தனைக்காகப் புறப்பட்டார், அங்கு அவர் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலம்
தனிமையில் கழித்தார். மேலும் ஆன்மாவின் தூய்மைபடுத்தலுக்கான தஹ்திப் அல்-நஃப்ஸுக்கு
தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அங்கு இருந்த காலகட்டத்தில், அவர் சூபித்துவதில் ஆர்வம்
காட்டியதோடு தனது போதனைகள் மற்றும் ஆராய்ச்சியைத் தொடர்ந்தும் மேற்கொண்டார். இந்தக்
காலகட்டத்தில்தான் இஸ்லாமிய தத்துவத்தை மாற்றிய "அல்-ஹிக்மா அல்-முத'ஆலியா ஃபீ
அல்-அஸ்ஃபர் அல்-'அக்லியா அல்-அர்பா'" (நான்கு அறிவுசார் பயணங்களைப் பற்றிய ஆழ்நிலை
ஞானம்) என்ற புத்தகத்தை அவர் எழுதினார். இந்த தத்துவத்தின் மையத்தில் சத்ராவின் மகத்தான
படைப்பான இப் புத்தகம் "நான்கு பயணங்கள்" என பொதுவாக அறியப்பட்டது. பல தொகுதிகளில்
ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட இந்தப் படைப்பு, ஈமானுக்கான ஒரு வழிகாட்டும் ஊடகமாக
கருதப்படுகிறது. இருப்பினும், அஸ்ஃபர், படிக்க எளிதான புத்தகமல்ல. இன்றும் கூட, அறநெறிக்
கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அதன் பக்கங்களைத் திறப்பதற்கு முன்பே இறையியல் மற்றும்
தத்துவத்தின் உன்னதமான நூல்களில் தேர்ச்சி பெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷிராஸ்,
இஸ்ஃபஹான், கும், காஷான் நகரங்களிடையே பல பயணங்களும், மக்காவிற்கு ஏழு யாத்திரைகளும்
மேற்கொண்ட முல்லா சத்ரா, இப் பயணங்கள் இவரது அறிவுசார் மற்றும் ஆன்மீக வளர்ச்சியைக்
கணிசமாகப் பாதித்ததாக உணர்ந்தார்.
1612
ஆம் ஆண்டில், முல்லா சத்ராவை அலீ குலி கான் ஷிராஸுக்குத் திரும்பிச் சென்று புதிதாகக்
கட்டப்பட்ட கான் அறநெறி பள்ளியில் கற்பிக்க அழைத்தார். முல்லா சத்ரா அழைப்பை ஏற்றுக்கொண்டு,
தனது வாழ்க்கையின் இறுதிப்பகுதி முழுவதையும் ஷிராஸில் கழித்தார், அறிவுசார் அறிவியல்களை,
குறிப்பாக ஆழ்நிலை இறையியல் பற்றிய தனது சொந்த போதனைகளை கற்பிப்பதில் அர்ப்பணிப்புடன்
செயல்பட்டார்.
மே
22, 1999 அன்று நடைபெற்ற சர்வதேச முல்லா சத்ரா மாநாட்டின் போது, இஸ்லாமியப் புரட்சியின்
உச்சத் தலைவரான ஆயத்துல்லாஹ் கமேனியீ ஒரு செய்தியை வெளியிட்டார். அவர் குறிப்பிடுவதாவது;
அஸ்ஃபர் புத்தகம் வெளியிட்டு சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகும், இப்போது வரை அனைத்தும்
முல்லா சத்ராவின் தத்துவ இலட்சியங்களால் வளர்க்கப்படுகின்றன. அவரது முக்கிய புத்தகங்கள்
மற்றும் கருத்துக்கள் - அவற்றில் பல, அவற்றின் வாதம் மற்றும் பகுத்தறிவு தொடர்பாக,
அவரது சொந்த முயற்சிகள் - கற்பித்தல், ஆராய்ச்சி, விளக்கம் மற்றும் தூய்மைப்படுத்தலுக்கான
அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. முல்லா சத்ராவின் தத்துவப் பள்ளி, மற்ற எல்லா
தத்துவங்களைப் போலவே, தேசியம் மற்றும் புவியியல் எல்லைகளைக் கடந்து, அனைத்து மனிதர்களுக்கும்
சமூகங்களுக்கும் ஒரு வலுவான பகுத்தறிவு கட்டமைப்பை கொண்ட படிப்பினையை வழங்குகிறது.
இஸ்லாமிய தத்துவம், குறிப்பாக முல்லா சத்ராவின் தத்துவத்தின் அமைப்பு மற்றும் உள்ளடக்கங்கள்,
இன்று மனிதகுலத்தின் மனதில் அதன் இடத்தைத் தேடுகின்றன என்று நாங்கள் நம்புகிறோம்; அது
என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் ஆயத்துல்லாஹ் கமேனியீ கூறினார்.
முல்லா
சத்ராவின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட அவரது அறிவுசார் வலையமைப்பு பின்னர்
"இஸ்பஹான் பள்ளி" என்று அழைக்கப்பட்டு ஒரு தனித்துவமான அரசியல் மற்றும் மத
சூழலில் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தத்துவம்
மற்றும் அறிவியலைப் பெறுவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மார்கபற்றான
வாழ்க்கைக்குப் பிறகு, முல்லா சத்ரா 1640 இல் மக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொள்ளும்
வழியில் பாஸ்ராவில் இறந்தார் அவரது உடல் நஜாப்பில் அடக்கம் செய்யப்பட்டது.