Contributors

Wednesday, May 28, 2025

முல்லா சத்ரா - பாரசீக தத்துவஞானி மற்றும் இறையியலாளர்

 Mulla Sadra - Persian philosopher and theologian

 

Mulla Sadra's Quotes: A Journey into Transcendent Philosophy

 

முல்லா சத்ரா என்று பிரபலமாக அறியப்படும் முஹம்மது இப்னு இப்ராஹிம் கவாமி ஷிராசி ஒரு முன்னணி பாரசீக தத்துவஞானி, இறையியலாளர், ஷியா அறிஞர் மற்றும் சட்ட வல்லுநர் ஆவார், சஃபாவிட் ஷா அப்பாஸ் I இன் கீழ் தத்துவத்தின் மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த இவர் அவரது சொந்த ஊரான ஷிராஸில் உள்ள மதரஸா-யி கான் இல் மிகவும் செல்வாக்கு மிக்க ஆசிரியரும் ஆவர். முல்லா சத்ரா புனித குர்ஆன் மற்றும் ஹதீஸ்களைப் பற்றிய ஆழமான அறிவைக் கொண்டிருந்தார், மேலும் அவர் சந்தித்த தத்துவ சிக்கல்களின் தீர்வுக்கு அவற்றின் ஆழமான கருத்துக்களை நாடினார்.

 

முல்லா சத்ராவின் வாழ்க்கை அறிவுசார் நோக்கங்கள் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பால் தனித்துவம் பெற்றது. 1571 இல் பிறந்த இவர் ஷிராஸின் ஒரு உன்னத குடும்பத்தின் ஒரே மகனாக இருந்தார். இவரது தந்தை குவாஜா இப்ராஹிம் கவாமி ஒரு மார்க்க அறிஞர் மற்றும் மார்க்கப்பற்றுள்ள அரசியல்வாதி. செல்வம், மரியாதை மற்றும் அந்தஸ்து இருந்தபோதிலும், அவருக்கு குழந்தைகள் இருக்கவில்லை, இறைவனிடம் மனமுகர்ந்த பிரார்த்தனையின் விளைவாக, அவருக்கு ஒரு மகன் பிறந்தார், இந்த ஒரே மகனே பின்னர் முல்லா சத்ரா என்று அறியப்பட்டார். ஃபார்ஸ் எனும் பரந்த பிராந்தியத்தின் ஆளும் அமைச்சரின் ஒரே மகனாக இருந்த முல்லா சத்ரா, தனது குழந்தை மற்றும் இளமைப் பருவத்தில் மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ்ந்தார்.

 

சிறுவயதிலிருந்தே அவர் கற்றலில் அதிக திறனை வெளிப்படுத்தினார், அக்கால அறநெறி கல்லூரிகளில் கற்பிக்கப்பட்ட பொதுவான பாடநெறிகளுக்கு மேலதிகமாக, பாரசீக மற்றும் அரபு இலக்கியங்கள், வானியல், தர்க்கம், நீதித்துறை, இறையியல் மற்றும் தத்துவம் போன்ற பாடங்களிலும் அவர் தேர்ச்சி பெற்றார், மருத்துவம் மற்றும் இஸ்லாமிய சட்டம் ஆகியவற்றிலும் தேர்ச்சி மட்டத்தை அடைந்திருந்தார். இருப்பினும், அவரது உண்மையான ஆர்வம் தத்துவக் கல்வியில் வெளிப்பட்டது. அக்காலத்தில், தத்துவத்தில் அவரது சொந்த ஊர் ஷிராஸ் மகிமையைப் பெற்றிருந்தாலும், அது அவரது அறிவு தாகத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட இடமாக அவர் கருதினார். மேம்பட்ட மத மற்றும் தத்துவப் பயிற்சியை நாடி, அவர் 1591 இல் ஷிராஸை விட்டு காஸ்வின் நகருக்கு (ஈரானின் முன்னாள் தலைநகரம்) சென்றார். இறுதியில், அவர் 1597 இல் இஸ்ஃபஹானில் குடியேறினார், அங்கு அவர் அன்றைய மிகச் சிறந்த புத்திஜீவிகளான மிர் தமாத் மற்றும் ஷேக் பஹாய் ஆகியோரிடம் கல்வி கற்றார், அவர்கள் அவருக்கு தத்துவம், இறையியல், மற்றும் ஹதீஸ் ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தார்கள்.

 

கற்றலின் பின் ஷிராஸ் நகருக்கு திரும்பிய முல்லா சத்ரா, அங்கு அவரின் தர்க்க ரீதியான தத்துவத்திற்கு விரோதமான மற்றும் அடக்குமுறையான சூழலைக் கண்டார். அவர் தர்க்கரீதியான பகுத்தறிவு, ஆன்மீக உத்வேகம் மற்றும் முக்கிய வேத ஆதாரங்கள் ஆகியவற்றின் கலவையின் மூலம் யதார்த்தத்தைப் புரிந்துகொள்வதன் அவசியத்திற்காக வாதிட்டார். சில நீதித்துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்த அவரது கருத்துக்கள் அக்காலத்தின் பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்துக்களிலிருந்து வேறுபட்டதால், முல்லா சத்ரா மதத்திற்கு எதிரான கொள்கை கொண்டவர் என்று குற்றம் சாட்டப்பட்டு, மதக் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, இஸ்ஃபஹானிலிருந்து மத்திய ஈரானின் புனித நகரமான கும் பிராந்தியத்திற்கு அருகிலுள்ள அமைதியான கிராமமான கஹாக் என்ற கிராமத்திற்கு தனிமை மற்றும் சிந்தனைக்காகப் புறப்பட்டார், அங்கு அவர் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலம் தனிமையில் கழித்தார். மேலும் ஆன்மாவின் தூய்மைபடுத்தலுக்கான தஹ்திப் அல்-நஃப்ஸுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அங்கு இருந்த காலகட்டத்தில், அவர் சூபித்துவதில் ஆர்வம் காட்டியதோடு தனது போதனைகள் மற்றும் ஆராய்ச்சியைத் தொடர்ந்தும் மேற்கொண்டார். இந்தக் காலகட்டத்தில்தான் இஸ்லாமிய தத்துவத்தை மாற்றிய "அல்-ஹிக்மா அல்-முத'ஆலியா ஃபீ அல்-அஸ்ஃபர் அல்-'அக்லியா அல்-அர்பா'" (நான்கு அறிவுசார் பயணங்களைப் பற்றிய ஆழ்நிலை ஞானம்) என்ற புத்தகத்தை அவர் எழுதினார். இந்த தத்துவத்தின் மையத்தில் சத்ராவின் மகத்தான படைப்பான இப் புத்தகம் "நான்கு பயணங்கள்" என பொதுவாக அறியப்பட்டது. பல தொகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட இந்தப் படைப்பு, ஈமானுக்கான ஒரு வழிகாட்டும் ஊடகமாக கருதப்படுகிறது. இருப்பினும், அஸ்ஃபர், படிக்க எளிதான புத்தகமல்ல. இன்றும் கூட, அறநெறிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அதன் பக்கங்களைத் திறப்பதற்கு முன்பே இறையியல் மற்றும் தத்துவத்தின் உன்னதமான நூல்களில் தேர்ச்சி பெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஷிராஸ், இஸ்ஃபஹான், கும், காஷான் நகரங்களிடையே பல பயணங்களும், மக்காவிற்கு ஏழு யாத்திரைகளும் மேற்கொண்ட முல்லா சத்ரா, இப் பயணங்கள் இவரது அறிவுசார் மற்றும் ஆன்மீக வளர்ச்சியைக் கணிசமாகப் பாதித்ததாக உணர்ந்தார்.

 

1612 ஆம் ஆண்டில், முல்லா சத்ராவை அலீ குலி கான் ஷிராஸுக்குத் திரும்பிச் சென்று புதிதாகக் கட்டப்பட்ட கான் அறநெறி பள்ளியில் கற்பிக்க அழைத்தார். முல்லா சத்ரா அழைப்பை ஏற்றுக்கொண்டு, தனது வாழ்க்கையின் இறுதிப்பகுதி முழுவதையும் ஷிராஸில் கழித்தார், அறிவுசார் அறிவியல்களை, குறிப்பாக ஆழ்நிலை இறையியல் பற்றிய தனது சொந்த போதனைகளை கற்பிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்.

 

மே 22, 1999 அன்று நடைபெற்ற சர்வதேச முல்லா சத்ரா மாநாட்டின் போது, ​​இஸ்லாமியப் புரட்சியின் உச்சத் தலைவரான ஆயத்துல்லாஹ் கமேனியீ ஒரு செய்தியை வெளியிட்டார். அவர் குறிப்பிடுவதாவது; அஸ்ஃபர் புத்தகம் வெளியிட்டு சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகும், இப்போது வரை அனைத்தும் முல்லா சத்ராவின் தத்துவ இலட்சியங்களால் வளர்க்கப்படுகின்றன. அவரது முக்கிய புத்தகங்கள் மற்றும் கருத்துக்கள் - அவற்றில் பல, அவற்றின் வாதம் மற்றும் பகுத்தறிவு தொடர்பாக, அவரது சொந்த முயற்சிகள் - கற்பித்தல், ஆராய்ச்சி, விளக்கம் மற்றும் தூய்மைப்படுத்தலுக்கான அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. முல்லா சத்ராவின் தத்துவப் பள்ளி, மற்ற எல்லா தத்துவங்களைப் போலவே, தேசியம் மற்றும் புவியியல் எல்லைகளைக் கடந்து, அனைத்து மனிதர்களுக்கும் சமூகங்களுக்கும் ஒரு வலுவான பகுத்தறிவு கட்டமைப்பை கொண்ட படிப்பினையை வழங்குகிறது. இஸ்லாமிய தத்துவம், குறிப்பாக முல்லா சத்ராவின் தத்துவத்தின் அமைப்பு மற்றும் உள்ளடக்கங்கள், இன்று மனிதகுலத்தின் மனதில் அதன் இடத்தைத் தேடுகின்றன என்று நாங்கள் நம்புகிறோம்; அது என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் ஆயத்துல்லாஹ் கமேனியீ கூறினார்.

 

முல்லா சத்ராவின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட அவரது அறிவுசார் வலையமைப்பு பின்னர் "இஸ்பஹான் பள்ளி" என்று அழைக்கப்பட்டு ஒரு தனித்துவமான அரசியல் மற்றும் மத சூழலில் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

 

தத்துவம் மற்றும் அறிவியலைப் பெறுவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மார்கபற்றான வாழ்க்கைக்குப் பிறகு, முல்லா சத்ரா 1640 இல் மக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் வழியில் பாஸ்ராவில் இறந்தார் அவரது உடல் நஜாப்பில் அடக்கம் செய்யப்பட்டது.

 


 

Tuesday, May 20, 2025

அதிபர் இப்ராஹிம் ரயீஸியின் அதிசிறந்த வாழ்க்கையும் வலுவான கொள்கைகளும்

The extraordinary life and strong policies of President Ebrahim Raisi

அதிபர் இப்ராஹிம் ரயீஸியின் அதிசிறந்த வாழ்க்கையும் வலுவான கொள்கைகளும்

 


மக்கள் நலனை மையமாகக் கொண்ட மற்றும் நீதியை வலுவாக பற்றிக்கொண்டு இஸ்லாமிய ஆட்சியை அமைத்த ஈரானின் 8ஆவது ஜனாதிபதியான இப்ராஹிம் ரயீஸி ஈரானிய நெஞ்சங்களில் நீங்கா இடத்தை பெற்ற ஒரு தலைவர். இவரது மார்க்கப்பற்றான வாழ்க்கை முறையும் வலுவான கொள்கைகளும் தலைமைத்துவத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

 

ஆயத்துல்லாஹ் செய்யத் இப்ராஹிம் ரயீஸி 1960 ஆம் ஆண்டு ஈரான் நாட்டின் புனித ஷியா முஸ்லிம்களின் தாயகமான மேலும் இஸ்லாமிய அறிவு மற்றும் ஆன்மீக வழிகாட்டுதலுக்காக போற்றப்படும் இமாம் ரிழா (அலை) அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மஷ்ஹத் நகரில் ஒரு இஸ்லாமிய பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை, ஹுஜ்ஜதுல் இஸ்லாம் செய்யத் ஹாஜி ரயீஸ் அல்-சதாதி மற்றும் தாய், செய்யிதா இஸ்மத் குதா தாத் ஹுஸைனி ஆகியோரின் வழியில் செய்யத் இப்ராஹிம் ரயீஸி, ஹழரத் செய்யத் பின் அலீ ஹுஸைன் (அலை) அவர்களின் வம்சாவளியாகிறார். மார்க்க அறிஞராக இருந்த அவரது தந்தை அவருக்கு ஐந்து வயதாக இருந்தபோது இறந்தார்.

 

ஷியா பாரம்பரியத்தில் நபிகள் நாயகத்தின் வழித்தோன்றலாக தன்னை அடையாளப்படுத்தும் கருப்பு தலைப்பாகையை அணிந்திருந்த அதிபர் ஆயத்துல்லாஹ் ரயீஸி, தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ஆரம்பக்கல்வி மற்றும் இடைநிலை கல்வியை அடுத்து தனது 15ம் வயதில் கும் நகரம் (ஷியா முஸ்லிம்களின் அறிவியல் மையம்) உள்ள ஹவ்ஸா என்றழைக்கப்படும் ஆன்மீக கலாபீடத்தில் உயர் கல்வியை பூர்த்தி செய்தார். மேலும் ஈரானின் மிக முக்கியமான மார்க்க அறிஞர்கள் சிலரிடம் பயின்றார். மேற்கத்திய ஆதரவு பெற்ற ஷா பஹ்லவியின் ஆட்சியில் ஈரானியர்கள் பரவலாக அதிருப்தி அடைந்திருந்த நேரத்தில், கும்மில் உள்ள பல ஆன்மீக கலாபீட மாணவர்கள், அரசாங்கத்தின் கொள்கை மற்றும் நிர்வாகத்தில் இஸ்லாமிய நெறிமுறையை உறுதிசெய்ய முயன்ற இமாம் ரூஹுல்லாஹ் கொமைனியின் புரட்சிகர கொள்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இப்புரட்சிகர போராட்டத்தில் மாணவரான இப்ராஹிம் ரயீஸியும் அர்ப்பணிப்புடன் பங்கேற்றார்.  இறுதியில் 1979 இல் இமாம் ரூஹுல்லாஹ் கொமைனி தலைமையிலான இஸ்லாமியப் புரட்சியில் ஷா அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டார்.

 

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, தனது 20 வயதில், ஈரானின் புதிய நீதித்துறையில் ஆயத்துல்லாஹ் இப்ராஹிம் ரயீஸி சேர்ந்தார். 1981 இல் ஈரானின் ஜனாதிபதியான ஆயத்துல்லாஹ் கமேனியிடம் பயிற்சி பெற்றபோது பல நகரங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

 

இஸ்லாமியக் குடியரசின் சட்ட நிபுணர்

 

ஈரானியப் புரட்சிக்குப் பிறகு, புதிதாக உருவான இஸ்லாமியக் குடியரசு பல நெருக்கடிகளையும், சவால்களையும் எதிர்கொண்டது, ஷாவின் விசுவாசிகள் முதல் மதச்சார்பற்ற இடதுசாரிகள் வரை, மேலும் அண்டை நாடான ஈராக்குடனான போர் ஆகியவை அவற்றில் முதன்மையானவை. ஆரம்பத்திலிருந்தே ஆயத்துல்லாஹ் செய்யத் ரயீஸி தனது தொழிற்துறையை உள்நாட்டு எதிர்ப்பிற்கு எதிராக புதிய ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு அர்ப்பணித்தார். அவர் நிர்வாகத்தில் பயிற்சி பெற்ற உடன் தென்மேற்கு ஈரானில் உள்ள மஸ்ஜித் சுலேமானில் உள்ள நீதித்துறையில் சட்ட வல்லுநராக பிரவேசித்தார். அடுத்த ஆறு ஆண்டுகளில், கராஜ் நகரம், ஹமதான் நகரம் மற்றும் ஹமதான் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு அதிகார எல்லைகளுக்கு சட்ட நிபுணராக மேலதிக அனுபவத்தைப் பெற்றார். 1985 ஆம் ஆண்டு அவர் நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் துணை தலைமை நீதிபதியானார்.

 

1989 இல் ஆயத்துல்லாஹ் அலீ கமேனியீ ஈரானின் உச்ச தலைவர் ஆன பிறகு, ஆயத்துல்லாஹ் இப்ராஹிம் ரயீஸி ஈரானின் நீதித்துறை அமைப்பில் உயர்ந்த பதவிகளைப் பெறத் தொடங்கினார். தெஹ்ரானின் துணை தலைமை நீதிபதியாக (1989–94) பணியாற்றிய பிறகு, அவர் மிக முக்கியமான பதவிகளை வகித்தார் அவற்றில் பொது ஆய்வு அமைப்பின் தலைவர் (1994–2004) மற்றும் மார்க்க அறிஞர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (2012–21) ஆகியவை அடங்கும், அவை அரசாங்க அமைப்புகள் மற்றும் அதிகாரிகளின் ஒருமைப்பாட்டை மேற்பார்வையிடும் பதவிகளாகும். நீதித்துறை மட்டுமல்லாது, ஆயத்துல்லாஹ் ரயீஸி நிபுணர்கள் சபையின் உறுப்பினராகவும் (2007–24) பதவி வகித்தார். 2016 ஆம் ஆண்டில், மஷ்ஹத் நகரில் உள்ள 'அலீ அல்-ரிழா' சமஸ்தானத்தின் பாதுகாவலராக ஆயத்துல்லாஹ் இப்ராஹிம் ரயீஸியை ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லாஹ் கமேனியீ நியமித்தார், அவரை ஈரானின் மிகப்பெரிய தொண்டு அறக்கட்டளையின் பொறுப்பில் அமர்த்தினார். 2019 வரை நீடித்த இந்த நியமனம், பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள சொத்துக்களை - மற்றும் ஈரானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான பகுதியை - ரயீஸியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது, இறையச்சம் கொண்ட ஆயத்துல்லாஹ் இப்ராஹிம் ரயீஸி இதனை நேர்மையாக கையாண்டார். உயர் பதவியில் இருந்தபோதிலும், அதிபர் இப்ராஹிம் ரயீஸி ஊழலுக்கு எதிராக கடுமையாக நடந்து கொண்ட, ஒரு கொள்கை ரீதியான அரசாங்க விமர்சகராக மக்களால் கருதப்பட்டார்.

 

ஜனாதிபதி காலம்

 

2021 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆயத்துல்லாஹ் இப்ராஹிம் ரயீஸி போட்டியிட்டபோது, ​​அரசாங்க ஊழலுக்கு எதிரான கொள்கை ரீதியான பாதுகாவலராக தன்னைத் தொடர்ந்து வெளிப்படுத்தினார். அதே நேரத்தில், ஈரானியர்களின் நலனை மையமாக கொண்டு ஒரு சர்வதேச அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவர் ஆதரவு தெரிவித்தார். ஆனால் அவர் வகித்த உயர் பதவியே அவரை தேர்தலில் முன்னிலைப்படுத்தியது. ஆயத்துல்லாஹ் இப்ராஹிம் ரயீஸி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஈரானின் 8ஆவது அதிபராக ஆகஸ்ட் மாதம் பதவியேற்றார். தனது பதவியேற்பு உரையின் போது, ​​ஈரான் மீது அமெரிக்கா விதித்த தடைகளை நீக்க தனது அரசாங்கம் முயற்சிக்கும் என்றும் வெளிநாட்டு தலையீடுகளை மட்டுப்படுத்த வேண்டும் என்றும் அதிபர் ஆயத்துல்லாஹ் இப்ராஹிம் ரயீஸி கூறினார். மேலும் ஈரானின் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று உறுதியளித்த அதிபர் ரயீஸி ஈரானியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் போராடுவதாக கூறினார். அவர் உறுதியளித்த படியே தனது தனிப்பட்ட வாழ்க்கையை விட மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி விடாமுயற்சியுடனும் இறை அச்சத்துடனும் பணியாற்றினார். அவர் மக்களின் ஜனாதிபதியாக இருந்து, தனது குடிமக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பாடுபட்டார்.

 

அண்டை நாடுகளுடன் உறவுகளை வளர்ப்பதற்காக அதிபர் ஆயத்துல்லாஹ் ரயீஸி புதுப்பிக்கப்பட்ட சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். பாகிஸ்தானுக்கு ஒரு உயர்மட்ட விஜயம் மேற்கொண்டதை அடுத்து ஆயத்துல்லாஹ் ரயீஸி இலங்கைக்கு பயணம் செய்தார், அங்கு ஈரானிய தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியைப் பயன்படுத்தி கட்டப்பட்ட ஒரு நீர்மின் திட்டத்தைத் திறந்து வைத்தார். மே 19 அன்று, அஜர்பைஜானுடன் இணைந்து நாடுகளின் எல்லையில் கட்டப்பட்ட புதிய அணைகளைத் திறப்பதற்கான பயணத்திலிருந்து ஆயத்துல்லாஹ் ரயீஸி திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​மலை எல்லைப் பகுதியில் மோசமான வானிலையின் மத்தியில் அவரது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் ஷஹீதாகினார். இவரின் மறைவு ஈரானிய மக்களுக்கு பெரும் துயராக அமைந்தது.

 

 

 

Tuesday, May 13, 2025

ஈரானின் எழில்மிகு ஹமதான் நகரம்

 Iran's Hamadan old land of civilization, pristine nature


 

Iran's Hamadan old land of civilization, pristine nature

 

ஈரானிய நாகரிகத்தின் பழமையான மையங்களில் ஒன்றான ஹமதான் மாகாணம், பல கவிஞர்கள், கலாச்சார பிரபலங்கள், வரலாற்று இடங்கள் மற்றும் கவரப்படும் இயற்கை எழிலுக்கு தாயகமாகும்.

 

மேற்கு ஈரானில், ஹமதான் மாகாணத்தின் தலைநகரமான ஹமதான் நகரம், அல்வண்ட் (Alvand) மலையின் வடகிழக்கு அடிவாரத்தில் (11,716 அடி அல்லது 3,571 மீட்டர்) அமைந்துள்ளது. 6,158 அடி (1,877 மீட்டர்) உயரத்தில் உள்ள இந்த நகரம், கரேஹ் சூ (Gareh Su) நதியின் பரந்த வளமான சமவெளியில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்நகரத்தில் கணிசமான அளவு அஸெரி (Azeri) மொழி பேசும் சிறுபான்மையினர் உள்ளனர்.

 

ஹமதான் ஈரானின் பழமையான நகரங்களில் ஒன்றாகும், மேலும் ஈரானின் முதல் பேரரசான மீத்ஸ் (Medes) இன் முதல் தலைநகரமாகவும் இது இருந்துள்ளது. ஈரானின் மட்டுமல்லாது, முழு உலகிலும் பழமையான நகரங்களில் ஒன்றாகவும் இவ்விடம் கருதப்படுகிறது. இதன் வரலாறு கிறிஸ்துவுக்கு முன் பல நூற்றாண்டுகள் பழமையானது.

 

ஹமதான்  நகரம் பல பெயர்களால் அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. மத்திய கிழக்கிற்கு, குறிப்பாக இன்றைய ஈராக், சிரியா, துருக்கி மற்றும் ஈரானின் சில பகுதிகளுக்குச் சொந்தமான ஒரு இனக்குழு, அசீரியர்கள் எனப்படுவர். அவர்கள் இந்நகரை  பிட் டாயுக்கி (Bit Daiukki) என அழைத்ததோடு, மீத்ஸ்கள் (Medes) இதனை ஹங்மடனா  அல்லது அக்படனா (Hangmatana, or Agbatana) என்றழைத்தனர். கிரேக்கர்களுக்கு இந்நகரம் எக்படானா (Ecbatana) என அறியப்பட்டது. அச்செமனிய (Achaemenian) ஆட்சியின் ஸ்தாபகர், கி.மு. 529 இல் இறந்த மகா மன்னர் இரண்டாம் சைரஸ் (Cyrus II) இன் ஆட்சியின் கீழ் நிர்வகிப்பட்ட தலைநகரங்களில் ஒன்றான இந்நகரம், ஓர் அரச கோடைக்கால அரண்மனையின் தளமாக இருந்தது வந்துள்ளது. ஹமதானுக்கு சற்று கிழக்கே இயற்கையாக அமையப்பெற்ற ஒரு மேடு முசல்லாஹ் ஆகும். இதில் பண்டைய எக்படானாவின் எச்சங்கள் உள்ளன. நவீன நகரம் பகுதியளவில் இந்த மேட்டின் மீது கட்டப்பட்டுள்ளது. ஹமதான் நகரம் பற்றிய குறிப்பீடு கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளிலும் அடங்கியுள்ளது (எஸ்ரா 6:1–3), மேலும் இந்த நகரத்துடன் யூதர்களின் தொடர்பு பற்றிய ஒரு பாரம்பரியமும் அறியப்பெற்றுள்ளது.

 

ஹமதான் நகரம் பிரம்மிப்பூட்டும் நட்சத்திர வடிவ சதுக்கத்தை சுற்றுப்பரப்பாக கொண்டுள்ளது. ஹமதானில் உள்ள இந்த சதுக்கத்திற்கு ஆயதுல்லாஹ் இமாம் கொமைனி சதுக்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது நகரத்தின் ஒரு பெரிய மற்றும் மைய சதுக்கமாகும். ஈரானின் வரலாற்றில், குறிப்பாக இஸ்லாமியக் குடியரசை நிறுவுவதற்கு வழிவகுத்த

1979 இஸ்லாமியப் புரட்சியின் ஆன்மீகத் தலைவர் இமாம் கொமைனி

அவர்கள் ஆற்றிய முக்கிய பங்கை கௌரவிக்கும் வகையில், இந்த சதுக்கத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. சதுக்கத்தின் வடிவமைப்பு மற்றும் பெயர் நகரத்திலும் நாட்டிலும் அதன் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. இது மட்டுமல்லாது, இந்நகரம் பல கவிஞர்கள் மற்றும் கலாச்சார பிரபலங்களின் தாயகமாகும், இந்த நகரத்தில் உள்ள பல காட்சிகள் மற்றும் இடங்கள்ஈரானிலும் உலகிலும் மிகவும் பழமையான வரலாற்று நகரங்களில் ஒன்றென நிரூபிக்கின்றன.  

 

மேற்கு ஈரானில் பசுமையான மலைப்பகுதியில் அமைந்துள்ள ஹமதான் நகரம், வசந்த காலத்தில் ஒரு இனிமையான பயணத்திற்கு ஏற்ற சிறந்த மற்றும் பிரபலமான சுற்றுலா தலங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

 

Hamadan old land of civilization, pristine nature

 

ஹமதானின் புவியியல் நிலைமைகள் இந்த நகரத்தை ஒரு அழகிய மற்றும் தனித்துவமான தன்மையைக் கொண்டதாக மாற்றியுள்ளன. ஹமதானின் காலநிலை மிகவும் அற்புதமானது, மலைப்பாங்கான பிரதேசத்தை கொண்ட ஹமதான் பனிப்பொழிவுடன் கூடிய குளிர் காலத்தை மிகையாக கொண்ட பிரதேசமாகும். குளிர்காலம் நீண்டதாகவும் கடுமையானதாகவும் இருந்தாலும், அதன் கோடை காலமோ மனதுக்கும் உடலுக்கும் ஒரு இதமான உணர்வை வழங்குகிறது. ஹமதானின் மலைப்பாங்கான புவியியல் அமைப்பே இதற்கு பிரதான காரணமாகும்.  கோடைக்கால இதமான காலநிலையும், அதன் பசுமையான இயற்கை  அழகும்  ஹமதானை ஓர் உல்லாச விடுதியாக மாற்றுகிறது.  எக்பதான் அணை (முன்னர் ஷானாஸ் அணை) இந்த நகரத்திற்கு நீரை வழங்குகிறது. தானியங்கள் மற்றும் பழங்கள் ஏராளமாக வளர்க்கப்படுகின்றன, மேலும் ஹமதான் பிரதான தெஹ்ரான்-பக்தாத் நெடுஞ்சாலையில் ஒரு முக்கியமான வர்த்தக மையமாகும். இந்த மாகாணம் தோல், மட்பாண்டங்கள் மற்றும் கம்பளங்கள் போன்ற கைவினைப் பொருட்களுக்கும் பெயர் பெற்றது. ஈரானிய கம்பள வர்த்தகத்தில் கெர்மான் கம்பளங்களுக்கு அடுத்தபடியாக சிறந்து விளங்குவது ஹமதான் கம்பளங்களே.

 

ஹமதான், புராதன பின்னணியைக் கொண்ட கிழக்கத்திய நாகரிகத்தின் ஆரம்பப்படிகளில் ஒன்றாகும். வரலாற்று பதிவுகளின்படி, இந்த நகரத்தில் ஒரு காலத்தில் ஹாஃப்ட் ஹெஸார் (ஏழு சுவர்கள்) என்ற பெயரில் ஒரு கோட்டை இருந்திருக்கின்றது, அது ஆயிரம் அறைகளைக் கொண்டிருந்ததாகவும் அதன் பிரம்மாண்டம் பாபிலோன் கோபுரத்திற்கு சமமானதுமாக அறியப்படுகிறது.

 

வரலாற்று ரீதியாக, ஈரானின் பழமையான நகரங்களில் ஒன்றான ஹமாதான், மூலோபாய பாதுகாப்பு, பலப்படுத்தப்பட்ட சுவர்கள் மற்றும் கூட்டணிகளின் முன்னெடுப்புகள் மூலம் சர்வதேச அச்சுறுத்தல்களை எதிர்கொண்டது. ஈரானை சுற்றி வாழும் அனைத்து நாடுகளும் பழங்காலத்திலிருந்து சமீபத்திய நூற்றாண்டுகள் வரை ஹமதானின் முக்கிய இயற்கை அமைப்பை விரும்பின; மேலும் பலமுறை அந்த நகரத்தை ஆக்கிரமித்துள்ளன. முதலில், மத்திய கிழக்கின் ஒரு இனக்குழுவான அசீரியர்கள் ஹமதானை அழித்தனர். மொங்கோலியர்களின் படையெடுப்பின் போது அது தொடர்ந்தும் அழிவுகளை எதிர்கொண்டது. இறுதியாக, சமீபத்திய நூற்றாண்டுகளில் ஒட்டோமன் ஆக்கிரமிப்பாளர்கள் நகரத்தை பல முறை தாக்கினர்; ஆனால் ஹமதான் எதிரிகளை வீரத்துடன் எதிர்த்து  நின்று, அது சந்தித்த அனைத்து இழப்புகளையும் தைரியமாக எதிர்கொண்டது. ஹமதானின் மலைப்பாங்கான நிலப்பரப்பும் இயற்கை கோட்டைகளுமே இதற்கு பெரும் பங்களிப்பை வழங்கின. படையெடுப்புகளைத் தடுக்க நகரவாசிகள் வலுவான இராணுவத் தலைவர்களையும், அண்டை பிராந்தியங்களுடனான கூட்டணிகளுடனும் உறுதியாக செயல்பட்டனர்.

 

ஹமதான், எல்னைகோசாட் (Elnaighozat), காஜேஹ் ராஷிதோதீன் ஃபஸ்லோல்லாஹ் (Khajeh Rashidoddin Fazlollah), ஆதம் ஹமதானி (Adham Hamadani), பாபா தாஹர் (Baba Taher) மற்றும் மிர்சாதே எஷ்கி (Mirzadeh Eshghi) போன்ற சிறந்த அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் தாயகமாகும்; மேலும் அவிசென்னா மற்றும் பாபா தாஹரின் கல்லறைகள் இந்த நகரத்தில் அமைந்துள்ளன. இஸ்லாமியத்திற்குப் பின்னரான காலத்தில் ஹமதான் அதன் முக்கியத்துவத்தை உறுதியாக தக்க வைத்துக் கொண்டுள்ளது.

 

ஹமதான் மிதமான கோடை காலநிலை கொண்ட நகரமென்பதால் அதன் ரம்மியமான மலை பிரதேசம் இயற்கை அழகை ரசிக்க விரும்பும் அனைவருக்கும் அழியா நினைவலையை கொடுத்திடும். ஹமதானின் பல பிரதேசங்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் உல்லாச பயணிகளை கவர்ந்திழுக்கிறது. அதில் வரலாற்று சான்றாக அகழ்வாராய்ச்சிகள் மற்றும் அருங்காட்சியகம் அமைத்திருக்கும் பகுதியான எக்படானா நகரம், மேலும் வரலாற்று மகத்துவத்தை உணர்த்தும் நினைவுச்சின்னமான, புவியியல் ரீதியாக ஹமதானுக்கு தென்மேற்கே அமைந்துள்ள கஞ்ஜினாமி கல்வெட்டுகள். இக் கல்வெட்டின் எழுத்துக்கள் பழைய பாரசீக, நியோ-எலமைட் மற்றும் நியோ-பாபிலோனிய மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன. கஞ்ஜினாமி என்பது ஹமாதானில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற வரலாற்றுத் தளமாகும். இந்தக் கல்வெட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை, ஏனெனில் அவை பேரரசர் டேரியஸ் (Darius the Great) மற்றும் செர்க்சஸ் I (Xerxes I) ஆகியோரின் வெற்றிகளையும் சாதனைகளையும் கொண்டாடும் அரச செய்திகளை உள்ளடக்கியுள்ள.

ஹமதானின் மலைப்பாங்கான நிலை பல அற்புதமான மற்றும் அழகான குகைகளை உருவாக்க வழிவகுத்துள்ளது, அவற்றில் நிபுணர்களின் கூற்றுப்படி அலீசதர் மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும்.

இந்த குகை ஹமதானிலிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள கபூத் அஹாங் நகரில் அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய நீர் குகையாக அறியப்படும் அலீசதர், ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களைக் கொண்ட ஈரானின் மிகவும் பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு குகையைப் பார்வையிட விரும்புவோருக்கு வழிகாட்டிகளுடன் கூடிய படகுச் சேவைகள் மற்றும் கேட்டரிங் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.  சுமார் 2400 மீட்டர் படகு சவாரியை கொண்ட இக்குகை, உலகின் நீண்ட குகை சவாரியை கொண்டதாக அறியப்படுகிறது. இந்த குகை நிரந்தர அகழ்வு மற்றும் பாதுகாப்பு முகாமைத்துவ அமைப்பைக் கொண்டுள்ளது.

 

சமீபத்திய ஆண்டுகளில் ஹமதான் பெருமளவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது நகரத்தின் பழைய தோற்றத்தை பாதுகாப்பதோடு, நவீன வீதிகள் மற்றும் அழகான பூங்காக்களையும் கொண்டுள்ளது. இருப்பினும் பழைய நினைவுகளை ஏக்கத்துடன் நினைவுகூர ஹமதானின் புராதன ஸ்தலங்கள் அதனை ஒரு கட்டாயமாக பார்வையிட வேண்டிய இடமாக மாற்றியுள்ளது.

 

https://www.iranchamber.com/cities/hamadan/hamadan.php

https://www.britannica.com/place/Hamadan

Iran's Hamadan old land of civilization, pristine nature - Mehr News Agency