Thursday, August 8, 2019

ஏகாதிபத்தியவாதிகள் மனித உரிமைகள் குறித்து எமக்கு கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை - இமாம் காமனெய்

Human rights in Islam is to defend the rights of oppressed - Ayatollah Khamenei

மேற்குலக நாடுகள் மனித இனத்துக்கு இழைக்க முடிந்த அத்தனை அநியாயங்களையும் இழைத்துவிட்டு, உலகில் தாம்தான் மனித உரிமைகளின் முன்னோடிகள் போலும் காவலர்கள் போலும்  பாசாங்கு செய்துகொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் மனித இனத்துக்கு எதிராக உள்ள அனைத்து உரிமைகளையும் மீறுவோராக அவர்களே உள்ளனர். அவ்வளவையும் வெளிப்படையாக செய்கின்றனர். இதற்காக எண்ணிலடங்கா உதாரணங்களை தர முடியும்.

இவ்வாறிருக்க, வறிய நிலையில் உள்ள மூன்றாம் உலக நாடுகளை மனித உரிமைகளை மீறுவோராக குற்றம்சாட்டி, அச்சுறுத்தி காரியம் சாதிக்கவும் பார்க்கின்றன.

இது, ஈரான் இஸ்லாமிய புரட்சியின் தலைவர் இமாம் ஆயத்துல்லாஹ் செய்யதலி காமனெய் அவர்கள் மனித உரிமைகள் தொடர்பாக அவ்வப்போது ஆற்றிய உரைகளின் தொகுப்பாகும்.
அநியாயமிழைக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுவே உண்மையான மனித உரிமைகளை காக்கும் முறையாகும்; மனித உரிமைகளைப் பின்பற்றுவதற்கான அறிகுறியுமாகும். இவ்விடயத்தில் ஈரான் இஸ்லாமிய குடியரசு முன்னணியில் உள்ளது.
அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு, அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள  பாலஸ்தீனத்தில், லெபனனில், ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் மட்டுமல்லாமல் உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்பட்டுள்ளனரோ  அவர்களுக்காக எமது ஆதரவை நாம் தெரிவித்து வருகின்றோம் என்று ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனெய் தெரிவித்தார். மேலும் அவர் இஸ்லாம் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் இந்த நாட்டில் மனித உரிமைகளின் கொடி உயர பறக்கிறது என்பதையே இது காட்டுகிறது என்றும் இந்த ஏகாதிபத்தியவாதிகள் மனித உரிமைகள் குறித்து எமக்கு கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்கத்திய மனித உரிமைகளின் தவறான அடித்தளம்

"மேற்குலகு பேசும் மனித உரிமைகள் தவறான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவையாகும். எனவே, உலக மக்கள் மத்தியிலும் உலகில் உள்ள நீதித்துறை அமைப்புகளிடையேயும்  தர்க்கரீதியான ஆதாரங்களுடன் இஸ்லாமிய மனித உரிமைகளைஊக்குவிப்பது அவசியமாகும்.

இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பை விமர்சித்தார் - சில நாடுகளிடமிருந்து பணத்தைப் பெற்றதற்கு ஈடாக யெமனில் தற்போது தொடரும் சிசுக்கொலை குற்றங்கள் குறித்து அது கண்களை மூடிக்கொண்டிருப்பது - மனிதகுலத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விடயமாகும். அவர் மேலும் கூறியதாவது: இது உண்மையான மனித உரிமைகளுக்கு எதிரான கேவலமான செயல் என்பதோடு அவ்வமைப்புக்கு அவமானமுமாகும். இந்த விஷயத்தில் நாங்கள் உலக அளவில் சட்ட மற்றும் நீதித்துறை பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

மேற்கு நாடுகள் உண்மையில் மனித உரிமைகளை பாதுகாக்கிறதா?

சல்மான் ருஷ்டி என்ற ஒரு வெறியன் "சாத்தானிய வசனங்கள்" என்ற நூலை எழுதி, இஸ்லாத்தின் புனிதமானோர் மீது அவதூறான வார்த்தைகளால் அவமதித்து, ஒரு பில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்களின் உரிமைகளை மீறுகையில் இந்த (போலி) மனித உரிமை ஆதரவாளர்கள் அமைதியாக இருந்ததுமட்டுமல்லாமல் ஏகாதிபத்தியத்தின் ஏவலாளர்கள் அவனுக்கு ஊக்கமளித்து இந்த வெறியனை பாதுகாப்பதற்காக ஒரு ஐக்கிய முன்னணியையும் உருவாக்கினார்கள். இது மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவா?

200 மில்லியன் இந்திய முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது, இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரிகளால் தூண்டப்பட்ட  கும்பலால் முஸ்லிம்களது வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்படும் போது ஏன் அவர்களால் மனித உரிமைகளைப் பற்றி பேச முடியாது போனது...?

அவர்கள் உண்மையில் மனித உரிமைகளை ஆதரிப்பவர்களாக இருந்தால், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் மில்லியன் கணக்கானவர்கள் மிகக் கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டபோது, குழந்தைகளும் பெண்களும்  கொல்லப்பட்டபோது, நோயுற்றவர்கள் கொலை செய்யப்பட்டபோது ஒரு கண்டணத்தையாவது செய்யாது ஏன் மௌனம் காத்தனர்…?

பலஸ்தீன மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வந்த மக்கள் அடித்துத் துரத்தப்படுகையில் இந்த மனித உரிமை ஆதரவாளர்கள் ஏன் மௌனம் காத்தார்கள்...? இன்றும் கூட, பாலஸ்தீனியர்கள் மற்றும் லெபனான் மற்றும் பாலஸ்தீனிய மக்கள் அகதி முகாம்களில் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை; அன்றாடம் போல் இஸ்ரேலின் குண்டுவீச்சு ஆளாகிறார்கள். மனித உரிமை என்று ஆர்ப்பரிப்போர் இவற்றையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. இவர்கள் உண்மையில் மனித உரிமைகளை ஆதரிப்பவர்களா, பொய்யர்களா அல்லது ஏமாற்று பேர்வழிகளா...?

மேற்குலகு போதிக்கும் மனித உரிமைகள் உண்மையில் மனித உரிமைக்கு எதிரானது, மனிதர்கள் மீதான மூர்க்கத்தனத்தை நியாயப்படுவதுவதே மேற்கத்திய கலாசாரம். மனித உரிமைகள் குறித்த இந்த [போலி] வரையறைக்கு உண்மையான மனித உரிமைகளுடன் எந்த தொடர்பும் கிடையாது.

நாங்கள் மனித உரிமைகளை ஆதரிக்கிறோம், இஸ்லாம் மனிதர்களின் உரிமைகளை ஆதரிக்கிறது. இஸ்லாத்தைப் போன்று வேறு எந்தக் கோட்பாடும் மனித கண்ணியத்தின் மதிப்பை மதிக்கவில்லை. இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் போது எப்போதும் முன்வைக்கப்படும் இஸ்லாமிய கொள்கைகளில் ஒன்று "மனித கண்ணியம்" என்ற கொள்கையாகும்.

மனித உரிமைகள் பற்றி மேற்கு நாடுகள் நமக்குக் கற்பிப்பதற்கோ அல்லது மனிதர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து அறிவுறுத்துவதற்கோ நாங்கள் காத்திருக்க வேண்டியதில்லை.
நாங்கள் மனித உரிமைகளை முதலில் ஆதரிப்பவர்கள். இஸ்லாத்தின் பாதுகாப்பின் கீழ் மனித உரிமைகள் எப்போதும் பேணிப் பாதுகாக்கப்பட்டே வந்துள்ளது.

இந்த ஐ.நா. மனித உரிமை ஆணையம் அல்லது சர்வதேச குழு என்ன கூறினாலும் நாங்கள் மனித உரிமைகளை ஆதரிக்கிறோம், மனித உரிமைகளைப் பின்பற்றுகிறோம். மனிதர்களின் உரிமைகளை பாதுகாக்க இஸ்லாம் நமக்கு கட்டளையிடுகிறது. அது ஒரு இஸ்லாமிய கொள்கை. அதனால் நாங்கள் எப்போதும் மனித உரிமைகளை காக்கின்றோம். ஆனால் இந்த அமைப்புகள் கூறுவது பொய்யானது, அது ஏமாற்றும் செயல் என்று நாங்கள் கருதுகிறோம்.

மனித உரிமைகளுக்கான அவர்களின் கோஷம் பெண்களின் உரிமைகளுக்கான அவர்களின் கோஷத்தைப் போன்றது. உலகின் ஏகாதிபத்தியவாதிகள், ஒடுக்குமுறையாளர்கள் மற்றும் கொள்ளையர்கள், நாடுகளின் உரிமைகளை புறக்கணிப்பவர்கள், பலவீனமான நாடுகளின் நலன்களை அழிப்பவர்கள் மற்றும் பலவீனமான நாடுகளை ஆக்கிரமிப்பவர்கள் தான் மனித உரிமைகள் மற்றும் பெண்கள் உரிமைகளை ஆதரிப்போர் என்று தம்மை அழைத்துக்கொள்கின்றனர். இவர்கள் கூறுபவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்ற எந்த அவசியமும் முஸ்லிம் நாடுகளுக்கு கிடையாது என்பது வெளிப்படையானது.

மனித உரிமைகளை பாரிய அளவில் மீறும் நாடு ஐக்கிய அமேரிக்கா
அமெரிக்கர்களின் ஆதரவையும் உதவியையும் கொண்டு தான் அபகரிக்கும் சியோனிச ஆட்சி இப்பகுதியில் இந்த தீய செயல்களை எல்லாம் செய்து வருகிறது. பாலஸ்தீனம் எந்த சூழ்நிலையில் உள்ளது? பாலஸ்தீனியர்கள் எந்த சூழ்நிலையில் உள்ளனர்? காஸா  எந்த சூழ்நிலையில் உள்ளது? காசா மக்கள் எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பது உலகில் உள்ளவர்களுக்குத் தெரியாதா? அந்த ஒடுக்கப்பட்ட நிலத்தில், அவசர சிகிச்சை தேவைப்படும் ஒரு நோயாளி படுக்கையில் இருக்கிறார், அவருக்கு அடிப்படை மருந்துகள் கிடைப்பதில்லை, அது ஏன்? சியோனிச ஆட்சிக்குப் பின்னால் அமெரிக்கா இருப்பதால் தான் என்பது சொல்லிப் புரிவேண்டும் என்பதில்லை.

உலகில் பயங்கரவாதத்தை வளர்ப்பதிலும், பயங்கரவாதிகளை ஆதரிப்பதிலும் அமெரிக்காவுக்கே மிகப் பெரிய பங்கு உள்ளது என்ற போதிலும், அமெரிக்க அதிகாரிகள் இஸ்லாமிய குடியரசு மற்றும் முஸ்லிம்கள் பயங்கரவாத செயல்களைச் செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர். அமேரிக்க துருப்புக்களும் பாதுகாப்புப் படையினரும் ஆக்கிரமிக்கப்பட்ட ஈராக்கின் பல்வேறு பகுதிகளில் அசிங்கமான குற்றங்களைச் செய்து வருகின்றனர்; மேலும் அபு கிரைப் சிறையில் அவர்கள் செய்த கொடூரமான செயல்கள் அந்த நாட்டில் அவர்கள் செய்யும் கொடுமைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

எனக்குத் தெரிந்தவரை, கிடைக்கக்கூடிய தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களின்படி, உலகில் எந்த நாடும் அமெரிக்கா செய்ததைப் போல மனித உரிமைகளை மீறவில்லை. ஈராக், ஆப்கானிஸ்தான், குவாண்டனாமோ மற்றும் தங்கள் சொந்த சிறைகளில் கூட மனித உரிமைகளை அவர்கள் அவமதித்து மிதிக்கின்றனர். ஆனால் மற்ற நாடுகள் மனித உரிமைகளை மீறுவதாக அவர்கள் அப்பட்டமாக குற்றம் சாட்டுகிறார்கள்.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் அவர்கள் செய்து வரும் குற்றங்களுக்கு மேலதிகமாக, அமெரிக்காவிலேயே மனித உரிமை மீறல்களையும் செய்கிறார்கள். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இன்னமும் அடக்குமுறை, பாரபட்சம், பாகுபாடு மற்றும் பல்வேறு அழுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜார்ஜ் புஷ், சீனியர் ஜனாதிபதியாக இருந்தபோது, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் சில மாநிலங்களில் பெரும் ஆர்ப்பாட்டத்தை  நடத்தினர், ஏனெனில் அவர்கள் அனுபவிக்கும் அடக்குமுறை மற்றும் அநீதி காரணமாக. காவல்துறையினர் கலவரத்தைத் தணிக்க முடியாததால், இராணுவம் உள்ளே வரவழைக்கப்பட்டது.

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் பதவியில் இருந்த போது, அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்க்கும் ஒரு தாவீதியர்கள் என்று அழைக்கப்படும் ஒரு கிறிஸ்தவ குழு, அமெரிக்க மதக் குழுவின் எண்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், அவர்கள் செயல்பட்டுவந்த தலைமையக கட்டிடத்தில் இருந்து வெளியே வர மறுத்ததால், அக்கட்டிடத்துள் வைத்து உயிருடன் எரிக்கப்பட்டனர். இருப்பினும், இந்த படுபாதக செயலில் ஈடுபட்டவர்கள் மீது மனித உரிமைகளை ஆதரிப்பதாகக் கூறுபவர்கள் ஒரு எதிர்ப்பையும் காட்டவில்லை...! அவர்கள் பிரசாரம் செய்யும் மனித உரிமை இவ்வாறானது தான்...!

தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியின் கீழ், அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க முயன்றபோது, அமெரிக்கப் படைகள் ஆப்கானிய பொதுமக்கள் மீது குண்டுகளை வீசியது மட்டுமல்லாமல், நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள வீடுகளை அழித்தன. அவர்கள் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள சிறைச்சாலையில் ஏராளமான கைதிகளை படுகொலை செய்தனர்.  மேற்கின் ஊடக சாம்ராஜ்யம் இந்த அநியாயத்தை முழுமையாகவே இருட்டடிப்பு செய்தது. இவ்வாறெல்லாம் செய்துகொண்டிருக்கும் இந்த அநியாயக்காரர்கள் இஸ்லாமிய குடியரசு உள்ளிட்ட பிற நாடுகளை மனித உரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

No comments:

Post a Comment