Sunday, February 25, 2024

"பராஅத்" - இலங்கை முஸ்லிம் சமூகத்தில் வழக்கொழிக்கப்பட்ட முக்கிய அனுஷ்டானங்களில் மற்றொன்று

The Night of Mid-Sha’ban

நடு ஷஃபான் இரவு


by Thaha Muzammil

இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இருந்து வழக்கொழிந்து போன அல்லது வழக்கொழிக்கப்பட்ட முக்கிய அனுஷ்டானங்களில் மற்றொன்று பராஅத் (ஷஃபான் மாதத்தின் நடு-நாள்) தின நிகழ்வுகள் ஆகும்.

நடு-ஷஃபான் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும். ஷியா முஸ்லிம்கள் இத்தினத்தை மிகவும் விமர்சையாகக் கொண்டாடுவர். ஏனெனில் இமாம் மஹ்தி (அலை) மீள்வருகையில் பூரண நம்பிக்கை கொண்டுள்ளதால் அவர்கள் பிறந்த நாளைக் குறிக்கும் இத்தினத்தை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறார்கள்.

உலகெங்கிலும் உள்ள ஷியா முஸ்லிம்கள் தங்கள் வீடுகள், மசூதிகள் மற்றும் ஷியா இஸ்லாமிய மையங்களை அலங்கரித்து இத்தினத்தை வெகு விமர்சையாகக் கொண்டாடுவர்.  மேலும் இத்தினத்தை இமாம் மஹ்தியின் பிறந்த நாளாகவும் கருதி புனித நாளாகவும் கொண்டாட்டங்களை நடத்துகின்றனர்.

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் இறை ஆணையின்படி பூமியில் மீண்டும் தோன்றுவார் அமைதியை நிலைநாட்டுவார் மற்றும் அநியாயம், பாகுபாடு மற்றும் பிற தீய நிகழ்வுகளிலிருந்து உலகை விடுவிப்பார் என்பது உலக முஸ்லிம்களின் நம்பிக்கை.

லைலத் அல்-பராத்

ஷஃபானில் ஒரு குறிப்பிடத்தக்க நேரம் மாதத்தின் நள்ளிரவு ஆகும், இது லைலத் அல்-பராத் அல்லது மன்னிப்பின் இரவு என்று அழைக்கப்படுகிறது. "இந்த இரவில் அல்லாஹ் தனது அடியார்களின் பாவங்களை மன்னிப்பான், இணைவைப்பவர்கள் (ஷிர்க்) அல்லது மற்றவர்கள் மீது வெறுப்பு மற்றும் பகைமை கொண்டவர்களைத் தவிர" என்று ஷீஆ-சுன்னி முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

இந்த நாளில் அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா தனது ஊழியர்களின் செயல்களை (தன்பால்) உயர்த்துகிறான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இபாதத் எனும் நல்ல அமல்களில், வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஆண்டின் மிகச்சிறந்த இரவுகளில் ஒன்று ஷப்-இ-பாரத் (15வது ஷபான்) அன்று என்று பலரால் கருதப்படுகிறது.

நடு-ஷஃபான் பற்றிய ஹதீஸ்கள் என்ன கூறுகின்றன?

15 ஆம் ஷஃபான் பற்றிய ஹதீஸ்களை உறுதியானவை (ஸஹீஹ்), நல்லவை (ஹஸன்) மற்றும் பலவீனமானவை (ழஈஃப்) என்ற கருத்துவேறுபாடுகள் அறிஞர்கள் மத்தியில் இருப்பினும், பல ஹதீஸ்களின் பலவீனம் கடுமையானதாக இல்லாததாலும், இந்த இரவின் சிறப்பு அறிஞர்களால் நம்பகமானதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஒரு ஹதீஸில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:  அல்லாஹ் தன்னை நடு-ஷஃபான் இரவில் வெளிப்படுத்தி, இணைவைப்பாளர்கள் மற்றும் பொறாமை கொண்டவர்களைத் தவிர மற்ற அனைத்து படைப்புகளையும் மன்னிப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

மேலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு மற்றும் இரவுத் தொழுகை போன்ற தனது வணக்க வழிபாட்டுச் செயல்களை அதிகரித்துக் கொண்ட மாதமும் ஷஃபான் மாதமாகும். நபித்தோழர்களும் அவ்வாறே செய்தார்கள், என்பதால் இந்த நல்ல நேரத்தில் நபிகளாரின் செயல்களைப் பின்பற்றுவது ஒரு சுன்னத் (மரபு) என்று கருதினர்.

ஷஅபானின் 15வது இரவின் முக்கியத்துவம் முஸ்லிம் அறிஞர்களிடையே விவாதப் பொருளாக உள்ளது. சிலர் இந்த இரவை சிறப்புத் தொழுகைகளுடன் கொண்டாடி, மறுநாள் நோன்பு நோற்கிறார்கள், இந்த நடைமுறை சுன்னா அல்ல என்று கூறும் அறிஞர்களும் உண்டு.

இந்த ஹதீஸ்கள் பற்றி இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகையில்: 'ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவின் சிறப்பைப் பற்றி பல ஹதீஸ்களும் அறிக்கைகளும் உள்ளன, எனவே இந்த இரவு சில நற்பண்புகளைக் கொண்டுள்ளது என்பதை ஒருவர் ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறார்'. இதுவே இந்த இரவைப் பற்றிய அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும்.

இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா செய்யத் அலி காமனேயி ஷ'பான் 15 ஆம் தேதி கொண்டாட்டம் பற்றி குறிப்பிடுகையில், "எங்கள் எதிர்பார்ப்பு மற்றும் ஷ'பான் 15 இன் கொண்டாட்டத்தில் இரண்டு முக்கிய விடயங்கள் உள்ளன, ஒன்று, எதிர்காலத்தின் மீது இது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது, அதாவது இது நம்பிக்கையின் ஊற்றுக்கண்.

அடுத்தது, அந்த மாபெரும் இமாம் (அலை) மீண்டும் தோன்றிய பிறகு உருவாகும் உலகில், மிக முக்கியமான பண்பு நீதியாகும். இமாமைப் பற்றியும் அந்த சகாப்தம் பற்றியும் பதிவாகியுள்ள அனைத்துக் விடயங்களையும், ஹதீஸ்களையும் பார்க்கும் போது, மக்களின் இறையச்சத்தில் முக்கிய கவனம் செலுத்தப்படுவதில்லை - நிச்சயமாக, அந்த சகாப்தத்தில் மக்கள் பக்தியுடனும், மதத்தில் சிரத்தைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை - ஆயினும் மக்கள் நீதி, நியாயத்தால் பயனடைவார்கள், அந்த நேரத்தில் நீதியும் சமத்துவம் நிலைநாட்டப்படும் என்பதிலேயே கூடிய கவனம் செலுத்தப்படுகிறது என்பதைக் காண்கிறோம்.

இஸ்லாத்தின் அரசியல் அதிகாரம் மற்றும் மதத் தூய்மையை மீட்டெடுப்பவராக எதிர்பார்க்கப்படும் இமாம் மஹ்தி (அலை) குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன, மேலும் இந்த ஆராய்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கல்வித் துறை மஹ்தவியத் என்று அழைக்கப்படுகிறது,

இமாம் மஹ்தியின் பிறந்தநாள் விழா ஈரானின் மிகப்பெரிய விளக்குகள் மற்றும் மகிழ்ச்சியின் திருவிழாவாகும், மேலும் அனைத்து ஷியா மற்றும் சுன்னி முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களும் கூட இந்த நிகழ்வைக் கொண்டாட தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, இமாம் மஹ்தி (அலை) அவர்கள் மீண்டும் தோன்றிய பிறகு தீமைக்கு எதிரான போராட்டத்திலும் ஈஸா (அலை) அவர்களும் இமாமுடன் இருப்பார் என்ற நம்பிக்கையின் காரணமாக கிறிஸ்தவர்களும் இக்கொண்டாட்டடங்களில் கலந்துகொள்வர்.

இந்த நாளை நினைவுகூரும் ஷியா மற்றும் சன்னி அறிஞர்கள் கலந்து கொள்ளும் வகையில் முஸ்லிம் நாடுகளில் பல பேரணிகள் மற்றும் மாநாடுகள் நடத்தப்படுகின்றன.

இந்த இரவின் முக்கியதத்துவம் என்னவென்றால், அல்லாஹ் தனது கருணையையும் மன்னிப்பையும் மக்ரிப் முதல் ஃபஜ்ர் வரை பூமியின் மீது பொழிவதாகும். நபி (ஸல்) அவர்கள் இறை மன்னிப்பின் அளவை சக்திவாய்ந்த சொற்களைக்கொண்டு பல ஹதீஸ்களில் விவரித்துள்ளார்கள்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவில் அல்லாஹ் தனது படைப்புகளை உற்று நோக்குகிறான், பின்னர் இரண்டு வகையினரைத் தவிர மற்ற தனது அடிமைகள் அனைவரையும் மன்னிக்கிறான்: அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்கள் மற்றும் தங்கள் சக முஸ்லிம்கள் மீது வெறுப்பவர்கள்'. [அஹ்மத்]

(மற்றும் சில இடங்களில், மன்னிக்கப்பட முடியாத பல வகைகளைக் குறிப்பிட்டுள்ளார், இதில் உறவின் உறவுகளைத் துண்டித்தவர்கள் மற்றும் பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்கள் உட்பட).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், இந்த இரவில், சூரியன் மறைந்தது முதல் விடியற்காலை வரை, அல்லாஹ் தன் அடியார்களை நோக்கி, 'நான் அவரை மன்னிக்கும் பொருட்டு யாராவது என்னிடம் பாவமன்னிப்புத் தேடுவார்களா? இன்னும், நான் அவருக்கு உணவளிக்க வேண்டுமென்று என்னிடமிருந்து எவரேனும் விரும்புகிறார்களா? அவனது துன்பத்தைப் போக்க யாராவது இறைஞ்சுவார்களா? என்று கேட்பவனாக இருக்கின்றான். [இப்னு மஜா]

எனவே, ஷஃபான் மாதம் 15 ஆம் நாள் இரவில் பாவமன்னிப்புக்காக இறைவனிடம் கையேந்துங்கள். உங்கள் திக்ரை அதிகப்படுத்துங்கள், மேலும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பையும், கருணையையும், துன்பத்திலிருந்து நிவாரணத்தையும், உணவையும் கேளுங்கள். நீங்கள் யாரை வெறுக்கிறீர்களோ அவர்களை மன்னித்து அவர்களுடன் உங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளுங்கள், குறிப்பாக அவர்கள் குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அல்லாஹ் மிகவும் கருணையாளனாகவும் அதிகம் மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.


Wednesday, February 21, 2024

ஊடக சுதந்திரத்திற்கு எதிராக இஸ்ரேல் இழைத்துவரும் கொடூரமான போர் குற்றம்

Israel's heinous crime against media freedom


By Mohsen Pakaein

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, கிட்டத்தட்ட 126 ஊடகவியலாளர்கள் காஸா போரின்போது திகொல்லப்பட்டுள்ளனர். இது சியோனிச ஆட்சி செய்தி ஊடகத்தை இலக்கு கொள்ளவும் தடையற்ற தகவல் பரிமாற்றத்தையும் சீர்குலைக்கவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களின் அடிப்படையில், மீட்பு உதவி ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் இராஜதந்திரிகள் உட்பட பல வகை மக்கள் போர்க்காலத்தில் விதிவிலகு கொண்டவர்கள், மேலும் மோதலில் ஈடுபட்டுள்ள எந்த தரப்பினராலும் தாக்கப்படவோ அல்லது தீங்கு விளைவிக்கப்படவோ கூடாது, மேலும் அவர்களின் கடமையை செய்வதிலிருந்து தடுக்கப்படக்கூடாது.

மறுபுறம், ஊடகவியலாளர்களை வேண்டுமென்றே கொலை செய்வது ஒரு போர்க்குற்றமாகக் கருதப்படுகிறது, மேலும் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அத்தகைய போர்க்குற்றங்களை விசாரித்து அவற்றின் மீது தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளது, மேலும் இந்த தீர்ப்பு அனைத்து நாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.

இந்த வழக்குகள் அனைத்தும் ஊடகவியலாளர்கள் களத்தின் யதார்த்தங்களை பிரதிபலிப்பதற்கும், காஸா போர் பிரச்சினை உள்ளிட்ட நிகழ்வுகளைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்கும், களத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு நேரடியாகத் தெரிவிப்பதற்கும் கடமைப்பட்டுள்ளனர் என்பதே காரணம்.

முதலாவது விடயம் பல காரணங்களுக்காக, சியோனிச ஆட்சி காஸா போரின் போது நடந்த நிகழ்வுகளைப் பற்றி உலக மக்களுக்கு தெரியப்படுத்த விரும்பவில்லை. இந்த ஆட்சி அதன் குற்றங்களை இரகசியமாக வைத்திருக்க விரும்புகிறது. உதாரணமாக, பொதுமக்களை கொல்வது மற்றும் மருத்துவமனைகளைத் தாக்குவது, குழந்தைகள் மற்றும் பெண்களைக் கொல்வது, அவர்கள் செய்துவரும் போர்க்குற்றங்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும், சியோனிச ஆட்சி இவ்வாறான குற்றங்களை ஏராளமாக செய்துள்ளது, அத்தகைய குற்றங்கள், ஊடகவியலாளர்களால் பிரதிபலிக்கப்படுவதையும், அவற்றைப் பற்றி மக்களுக்கு தெரிவிக்கப்படுவதையும் இஸ்ரேல் விரும்பவில்லை.


இரண்டாவது விடயம் என்னவென்றால், சியோனிச ஆட்சி தமது தரப்பில் ஏற்படும் உயிரிழப்புகள் ஏனையோரால் அறியப்படுவதை விரும்பவில்லை, உண்மையில் அங்கே பரந்த அளவிலான மற்றும் மிகவும் கடுமையான தணிக்கையை விதித்துள்ளது. இஸ்ரேல் சந்தித்து வரும் சேதங்களின் அளவையும் இறப்பு எண்ணிக்கையையும் உலகும் அவர்களின் ஆதரவாளர்களும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்களும் அறியக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்து வருகிறது.

தளங்களை தனது செல்வாக்கின் கீழ் கொண்டு வருவது இஸ்ரேலிய ஆட்சியின் மற்றொரு இலக்காகும். எடுத்துக்காட்டாக, யாராவது "இஸ்ரேலிய இறப்பு விகிதம்" என்ற வார்த்தையை கூகிள் செய்தால், அவர்கள் இது தொடர்பாக எந்த தரவையும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள், அதற்கு பதிலாக, வெவ்வேறு மொழிகளில் கூகிள் வழங்கிய தரவு காஸா மக்களின் உயிரிழப்புகளின் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்ட தரவுகளே அங்கு பதியப்பட்டிருக்கும், இதன்மூலம் இந்த Google தேடுபொறி சியோனிச ஆட்சியின் செல்வாக்கின் கீழ் உள்ளது என்பது மிகவும் தெளிவாகிறது. இஸ்ரேலிய தரப்பினரின் சேதங்கள், உயிரிழப்புகள் மற்றும் காயப்பட்டவர்களின் எண்ணிக்கை போன்றவற்றை அறிக்கையிடும் வலைத்தளங்களைப் பார்க்கக் கூட அது அனுமதிப்பதில்லை.

மற்றொரு பிரச்சினை என்னவென்றால், போரின் தொடக்கத்தில், இஸ்ரேல் என்பது வெல்ல முடியாத ஒரு சக்தி என்ற ஒரு மாயையை உருவாக்க ஓர் உளவியல் நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக அதன் செய்திகளை தணிக்கை செய்ய முயன்றது.  ஆனால் காலப்போக்கில், சியோனிச ஆட்சியின் தோல்விகளை எந்த வகையிலும் மறுக்க முடியாது என்ற ஒரு சூழ்நிலையில், சியோனிச ஆட்சி தாமே அநியாயமிழைக்கப்பட்டோராக காட்டி ஊடகங்கள்  மூலம் ஹமாஸை குற்றவாளியாக்கவும் முயன்றது. அதற்காக குழந்தைகளின் கை, கால்களை வெட்டுவது, பெண்களை ஹமாஸ் அவமானப்படுத்துவது போன்ற சில பொய்களை ஊடகங்களில் பரப்பியது.  எவ்வாறாயினும், சுயாதீன ஊடகங்கள் இஸ்ரேலின் சூழ்ச்சி வலையில் விலாததாலும், போரின் யதார்த்தங்களை உள்ளபடி பிரதிபலித்ததாலும் அத்தகைய தந்திரம் தோல்வியடைந்தது. இதன் காரணமாக பத்திரிகையாளர்களை மிரட்ட முடிவு செய்த இஸ்ரேல், காஸாவில் உள்ள ஊடகவியலாளர்களை குறிவைத்து அவர்களை கொலை செய்யத் தொடங்கியது.

இந்த நடவடிக்கைகள், சர்வதேச விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதால் பல்வேறு சர்வதேச அமைப்புகளை எதிர்வினையாற்றவும் கட்டாயப்படுத்தியது. குறிப்பாக, காஸா போரில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை நடந்த அனைத்து போர்களை விடவும் அதிகம் என்று எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு (Reporters Without Borders) ஒரு ஒப்பீட்டில் அறிவித்தது. எனவே, இந்த வழக்கில் தலையிட்டு போர்க்குற்றமாக விசாரிக்க வேண்டும் என்று ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை இந்த அமைப்பு கேட்டுக் கொண்டது.

தற்போதைய நிலையில், தகவல் துறை தொடர்பான அனைத்து சர்வதேச நிறுவனங்களும் சர்வதேச நீதிமன்றத்தில் புகார் செய்தல் அவசியம் என்று கருதுகின்றன. ஆகவே, காஸா விடயத்தில் முக்கிய கவனம் எடுத்து செயல்படும் இஸ்லாமிய அரசுகள் மற்றும் எதிர்ப்பின் அச்சு உட்பட பல்வேறு நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு, இந்த ஒடுக்கப்பட்ட தகவலறிந்த ஊடகவியலாளர்களின் குரலை வலுவான ராஜதந்திரத்துடன் உலகுக்கு தெரியப்படுத்தவும், ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதில் கவனம் செலுத்தவும் வலியுறுத்தப்படுகின்றன.

https://en.irna.ir/news/85389207/A-terrible-crime-against-media-freedom

Saturday, February 17, 2024

துரோகத்தின் தாழ்வாரம் ஆக மாறிவிட்ட சவுதி அரேபியா...!

The corridor of betrayal

 By Mona Hojat Ansari

செங்கடலில் யெமன் முற்றுகையை சமாளிக்க அரபு நாடுகளின் உதவியை இஸ்ரேல் எவ்வாறு பயன்படுத்துகிறது

நவம்பர் 19 அன்று, காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலின் மிருகத்தனமான கொடூரத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் உலகம் இன்னும் போராடிக் கொண்டிருந்தபோது, இஸ்லாமிய புரட்சியின் தலைவர் அயதுல்லா செய்யத் அலி கமேனி, பாலஸ்தீனியர்களின் உயிர்களைக் காப்பாற்ற உதவுவதற்காக இஸ்லாமிய நாடுகள் குறைந்தபட்சம் "வரையறுக்கப்பட்ட காலத்திற்காவது" சியோனிச ஆட்சியாளர்களுடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இதை அரசாங்கங்கள் செய்யு முன்பு, உலகெங்கிலும் உள்ள மக்கள் இன, மத பேதங்கள் மறந்து தங்களால் முடிந்த சகல வகையிலும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் இமாமின் இந்த ஆலோசனையைப் பின்பற்றுவதாகத் தோன்றியது. மேற்கு ஆசியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள கடை அலமாரிகள் இஸ்ரேலிய தயாரிப்புகளின் குவியலைக் காணத் தொடங்கின, ஏனெனில் குடிமக்கள் ஒரு இனப்படுகொலைக்கு நிதியளிக்க தங்கள் பணத்தை செலவிட தயராக இல்லை. பலர் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதைத் தவிர்த்தது மட்டுமல்லாமல், சியோனிச ஆட்சியுடன் தொடர்புடைய வியாபார அடையாளங்களையும் புறக்கணித்தனர், இதனால் ஸ்டார்பக்ஸ் மற்றும் மெக்டொனால்ட்ஸ் போன்ற மாபெரும் நிறுவனங்கள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்தன.

அரபு நாடுகளில், சில நாடுகள் மற்றவர்களை விட இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு எதிராக செயல்பட கடமைப்பட்டிருப்பதாக உணர்ந்தன. பாலஸ்தீனியர்களுக்கு எதிரான மிகப்பெரிய ஒற்றுமையை யெமன் வெளிப்படுத்தியது. வறிய நாட்டின் அன்ஸாருல்லாஹ் இயக்கம் செங்கடலில் இஸ்ரேலிய கப்பல்களை குறிவைக்கத் தொடங்கியது, இது இஸ்ரேலுக்கு மிகவும் முக்கியமான ஒரு உயிர்நாடியை - பரபரப்பான எலியட் துறைமுகத்தை - மூச்சுத் திணறடித்தது. எவ்வாறாயினும், காஸாவுக்கு ஆதரவான யெமனின் தைரியமான நிலைப்பாட்டின் காரணமாக அவர்கள் சந்தித்து வரும் சவால்களும் இழப்புகளும் கொஞ்சநஞ்சமல்ல.

இஸ்ரேலின் எல்லா குற்றச்செயல்களுக்கும் உடந்தையாக இருக்கும் அமெரிக்காவும் பிரிட்டனும் சாதாரண மக்களின் நலன்களை "பாதுகாக்க" செயல்படுவதாகக் கூறி யெமன் நிலைகள் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கின. மேற்கத்திய ஊடகங்கள் ஏன் எதற்கு என்று கேள்வி எழுப்பாமல், செங்கடலில் அன்சருல்லாவின் தாக்குதல்கள் இறுதியில் மேற்கில் விலைவாசி உயர்வை ஏற்படுத்தும், எனவே அதை அடக்கி ஆக வேண்டும் என்று வாதிட்டன. இஸ்ரேலிய கப்பல்கள் மட்டுமே குறிவைக்கப்படுகின்றன என்ற உண்மை குறித்தும், பாலஸ்தீனியர்களை இனி கொல்வதில்லை என்று ஆட்சி ஒப்புக்கொண்டவுடன் இந்த தாக்குதல்களும் முடிவுக்கு வரும் என்பது பற்றியும் எதுவும் அவற்றில் குறிப்பிடப்படவில்லை.

ஜனவரி 12 அன்று மேற்கத்திய வான்வழித் தாக்குதல்கள் யெமன் மக்கள் மீது பல ஆண்டுகளாக இடைவிடாத சவூதி குண்டுவீச்சின் எதிரொலிகளைக் மீண்டும் கட்டவிழ்த்து விட்டன.

ஆனால், யெமன் மக்கள் தங்களுக்கு கிடைத்த கொடுமையின் மீட்டளைப்பற்றி பற்றி அதிகம் கவலைப்படவில்லை.  "நேர்மையாக, எனது பாதுகாப்பான வீட்டில் இரவைக் கழித்துக்கொண்டிருந்த வேளை காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் குண்டுவீச்சுக்கு ஆளானதை நினைத்து நான் வெட்கப்பட்டேன். இப்போது எனக்கு அந்த எண்ணம் குறைந்துவிட்டது. நாங்கள் தாக்கப்படுவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் விரும்புவதெல்லாம் காஸாவில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவ முடியும் என்பதுதான்" என்று மேற்கத்திய (அமெரிக்க + பிரித்தானிய) தாக்குதல்களுக்கு பிந்திய நாளில் பாலஸ்தீனியர்களுக்கு உறுதியான ஆதரவை வெளிப்படுத்த சனாவில் குவிந்த மில்லியன் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்த ஒருவர் கூறினார்.

இஸ்ரேலிய கப்பல்களுக்கு எதிரான அதன் நடவடிக்கைகளை நிறுத்த மறுத்த யெமன் இன்று அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் போர் விமானங்களால் தொடர்ந்து குண்டு வீசி தாக்கப்படுகிறது. என்றாலும் இஸ்ரேலுக்கு பொருளாதார அடிகளை கொடுப்பதன் மூலம் ஹமாஸ் சகோதரர்களுடனான எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகிறோம், காலம் கடந்து போவதற்கு முன் காஸா மக்கள் மீதான அதன் தாக்குதல்களை சியோனிச ஆட்சி நிறுத்திவிட வேண்டும், இல்லையேல் அன்ஸாருல்லாஹ்வின் எதிர் நடவடிக்கைகள் நிச்சயமாக தொடரும்.

முஸ்லிம் உலகம் முழுவதும், அயதுல்லா கமேனியின் கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காக உள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு துருக்கி தனது ஏற்றுமதிகளை அதிகரித்தது; சில அரபு நாடுகள் இஸ்ரேலின் மீட்புக்கு விரைந்தன, இந்த செயலானது காஸா மக்களது மீட்சிக்கான யெமனிய மக்களின் முயற்சிகள் அனைத்தையும் வீணடித்தன.

பிப்ரவரி தொடக்கத்தில் இஸ்ரேலின் ‘சேனல் 13’ இல் திடுக்கிடும் செய்திகள் வெளிவந்தன, ஜோர்டான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய மூன்று அரபு நாடுகளின் உதவியுடன் செங்கடலில் யேமனின் முற்றுகையை இஸ்ரேல் எவ்வாறு கடந்து முறியடிக்கிறது என்பதற்கான காட்சிகளை அது வெளிப்படுத்தியது. நூற்றுக்கணக்கான டிரக்குகளில் பொருட்களும் புதிய உணவுகளும் சவுதி அரேபியா மற்றும் ஜோர்டானில் இருந்து பயணித்து இறுதியில் துபாய் வழியாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஹைபா துறைமுகத்தை வந்தடைகிறது என்று அது தெரிவித்தது.

மூன்று அரபு நாடுகளும் இஸ்ரேலிய அறிக்கையை இதுவரை நிராகரிக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ இல்லை என்றாலும், அவற்றின் விளக்கங்கள் எப்படியும் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

பலஸ்தீனியர்களுக்கு உதவ பெரும்பாலான அரபு நாடுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த செய்தியை அவர்கள் மறுத்தாலும், அவர்கள் உண்மையில் காஸா மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என்பதால், மக்கள் இன்னும் அவர்களை செயலற்றவர்கள் என்றே குற்றம் சாட்டுவார்கள்,” என்று ஜோர்டான் மற்றும் லெபனானுக்கான ஈரானின் முன்னாள் தூதர் அஹ்மத் தஸ்மால்சியன் தெஹ்ரான் டைம்ஸிடம் கூறினார்.

போர் முடிந்தவுடன் இஸ்ரேலிய ஆட்சியுடன் தங்கள் உறவுகளை தக்க வைத்துக்கொள்ள அல்லது விரிவுபடுத்திக் கொள்வதற்காக அரபு நாடுகள் இரண்டு தேசங்கள்முன்மொழிவுகளை புதுப்பிக்கும் அபிலாஷைகளையே கொண்டுள்ளன என்று முன்னாள் இராஜதந்திரி நம்புகிறார்.

"ஜோர்டான் வாஷிங்டனை நம்பியிருப்பதால் பாலஸ்தீனியர்களை ஆதரிப்பதில் தடைகள் உள்ளன. ஆனால் சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இங்கு மூலோபாய தவறுகளைச் செய்கின்றன, "என்று அவர் விளக்கினார், ஒரு பாலஸ்தீனிய அரசு உருவாக்கப்பட்டாலும், பாலஸ்தீனியர்கள் தங்கள் நிலங்களையும் அடையாளத்தையும் திருடிய மக்களுடன் வாழ்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

"இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் வரை எதிர்ப்பு இருக்கும். எனவே சியோனிச ஆட்சியுடன் உறவுகளை இயல்பாக்குவது ஒருபோதும் தீர்வாக அமைய போவதில்லை. அதற்கு பதிலாக அரேபியர்கள் பாலஸ்தீனியர்களின் சுயநிர்ணய உரிமையை மதிக்க வேண்டும், மேலும் அவர்கள் தங்கள் மூதாதையர் நிலங்களை என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும் ".

இதற்கிடையில், இஸ்ரேலிய குற்றங்களை எதிர்கொள்ளும் செயலற்ற தன்மை பிராந்திய ஆட்சியாளர்களுக்கு ஏமாற்றத்தை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அரபு உலகின் சில பிரமுகர்கள் அரசுகளை எச்சரித்துள்ளனர். காஸா இனப்படுகொலையில் அரபு நாடுகளின் கூட்டுச்சதிக்கு இந்த தாழ்வாரம் சமம் என்றும், இறுதியில் ஜோர்டான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பொதுமக்களை அதிர்வலைகளுக்கு உட்படுத்தக்கூடும் என்றும் பிரபல எகிப்திய பத்திரிகையாளர் ஒருவர் கூறுகிறார்.

"இந்த மூன்று நாடுகளும் யெமனியர்களைப் போன்ற அதே துணிச்சலான நிலைப்பாட்டை எடுக்கவும், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் போர்க்கப்பல்களை எதிர்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. ஆனால் இந்த கையாலாகாத்தனத்தால் கொதிப்படைந்துள்ள தங்கள் சொந்த மக்கள் சொல்வதைக் கேட்குமாறு நாங்கள் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்" என்று அப்துல் பாரி அத்வான் ஒரு கட்டுரையில் எச்சரித்துள்ளார்.

https://www.tehrantimes.com/news/494928/The-corridor-of-betrayal