Friday, July 27, 2018

ஈரான் தபாஸில் உடல் கருகிச் செத்த அமெரிக்க இராணுவம்...!


Operation Eagle Claw (Tabas Fiasco)

ஈரானில் இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்று சில மாதங்களில் அமெரிக்க ராஜதந்திரிகள் புரட்சிக்கு எதிரான சதித்திட்டத்தில் ஈடுபடுவதாக சந்தேகித்த தெஹ்ரான் பல்கலைக்கழக மாணவர்கள் 1979ம் ஆண்டு நவம்பர் 4ம் திகதி  தெஹ்ரானில் இருந்த அமெரிக்க தூரகத்தை சுற்றிவளைத்து, 52 ராஜதந்திரிகளை பணயக்கைதிகளாக வைத்திருந்தனர்.

1953ம் ஆண்டு அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட முஹம்மத் முசத்தேக்கின் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டிருந்த அனுபவம் அம்மாணவர்களை இவ்வாறு செய்யத்தூண்டியது.

இந்த பணயக்கைதிகளை மீட்பதற்கு ஆபரேஷன் ஈகிள் க்ளோ (Operation Eagle Claw) ராணுவ நடவடிக்கை அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி காட்டரின் நேரடி கண்காணிப்பில் மிக ரகசியமான முறையில் திட்டமிடப்பட்டது. இதற்கென மிகவும் அனுபவம் வாய்ந்த இராணுவ குழு ஒன்றுக்கு பல மாதங்கள் விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டன. சாதக பாதகங்கள் அனைத்தும் நுட்பமாக ஆராயப்பட்டு, ஓரணுவும் பிசகாதபடி, மிகவும் கச்சிதமாகத் திட்டம் வகுக்கப்பட்டது. இந்தப் பணியை இரண்டே இரவுகளுக்குள் செய்து முடிக்கவேண்டும் என்றும் வடிவமைக்கப்பட்டது.


இந்த திட்டத்தின் அடிப்படையில், USS Nimitz என்ற விமானத்தாங்கி யுத்தக்கப்பலில் இருந்து 8 RH-53D Sea Stallion ரக இராணுவ ஹெலிகாப்டர்கள், திட்டமிட்டபடி, 1980 ஏப்ரல் 24ம் திகதி 'தபாஸ்' எனும் பாலைவன பிரதேசம் நோக்கி புறப்பட்டன. அங்கு CIA விசேட செயலாற்று படையணி, இவர்களின் திட்ட செயற்பாட்டில் உதவுவதற்காக ஏற்கனவே தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

ஆயினும், அப்பிரதேசத்தை நெருங்குமுன்னரேயே மூன்று ஹெலிகாப்டர்கள் பழுதடைந்தன; ஒரு ஹெலிகாப்டரில் எஞ்சின் கோளாறாரு ஏற்பட்டது, மற்றொன்று மணற்புயலில் சிக்கி சேதமடைந்தது, இன்னுமொன்று சிறகில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இயங்க முடியாது போனது. இறுதியில் ஐந்து ஹெலிகொப்டர்களே இலக்கை சென்றடைந்தன.

இந்த ரகசிய திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என்ற விடயம் அமெரிக்க ஜனாதிபதி காட்டருக்கு அறிவிக்கப்பட்டது. திட்டம் வெற்றிபெறும் சாத்தியம் அறவே இல்லையென்பதால் அதனை கைவிடும்படி ஜனாதிபதி காட்டர் பணித்தார். பணயக்கைதிகள் மீட்புத் திட்டம் கைவிடப்பட்டது.

திட்டம் கைவிடப்பட்டு திரும்புவதற்காக ஒரு ஹெலிகாப்டரை இயக்குகையில், அங்கிருந்த மற்றொன்றுடன் மோதி, இரண்டும் வெடித்துச் சிதறின. அவற்றிலிருந்து 8 விமானிகளும் கருகி மாண்டனர்.

மறுநாள் காலை அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி காட்டர் தமது திட்டம் தோல்வியில் முடிந்ததை ஒப்புக்கொண்டார். இது உலகின் முன் அமெரிக்காவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. அடுத்துவந்த ஜனாதிபதி தேர்தலில் காட்டர் தோல்வியடைய இதுவே முக்கிய காரணமாய் அமைந்தது.
"அமேரிக்கா தனது வல்லமையைக்காட்டி, சாகசம் புரிய ஈரானுக்குள் 8 யுத்த ஹெலிகாப்டர்களை அனுப்பியது. ஒரு ஹெலிகாப்டர் எஞ்சின் கோளாறாரு ஏற்பட்டடு செயலிழந்தது, மற்றொன்று மணற்புயலில் சிக்கி சேதமடைந்தது, இன்னுமொன்று சிறகில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இயங்க முடியாது போனது. இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்துச் சிதறின. 8 பேர் கருகி மாண்டனர். 3 ஹெலிகாப்டர்களை ஈரானிலேயே விட்டுவிட்டு ஓடினர்."
இந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக அமேரிக்கா அறிவிக்கும் வரை ஈரானிய அதிகாரிகள் அறிந்திருக்க வில்லை.

இந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு இடம்பெற்ற காலகட்டத்தில் ஈரானில் புரட்சி வெற்றிபெற்று ஒன்பதே மாதங்கள்; நாடு இன்னும் ஸ்திரத்தன்மையை அடைந்திருக்கவில்லை. MKO பயங்கரவாதிகள் பல குண்டுவெடிப்புகளை நடத்திக்கொண்டிருந்த காலமது. அனுபவம் வாய்ந்த இராணுவ அதிகாரிகள் பலர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர்; அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களோ அனுபவமற்ற புதியவர்கள். அதுமட்டுமல்ல அப்போது ஜனாதிபதியாக இருந்த பனீஸத்ர், ஒரு CIA உளவாளி என்பதும் அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ரகசிய ஆவணங்களில் இருந்து பிறகு அறியவந்தது.

அமெரிக்காவின் இந்தத்தோல்வி இறைவனின் செயலன்றி வேறு எதுவாக இருக்க முடியும்...?

தாஹா முஸம்மில் 

Thursday, July 12, 2018

ஒப்பந்தங்களை மதிக்காத அமெரிக்காவை நம்பமுடியுமா...?

Can America be trusted...?

Dr. Mohamed Javad Zarif
Foreign Minister of Islamic Republic of Iran

கலாநிதி முஹம்மத் ஜவாத் ஸரீஃப்


- தமிழில் மர்வான் முஹம்மத் -

பசிபிக் சமுத்திரப் பகுதியிலான வணிகக் கூட்டு ஒப்பந்தம், வானிலை தொடர்பான பாரிஸ் ஒப்பந்தங்கள் ஆகியவற்றை அடுத்து, ஈரானின் அணுத்திட்டம் தொடர்பான விரிவான கூட்டு செயற்திட்டம்தான் (Joint Comprehensive Plan of Action - JCPOA) அமெரிக்க அரசாங்கம் தானாகவே அதனை முறித்துக்கொண்டு வெளியேறியுள்ள மூன்றாவது சர்வதேச ஒப்பந்தமாகும்.

Image result for mohammad javad zarif
அமெரிக்க அரசாங்கம், இதுபோன்ற தனது நடவடிக்கைகள் மூலம் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (NAFTA), சுதந்திர வர்த்தக முறைமை (FT) போன்ற ஏனைய பல்வேறு ஒப்பந்தங்களையும், ஐக்கிய நாடுகள் பேரவையினுடைய கட்டமைப்பின் சில பகுதிகளையும் அச்சுறுத்தியுள்ளதுடன், பன்னாட்டு அமைப்புகளின் பங்கேற்பு (Multilateralism) மற்றும் இராஜதந்திர வழிகளினூடாக முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான வாய்ப்பு ஆகியவற்றையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

அமெரிக்க மக்களின் அபிப்பிராயத்திற்கு முரணாக அமைந்திருந்தும் கூட 2018-05-08 தேதியில் JCPOA ஒப்பந்ததிலிருந்து அமெரிக்கா வெளியேறி, ஒருதலைப் பட்டசமாகவும் சட்டவிரோதமாகவும் அணுசக்தித் தடைகளை மீளவும் அமுலாக்கம் செய்தமையானது, உண்மையில் இவ்-ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான மீறல்களாக அமைந்ததோடு, பொதுவாக ஒப்பந்தங்கள் தொடர்பில் அமெரிக்காவின் படுமோசமான உச்சநிலையை இது வெளிப்படுத்தியிருந்தது. அதேநேரத்தில், JCPOA ஒப்பந்தத்திற்கு அமைவாக தமது ஒப்பந்தங்களை ஈரான் இஸ்லாமியக் குடியரசு பேணி வந்துள்ளமையை சர்வதேசத் தகுதிவாய்ந்த நிபுணர் அமைப்பு என்றவகையில் 'சர்வதேச சக்தி நிறுவனம்' (International Energy Agency) தொடர்ச்சியாக உறுதிப்படுத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்காவின் இத்தீர்மானம், அந்நாட்டின் பங்காளிகளான ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் உட்பட சர்வதேச சமூகத்தின் கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

2018-05-21 தேதியில் அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சரும் கூட அவமதிக்கும் வகையில் தனது மூர்க்கத்தனமான, அடிப்படையற்ற சொற்பொழிவு ஒன்றிலே, நன்கு அறியப்பட்ட சர்வதேச நெறிமுறைகளோடு வெளிப்படையாக முரண்பட்டதாகவும், சர்வதேச உரிமைகளோடு முற்றிலும் வேறுபட்டதாகவும், நாகரீகமான செயற்பாடுகளுக்கு எதிரானதாகவும் அமையும் வகையில், ஈரான் தொடர்பிலான கோரிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

அனைத்துக்கும் மேலாக இச்சொற்பொழிவானது, JCPOA ஒப்பந்தத்தை இல்லாதொழித்து, அதன் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக வாஷிங்டன் எடுத்த முயற்சி குறித்து சர்வதேச சமூகத்தின் ஒன்றுபட்ட எதிர்ப்பிற்கு முன்னிலையிலே, அமெரிக்க அரசாங்கத்தின் உயிர்ப்பற்ற எதிர்வினையாக அமைந்திருந்தது.

திரு மைக் பாம்போ (Mike Pompeo) தனது சொற்பொழிவில், உண்மையில் JCPOA ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியமை தொடர்பிலான அமெரிக்காவின் நடவடிக்கையை நியாயப்படுத்தவும், ஐ.நாவுடைய பாதுகாப்புச் சபையின் 2231வது தீர்மானத்தை, (அதன் உள்ளடக்கம் அமெரிக்க அரசாங்கத்தினாலேயே முன்மொழியப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்த நிலையிலும்கூட) புறக்கணித்துவிட்டு, மேற்கொள்ளப்பட்ட இச்சட்டவிரோத நடவடிக்கை குறித்த சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசைதிருப்பிவிடவும் முயற்சித்திருந்தார்.

குறிப்பாக, இவரது சொற்பொழிவில் குறிப்பிடப்பட்ட பன்னிரண்டு முன்நிபந்தனைகள், பன்முகத்தன்மையை பலயீனப்படுத்தும் விதத்திலான தனிப்போக்கு மற்றும் முயற்சி ஆகிவற்றினால் அமெரிக்கா தானே தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் அபத்தமாயிருந்தன.

இச்சொற்பொழிவும், அமெரிக்க ஜனாதிபதியின் சொற்பொழிவும் அமெரிக்க ஆதரவாளர்கள் உட்பட சர்வதேச சமூகத்தைக் கருத்திற்கொள்ளாது நிகழ்த்தப்பட்டிருந்தமையால், அவை எதிர்மறையான அணுகுமுறைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தன. மேலும், நமது பிராந்தியத்தில் அமெரிக்க செய்மதிகளில் சில மட்டுமே அவற்றை ஆதரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஈரானிய வரலாறு, கலாசாரம் மற்றும் சுதந்திரத்திற்கும், விடுதலைக்குமான ஈரானிய மக்களின் வரலாற்றுப் போராட்டங்கள் என்பவை தொடர்பில் குறைந்தளவு தகவல்களையாவது பெற்றுக்கொண்டுஅமெரிக்காவின் சில பிராந்திய நட்பு நாடுகளைப் போலல்லாது, ஈரானின் அரசியல் முறையானது, குறிப்பிட்ட மக்கள் புரட்சியினாலும், மக்களின் விருப்பத் தெரிவினாலும் அமையப்பெற்றது என்பதை அறிந்துதான், இப்படி உரையாற்றியிருப்பார் என்பதில் நாம் ஐயம் கொள்கிறோம். 

1953 இல் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னரான 25 வருடங்களில் மிகவும் உச்சநிலையை அடைந்துள்ள வெளிநாட்டுத் தலையீடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதே, ஈரானிய மக்களின் மிகப்பெரும் அபிலாஷைகளில் ஒன்று என்பதை அவர் விளங்கிக்கொள்ள வேண்டும்.

கடந்த நாற்பது ஆண்டுகளில் ஆட்சிக்கவிழ்ப்பு சதித்திட்டம், இராணுவத் தலையீடு, திணிக்கப்பட்ட போரில் ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவளித்தல், ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகள் மற்றும் அதனை நாடுகடந்து பொதுமைப்படுத்தல் மற்றும் ஒரு ஈரானிய பயணிகள் விமானத்தை அழித்துவிட்டமை முதலான அமெரிக்காவின் பல்வேறு அழுத்தங்கள், ஆக்கிரமிப்புக்கள் ஆகிவற்றிற்கு எதிராக ஈரானிய மக்கள் தலைநிமிர்ந்து நின்றதையும், ஈரானிய மக்கள் ஒருபோதும் இவ்வுண்மைகளை மறக்க மாட்டார்கள் என்பதையும் அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

ஈரானின் அரசியல் அமைப்புக்கு மிகப்பெரும் ஆதரவாக இருப்பது, சுதந்திரமான மற்றும் அமைதியை வேண்டுகின்ற குடிமக்களே. இம்மக்கள், பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உலகளாவிய ரீதியிலான நல்லுறவைப் பேணுவதோடு, கொடுங்கோன்மைக்கும், பேராசைக்கும் எதிரே போராடத் தயாராகவுள்ளனர். மேலும், தமது சுதந்திரம் மற்றும் கௌரவத்தை ஒரே அணியில், ஒரே குரலின் கீழ் பாதுகாக்கவும் தயாராகவுள்ளனர்.

சதாம் மற்றும் அவரது ஆதரவாளர் போன்று புராதன மற்றும் நாகரீகமான இந்நிலப்பரப்புக்கு எதிராகப் படையெடுத்தோர் இழிநிலையான தலைவிதிக்குள் சிக்கிக்கொண்டனர் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. ஈரான் தனது பிரகாசமான எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடனும், அவ்வாறே கௌரவத்துடனும், பெருமையுடனும் தனது வழியே பயணித்துக்கொண்டே இருக்கும்.

துரதிஷ்டவசமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஈரான் இஸ்லாமியக் குடியரசு தொடர்பான அமெரிக்காவின் அரசியல் கொள்கை உட்பட அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கை (அப்படியொரு கொள்கை இருக்குமாயின்) ஆதாரமற்ற, சந்தேகத்திற்கிடமான எண்ணப்பாடுகளால் ஆனதேயாகும். 

அமெரிக்கா, ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தெளிவாகவே தலையிட்டுள்ளது. 1955 உடன்படிக்கை, 1980 அல்ஜீரிய பிரகடனம் ஆகிய ஐ.நாவின் சாசனங்களுக்கு அமைவாக அமெரிக்கா கைச்சாத்திட்ட சர்வதேச ஒப்பந்தங்களோடு, அந்நாடு பகிரங்கமாகவே முரண்பட்டதன் மூலமாக ஐக்கிய நாடுகள் பேரவையில் அங்கம் வகிக்கின்ற ஒரு நாட்டை சட்டவிரோதமாக அச்சுறுத்தியுள்ளது.

இப்படியான அமெரிக்காவின் ஜனாதிபதி மற்றும் அதன் வெளியுறவு அமைச்சர் ஆகியோரின் தொடர்ச்சியான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாம் நிராகரிக்கும் அதேவேளை, பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டுவதனூடாக முழு சர்வதேச சமுதாயத்திற்கும் சேதம் விளைவிக்கக்கூடிய அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் சிலவற்றின்பால் அதன் அரசாங்கத்தில் பங்கேற்றுள்ள உயர்மட்ட தலைவர்களின் கவனத்தை திருப்பிவிட விரும்புகிறோம்.

1. அமெரிக்க ஜனாதிபதியின் அர்த்தமில்லாத, திடீர் முடிவுகளும், செயற்பாடுகளும், அவ்வாறே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆர்வளர்களை ஆசுவாசப்படுத்தும் வகையிலான நியாயப்பாடுகள், இணக்கப்பாடுகள் ஆகியவற்றைக் கண்டடைவதற்கான அவருடைய ஆதரவாளர்களின் முயற்சிகளும் துரதிஷ்டவசமாக கடந்த 17 மாதகாலப் பகுதிக்குள் வாஷிங்டனில் இதுபோன்று முடிவெடுக்கும் செயல்முறையாக மாறியுள்ளமை வெளிப்படையானதே. அவற்றை நியாயப்படுத்துவதற்காக திட்டமிடாமலும், அவசரப்பட்டும் எடுக்கப்பட்ட இது போன்ற தீர்மானங்களும், விளக்கங்களும் முன்பின் முரண்படுகின்ற வார்த்தைப் பிரயோகங்களுக்கும், முரண்பாடான செயற்பாடுகளுக்கும் இட்டுச் சென்றுள்ளன. உதாரணமாக, காங்கிரஸின் விசாரணை ஒன்றில், அப்போது CIA அமைப்பின் தலைவராக இருந்த திரு மைக் பாம்போ, அதன் உறுப்பினரின் கேள்விக்கு பதிலளிக்கையில், 'ஈரான் ஒப்பந்தத்தை மீறவில்லை' என்பதாக உறுதிப்படக் கூறியிருந்தார். ஆனால், அவ்-ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க ஜனாதிபதி வெளியேறத் தீர்மானித்த பின்னர், மே 21இல் ஆற்றிய சொற்பொழிவிலே ஏலவே தான் குறிப்பிட்டதற்கு மாற்றமாகவும், சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் கருத்துகளுக்கு மாற்றமாகவும் 'ஈரான் ஒப்பந்தத்தை மீறியுள்ளது' என்பதாகக் குறிப்பிட்டார். 

2. அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் கூறுகள், அண்மைக் காலங்களில் ஏலமிடப்பட்டிருக்கின்றன. அதாவது, வழக்கமான சட்டமன்ற உறுப்பினர்களின் பரப்புரையை (Lobbying) விடவும் மேலாங்கிவிட்டது என்று கூறினால் மிகையாகாது. உதாரணமாக, இதுவரையில் ஒரு அமெரிக்க ஜனாதிபதி, தனது தேர்தல் பிரச்சாரக் காலப்பகுதியில் எந்தவொரு நாட்டையும் 'மதவெறியர்' என்றோ, 'பயங்கரவாதத்தின் ஆதரவாளர்' என்றோ கூறிவிட்டு, பின்னர் அதனையே தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தின் இலக்காகத் தேர்வு செய்த வரலாறோ அல்லது வெளிப்படையாகவே அமெரிக்க வெளியுறவுக்கொள்கையின் கூறுகளை நிபந்தனையாக கூறிவிட்டு, குறித்த அந்நாட்டினால் ஆயுதம் மற்றும் பிறபொருட்களை வாங்குவதை ஒத்திவைத்த வரலாறோ, முன்எப்போதும் கிடையாது. பெரும்பாலும் சட்டவிரோதமான, முற்றிலும் பௌதீகமான நலன்களே அமெரிக்க வெளியுறவுக்கொள்கையின் நடைமுறையின் அடித்தளமாக அமைந்திருப்பதை சில அறிக்கைகள், பல்வேறு சந்தர்ப்பங்களில் காட்டியுள்ளன. 

3. சர்வதேச சட்டஒழுங்குகளையும், விதிமுறைகளையும் புறக்கணித்தல், சர்வதேச ஒழுங்கமைப்பில் காணப்படும் எந்தவொரு சட்டபூர்வத்தையும் அழிப்பதற்கு முயற்சித்தல் என்பன அமெரிக்காவின் தற்போதைய அரசின் வெளியுறவுக்கொள்கையின் மற்றொரு விஷேட அம்சமாகும். செய்தித்தாபனங்கள் விடுத்த அறிக்கைகளுக்கு அமைவாக, கனடாவின் ஜி-7 உச்சிமாநாட்டின் அறிக்கை பற்றிய பேச்சுவார்த்தைகளின் போது, 'சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கு' எனும் சுலோகத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்த வாசகத்தைக் குறிப்பிடுவதை அமெரிக்கப் பிரதிநிதிகள் மறுத்தனர். ட்ராம்பின் அரசு 'வாக்குறுதியை நிறைவேற்றுதல்' எனும் அடிப்படையான விதியை மறுப்பதனூடாக அழிவை ஏற்படுத்தும் தன்னுடைய விஷ்வரூபத்தைத் வெளிப்படுத்தியிருக்கிறது. கணிசமான சர்வதேச ஒப்பந்தங்களிலிருந்து அமெரிக்கா வெளியேறியமை, மேலும் அவற்றுள் கணிசமானதை அச்சுறுத்தியமை, அவ்வாறே ஐக்கிய நாடுகள் பேரவைக்கு எதிராக தற்போது மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் என்பன அவ்-அரசு தற்போது நிறைவேற்றியுள்ள, அவ்வாறே சர்வதேச ஒழுங்கமைப்பிற்கான வாய்ப்பை இருண்டதாக மாற்றியிருக்கின்ற அழிவை ஏற்படுத்துகின்ற அதன் காரியங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். இவ்வாறான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது, சர்வதேச சமூகத்தின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும். மேலும் அமெரிக்க அரசை, ஒரு 'சர்வதேச சட்டக்காப்பின்மை' (International Outlaw) எனும் நிலைக்குள் தள்ளிவிடவும் கூடும் என்பது வெளிப்படையானதாகும்.

4. கற்பனைப் புனைவும் (imagination), போலி எண்ணங்களைச் சார்ந்திருத்தலுமே அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் மற்றொரு வடிவமாகும். வெளியுறவுக் கொள்கை விடயத்தில் குறிப்பாக மேற்கு ஆசிய பிராந்திய விடயத்தில் அமெரிக்காவின் இவ்வாறான போக்கு காணப்படுகிறது. புனித குத்ஸ் விவகாரத்தில் அமெரிக்காவின் சட்டவிரோத மற்றும் ஆபத்தான நடவடிக்கைகள், காஸாப் பகுதியில் சியோனிச ஆட்சியின் மிருகத்தனமான நடவடிக்கைகளுக்கு குருட்டுத்தனமாக ஆதரவு வழங்கல் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விமான மற்றும் மிஷேல் தாக்குதல்களை மேற்கொண்டமை என்பன அடிப்படையில்லாத அரசியல் கொள்கையின் மிகவும் வெளிப்படையான அம்சங்களாகும். 

இவ்வருடம் மே 21இல்; திரு மைக் பாம்போ வெளியிட்ட கருத்துக்கள், எமது பிராந்தியம் குறித்த அமெரிக்காவின் தற்போதைய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் உச்சகட்ட கற்பனாயூகமாக அமைந்துள்ளன. சர்வதேச சமூகம் எந்தவொரு விடயத்திலும் அமெரிக்காவின் தற்போதைய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குரிய அல்லது புரிந்துணர்வை மேற்கொள்வதற்குரிய சாத்தியப்பாடு குறித்து சந்தேகத்தைக் கொண்டிருக்கும் நிலையில்தான், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஈரான் இஸ்லாமியக் குடியரசுடனான பேச்சுவார்த்தை மற்றும் புரிந்துணர்வுக்கு நிபந்தனைகளை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்க அரசின் உயர்மட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் நூற்றுக்கணக்கான மணிநேரங்கள் நடைபெற்ற இருதரப்பு மற்றும் பன்முகப் பேச்சுவார்த்தையின் விளைவாகவும், அமெரிக்கா உறுப்புரிமை வகிக்கும் ஐக்கிய நாடுகள் பேரவையின் பாதுகாப்புச் சபையினால் அமெரிக்க அரசு தானே முன்மொழிய, பாதுகாப்பு சபையின் அனைத்து உறுப்பினர்களாலும் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்திலே, ஐக்கிய நாடுகள் பேரவை சாசனத்தின் 25வது பிரிவின்படி ஒரு சர்வதேச ஒப்பந்தமாகவும் அமைந்து காணப்பட்ட JCPOA ஒப்பந்தத்தை மீறியிருக்கும் நிலையில், எவ்வாறு மறுபடியும் அவ்-அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதை எதிர்பார்க்க முடியும்?. 

அமெரிக்க ஜனாதிபதியின் சமீபத்திய செயற்பாடுகளும், கருத்துக்களும் அமெரிக்காவின் முந்தைய அரசாங்கத்தினால் இடம்பெற்ற பேச்சுவார்த்தை மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற காரணத்தினால், JCPOA ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியதை சரிகாணும் முட்டாள்தனமான நியாயப்பாட்டை நிராகரித்திருப்பதோடு மட்டுமன்றி, ஒரு சில மணித்தியாலங்களுக்கு உள்ளேயே அமெரிக்க ஜனாதிபதியினால் உடன்படிக்கை மீறப்படுவதையும் வெளிக்கொணர்ந்துள்ளன. G-7 உச்சிமாநாட்டின் அறிக்கையிலிருந்து விலகிவிடும் வகையிலான அமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கை, இவ்வாறான சட்டத்திற்குப் புறம்பான நடத்தைப் போக்குகளுக்குத் தெளிவான உதாரணமாகும். 

வடகொரியத் தலைவருடனான சந்திப்பை அடுத்து உடனடியாக ஒரு பத்திரிகைப் பேட்டியில் வெளியிடப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கள் அபாயகரமான, பகுத்தறிவற்ற ஒரு அரசாங்கத்தின் போக்குக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும். 'அடுத்த ஆறுமாத காலப்பகுதிக்குள் நான் தவறு செய்திருப்பதை கண்டுகொள்ளும் பட்சத்தில், அதனை ஒப்புக்கொள்ளாதிருக்க ஏதாவது காரணத்தை கண்டுபிடிப்பேன்' என்று கூறும் (கிம்முடனான சந்திப்பு தவறானது என்றாலும் கூட, அதனை நியாயப்படுத்த தான் தயார் என்று கூறும்) தலைவரைக் கொண்டுள்ள ஒரு அரசாங்கத்தோடு ஈரான் இஸ்லாமியக் குடியரசு பேச்சுவார்த்தை நடாத்தும் என்பதை எவ்வாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் எதிர்பார்க்க முடியும்?.

இத்தகைய அரசு, ஈரானுக்கு நிபந்தனையை விதித்து, வாதி மற்றும் பிறதிவாதியின் இடத்தை மாற்றிக்கொள்ள முடியுமா?. அமெரிக்காவின் தற்போதைய அரசாங்கம்தான் தன்னுடைய கூற்றும், கையொப்பமும் நம்பகமானவை என்பதை வெளிப்படுத்த வேண்டுமே தவிர, தன்னுடைய வாக்குறுதிக்கும், சர்வதேச ஒப்பந்தத்திற்கும் கட்டுப்படுகின்ற மற்ற தரப்பு அல்ல எனும் யதார்த்தத்தை அவர் மறந்துவிட்டார். உண்மையில், இந்த அமெரிக்க அரசாங்கம் கடந்த ஏழு தசாப்தங்களாக சர்வதேச சட்டங்களைப் புறக்கணித்தமைக்கும், ஈரானுடனான இருதரப்பு மற்றும் பன்முக ஒப்பந்தத்தை மீறியமைக்கும் பொறுப்புக்கூற வேண்டியுள்ளது. ஈரானிய அரசு மற்றும் மக்களின் உரிமை தொடர்பான கோரிக்கைகளின் குறுகிய பட்டியல் பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக அமைந்திருக்கின்றது.

அ) ஈரானின் சுதந்திரம் மற்றும் தேசிய இறையாண்மை ஆகியவற்றை அமெரிக்க அரசாங்கம் மதிக்க வேண்டும். மேலும், 1981 அல்ஜீரிய உடன்படிக்கையிலே தான் ஒப்பந்தம் செய்துகொண்டபடி ஈரான் விடயத்தில் தான் தலையிடுவதை முடிவுக்கு கொண்டுவருவதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். 

ஆ) அமெரிக்க அரசாங்கம் சர்வதேச சட்டவிதிகள், ஐக்கிய நாடுகளின் சாசனம் என்பவற்றுக்கு எதிராகவும், உலக மக்களுக்கும், குறிப்பாக நமது பிராந்தியத்திற்கும், அமெரிக்க மக்களுக்கும் பெரும் தீங்கை விளைவித்துள்ள தனது வெளியுறவுக் கொள்கையை, ஈரான் இஸ்லாமியக் குடியரசு மற்றும் ஏனைய நாடுகளுக்கு எதிரே ஒரு கருவியாக வழுக்கட்டாயமாகப் பயன்படுத்துவதையும், அச்சுறுத்துவதையும் அவசியம் தவிர்ந்துகொள்ள வேண்டும்.

இ) சர்வதேச உரிமைகளின் அடிப்படை விதியாக கருதப்படுகின்ற, அவ்வாறே ஈரான் இஸ்லாமியக் குடியரசு கொண்டுள்ள 'அரசியல் இறையாண்மை'யை அமெரிக்க அரசாங்கம் கட்டாயம் மதித்து நடக்கவேண்டும். மேலும், முன்னர் பிறப்பித்த தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதத் தீர்மானங்களை அகற்றுவதோடு, அவற்றை அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் நடைமுறைப்படுத்துவதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

ஈ) அமெரிக்க அரசாங்கத்தினால் கடந்த தசாப்தகாலமாக ஈரானிய மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பின்வரும் சட்டவிரோத நடவடிக்கைகளை ஒப்புக்கொண்டு, ஈரானிய மக்களுக்கு ஏற்படுத்திய சேதங்களை கட்டாயம் ஈடுசெய்ய வேண்டும். மேலும், சரிபார்க்கக்கூடிய வகையில் மீளவும் அவற்றைத் தொடராமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அமெரிக்க அரசாங்கம், அவ்வாறு ஈடுசெய்ய வேண்டியவை பின்வருமாறு,

ஈரானின் சட்டபூர்வமான மற்றும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த 1953 ஆகஸ்ட் 19ம் தேதியில் இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் அமெரிக்கா பங்கு வகித்தமை. ஆட்சிக்கவிழ்ப்பு சதியினால் உருவான எதேச்சதிகார அரசாங்கம் 25 ஆண்டுகள் ஈரானிய தேசத்திற்கு பெரும் இழப்புக்களையும், சேதங்களையும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

• 1977இல் ஈரான் இஸ்லாமியப் புரட்சி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் ஏலவே முதலீடுசெய்யப்பட்டிருந்து ஈரானிய தேசத்தின் பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்கள் பெறுமதியான சொத்துக்களும், செல்வங்களும் அந்நாட்டினால் சட்டவிரோதமாக முடக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டன. அல்லது கடந்த காலங்களில் ஆதாரமற்ற பொய்களின் கீழ் சட்டவிரோதமாகப் பறிமுதல் செய்யப்பட்டன.

ஏப்ரல் 1980இல் ஈரானியத் தாயகத்தின் மீது படையெடுத்தமை மற்றும் ஈரானின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும் அமெரிக்கா மீறியமை.

ஈரான் மக்களின் மீது திணிக்கப்பட்ட 8 ஆண்டுகால போரின்போது, ஈராக்கின் சர்வாதிகாரியான சதாமுக்கு இராணுவம், ஆயுதம் மற்றும் புலனாய்வு ரீதியில் அமெரிக்கா தாராளமாக உதவியமை. இது ஆயிரக்கணக்கான பில்லியன் டாலர்கள் பெறுமதியான சேதங்களை ஈரானிய தேசத்தில் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போரின்போது, அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளால் சதாமின் வசம் கொடுக்கப்பட்ட ஈராக்கின் இரசாயன ஆயுதங்களால் காயமுற்ற ஈரானியரின் மூன்று தசாப்தகால பாரிய துன்பத்திற்கும், வலிக்கும் நேரடிக் காரணியாக அமெரிக்கா பங்கு வகித்தமை.

• 1988 ஜுலையில், அமெரிக்காவின் வின்ஸன்ஸ் நேவிக்கப்பலின் மூலம் ஈரானுக்குச் சொந்தமான பயணிகள் விமானத்தை அழித்தொழித்தமை. இதன்போது, பயணிகளாகவும் பணியாளர்களாகவும் இருந்த 290க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும், அமெரிக்காவுக்காக இக்கொடூரத்தைப் புரிந்த நேவிக்கப்பலின் தளபதிக்கு அமெரிக்காவினால் பதக்கம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

பாரசீக வளைகுடாவில் வைத்து 1988 வசந்த காலத்தில் ஈரானின் எண்ணெய்த் தளங்களுக்கு எதிராக தொடர்ச்சியான தாக்குதல்களை அமெரிக்கா மேற்கொண்டமை. 

ஈரானின் கௌரவமான சமூகத்திற்கு எதிராக, அவர்களை 'ஒரு சட்டவிரோத, முரட்டுத்தனமான தேசம்' என்றும், 'பயங்கரவாத தேசம்' என்றும், 'தீய அரசு' என்றும் அமெரிக்கா தொடர்ச்சியாக தூசிப்பதும், ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்புவதும்.

அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடைசெய்யப்பட்டோர் பட்டியலில் ஈரானியப் பிரஜைகள் உட்பட, ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் சட்டவிரோதமாகவும், ஆதாரமற்ற முறையிலும், இனவாதத்துடனும் உள்நுழைத்தமை. ஈரானியர்கள் மிகவும் வெற்றிகரமானோராகவும், மிகவும் படித்தோராகவும், சட்டபூர்வமான முறையிலும் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். இவர்கள் தங்களது சமூகத்திற்கு பாரிய சேவைகளைப் புரிந்துள்ளனர். இவர்கள் தற்போது, தாத்தா, பாட்டி உட்பட தங்களது உறவினர்களை சந்திப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுவோருக்கு அமெரிக்காவில் ஆதரவளித்தல் மற்றும் துணைப்படையாக இருந்து நாசகாரச் செயல்களைப் புரிந்தோருக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் ; புகழிடம் வழங்குதல். அவர்களில் சிலர், அமெரிக்க அரசின் பயங்கரவாத குழுக்களின் பட்டியலில் பல ஆண்டுகளாக இருந்து, இப்படியான அமைப்புகளிடமிருந்து ஊதியம் பெறுவோர் மற்றும் போர்த்தீயை மூட்டுவோர் முதலானோரின் பரப்புரைக்குழுக்களின் முயற்சியினால், இப்பட்டியிலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இப்படியானோரில் சிலர், தற்போதைய அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகாரிகளாக மாறியுள்ளனர்.

ஈரானின் அணுசக்தி விஞ்ஞானிகளின் உயிர்த்தியாகங்களை விளைவிக்கின்ற பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சியோனிஸ அரசின் உளவுத்துறையான முசாட்டுக்கு அமெரிக்கா உதவுதல். 

சைபர் போர்களின் மூலம் ஈரானின் அணுத்திட்டத்திலே அமெரிக்கா குழப்பம் விளைவித்தல். 

ஆவணங்களைப் புனைந்து, சர்வதேச சமூகத்தை தன்வசப்படுத்துவதற்கு அமெரிக்கா முயற்சித்தலும், போலியான நெருக்கடியைத் தோற்றுவித்தலும். 

5. ஈரானிய மக்களுக்கு எதிரான கடந்த நான்கு தசாப்த காலமாக மேற்கொள்ளப்படும் பொருளாதார ரீதியான, தொடர்ச்சியான எல்லைமீறிய அரசியல் நடவடிக்கைகளை அமெரிக்க அரசாங்கம் கட்டாயம் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஈரானுக்கு எதிரே பரந்தளவில் நேரடியாகவும், கொடூரமாகவும், நாடுகடந்த அளவிலும் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை அகற்றிவிட வேண்டும். சர்வதேச உரிமைகளை, நிறைவேற்ற வேண்டியுள்ள உடன்படிக்கைகளை மீறியதாகவும், எல்லோரினதும் கண்டனங்களுக்கு உள்ளாகியதாகவும், ஈரானின் இயற்கையான முன்னேற்றப் பாதையை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் அமைந்த அமெரிக்காவின் நூற்றுக்கணக்கான மசோதாக்களையும், நிறைவேற்று ஆணைகளையும் உடனடியாக ஒழித்துவிட வேண்டும். மேலும், ஈரானிய தேசத்தின் மீதும், அதன் பொருளாதாரத்தின் மீதும் ஏற்பட்ட பாரிய இழப்புக்களை மீள்நிவர்த்தி செய்ய வேண்டும்.

6. முறைகேடான உடன்படிக்கைகள் மற்றும் JCPOA ஒப்பந்தம் என்பவற்றை பகிரங்கமாக மீறியிருப்பதை அமெரிக்க அரசாங்கம் உடனடியாக சரிசெய்து கொள்ள வேண்டும். ஈரானுடனான வர்த்தகத்தையும், ஈரானில் முதலீடு செய்வதையும் தடுத்தமையினால் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் நஷ்டத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஈரானிய மக்களுக்கு ஏற்பட்ட இந்நஷ்டங்களை ஈடுசெய்ய வேண்டும். சரியாக மதிப்பிடக்கூடிய வகையில் எந்த நிபந்தனையுமின்றி ஒப்பந்தத்திலே குறிப்பிடப்பட்டுள்ள தனது உடன்படிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி, இவ்-ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க, ஈரானுடனான வர்த்தக உறவுகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதைத் தடுக்கும் எந்தவொரு நடவடிக்கையிலிருந்தும் விலகிவிடுவதாக அமெரிக்கா வாக்குறுதி அளிக்கவேண்டும்.

7. ஈரானின்மீதான பொருளாதாரத் தடைகளை மீறியதாக புனையப்பட்ட போலியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு, அமெரிக்க சிறைகளில் சிக்கித்தவிக்கின்ற அல்லது அமெரிக்க அரசாங்கத்தின் சட்டவிரோதமான அழுத்தங்களால் அமெரிக்காவுக்கு ஒப்படைப்பதற்காக ஏனைய அரசுகளால் கைது செய்யப்பட்டு மிகவும் கடினமான சூழ்நிலையின் கீழ் சட்டவிரோதமான தடுப்புக்காவலில் சிக்கித்தவிக்கின்ற ஈரானிய மற்றும் அது அல்லாத குடிமக்கள் அனைவரையும் விடுவித்து, கர்ப்பிணிப் பெண், வயதானோர், நோயுற்றோர் மற்றும் சிறையில் தங்களின் உயிரைத் துறந்தோர் உட்பட அவர்கள் அனைவருக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட நஷ்டங்களை அமெரிக்க அரசாங்கம் உடனடியாக ஈடுசெய்ய வேண்டும்.

8. ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பாரசீக வளைகுடா உட்பட பிராந்தியத்தில் ஆக்கரமிப்பையும், தலையீட்டை மேற்கொள்ளும் நோக்கில் படையெடுத்தமையினால் ஏற்பட்ட விளைவுகளை ஏற்றுக்கொள்வதுடன், அப்பிராந்தியத்திலிருந்து தனது துருப்புக்களை விலக்கிக்கொண்டு, அப்பிராந்தியத்தின் விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்க அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவருதல் வேண்டும்.

9. ISIS போன்ற மானுடத்திற்கு எதிரான பயங்கரவாத இயக்கங்களையும், தீவிரவாத குழுக்களையும் உருவாக்கிவிட்ட தனது அரசியல் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் ஆகிவற்றை அமெரிக்க அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவந்து, குறித்த பிராந்தியத்திலும், சர்வதேசத்திலும் தீவிரவாதக் குழுக்களுக்கு அரசியல், பொருளாதாரம் மற்றும் ஆயுதம் ரீதியிலான உதவிகளை, பகிரங்கமாக மதிப்பீடு செய்யும் வகையில் நிறுத்திக்கொள்ளுமாறு தன் பிராந்திய கூட்டாளிகளைப் பணிக்க வேண்டும். 

10. யேமனில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆயுதங்களை வழங்குவதையும், யேமனின் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது அடிக்கடி தாக்குதல்களை மேற்கொள்வதையும், ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவிப்பதையும், அந்நாட்டைச் சேதப்படுத்துவதையும் அமெரிக்க அரசாங்கம் நிறுத்திக்கொள்வதோடு, யேமன் மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வந்து, ஏற்பட்ட சேதங்களை ஈடுசெய்யுமாறு தனது கூட்டாளிகளைப் பணிக்க வேண்டும்.

11. சர்வதேச சட்டங்களுக்கும், மனித உரிமைகளுக்கும் மதிப்பளிப்பதன் மூலம் சியோனிஸ அரசுக்கு தான் வழங்குகின்ற வரையறையற்ற ஆதரவை அமெரிக்க அரசாங்கம் நிறுத்திக்கொள்வதோடு, அவ்-அரசின் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களையும், இனவெறி அரசியலையும் கண்டித்து, பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கு, குறிப்பாக தங்களுடைய தலைவிதியைத் தாங்களே தீர்மானித்து, புனித குத்ஸை தலைநகராகக் கொண்டு பாலஸ்தீனுக்குரிய சுதந்திரமான அரசை உருவாக்கிக்கொள்ளும் உரிமைக்கு ஆதரவளிக்க வேண்டும்.

12. ஆண்டுதோறும் உலகின் நெருக்கடியான பிராந்தியங்களுக்கு, குறிப்பாக மேற்கு ஆசியப் பிராந்தியத்திற்கு உயிரைப் பறிக்கும் (அழகுக்காக அல்லாத) ஆயுதங்களை நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்வதை அமெரிக்க அரசாங்கம் நிறுத்திக்கொண்டு, நெருக்கடியான பிராந்தியங்களை ஆயுதக்கிடங்குகளாக மாற்றிவிடுவதற்குப் பதிலாக, இப்பெரும் தொகைப் பணத்தை நாடுகளின் அபிவிருத்திக்கும், உலக வறுமை ஒழிப்புக்கும் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும். உலகளாவிய ரீதியில் பட்டினி, வறுமை, சுத்தமான குடிநீரை வழங்குதல் மற்றும் நோய்க்கு எதிரான போராட்டம் ஆகிய பிரச்சினைகளை அகற்றிவிடுவதற்கு அமெரிக்க நுகர்வோரினால் ஆயுதம் வாங்குவதற்காக செலவிடப்படுகின்ற பணத்தொகையின் ஒரு பகுதியே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

13. மத்திய கிழக்கிலே மனிதசமுதாயத்தை கொன்றொழிக்கும் ஆயுதங்களின்றிய பிராந்தியத்தை உருவாக்குவதற்கான சர்வதேச சமூகத்தின் 5 தசாப்தகால அழைப்பை நிராகரிப்பதை அமெரிக்க அரசு நிறுத்திக்கொண்டு, அணுவாயுதத்தைக் களைந்துவிடுமாறு ஆக்கிரமித்துள்ள சியோனிஸ அரசை வற்புறுத்தல் வேண்டும். சமகால வரலாற்றிலே பேரழிவை ஏற்படுத்துகின்ற ஆயுதங்களை ஆக்கிரமிப்பாளர்களும், போரைத் திணிப்பவர்களும் தம்வசம் வைத்திருப்பதே உண்மையில் பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பையும், அமைதியை அச்சுறுத்துகின்ற பேராபத்தாகவுள்ளது.

14. சர்வதேச நீதிமன்றின் ஆலோசனைக் கருத்துரையாக இருக்கின்ற அணுவாயுதப் பரவலைத் தடைசெய்யும் உடப்படிக்கையின் 6வது பிரிவின் கீழ் அமெரிக்கா மேற்கொண்ட ஒப்பந்தங்கள், 1995இல் அணுவாயுதப் பரவலைத் தடைசெய்கின்ற ஒப்பந்தங்களை மீளாய்ந்து, புதுப்பிப்பதற்கான உச்சிமாநாட்டின் அறிக்கை, ஐக்கிய நாடுகள் பேரவையின் பாதுகாப்புச் சபையின் 984 தீர்மானம் ஆகியவற்றை பகிரங்கமாகவே மீறும் நடவடிக்கைகளாகக் காணப்படுகின்ற அணுவாயுதங்களிலே அதிகமாகத் தங்கி நிற்பதையும், அணுசக்தி சாரா பிரச்சினைகளின்போது அணுவாயுதம் போன்ற மானுடத்திற்கு எதிரான ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நியாயம் காணும் அச்சுறுத்தலான கோட்பாடுகளைக் கொண்டிருப்பதையும் அமெரிக்க அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும், உண்மையில் உலகளாவிய அனைத்து மக்களின், குறிப்பாக அமெரிக்காவின் முன்னால் வெளியுறவு அமைச்சர்கள் உட்பட ஐக்கிய நாடுகள் பேரவையின் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் ஏகோபித்த பெரும்பான்மை கோரிக்கையாக அமைந்துள்ள 'அணுவாயுதத்தை முற்றிலும் களைந்துவிடல்' என்பது தொடர்பில் தனக்கு இருக்கின்ற தார்மீகம், சட்டம் மற்றும் பாதுகாப்பு ரீதியிலான கடமைப்பாட்டிற்கு அமைவாக அமெரிக்க அரசாங்கம் செயற்பட வேண்டும். அத்தோடு, வரலாற்றிலே அணுவாயுதத்தைப் பயன்படுத்தியதற்கான களங்கத்தை தன்னுடைய பெயரில் பதிவு செய்துள்ள ஒரே நாடு என்றவகையில், அணுவாயுத உலகின் பேரழிவிலிருந்தும், உறுதியான பரஸ்பர அழிவின்மீது கட்டப்பட்டுள்ள போலியான பாதுகாப்பிலிருந்தும் அமெரிக்க அரசு, மனிதகுலத்திற்கு விடுதலையை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

15. சர்வதேச உரிமைகளின் முக்கியமான விதியாகவும், மானுடத்தின் நாகரீக உறவுகளின் அடிப்படையாகவும் இருக்கின்ற 'வாக்குறுதியை நிறைவேற்றல்' எனும் விதியை தான் பேணுவதாக, தனது ஒப்பந்ததார்கள் அனைவருக்கும், சர்வதேச சமூகத்திற்கும் அமெரிக்க அரசாங்கம் கட்டாயம் உறுதியளிக்க வேண்டும். அமெரிக்காவின் கருவிப்பெட்டியில் இருக்கும் கருவிகளில் ஒன்றாக சர்வதேச நிறுவனங்களையும், சர்வதேச உரிமைகளையும் தனக்குச் சாதமாக பயன்படுத்துகின்ற ஆபத்தான சிந்தனையை உத்தியோகபூர்வமாகவும், அதைவிட நடைமுறையிலும் கைவிட்டுவிட வேண்டும்.

மேலே கூறப்பட்ட அமெரிக்க அரசாங்கத்தின் அரசியல் கொள்கைகள், அமெரிக்க அரசாங்கம் தொடர்பிலே ஈரானிய மக்களின் நம்பிக்கையின்மைக்கான காரணங்களின் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமன்றி, உலகளவில் குறிப்பாக மேற்கு ஆசியப் பிராந்தியத்திலே அநீதி, வன்முறை, பயங்கரவாதம், போர் மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவை காணப்படுவதற்கான அதிமுக்கிய காரணிகளின் எடுத்துக்காட்டாகவும் இவை அமைந்துள்ளன.

இவ்-அரசியல் கொள்கைகள், உலக நாடுகளின் ஏகோபித்த பெரும்பான்மையினரின் பொதுப்புத்தியின்படி, நிதி மற்றும் உயிர் ரீதிலான பாரிய செலவையும், கடுமையான தனிமைப்படுத்தலையும் தவிர, வேறெந்த இலாபத்தையும் அமெரிக்கா தனது கௌரவமான, நாகரீகமான மக்களுக்குக் கொடுக்கவில்லை. மாறாக, உயிரைப் பறிக்கும் ஆபத்தான ஆயுதங்களை உற்பத்தி செய்யும் சிலருக்கே அதன் இலாபம் சென்றடைந்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது.

சர்வதேச சமூகங்கள் மற்றும் தனது மக்களின் பாதுகாப்பு, நலன் ஆகியவற்றில் அக்கறைகொண்டு இவ்-அரசியல் கொள்கைகளை உத்தியோகபூர்வமாகவும், நடைமுறையிலும் கைவிடுவதற்கான தைரியத்தை அமெரிக்க அரசாங்கம் கொண்டிருந்திருப்பின், சர்வதேச ரீதியாக அமெரிக்கா தனிமைப்படுத்தப்படுவது முடிவுக்கு வந்திருப்பதுடன், ஈரானிலும் சர்வதேசத்திலும் அமெரிக்கா குறித்த புதிய மனத்தோற்றம் உருவெடுத்து, பரவலான நிலையான பாதுகாப்பு, அமைதி, அபிவிருத்தி ஆகியவற்றின் பால் கூட்டாக நகர்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படுட்டிருக்கும். துரதிஷ்டவசமாக, தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்காவின் நடத்தைப்போக்கு மாறும் என்ற கணிப்பீடு உண்மையானதல்ல என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். 

இதனால், 'நாகரீகங்களுக்கு இடையிலான கலந்துரையாடல்', 'வன்முறை மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான உலகு', அணுவாயுதத்தைக் களைவதையும், சட்டத்தின் அடிப்படையில் அமையப்பெற்ற சர்வதேச ஒழுங்கையும் அடைந்துகொள்வதற்கான உலக முயற்சியில் முனைப்புடன் பங்கெடுத்தல் போன்ற பல்வேறு முன்னெடுப்புகளின் மூலம் ஈரான் இஸ்லாமியக் குடியரசு சர்வதேச மட்டத்தில் பன்முகத்தன்மையைப் பேணல், உரையாடல்களை மேற்கொள்ளுதல், சட்டவாட்சியை மதித்தல், அணுவாயுதத்தைக் களைதல் ஆகியவற்றை பரவலாக ஊக்குவிக்கும் நோக்கில் முயற்சித்து வருகிறது. அவ்வாறே, நாம் சிரியா மற்றும் யேமனின் நெருக்கடிகளை அரசியல் ரீதியில் தீர்ப்பதற்கான நடைமுறை வழிகளை, இந்நெருக்கடிகளின் தொடக்கத்திலேயே முன்வைத்து, இது தொடர்பான அரசியல் முயற்சிகளில் முனைப்பான பங்கெடுப்பைக் கொண்டிருந்தோம். ஆனால், துரதிஷ்டவசமாக இவ்-அனைத்து நெருக்கடிகளிலேயும் ஆக்கிரமிப்பாளர்களையும், பயங்கரவாதிகளையும் தான், அமெரிக்கா ஆதரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறே, JCPOA ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதைத் தொடர்ந்து, அதன் மீதமுள்ள உறுப்பினர்களோடு இணைந்து இராஜதந்திர ரீதியில் இம்முக்கியமான உலகளாவி சாதனையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். மேலும், தற்போதும் கூட இவ்வழியிலேயே தொடர்ந்தும் இருக்கிறோம்.

வெளிநாட்டு அரசாங்கங்களில் தங்கியோ அல்லது அவர்களின் ஆதரவை நாடியோ இருக்காமல், ஈரானின் துணிச்சலான பெரும் மக்களை நம்பியும், உள்நாட்டுத் திறன்களினாலுமே தேசிய அளவில், கடந்த நான்கு தசாப்தங்களாக தனது பாதுகாப்பையும், உறுதிப்பாட்டையும் ஈரான் உறுதிசெய்துள்ளது. அத்தோடு, அனைத்து வெளிநாட்டு அழுத்தங்களுக்கும், பிராந்தியத்தில் மிகக்குறைந்த ஆயுத செலவுகளுக்கும் மத்தியிலும் ஈரான் இஸ்லாமியக் குடியரசு நாளுக்கு நாள் சக்திவாய்ந்ததாகவும், நிலையானதாகவும், மேம்பட்டதாகவும் மாறியிருக்கிறது.

பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் அதன் வெளியுறவுக் கொள்கைக்கு எதிராக, ஈரான் அதன் அரசியல் அமைப்பின்படி ஆதிக்கம் செலுத்துவதையோ, மேலாதிக்கத்திற்கு கட்டுப்படுவதையோ எல்லாவகையிலும் நிராகரித்து வந்துள்ளது. பூகோள மற்றும் பிராந்திய மேலாதிக்க காலப்பகுதி முடிவுக்கு வந்துவிட்டதாகவும், எந்தவொரு சக்தியும் இதற்காக முயற்சிப்பது பயனற்றது என்பதாகவும் ஈரான் இஸ்லாமியக் குடியரசு நம்புகிறது. நமது பிராந்திய நாடுகள் வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு கட்டுப்படுவதற்கு பதிலாகவோ அல்லது அண்டை நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதற்கு பதிலாகவோ வலுவான, மேம்பட்ட மற்றும் நிலையான பிராந்தியத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும். 

எமது பிராந்தியத்தின், அண்டை நாடுகளின் பாதுகாப்பிலும், உறுதிப்பாட்டிலுமே ஈரானில் எமது பாதுகாப்பையும், அபிவிருத்தியையும் நாம் பார்க்கிறோம். 

நாம் எமது அண்டை நாடுகளோடு ஒத்த வரலாற்றையும், ஒத்த கலாசாரத்தையும், பரஸ்பரம் நீங்கிவிடாத வாய்ப்புகளையும், சவால்களையும் கொண்டிருக்கிறோம். உள்நாட்டு மற்றும் சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பின் நிழலிலேதான் எமது மக்களுடைய பாதுகாப்பு மற்றும் அமைதியின் இன்பச்சுவையை அனுபவிக்கச் செய்ய முடியும். இதுபோன்ற அணுகுமுறையைக் கொண்டிருப்பதையும், 'பாதுகாப்பை கொள்முதல் செய்து, வெளியாட்களிடம் ஒப்படைத்தல்' எனும் தோல்வியுற்ற, அனுபவரீதியாகக் கண்டுகொண்ட கோட்பாடிற்கு மாறாக, உரையாடல், பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கையை கட்டியெழுப்புதல், கூட்டுமுயற்சி மற்றும் அண்டை நாடுகளுடன் ஒத்துழைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதையும் ஏனைய பிராந்திய நாடுகளிடம் எதிர்பார்க்கிறோம்.

ஈரான் இஸ்லாமியக் குடியரசு, 'பாரசீக வளைகுடாவில் பிராந்திய கலந்துரையாடல் மன்றம்' ஒன்றை நிறுவுவதை, பிராந்திய நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கும், பலமான பிராந்தியத்தை உருவாக்குவதற்குமான மிகச்சிறந்த வழியாகக் கருதுகின்றது. நாடுகளின் தேசிய அரசியல் இறையாண்மைச் சமத்துவத்தைப் பேணுதல், அச்சுறுத்துவதையும் வன்முறையைக் கையாளுவதையும் தவிர்த்தல், முரண்பாடுகளை அமைதியான முறையில் தீர்த்தல், அனைத்து தேசங்களையும் மதித்தல், சர்வதேச எல்லைகளை மீறாதிருத்தல், நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருத்தல், நாடுகளே அவற்றின் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமையை மதித்தல் போன்ற பொதுவான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு பிராந்திய நாடுகளின் ஒருமைப்பாட்டை உறுதிசெய்கின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, பிராந்திய மற்றும் சர்வதேச சவால்கள், வாய்ப்புகள் என்பன தொடர்பில் பரஸ்பர புரிந்துணர்வோடு, ஆக்கிரமிப்பைத் தவிர்க்கின்ற ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பின் பொதுவான வழிமுறைகளை உருவாக்குதல் முதலான இலக்குகளை அடைந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

உலகே அறிந்துவைத்திருப்பதைப் போன்று செழுமையான நாகரீகத்தின் வாரிசுகளின் நிலம் என்றவகையில் நமது பிராந்தியம், (எமது எதிர்கால அபிவிருத்திக்கும், கூட்டு கௌரவத்திற்கும் பாரிய செலவாக இருப்பதையன்றி, வேறெந்த பயனையும் அளித்திடாத) எவ்வித வெளிநாட்டுத் தலையீடுமின்றி அல்லது அந்நியரிடம் தங்கியிருப்பதைத் தவிர்த்துக்கொண்டு முழு அதிகாரத்துடன் தனது சொந்த விவகாரங்களை தனது கையினாலேயே தீர்த்துக்கொள்வதோடு, சிறந்த எதிர்காலத்தை நமது குழந்தைகளுக்கு அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதை நாம் வலுவாக நம்புகிறோம்.