Tuesday, August 28, 2018

ஈரான் எரிமலை "தமாவாந்"


Mount Damavand 
ஈரான் எரிமலை "தமாவாந்"  
ஈரான் இஸ்லாமியக் குடியரசில் மலைகளுக்குப் பஞ்சமில்லை. தலைநகர் தெஹ்ரானைச் சுற்றி அல்போர்ஸ் மலைத்தொடரைக் காணலாம். எப்போதும் பனிபடர்ந்து காணப்படும் மலை முகடு, காண்பதற்கு கண்கொள்ளா காட்சி. குளிர் காலத்தில் வெண்பஞ்சு போர்த்தப்பட்டது போன்று நகர் முழுவதும்  அழகாக காட்சியளிக்கும்.

இந்த மலைத்தொடருக்கு மத்தியில் "தமாவாந்" என்ற எரிமலை (உயரம்: 5,671 மீ) கம்பீரமாக காட்சியளிக்கும். தெஹ்ரான் நகரிலிருந்து வடகிழக்கில் 66 கிலோமீட்டர் (41 மைல்) தூரத்தில் உள்ள மஸந்தரான் மாகாணத்தில், காஸ்பியன் கடலின் தென் கரையோரத்தில் இது அமைந்துள்ளது. ஈரானின் அதி உயர்ந்த மலையும் ஆசியாவில் மிகவும் உயர்ந்த எரிமலையும் இதுவேயாகும். பாரசீக புராண மற்றும் நாட்டுப்புற கதைகளில்  தமவாந்துக்கு ஒரு சிறப்பு இடம் உள்ளது.
"தமாவாந்" செயல்படும் ஒரு சக்திவாய்ந்த எரிமலையாகும். இருந்தபோதும், அது கடைசியாக வெடித்தது கி.மு. 5300 ஆண்டளவிலாகும். (அதாவது இப்போதிருந்து 7300 ஆண்டுகளுக்கு முன்). அதன் பின் பல்லாயிரம் வருட வரலாற்றில் வெடிப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. என்றாலும், எரிமலை அடிவாரத்திலும், பக்கவாட்டிலும், மற்றும் உச்சிக்கு அருகில் சூடான நீரூற்றுகள் மலைக்கு கீழே சூடான மாக்மா உள்ளதைக் குறிக்கின்றன. மலை, இடைக்கிடையே, கந்தகத்தைக் கக்குவதால் தீவிர செயற்பாட்டைக்கொண்ட எரிமலை என கருதப்படுகிறது. இதன் இவ்வாறான செயற்பாடு, 2007 ஜூலை மாதத்தில் இடம்பெற்றது பதிவாகியுள்ளது.  
"தமாவாந்" என்ற எரிமலை உலகிலேயே மிக முக்கியமான சிகரங்களில் 12 வது சிகரமாகும். ஆசியாவில் எவரெஸ்ட் சிகரத்திற்குப் பிறகு இது இரண்டாவது மிக முக்கியமானதாகும். இது ஆசியாவில் அதிக உயரமான எரிமலையாகும்.
"தமாவாந்"  எரிமலை பாரசீக கவிதை இலக்கியத்தில் மற்றும் புராணங்களில் சர்வாதிகார அச்சுறுத்தல்களுக்கு அடங்காமை மற்றும் வெளிநாட்டு படையெடுப்புகளுக்கு எதிரான ஈரானிய எதிர்ப்பின் அடையாளமாகவும் உள்ளது.
இந்த மலைக்குள்ளே மூன்று தலைகள் கொண்ட ஓர் அரக்கன் விலங்கிடங்கிடப் பட்டுள்ளான் என்றும் உலகின் இறுதி வரை அவன் அவ்வாறே இருப்பான் என்றும் சொராஸ்ட்ரிய நூல்களிலும் மற்றும் புராணங்களிலும் குறிப்புகளைக்  காணக்கூடியதாக உள்ளது. அதே புராணத்தின் ஒரு பதிப்பில், கொடுங்கோலனான ஸஹ்ஹாக் என்பவன்   காவேஹ் மற்றும் பெரிதூன் ஆகியோரால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், சங்கிலியால் பிணைக்கப்பட்டு "தமாவாந்" மலையின் ஏதோ ஒரு குகைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளான் என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகப்புகழ்பெற்ற பாரசீக கவிஞரான பிர்தவ்ஸியும் இந்த நிகழ்வை அவரது தலைசிறந்த காவியமான ஷானாமாவில்  சித்தரிக்கிறார், அத்தோடு இந்த மலைக்கு ஓர் அற்புத சக்தி உண்டெனவும் அதில் குறிப்பிடுகின்றார்.
"தமாவாந்"  என்ற சொல்லுக்கு அர்த்தம் என்னவென்று தெளிவாக தெரியவில்லை என்றாலும் சில முக்கிய ஆராய்ச்சியாளர்கள், "புகை மற்றும் சாம்பல் கக்கும் மலை" என்று பொருள்படும் என்று ஊகித்துள்ளனர்.
இந்த எரிமலை உச்சியில் உள்ள ஒரு பள்ளத்தில் கந்தக படிமங்களைக் காணக்கூடியதாக உள்ளது. இதில் வாயு வெளியேறும் துளைகள், கனிம படிமங்கள் மற்றும் வெந்நீரூற்றுக்கள் என்பனவும் உள்ளன.
கனிம வெப்ப நீரூற்றுகள் முக்கியமாக எரிமலையின் முகட்டுப்பகுதியிலும்  மலையடிவாரத்தும் அமைந்துள்ளன, ஒப்பீட்டளவில் பூமியின் மேற்பரப்பிற்கு அருகே அதிகரித்த எரிமலை வெப்பம் உள்ளது.
இந்த வெந்நீரூற்றுக்களில் மிகவும் முக்கியமானவை லாரிஜான் மாவட்டத்தில் லார் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளன. இந்த நீர், மருத்துவ குணம் கொண்டது எனவும்   நாள்பட்ட காயங்கள் மற்றும் சருமநோய் கண்டவர்களுக்கு  பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நீரூற்றுகளுக்கு அருகே, மக்கள் வசதிக்காக, பொது குளியல் குளங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மலை ஏறுவோருக்கும் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவோருக்கும் இது ஒரு சொர்க்கபுரியாகும்.
மலையுச்சிக்கு செல்வதற்க்கு அறியப்பட்ட 16 வழிகள் உள்ளன, சில பல்வேறு சிரமங்களைக் கொண்டுள்ள பாதைகள்; அவற்றில் சில ஆபத்தானவையும் கூட.
மிகவும் பிரபலமான வழி, ஏறுவதற்கு வசதியாக படிகள் அமைக்கப்பட்ட தெற்கு வழியாகும். இடைநடுவே ஓய்வெடுப்பதற்கு வசதியாக, 4220 மீட்டர் உயரத்தில் ஒரு மண்டபமும் அமைக்கப் பட்டுள்ளது. ஆயினும், சூரிய அஸ்தமனத்தின் அழகை ரசிக்க நாடுவோர் மேற்குத் திசை வழியை நாடுவர். அவ்வழியில் 4100 மீட்டர் உயரத்தில் இரண்டடுக்கு ஓய்வுமண்டபம் ஒன்று புதிதாக  அமைக்கப் பட்டுள்ளது.
ஏறும் வழியில், 5100 மீட்டர் உயரத்தில், 12 மீட்டர் உயரம் கொண்ட எழில்மிகு  உறைபனி நீர்வீழ்ச்சி ஒன்றும் உள்ளது. ஈரானிலும் மத்தியகிழக்கிலும் மிக உயரத்தில் உள்ள நீர்வீழ்ச்சி இதுவேயாகும்.

ஈரானுக்கு சுற்றுலா செல்வோர் கண்டிப்பாக தவறவிடக் கூடாத இடங்களில் இதுவும் ஒன்று.


Tuesday, August 21, 2018

ஐக்கியத்தின் சின்னம் "ஹஜ்"

Haj Message by Ayatullah Sayyid Ali Hosseini Khamene'i 1439


ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் மேதகு தலைவர் சங்கைக்குரிய ஆயதுல்லாஹ் செய்யித் அலீ காமெனெயி, புனித இறையில்லத்தில் ஒன்று கூடியுள்ள பல லட்சக் கணக்கான ஹாஜிகளுக்கு விடுத்துள்ள செய்தி.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயர் போற்றி.
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனது தூதர் முஹம்மது முஸ்தபா நாயகம் மீதும் அன்னாரின் பரிசுத்த குடும்பத்தினர், கண்ணியத்துக்குரிய தோழர்கள் மீதும் சலவாத் பொழிவதாக.



மகா கருணையாளனான அல்லாஹ் அருளுகின்றான்.:
“மக்கள் மத்தியில் ஹஜ்ஜுக்கு அழைப்பு விடுப்பீராக. அவர்கள் கால் நடையாகவும் மெலிந்த ஒட்டகை மீதாயினும் ஒவ்வொரு மூலை முடுக்கில் இருந்தும் உம்மை நோக்கி திரளுவார்கள். அவர்களுக்குரிய நலன்களை அடைந்துகொள்வார்கள். குறிக்கப்பட்ட நாட்களில் இறைவனின் திருப் பெயரை நினைவு கூர்வார்கள்.”

இந்த அர்ஷின் அழைப்பானது இன்று வரையும் இதயங்களை ஈர்த்த வண்ணம் உள்ளது. பல நூற்றாண்டுகளையும் யுகங்களையும் கடந்தும் மனித இனத்தை ஏகத்துவத்தின் மையப் புள்ளியை நோக்கி அழைப்பு விடுக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனும் இந்த இப்ராஹீமிய அழைப்பில் விளிக்கப் படுவதோடு அதனால் கண்ணியம் பெறுகின்றான். காதுகள் அதனை செவிமடுக்காது போகலாம். அறியாமை மற்றும் அசட்டுத் தனத்தால் இதயங்கள் அதனை இழந்து விடலாம். இந்த உலகளாவிய நித்திய இறை விருந்தில் பங்கேற்கும் தகுதியை சிலர் வளர்த்துக் கொள்ளாமல் இருக்கலாம். அல்லது எதோ ஒரு காரணத்தால் அதனை அடையும் பாக்கியத்தை தவர விடலாம்.


தாங்களோ இந்த அருட்பாக்கியத்தைப் பெற்றவராக தெய்வீக விருந்தின் அபய பூமியில் பாதம் பதித்துள்ளீர்கள். 

அரபாவும் முஸ்தலிபாவும் மினாவும் ஸபாவும் மர்வாவும் இறையில்லமும் மஸ்ஜிதுல் ஹராமும் மஸ்ஜிதுன் நபியும் இந்த புனிதக் கடமையின் கிரியைகளோடு தொடர்பான ஒவ்வோர் இடமும் ஆன்மீக சங்கிலியின் ஒவ்வொரு பிணைப்பும் ஹஜ் நிறைவேற்றுவோரின் ஆன்மீக உயர்வுக்கு உந்துதலும் ஆகும். இந்த அருட்கொடையின் பெறுமதியைப் புரிந்து கொண்டவர்களாக தன்னை தூய்மைப் படுத்திக் கொள்வதற்கு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் மற்றும் வாழ்நாளில் எஞ்சியுள்ள நாட்களுக்காக நற்பேறுகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

எல்லா மனிதர்களுக்கும் எல்லாப் பரம்பரையினருக்கும் எல்லாக் காலங்களிலும் ஒன்று கூடுவதற்கான நிரந்தரமாக ஓர் இடமும் நாளும் குறிக்கப் பட்டுள்ளமை சிந்தனை செய்யும் ஒவ்வொரு மனிதனையும் குலுக்கி விட்டு ஆர்வத்தைத் தூண்டும் முக்கிய அம்சமாகும். இடமும் காலமும் ஒன்றாய் அமைந்திருப்பது ஹஜ் கடமையின் அடிப்படை அகமியங்களுள் ஒன்று. ஐயமின்றி, இறையில்லத்தின் அருகில் ஒவ்வொரு விசுவாசியும் ஆண்டு தோறும் பரஸ்பரம் சந்தித்துக் கொள்வது, 'தமக்குரிய நலன்களை அடைந்து கொள்வார்கள்’ என்பதன் யதார்த்தமான பிரதிபலிப்பாகும். இதுவே இஸ்லாமிய ஐக்கியத்தின் சின்னமும் இஸ்லாத்தின் சமூகவாக்கத்தின் அடையாளமும் ஆகும். ஏனெனில் அது கட்டாயமாக இறையில்லத்தின் நிழலில் நிகழ வேண்டியதாகும். இறையில்லம் எல்லோருக்கும் உரித்தானது. ‘.. அங்கு வாழ்வோராயினும் மற்றும் வருவோராயினும் சரியே.’

வரையறுக்கப் பட்ட காலத்தில், குறிக்கப்பட்ட இந்த இடத்தில் இடம் பெறும் ஹஜ் முஸ்லிம்களை எப்போதும் ஒவ்வொரு ஆண்டிலும் எல்லாக் கால கட்டத்திலும் நயம் மிகு மொழியில் தெளிவான தர்க்கத்தினூடே ஒற்றுமையின் பால்அழைக்கிறது. இது இஸ்லாமின் எதிரிகளின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் முரணானதாகும். ஏனெனில் அவர்கள் எப்போதுமே எல்லாக் காலகட்டங்களிலும் குறிப்பாக சமகாலத்தில் முஸ்லிம்களை தமக்குள் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொள்ள தூண்டி வருகின்றனர். அகங்காரம் கொண்ட கொடிய அமெரிக்காவின் தற்போதைய செயல்களை அவதானியுங்கள். முஸ்லிம்களின் விவகாரத்தில் அதன் பிரதான கொள்கை மோதல்களை மூட்டி விடுவதே. முஸ்லிம்களின் கையாலேயே முஸ்லிம்களைக் கொன்றொழிப்பது தான் அதன் அசிங்கமான நோக்கம். அநியாயக் காரர்களை அப்பாவிகள் மீது ஏவி விடுவது, அநியாயக்காரனை ஆதரித்து பலப்படுத்தி அவர் கைகளாலேயே அப்பாவிகளை ஈவிரக்கமின்றி அழித்தொழிப்பது, இந்த பயங்கர கொடூரத்தின் தீயை தீவிரப்படுத்துதல் போன்ற சாத்தானிய கொள்கைகளை முறியடிப்பதில் முஸ்லிம்கள் விழிப்போடு செயல்பட வேண்டும். ஹஜ்ஜின் போது ‘முஷ்ரிகீன்களில் இருந்தும் கொடுங்கோன்மையில் இருந்தும் விலகிக் கொள்வது’ இதனையே குறிக்கிறது.

இறை தியானமே ஹஜ்ஜின் உயிர். அனைத்து நிலைமைகளிலும் நமது உள்ளங்களை இந்த அருள் மழையில் உயிர் பெறச் செய்வோம். இறைவன் மீது நம்பிக்கை வைப்பதை நம் இதயத்தில் வேரூன்றச் செய்வோம். அதுவே பலம், மகிமை, நீதி மற்றும் அழகின் ஊற்றுக் கண்ணாகும். அப்போது தான் எதிரிகளின் சதிகளை முறியடித்து நாம்வெற்றி கொள்ள முடியும்.

அன்புக்குரிய ஹாஜிகளே, இஸ்லாமிய உம்மத்துக்காக பிரார்த்திப்பதையும் சிரியா, இராக், பலஸ்தீன், ஆப்கானிஸ்தான், யமன், பஹ்ரைன், லிபியா, பாகிஸ்தான், காஷ்மீர், மியான்மார் மற்றும் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த ஒடுக்கப் பட்ட மக்களை உங்களது துஆக்களில் இணைத்துக் கொள்வதையும் மறக்க வேண்டாம். அமெரிக்கா முதலான அநியாய சக்திகளினதும் அவர்களது அடிவருடிகளதும் கரங்கள் துண்டிக்கப் பட இறையோனைப் பிரார்த்தியுங்கள்.

வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு.

செய்யித் அலீ காமெனெயி
7 துல்ஹஜ்1439

Sunday, August 19, 2018

இஸ்லாமிய புரட்சியின் வித்து - பெஹெஷ்தி

Shahid Mohammad Beheshti


அஷ்-ஷஹீத் ஆயதுல்லாஹ் முஹம்மத் பெஹெஷ்தி

செய்யத் முஹம்மத் ஹொசேனி பெஹெஷ்தி (24 அக்டோபர் 1928 - 28 ஜூன் 1981) ஒரு ஈரானிய நீதிபதி, தத்துவவாதி, போதகர் மற்றும் அரசியல்வாதியாக இருந்தார், அவர் புரட்சியின் பின்னர் ஈரான் அரசியல் வரிசைப்பாட்டில் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களுக்கு அடுத்தபடியான அந்தஸ்தில் இருந்தார்.

டாக்டர் பெஹெஷ்தி ஈரானின் இஸ்லாமிய புரட்சிக்குப் பிந்தைய அரசியலமைப்பின் பிரதான வடிவமைப்பாளராகவும், இஸ்லாமி; குடியரசின் பிரதான நிர்வாக கட்டமைப்பாளராகவும் கருதப்படுகின்றார். இஸ்லாமியக் குடியரசில் இந்நாள் ஜனாதிபதி ஹஸன் ரூஹானி, முன்னாள் ஜனாதிபதி முகம்மது காதமி, அலி அக்பர் வெலாயத்தி, முகமது ஜவாத் லரிஜானி, அலி பலாஹியான், மற்றும் முஸ்தபா பூர்முஹம்மதி போன்ற பல முக்கிய அரசியல்வாதிகள், பெஹெஷ்தியின் பாசறையில் பயிற்றுவிக்கப்பட்ட முக்கியஸ்தர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலராகும்.

பெஹெஷ்தி இஸ்லாமிய குடியரசுக் கட்சியின் செயலாளர் நாயகமாகவும் பணியாற்றினார், ஈரானிய நீதித்துறை அமைப்பின் தலைவராகவும் இருந்தார். மேலும் அவர் இஸ்லாமிய புரட்சிக் கவுன்சில் மற்றும் நிபுணர்களின் சபை ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றினார். பெஹெஷ்தி தத்துவத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். மேலும் பிற மொழிகளான அறபு, ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளை சரளமாக பேசக்கூடியவராயும் இருந்தார்.

பெஹெஷ்தி 1928 இல் இஸ்ஃபஹானில் பிறந்தார். தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் கற்று பட்டம்பெற்றார். கும்மில் உள்ள சன்மார்க்கப் பள்ளியிலும் கற்று தேர்ந்தார். கும்மில் கற்கும்போது அவர் பேரறிஞர் அல்லாமா தபதபாயி அவர்களின் திறமைமிக்க மாணவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

1965 க்கும் 1970 க்கும் இடையில், ஜெர்மன் ஹம்பர்க் நகரிலுள்ள இஸ்லாமிய நிலையத்தை  அவர் வழிநடத்திச் சென்றார். ஜேர்மனியிலும், மேற்கு ஐரோப்பாவிலும் கல்வி கற்கும் ஈரானிய மாணவர்களின் ஆன்மீக துறையின் பொறுப்பாளராக இருந்தார். ஹம்பர்க் இஸ்லாமிய நிலைய நிர்வாகத்தில், முகம்மது காதமியும் இவருடன் இணைந்து பணிபுரிந்தார்.

1960 களின் ஆரபத்தில் இருந்தே ஷாவின் முடியாட்சிக்கு எதிராக போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஆயதுல்லாஹ் பெஹெஷ்தி, ஷாவின் இரகசியப் பொலிசாரால் (SAVAK) பல முறை கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார். பெஹெஷ்தி விடுதலையான பிறகு, நாடு கடத்தப்பட்டு, ஈராக்கில் அஞ்ஞாதவாசத்தில் இருந்த இமாம் கொமெய்னி அவர்களுடன் இணைந்து, இமாமின் புரட்சி திட்டத்திற்கு பக்கபலமாகவும் இருந்தார்.

இஸ்லாமிய புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து ஆயதுல்லாஹ் பெஹெஷ்தி, இமாம் கொமெய்னியினால் ஈரான் புரட்சியின் கவுன்சிலின் ஸ்தாபக உறுப்பினராகவும் அதன் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். புதிய அரசியலமைப்பின் அடிப்படையாக 'வெலாயத்-இ-பக்கீஹ்' கொள்கையை ஊக்குவிப்பதில் ஒரு முக்கிய பங்காற்றினார். மேற்கத்தேய கட்டுப்பாடற்ற கலாசாரத்தையும் பொருளாதார முறைமையையும் அடியோடு வெறுத்தார். அனைத்தையும் உடனடியாகவே இஸ்லாமியமயப் படுத்தவேண்டும் என்று முரட்டுப் பிடிவாதத்துடன் இருந்தார்.

புரட்சிக்குப் பிந்திய முதலாவது புரட்சிகர ஈரானிய பாராளுமன்றத்தில், அவர், ஹாஷிமி ராப்சஞ்சானியுடன் இணைந்து, இஸ்லாமிய குடியரசுக் கட்சியை வழிநடத்தினார். பெஹெஷ்தி இஸ்லாமிய குடியரசு கட்சியின் ஸ்தாபக உறுப்பினர், முதல் பொதுச் செயலாளர் மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சத்தாம் ஹுஸைன் அறபு ஆட்சியாளர்களின் துணையுடனும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆசீர்வாதத்துடனும் ஈரான் மீது யுத்தமொன்றை திணித்திருந்த காலம்; அமெரிக்க பொருளாதாரத்தடை அப்போதும் இருந்தது. அக்காலகட்டத்தில் இஸ்லாமிய புரட்சிக்கு எதிரான அனைத்து ஊடகங்களும், குறிப்பாக மேற்கத்தேய ஊடகங்கள், ஆயதுல்லாஹ் பெஹெஷ்தியை குறிவைத்துத் தாக்கின.

இறுதியில், 1981 ஜூன் 28 இல் இஸ்லாமிய குடியரசு கட்சியின் மாநாடு ஒன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், இஸ்லாம் விரோத அமைப்பொன்றினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்ததன் காரணமாக ஆயதுல்லாஹ் பெஹெஷ்தி ஷஹீதாக்கப்பட்டார்;. இவருடன் சேர்த்து இஸ்லாமிய குடியரசு கட்சியைச் சேர்ந்த 70க்கும் அதிகமானோர் ஷஹீதாகினார். ஷஹீதானவர்களில் பல உயர் உலமாக்களும் புரட்சியின் தலைவர்களும் அடங்கியிருந்தனர்.  (முஜாஹிதீன் கல்க் என்ற பயங்கவாத அமைப்பே இந்த குண்டு வெடிப்புக்கு காரணம் என்று விசாணையின் மூலம் பிறகு அறியவந்தது). இவர்களின் மரணத்தால் இமாம் ஆயதுல்லாஹ் கொமெய்னி அவர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள், பெஹெஷ்தி ஒரு தனிநபரல்ல, “எமக்கு அவர் ஒரு தேசம்'” என்று இமாமவர்கள் வர்ணித்தார்கள்.

உலக நாடுகள் மத்தியில் ஈரான் இஸ்லாமிய குடியரசு இன்று தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவர்கள் அனைவரினதும் தியாகமே காரணம் எனலாம்.

Sunday, August 12, 2018

உலகம் போற்றும் ஈரானிய சினிமா

The world acclaimed Iranian cinema 

அஸ்கர் ஃபராதி இயக்கிய இரானிய படம். 2011-ல் வெளியான படம். ஒரு ஆஸ்கர் விருதுடன் மொத்தம் 81 விருதுகளை உலகத் திரைப்பட விழாக்கள் அனைத்திலும் சேர்த்து அள்ளியது இந்தப் படம். 


உலகில் முதல் தரமான திரைப்படங்களைத் தயாரித்து வழங்கும் நாடுகள் வரிசையில் ஈரான் இஸ்லாமிய குடியரசு முன்னிலை வகிக்கிறது. ஈரானிய திரைப்படங்களுடன் ஒப்பிடக்கூடியதாக சீன படங்களை மட்டுமே குறிப்பிடலாம். சினிமா விமர்சகர்கள் இப்போது ஈரானை சினிமா கலைத்துறையில்  உலகின் மிக முக்கியமான தேசமாக காட்டியுள்ளனர்.   சினிமாவில் அவர்கள்  கடைபிடிக்கும் கலை நுணுக்கங்கங்கள் பிரமிக்கத்தக்கதாக உள்ளன என்றும் குறிப்பிடுகின்றனர். கடந்த இருபது ஆண்டுகளில் சர்வதேச திரைப்பட விழாக்களில் ஈரானிய சினிமா பல விருதுகளை பெற்றுள்ளது. உலகின் புகழ்பெற்ற ஆஸ்திரிய திரைப்பட இயக்குனர் மைக்கேல் ஹனெக் மற்றும் ஜெர்மன் திரைப்பட தயாரிப்பாளரான வெர்னர் ஹெர்சாக் ஆகியோர் உலகெங்கிலும் பல திரைப்பட விமர்சகர்களுடன் சேர்ந்து ஈரானிய சினிமாவை உலகின் மிக முக்கியமான கலை திரைப்படங்களில் ஒன்றாக புகழ்ந்தனர்.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சினிமா பாரசீகத்துக்கு வந்தபோது அதற்கு ஐந்து வயது மட்டுமே. முதல் பாரசீக திரைப்பட தயாரிப்பாளரான மிர்ஸா இப்ராஹிம் கான் அக்காஸ் பாஷி, 1896-1907 இல் இருந்து பெர்சியாவின் மன்னர் முஸாபர் அல்-டின் ஷாவின் உத்தியோகபூர்வ புகைப்படக்காரராக இருந்தவராகும். 1900 இல் பாரிஸுக்கு விஜயம் செய்த பின், அக்காஸ் பாஷி ஒரு கேமராவை பெற்று, ஷாவின் உத்தரவின் பேரில், ஷாவின் ஐரோப்பிய விஜயத்தை படமாக்கினர். அக்காஸ் பாஷி புகைப்படம் எடுக்கத் தொடங்கிய சில வருடங்களுக்குப் பிறகு, கான் பாபா மு'தஸதி என்ற மற்றொரு ஈரானியர் உருவானார். பாஹ்லவி வம்சத்தின் ஆட்சியின் போது அவர் கணிசமான அளவு செய்தித்தொகுப்புகளை படமாக்கினார். முதல் பொது திரையிடல் 1904 ஆம் ஆண்டில் தெஹ்ரானில் மிர்சா இப்ராஹிம் கான் அக்காஸ் பாஷியால் மேற்கொள்ளப்பட்டது. அவர் தனது புராதன பொருட்கள் விற்கும் கடைக்கு பின்புறத்தில் திரையிடலை ஏற்பாடு செய்தார். 1905 ஆம் ஆண்டில் தலைநகரில் முதல் திரைப்பட அரங்கத்தைத் அவரே திறந்தார். அதன்பின் ஈரானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின் நிலைமை மாறியது, அவரின் ஸ்டுடியோ மற்றும் காட்சியரங்கு அடித்து நொறுக்கப்பட்டன. 1912 ஆம் ஆண்டில் சினிமாத்துறை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்தது. பல  திரையரங்கங்கள் உருவாகின. 1925 இல், திரைப்பட பள்ளி நிறுவும் முயற்சிகள் தொடங்கி, சுமார் ஐந்தாண்டுகளில் பயிற்சிகள் வழங்க ஆரம்பிக்கப்பட்டன.

முதலாவது  திரைப்படம்

முதல் ஈரானிய நிசப்த படம் பேராசிரியர் ஓவன்ஸ் ஓஹானியான் என்பவரால் 1930 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. அதன் பெயர் "அபியும் ரபியும்" என்பதாகும். 1933 ஆம் ஆண்டில் அவர் "ஹாஜாகா" என்ற தலைப்பில் தனது இரண்டாவது படத்தை தயாரித்தார். அதே ஆண்டின் பிற்பகுதியில், அப்துல் ஹொசைன் செபந்தி என்பவர் "லோர் கேர்ள்" என்ற முதல் ஈரானிய ஒலி படத்தை தயாரித்தார்.

பாரசீக கவிஞரான பிர்தவுஸியின் வாழக்கை வரலாறு, "ஷிரினும் பர்ஹாத்தும்" (ஈரானிய காதல் காவியம்), "ப்ளாக் ஐஸ்" (மன்னர் நாதிர்ஷாவின் இந்திய படையெடுப்பு) ஆகியவற்றை கருவாக வைத்து படமாக்கினார். 1937 இல் "லைலா மஜ்னூன்" என்ற கிழக்கின் காதல் கதையை அவர் இயக்கினார்.

ஆரம்பகால பாரசீக இயக்குனர்களான அப்துல் ஹூசைன் செபந்தே மற்றும் இஸ்மாயில் கவ்ஷான் ஆகியோர் பாரசீக இலக்கியம் மற்றும் பண்டைய பாரசீக புராணங்களின் மகோன்னதத்தை தமது படங்களுக்கு கருவாக பயன்படுத்திக்கொண்டனர். அப்படங்களில் மனிதகுலத்தையும் ஒழுக்கநெறியின் மேம்பாட்டையும் வலியுறுத்தினர்.

1960ல் ஈரானிய சினிமாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க தசாப்தமாக இருந்தது, ஆரம்பத்தில் சராசரியாக 25 வணிகத் திரைப்படங்கள் உருவாகின, இது தசாப்தத்தின் இறுதியில் 65 ஆக உயர்ந்தது.

இவ்வாறு வளர்ந்த ஈரானிய சினிமா துறை, இஸ்லாமிய புரட்சியின் ஆரம்பகாலத்தில் ஒரு தொய்வை எதிர்கொண்டது. ஈரானில் இனி சினிமா துறைக்கு எதிர்காலமில்லை என்று கருதிய சில தயாரிப்பாளர்களும் நடிகர்களும் துறை சார்ந்தோரும் நாட்டைவிட்டு வெளியேறினார். ஆனால் நடந்ததோ வேறு.

சினிமாத்துறையை வளர்ப்பதற்காக அரசாங்கம் நிதி உதவி வழங்கத் தொடங்கியது. ஆட்சியின் இந்த மாற்றம் திரைப்பட இயக்குனர்களின் முழு தலைமுறையையும் ஊக்குவித்தது; அற்புதமான பல கலைஞர்கள் உருவாகினர். நாமும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கும் வகையில் பெண்களும் முவந்தனர். இதில் பெண் இயக்குனர்களும் இருந்தனர். சினிமா கலைத்துறையில் பெருமளவிலான இளைஞர்களும் இணைந்து உலக சினிமா ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் திரும்பச் செய்தனர். இஸ்லாமிய புரட்சிக்கு பிந்தைய ஈரானிய சினிமா, அதன் தனித்துவமான பாணி, கருப்பொருள்கள், மற்றும் கலாச்சார அம்சங்களுக்காக பல சர்வதேச அரங்கங்களிலும், விழாக்களிலும் விருதுகளையும்  பாராட்டுக்களையும்  குவித்தன.

கொஸ்ரோ சினாய் மற்றும் அவரைத் தொடர்ந்து பல சிறந்த ஈரானிய இயக்குநர்கள் கடந்த சில தசாப்தங்களில் உருவாகினர். இவர்களில் குறிப்பிடத்தக்க நபர்கள் அப்பாஸ் கியோராஸ்டாமி, ஜாபர் பனாஹி, மஜித் மஜிடி, பஹ்ராம் பெய்ஸய், தாரியஸ் மெஹ்ரிஜுய், மோஹ்சன் மக்மல்பாஃப், கோஸ்ரோ சினாய், சொஹ்ராப் ஷஹித் சாலஸ், பர்விஸ் கிமியாவி, சமிரா மக்மல்பஃப், அமீர் நாதெரி மற்றும் அபுல்பஸ்ல் ஜலிலி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

அப்பாஸ் கியோராஸ்டாமி, ஜாபர் பனாஹி ஆகியோரை சினிமாவின் வரலாற்றில் சிறந்த இயக்குனர்களாக சில விமர்சகர்கள் கருதுகின்றனர். கியோராஸ்டாமி, 1997 ஆம் ஆண்டில்  கேன்ஸ் திரைப்பட விழாவில் பாம் டி'ஆர் விருது வென்றபோது உலக சினிமாவின் வரைபடத்தில் ஈரானை உறுதியாக நிலைநிறுத்தினார்.

========================================

அதிகமாக பேசப்பட்ட ஈரானிய திரைப்படங்கள் சிலவற்றுக்கு இந்திய ஊடகங்கள் செய்த விமர்சனங்கள்:

'காற்று நம்மை ஏந்தி செல்லும்
(The wind will carry us)


 உலக சினிமா ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் திருப்பியதில் முக்கியமானவர் அப்பாஸ் கிராஸ்தமி (Abbas Kiarostami). 1940-ல் டெஹ்ரானில் பிறந்த இவர் ஆரம்பகாலத்தில் விளம்பரப் படங்களை வடிவமைக்கும் ஓவியராக இருந்தார். 1969-ல் இவர் இயக்கிய 12 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படமே இவரது முதல் திரைமுயற்சி. 
'Taste of Cherry', 'Where is the friends Home', 'Through the Olive trees', 'Close up', 'Life and nothing more', 'Ten' ஆகியவை அப்பாஸ் கிராஸ்தமி இயக்கிய முக்கியமான திரைப்படங்களில் சில.

டெஹ்ரானை சுற்றியுள்ள கிராமங்களே இவரது படங்களின் முக்கிய கதைக் களன்களாக இருந்து வருகின்றன. 


கிராமத்து மனிதர்களையே இவர் பெரும்பாலும் தனது படங்களில் நடிக்க வைக்கிறார். இதற்கு இவர் கூறும் காரணம்: "சாதாரண மக்களுக்கு எதையும் புரியும்படிச் சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்ளவும் தங்களை வெளிப்படுத்தவும் தயாராக இருக்கிறார்கள். மேலும், அவர்கள் நடிப்பை ஒரு தொழில் என்று நம்புவதில்லை."

அப்பாஸ் கிராஸ்தமியின்படங்கள் அனைத்தும் எளிமையான தோற்றத்துடன் மிக ஆழமான உணர்வுகளை பிரதிபலிப்பவை. ஒரு திரைப்படத்திற்கு தகுதியில்லாவை என முதல்பார்வையில் ஒதுக்கித் தள்ளும் எளிய நிகழ்வுகளே இவரது திரைப்படங்களை கட்டமைக்கின்றன. இந்த நிகழ்வுகள் வாழ்வின் ஆதார சுருதியை மீட்டிச் செல்ல ஒருபோதும் தவறியதில்லை என்பது இவரது கலை ஆளுமையின் சிறப்பு. 


அப்பாஸ் கிராஸ்தமி என்றதும் அவர் ரசிகர்களுக்கு நினைவு வருவது குழந்தைகள். குழந்தைகளின் உலகை இவரளவிற்கு யதார்த்தமாக காட்சிப்படுத்திய இயக்குனர்கள் வேறில்லை என்றே சொல்லலாம். குழந்தைகளுடன் தொடர்ந்து பணிபுரிவது தனக்கு பிடித்திருக்கிறது என்கிறார் அப்பாஸ் கிராஸ்தமி. குழந்தைகள் கேமராவின் முன்பு மிக இயல்பாக தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். முககியமாக அவர்கள் பணத்திற்கோ புகழுக்கோ ஆசைப்படுவதில்லை என்பது இவரது கருத்து. 
தனது ஒவ்வொரு படத்திலும் புதிய யுக்திகளை மிக இயல்பாக முயன்று வருபவர் இவர். 'Through the Olive Trees' படம் ஒரு டாக்குமெணட்ரியை போல எடுக்கப்பட்டது. படத்தின் தோற்றம் டாக்குமெண்ட்ரியை கொண்டிருந்தாலும், டாக்குமெண்ட்ரிக்குரிய வறட்டுத்தனம் சற்றும் இதில் எட்டிப்பார்க்கவில்லை என்பது ஆச்சரியம். 


'Ten' திரைப்படம் முழுக்க ஓடும் காரில் எடுக்கப்பட்டது. பதினைந்து நிமிடங்கள் ஒரே கோணத்தில் குளோசப் ஷாட்டில் சிறுவன் ஒருவனின் பேச்சை படம் பிடிக்கும் துணிச்சல் இவரை தவிர வேறு யாருக்கும் வருமா என்பது சந்தேகமே. 

 அப்பாஸ் கிராஸ்தமியின்கலை ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்திய படங்களில் ஒன்று, 'The Wind will Carry us.'
மரங்கள் இல்லாத பெரிய மலைகளின் வளைந்து செல்லும் பாதைகளினூடே புழுதி கிளப்பி வரும் ஜீப்பிலிருந்து படம் தொடங்குகிறது. லாங் ஷாட்டில் காட்டப்படும் ஜீப்பில் இருப்பவர்களின் பேச்சு திரையில் ஒலிக்கிறது. அவர்கள் டெஹ்ரானிலிருந்து பல மைல் தொலைவில் உள்ள Siah Dareh என்ற சிறிய கிராமத்திற்கு செல்பவர்கள். பாதி வழியில் சிறுவன் ஒருவன் அவர்களை கிராமத்திற்கு வழி நடத்தி அழைத்து செல்கிறான். 

மூன்று பேர் கொண்ட அந்த குழுவில் ஒருவர் மட்டுமே பார்வையாளர்களுக்கு காட்டப்படுகிறார். அவரை கிராமத்திலுள்ளவர்கள் என்ஜினியர் என்று அழைக்கிறார்கள். என்ஜினியரும் அவர் நண்பர்களும் எதற்காக அந்த கிராமத்திற்கு வருகிறார்கள் என்பது படத்தில் சொல்லப்படவில்லை. 

Siah Dareh-ல் உள்ள நூறுவயதை தாண்டிய மூதாட்டி ஒருத்தி சாகும் தருவாயில் இருக்கிறாள். அவளின் இறுதி சடங்கை படம்பிடிக்கவே என்ஜினியரும் அவர் குழுவும் அங்கு வந்திருக்கிறது. படத்தில் வரும் காட்சிகள் இப்படியொரு ஊகத்துக்கு பார்வையாளர்களை இட்டுச்செல்கிறது என்றாலும் இதுதான் காரணம் என்பது படத்தில் திட்டவட்டமாக சொல்லப்படவில்லை. 


மூதாட்டியின் மரணம் நாள் கணக்கில் தள்ளிப்போகிறது. இந்த காலகட்டத்தில் என்ஜினியருக்கு அக்கிராமத்தில் உள்ளவர்களுடன் ஏற்படும் சிறிய நிகழ்வுகள், வழிகாட்ட உதவிய சிறுவனுடன் ஏற்படும் உறவு ஆகியன பார்வையாளர்களுக்கு Siah Dareh கிராமத்துடன் இனம் புரியாத ஒட்டுதலை ஏற்படுத்துகின்றன. 
இறுதியில் மூதாட்டியின் மரணம் நிகழும்போது என்ஜினியர் கிராமத்தை விட்டு புறப்படுகிறார். மூதாட்டியின் மரணமும் படத்தில் அறுதியிட்டு கூறப்படவில்லை. படத்தில் வரும் காட்சிகள் இப்படியொரு தீர்மானத்துக்கு பார்வையாளர்களை இட்டுச்செல்கிறது, அவ்வளவே!

நல்ல கதையே ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்குகிறது என்ற பொதுவான கருத்து இன்றும் நம்மிடையே நிலவி வருகிறது. நல்ல கதையை காட்சிகள் மூலமும், வசனங்கள் வாயிலாகவும் பார்வையாளர்களுககு புரியும்படியும், அவர்கள் உணர்வுளை தூண்டுபடியும் யார் உச்சத்துக்கு எடுத்துச் செல்கிறார்களோ அவர்களே சிறந்த இயக்குனர்கள். இப்படிப்பட்ட திரை ஆக்கங்களில் நிகழ்வுகளே கதையை நகர்த்தும் பிரதான விஷயங்களாக அமைகின்றன. சரியாக சொன்னால் நிகழ்வுகளின் தொகுப்பே கதையாக பரிணமிக்கிறது.

உதாரணமாக 'கில்லி' திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் த்ரிஷாவை இழுத்துச் செல்லும்போது விஜய் எதிரில் வருகிறார். இது ஒரு நிகழ்வு. இந்த நிகழ்வு நடைபெறாமல் போயிருந்தால் அதாவது விஜய் வராமல் போயிருந்தால் கதை என்னவாக ஆகியிருக்கும்? யூகிக்க சிரமமாக இருக்கிறதல்லவா? இந்த நிகழ்வுக்குப் பிறகு வரும் அனைத்து நிகழ்வுகளும் அதாவது விஜய் த்ரிஷாவை காப்பாற்றுவது, பிரகாஷ்ராஜ் சென்னை வருவது ஆகிய அனைத்தும் நாம் முதலில் பார்த்த நிகழ்வின் ஆதாரத்திலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு நிகழ்வை உருவினாலும் கதை சீட்டுக்கோபுரமாக பொலபொலவென சரிந்துவிடும். 
Abbas Kiarostami


மாறாக 'The Wind will Carry us' திரைப்படத்தில் நிகழ்வுகள் கதையை கட்டமைக்கவில்லை. சரியாக சொன்னால் இப்படத்தில் வரும் நிகழ்வுகள் கதை என்று திட்டவட்டமாக ஒன்றை உருவாக்கவேயில்லை. ஆகையால் விஜய் வராமல் போயிருந்தால் என்பது போன்ற ஒரு கேள்வியை இப்படத்தின் மீது வைக்கவே இயலாது. பல நிகழ்வுகள் ஒன்றிணைந்து கதை என்ற ஒன்றை கட்டமைக்காததும், நிகழ்வுகள் ஒவ்வொன்றும் தனித்தனியே முழுமை பெற்று வேறு நிகழ்வுகளை சாராமல் இருப்பதுமே இதற்கு காரணம். 

சரி, கதையே திரளாத ஒரு திரைப்படம் பார்வையாளர்களுக்கு என்ன அனுபவத்தை தர முடியும்? அதுதான் இத்திரைப்படத்தில் அப்பாஸ் கிராஸ்தமி தனக்குத்தானே வகுத்துக்கொண்ட சவால். 

Siah Dareh சிறிய கிராமம். மலைகளுக்கு நடுவில் ஒரு குன்றின் மீது செங்கலாலும், மண், சுண்ணாம்பு சுதையாலும் நிர்மாணிக்கப்பட்ட மிகச்சிறிய கிராமம். படத்தினூடாக வரும் அக்கிராமத்தின் எளிய மனிதர்கள், குறுகலான தெருக்கள், வளர்ப்பு பிராணிகள், காற்றில் பொன்னிறத்தில் அலையும் தானிய கதிர்கள், புழுதி கிளப்பும் மண் பாதைகள் என ஒவ்வொன்றும் பார்வையாளர்களை அக்கிராமத்துடன் உணர்வுபூர்வமான ஒரு உறவை ஏற்படுத்துக்கின்றன.

படத்தில் சுவாரஸியமான காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. அதில் ஒன்று. 
கிராமத்தில் என்ஜினியருக்கு சரியாக செல்போன் சிக்னல் கிடைப்பதில்லை. சிக்னல் கிடைக்க வேண்டுமென்றால் அவர் தனது ஜீப்பில் ஏறி அப்பகுதியிலேயே உயரமாக இருக்கும் கிராமத்தின் இடுகாடு அமைத்திருக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும். தொலைபேசி ஒலிக்கும் போதெல்லாம் என்ஜினியர் ஜீப்பில் ஏறி இடுகாட்டுக்கு விரைகிறார். திரும்பத் திரும்ப வரும் இக்காட்சி படத்திற்கு ஒரு ரிதத்தை அளிக்கிறது. 

இடுகாட்டில் கிராமத்தை சேர்ந்த ஒருவன் தொலை தொடர்பு துறைக்காக பெரிய குறுகலான பள்ளம் ஒன்றை தோண்டுகிறான். போன் பேச வரும் என்ஜினியர் அவனுடன் உரையாடுகிறார். அவர் போன் பேச வரும்போதெல்லாம் உரையாடல் தொடர்கிறது. எனினும் பள்ளத்திற்குள் இருக்கும் மனிதனின் முகம் கடைசிவரை காட்டப்படவில்லை. இறுதி காட்சியில் மண் சரிந்து குழிக்குள் அகப்பட்டுக் கொள்ளும் அவனை கிராமத்தவர்கள் என்ஜினியரின் ஜீப்பில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போதும் அவன் கால்கள் மட்டுமே பார்வையாளர்களுக்கு காட்டப்படுகிறது. 

கிராமத்தில் தேனீர் விற்கும் வயதான பெண்மணியுடன் உரையாடுகிறார் என்ஜினியர். அவளிடம், "இதுவரை பெண்கள் உணவு பரிமாறி நான் பார்த்ததில்லை" என்கிறார், ஹோட்டலில் பெண்கள் உணவு பரிமாறுவதில்லை என்ற அர்த்தத்தில். உடனே அப்பெண்மணி "உனக்கு பெற்றோர் உண்டா?"என்று கேட்கிறாள்.
"உண்டு!"
"அப்படியானால் உன் அப்பாவுக்கு உணவு பரிமாறுவது யார்?"
"அம்மா."
"பிறகெப்படி பெண்கள் பரிமாறி நான் இதுவரை பார்த்ததில்லை என்று சொல்லலாம்."
என்ஜினியர் அப்பெண்மணியிடம் வருத்தம் தெரிவிக்கிறார்.

குடிப்பதற்கு பால் வாங்க ஒரு வீட்டிற்கு என்ஜினியர் செல்கிறார். அது இடுகாட்டில் குழி தோண்டுபவனின் காதலியின் வீடு. அவளுக்கு வயது பதினாறு. நிலவறையில் இருட்டான பகுதியில் அவர்கள் மாடு கட்டப்பட்டிருக்கிறது. அரிகேன் விளக்குடன் வரும் அப்பெண்ணின் கால்பகுதி மட்டுமே தெரிகிறது. முகம் தெரியவில்லை. அவள் பால் கறக்கும் போது, ஈரானின் புகழ்பெற்ற பெண் கவிஞர் Forough Farrokhzad-ன் கவிதையை சொல்கிறார் என்ஜினியர். அக்கவிதையில் வரும் ஒரு வார்த்தையே 'The Wind will Carry us.'

இந்த புகழ் பெற்ற கவிதையையே இந்தப் படத்தில் காட்சி ரூபமாக்கியுள்ளார் அப்பாஸ் கிராஸ்தமி என்கிறார்கள் விமர்சகர்கள். 
மேலோட்டமாக பார்த்தால் இறப்புக்கான காத்திருந்தலே இப்படம். படத்தின் இறுதியில் வரும் மருத்துவரும் இறப்பு குறித்து பேசுகிறார். முதுமைப் பருவம் மிக மோசமானது என்று கூறும் என்ஜினியருக்கு, அதைவிட மரணம் மிக மோசமானது என்று பதிலளிக்கிறார் மருத்துவர். "மரணம் இந்த இயற்கையை, இதன் அதிசயங்களை, இதன் தீராத அழகை முற்றிலுமாக நம்மிடமிருந்து பிரித்து விடுகிறது." மேலும், மற்ற அனைத்து செயல்களையும்விட இயற்கையை கவனிப்பதே மகிழ்வானது என்கிறார் மருத்துவர். 

அப்பாஸ் கிராஸ்தமியின்இந்தப் படத்தில் Siah Dareh கிராமமும், அதை சுற்றியுள்ள அற்புதமான 'லேண்ட் ஸ்கேப்'பும் ஆச்சரிப்படும் விதத்தில் பார்வையாளனுக்குள் பதிய வைக்கப்படுகிறது. 


முதல் காட்சியில் ஜீப்பில் உள்ளவர்கள் முகவரி அடையாளமாக மலையில் தனித்து நிற்கும் மரம் ஒன்றை குறிப்பிடுகிறார்கள். ஜீப், அதிலுள்ளவர்களின் உரையாடல் இவற்றை தாண்டி பார்வையாளனும் அந்த மரத்தின்பால் கவனத்தை குவிக்கிறான். 

பிறிதொரு காட்சியில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்செல்லும் ஒருவனை என்ஜினியர் அழைக்கிறார். அழைப்பு கேட்காத அவனை சிறு குன்று ஒன்று மறைக்கிறது. கேமரா அந்த குன்றின் பின்னணியில் மோடடார் சைக்கிளின் சத்தத்தை பின் தொடர்கிறது. சில விநாடிகளில் குன்றின் மறுபுறம் அம்மனிதன் பார்வையாளர்களின் கண்களில் மீண்டும் தென்படுகிறான்.

என்ஜினியர் இடுகாட்டுக்கு கிராம நுழைவாயிலை கடந்து ஜீப்பில் செல்கிறார். வாயிலை கடந்ததும் ஜீப் பார்வையிலிருந்து மறைந்து விடுகிறது. ஆனாலும், திரையில் அந்த காட்சியே தொடர்கிறது. சில நொடிகள் கழித்து மறைந்த கார் தொலைவில் சாலையில் மீண்டும் தோன்றுகிறது. 

நாம் மேலே பார்த்தது போன்ற ஏராளமான காட்சிகளின் வழியாக கிராமமும் அதனைச்சுற்றியுள்ள பூகோள அமைப்பும் மிக நுட்பமாக பார்வையாளர்களின் மனதில் பதிய வைக்கப்படுகிறது. இறுதி காட்சியில் மருத்துவர் இயற்கையை குறித்து பேசும்போது இந்தப் பதிவுகள் பார்வையாளர்களுக்குள் இயற்கை குறித்த தன்னெழுச்சியை சுண்டிவிடுகின்றன.

மேலும, 118 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தில் கடைசி மூன்று நிமிடங்கள் மட்டுமே பின்னணி இசை சேர்க்கப்பட்டுள்ளது. மீதி படம் முழுக்க இயற்கை ஒலிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. 

மொத்தத்தில் ஒரு முழுமையான அழகியல் படைப்பு அப்பாஸ் கிராஸ்தமியின் 'The Wind will Carry us' என்பதில் மிகையில்லை.



சாங் ஆஃப் ஸ்பாரோஸ்: (Song of Sparrows)

ஒரு இரானியப் படம். பாரசீக மொழி. படம் புரியுமா என்று சந்தேகம். ஆங்கில சப்-டைட்டில்களை நம்பிப் பார்க்க ஆரம்பித்தால் அவை தேவையில்லை என முதல் காட்சியே உறுதிப்படுத்துகிறது. படம் பார்க்கையில் கண்ணீர் கசிவதைத் தடுக்க முடியவில்லை. நெருங்கிய உறவினர் ஒருவரது சோகம் போல நம்மைத் தாக்குகிறது. படம் நம்பிக்கையுடன் முடிகையில் திருப்தியாகக் கலைந்து செல்கிறோமசாங் ஆஃப் ஸ்பாரோஸ். இயக்குநர் மஜித் மஜிதியின் படம். உலகம் முழுதும் திரும்பிப் பார்க்கும் உன்னத இயக்குநர் மஜித் மஜிதி. எளிய மனிதர்களின் ஈரமான வாழ்க்கையை அழகு மிளிரக் காட்சிப்படுத்தும் மாபெரும் கலைஞன்.கதை நாயகன் கரீம் டெஹ்ரான் நகருக்கு அப்பால் ஒரு சிறிய கிராமத்தில் நெருப்புக்கோழிப் பண்ணை ஒன்றில் வேலை பார்க்கிறான். மனைவி நர்கீஸ் மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஓர் எளிய வீட்டில் நிறைவாக வாழ்ந்துவருகிறான். ஒரு நாள் மகளின் காது கேட்கும் கருவி தொலைந்துவிடுகிறது. குடும்பமே தேடிக் கடைசியில் கண்டுபிடிக்கப்படுகையில் அது பழுதாகிவிடுகிறது. இலவச மருத்துவமனையில் மூன்று மாதங்கள் காத்திருக்கச் சொல்கிறார்கள். இல்லாவிட்டால் டெஹ்ரான்தான் போய் வாங்க வேண்டும் என்கிறார்கள்.


இதற்கிடையில் கரீம் பராமரிப்பில் இருந்த நெருப்புக் கோழி ஒன்று பண்ணையிலிருந்து தப்பி ஓடிவிடுகிறது. எவ்வளவு முயற்சி செய்தும் பிடிக்க முடியவில்லை. இதனால் கரீமின் வேலை போய்விடுகிறது. குடும்பத்தைக் காப்பாற்றவும் மகளின் செவிக்குக் கருவி வாங்கவும் இப்போது டெஹ்ரான் செல்ல முடிவு செய்கிறான்.

டெஹ்ரானில் மோட்டர் பைக்குக்கும் ஓட்டுநர்கள் உண்டு. இரு சக்கர வண்டியில் பிரயாணிகளையும் பொருட்களையும் ஏற்றிச் செல்லும் வேலை கிடைக்கிறது. நகர வாழ்க்கை முதலில் மூர்க்கத்தனமாகவும் இயந்திரத்தனமாகவும் கரீமை எதிர்கொள்கிறது. ஆனால் அதன் தொடர் உரசலால் கரீமும் தன் இலக்குகளை மறந்து போகிறான். தூக்கி எறியப்படும் தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாவற்றையும் வீட்டிற்கு வருகையில் எடுத்து வருகிறான். அவை மலை போல் குவிவதைப் பெருமையுடன் பார்த்துவருகிறான்.

ஒரு முறை அவற்றை எடுத்து வைக்கும்போது தவறி விழுந்து கரீமின் கால் உடைகிறது. வேலைக்குப் போக முடியாத நிலையில் மகன் கை கொடுக்கிறான். மகன் வாங்கி வரும் மீன் தொட்டி உடைந்ததால் அவன் அத்தனை மீன்களையும் ஓடும் தண்ணீரில் விட்டுக் காப்பாற்றுவதைப் பெருமையுடன் பார்க்கிறான். தன் வாழ்க்கைக்கான விழுமியத்தை அவன் கற்றதாய் நினைத்துப் பெருமிதம் கொள்கிறான்.


அதேநேரத்தில் தொலைந்துபோன நெருப்புக்கோழி கிடைத்துவிட்டதாக முதலாளி செய்தி அனுப்புகிறார். மீண்டும் வேலை கிடைக்கிறது. திரும்பி வந்த நெருப்புக்கோழியைக் கண்ணீர் மல்கப் பார்க்கப் படம் முடிவடைகிறது!

மொழி, கலாச்சாரம், தொழில், உணவுப் பழக்கம் என அனைத்தும் வேறுபட்ட நிலையிலும் கரீம் குடும்பத்தை நம் பக்கத்து வீட்டுக் குடும்பமாகப் பார்க்கவைக்கிறார் மஜித் மஜிதி. அவரின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்புகளும் மிக மிகச் சாதாரணமானவை. அவற்றைக் கையாளும் கரீம் எந்தப் பராக்கிரமத்தையும் காட்டவில்லை. வாழ்வாதாரம் குறித்த போராட்டத்தில் பெரிய வில்லன்களும் இல்லை.

நெருப்புக்கோழி முதலாளியும் சுரண்டவில்லை. நகர வாழ்க்கையும் தீயவர் கூடாரமாகக் காட்டப்படவில்லை. அவன் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் நோய், தொலைந்துபோகும் மிருகம், பழுதாகும் கருவி, விபத்துகள், பொருட்கள் சேதம் இவற்றால் வருபவைதான்.

எல்லோரும் நல்லவரே என நினைக்கும் உயர்ந்த மனம் கரீமுக்கு. உண்மையில் அந்த மனம் இயக்குநர் மஜித் மஜிதிக்கு என்றுதான் சொல்ல வேண்டும். சூழ்நிலைகள்தான் துன்பங்களை ஏற்படுத்துகின்றன. அதை ஜெயிக்கும் மனிதர்கள் எதற்காகவும் தங்களது நல்ல தன்மையை விட்டுக் கொடுப்பதில்லை. காலத்தின் எல்லாச் சோதனைகளிலிருந்தும் தங்கள் விழுமியத்தைச் சேதாரப்படுத்திக்கொள்ளாமல் மீண்டு வருகிறார்கள்.

எல்லோரையும் அன்புதான் பிணைக்கிறது. அதுதான் மறக்கவும் மன்னிக்கவும் சொல்லித்தருகிறது. அன்பு எனும் பெரும் சொத்து கொண்டவர்களுக்கு, மற்ற சொத்துகள் ஒரு பொருட்டல்ல. அதே போல மற்ற வாழ்க்கை முறை நெருக்கடிகளையும் சுலபமாக எதிர்கொள்ளும் வலிமையையும் அது தருகிறது.

மஜித் மஜிதியின் மனிதர்கள் நமக்குப் பெரிதும் பரிச்சயமானவர்கள். நிபந்தனையற்று நிஜமான அன்பு செலுத்துபவர்கள். வார்த்தைகளில் இல்லாமல் செயலில் தங்கள் அன்பைக் காட்டுபவர்கள். பிற மனிதர்களின் வலியைப் புரிந்தவர்கள். எளிமையான வாழ்க்கையை வாழ்பவர்கள்.

இந்த அன்பு மயமான உலகை அதீதப்படுத்தாமல், அரிதாரம் பூசாமல் அப்படியே இயல்பாகக் காட்டியதால் மனதில் ஒட்டிக்கொள்கிறது படம். இதமான இசை, செறிவான ஒளிப்பதிவு



உயிர்ப்புடன் உண்மையான வசனங்கள் போன்றவை பலம் சேர்த்தாலும் படத்தை முழுதும் தன் தோளில் சுமக்கிறார் நாயகன் வேடமேற்ற ரேஜா நாஜி. பல திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகர் விருதையும் தட்டிச் சென்றார்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆங்கில சப்-டைட்டில்களுடன் படம் வசூலையும் அள்ளியது.

நம் ஊரில் இல்லாத சாமானியர் கதைகளா? மிகத் திறமையான நடிகர்களும் நுட்பமான இயக்குநர்களும் தமிழில் உள்ளனர். தொழில்நுட்பத்திலும் திரை மொழியிலும் பிரமிக்கத்தகுந்த முன்னேற்றம் கண்டுள்ள தமிழ் திரையுலகம் கதைத் தேர்வுகளில் இன்னமும் கவனம் செலுத்தலாம்.

இலக்கியவாதிகளை வசனம் எழுத மட்டும் பணிக்காமல், அவர்கள் கதைகளையும் கொஞ்சம் கூர்ந்து வாசிக்கலாம்.

உலகம் நம்மைத் திரும்பிப் பார்க்க நம் மண்ணின் கதைகள் போதும்!


நண்பனின் வீடெங்கே ? 
Film: Where is the Friend's Home?

Director: Abbas Kiarostami

மிகச் சிறிய அளவில்கூட மனிதாபிமானம் அருகிவரும் இக்காலத்தில், குழந்தைகளின் இதயத்தில் அது எவ்வாறு சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது என்பதை கூறுகிறது இத்திரைப்படம்

ஈரானின் தொலைதூர கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளி வகுப்பறையில்தான் இப்படத்தின் காட்சிகள் ஆரம்பிக்கின்றன. அமளிதுமளியாகும் குழந்தைகளின் விளையாட்டுச் சத்தம் ஆசிரியரின் வருகைக்குப் பின் அமைதியாகிறது. பரஸ்பர மரியாதையும், நலம்விசாரிப்பும் முடிந்து ஆசிரியர் மாணவர்களிடம் எழுதிவந்திருக்கும் வீட்டுப்பாடத்தை காட்டச் சொல்லி கேட்கிறார். ஒவ்வொரு மாணவர்களும் காட்டுகிறார்கள். நமட்ஸதே எனும் மாணவன் குறிப்பேட்டில் எழுதி வராமல் தனித்தனி தாள்களில் எழுதிவருகிறான். அதை வாங்கிப் பார்க்கும் ஆசிரியர் அதைக் கிழித்துப் போட்டுவிட அவன் விசும்புகிறான்.



அவமானம் தாளாமல் அழுகை

அவனை குறிப்பேட்டில்தான் எழுதி வரவேண்டும் என்று கண்டிக்கிறார். ''ஏற்கெனவே இதை நான் உங்கிட்டே பலமுறை சொல்லியிருக்கேன் இல்லையா?'' என்று கேட்கிறார். விசும்பல் அழுகையாக மாறுகிறது. ''சொல் நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன்'' என்று கேட்கிறார். அவன் அழுகை வெடிக்கிறது. ''சொல் நமட்ஸதே...'' தலையைக் குனிந்துகொண்டு ''மூன்று தடவை'' என்றுவிட்டு அவமானம் தாளாமல் அழுகையைத் தொடர்கிறான். நமட்ஸதேவுக்கு அருகிலிருக்கும் மாணவன் அஹ்மத்பூருக்கு மனம் ஏனோ வலிக்கிறது. அவனிடம் குறிப்பேடு இருந்தால் எழுதி வந்துவிடமாட்டானா என்பதுபோல் அமைதியாகப் பார்க்கிறான்.

வீட்டுமுற்றத்தில் அம்மாவுடன் வாக்குவாதம்

வீட்டுக்குத் திரும்பிய அஹ்மத் வீட்டில் உள்ள இன்னொரு குறிப்பேட்டை தனது சக மாணவ நண்பன் நமட்ஸதேவுக்கு கொண்டுபோய் அவன் வீட்டைத்தேடிச் சென்று கொடுத்துவிட்டு வர வேண்டும் என்று நினைக்கிறான். அன்று மாலை இவனது வீட்டு வெளிமுற்றத்தில் பெரிய பாத்திரத்தில் துணிகளை ஊரவைத்து துணித் துவைத்துக் கொண்டிருக்கும் அம்மாவிடம் தனது நண்பன் நமட்ஸதேயின் குறிப்பேடு இங்கிருப்பதாகவும் அதைக் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வந்துவிடுவதாகவும் அனுமதி கேட்கிறான்.

''எனக்குத் தெரியும் நீ விளையாடத்தான் போறே. முதல்ல வீட்டுப் பாடத்தை உட்காந்து முடி. அப்புறம் விளையாடப் போலாம்'' என்று அம்மா கூறுகிறார். இவன் எப்படியெல்லாமோ கூறியும் அம்மா இவனை வெளியே அனுப்ப சம்மதிக்கவில்லை. அவன் எப்படி வீட்டுப் பாடத்தை எழுதுவான் நாளை நடைபெறும் வகுப்பில் அவனுக்கு அடிவிழுமே என்ற நினைவு வருகிறது. சட்டென பதட்டம் அடைகிறான் அஹமத். அடிக்கடி வராந்தாவில் கட்டியிருக்கும் தூளியில் உறங்கும் குழந்தையின் அழுகையை நிறுத்த ஊஞ்சலை ஆட்டிவிட்டு வந்து
திண்ணையில் அமர்ந்துகொண்டு அம்மாவிடம் அவர்கள் புரிந்துகொள்ளட்டும் என தன் நண்பனின் நிலையை எடுததுச் சொல்கிறான். ஆனால் அம்மா இவன் தெருக் குழந்தைகளிடம் போய் விளையாடவே இவன் இப்படிக் கேட்கிறான் என்பதில் தெளிவாக இருக்கிறார். வீட்டுப்பாடம் எழுதிவிட்டு நீ விளையாடப் போ என்கிறார். ஆனால் அவனுக்கு மனசு தாளவில்லை. ஐயோ நாளை அவன் அடிவாங்குவானே என்ற வருத்தம் அவனை ஏதேதோ செய்கிறது.பிறகு வீட்டுப் பாடம் எழுதுவதுபோல பாவனை செய்கிறான்.


மலைக்கிராமத்திற்கு நண்பனைத் தேடிச் செல்லுதல்

அம்மா வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டதும் அவன் சடுதியில் பரபரவெனறு நண்பன் ஊர்தேடிச் செல்ல திட்டமிடுகிறான். இவன் அவனுக்குத் தர வேண்டிய குறிப்பேட்டை எடுத்துக்கொண்டு புறப்படுகிறான். ஒரு சாதாரண சாயங்காலமாகத்தான் அவன் பயணம் துவங்குகிறது. ஊருக்குவெளியே தெரியும் மலையின் குறுக்கும் நெடுக்குமான பாதைவெளிகளில் அவன் செல்கிறான். மலைமீது சென்று ஒரு கிராமத்தை அடைகிறான். மலையின் எல்லாவித சந்துத் தெருக்களிலும் நுழைந்து நண்பன் வீட்டைத் தேடுகிறான். கடைசியில் அங்கு நண்பனின் வீடு உள்ள கிராமம் அதுவல்ல என்பது புலனாகிறது. ஊர் திரும்புகிறான்.

இன்னொரு மலைக்கிராமத்திற்குச் செல்லுதல்

வழியில் சிலர் பேசிக்கொண்டிருக்கும் இடத்தில் நமட்ஸதே என்ற பெயரை யாரோ உச்சரிப்பதைக் கேட்ட மாத்திரத்திலேயே குதிரையில் ஏறிச் செல்லும் ஊருக்கு அவரைப் பின்தொடர்ந்து மலைப்பாதையில், காட்டுவெளியில், வேறொரு புதிய கிராமத்தின் இடுக்கான மலைப்பாதைகளில் என குதிரைக்காரர் செல்லும் பாதைகளில் அடியொற்றி மீண்டும் செல்கிறான். அவரது வீடு ஒரு தாழ்வான பகுதியில் இருக்கிறது. அவர் தனது மகனிடம் கதவுகளை எடுத்து வரச்சொல்லி அவற்றை குதிரையின்மீது வைத்து எடுத்துச்செல்லும் இவனைப் பார்க்கிறார்.


உனக்கு என்ன வேணும் என்று கேட்கிறார். நான் நமட்ஸதேவைத் தேடிவந்தேன் என்று கூறுவதைக் கேட்க நேரமின்றி அவர் போய்க்கொண்டே இருக்கிறார். அவர் சென்றபிறகு வீட்டில் உள்ள சிறுவனிடம் ''உனக்கு மொஹமத் ரேஸா நமட்ஸதே தெரியுமா'' என விசாரிக்கிறான். ''என் பெயர் நமட்ஸதேதான். ஆனால் மொஹமத் ரேஸா எனக்குத் தெரியாது. இந்த ஊரில் நிறைய நமட்ஸதே இருக்கிறார்கள். அதில் நீ யாரைத் தேடுகிறாய்...'' என்ற அச்சிறுவனின் கேள்விக்கு ''அவன் என் வகுப்புத்தோழன்.'' என்று கூறுகிறான். அப்போதே மெல்ல பொழுது மங்கத் துவங்குகிறது.

அங்கிருந்து வெளியே வந்து மீண்டும் தனது தேடல் பயணத்தைத் தொடர்கிறான். பொழுது மெல்ல இருட்டத் தொடங்குகிறது. தெரு விளக்குகள் ஏதுமற்ற மலைக்கிராமம் அது. அதனால் நல்ல இருட்டாகிவிட அங்கும் இங்குமாய் வீடுகளின் விளக்கொளியிலிருந்து வரும் ஒளியில் அவன் முகம் நமக்குத் தெரிகிறது. வேறொரு வீடு தேடி இருட்டில் செல்கிறான்.


அங்கு சென்று ''ஐயா.. ஐயா'' என்று அழைக்கிறான். அந்த வீட்டிலிருந்து விளக்கொளி வெளிச்சம் அடிக்கும் வேலைப்பாடுள்ள பாதி ஜன்னலை ஒரு பெரியவர் திறக்கிறார். அவர் வெளியே வந்து இவன் சொல்லும் அடையாளம் உள்ள வீடு ஒன்றை நோக்கி அழைத்துச் செல்கிறார். அவனுக்கு ஒரு வழியைக் காட்டிவிட்டு தன் வீட்டுக்குச் செல்கிறார். நாய்கள் குரைக்க அவன் அப்படியே நிற்கிறான். அந்த ஜன்னலில் தோன்றும் அவர் ''நான் சொன்ன வழியில் போகலையா?'' என்று கேட்க ''நாய்கள் குரைக்கிறதே'' என்று இவன் கூற அந்தப் பெரியவர் ஜன்னலை மூடிவிடுகிறார்.

வீட்டுப்பாடம் எழுதுதல்

அடுத்த காட்சியில் தனது வீட்டில் சுவரோரம் அமர்ந்திருக்கிறான் இவன். வெளியே புயல்காற்று கடுமையாக வீசுகிறது. நண்பனைக் காணாத ஏக்கம் கவ்விப்பிடிக்கிறது. அம்மா அவனை சாப்பிட அழைக்கிறார். ஆனால் அவன் ''சாப்பாடு வேண்டாம், வீட்டுப்பாடம் எழுதும் வேலை இருக்கிறது'' என்கிறான். நாங்கள் தூங்கவேண்டும் அடுத்த அறையில் போய் உட்கார்ந்து எழுது என்கிறார் அம்மா. அன்று இரவு நண்பனுக்கும் சேர்த்து வீட்டுப் பாடத்தை எழுதுகிறான். அம்மா வந்து சாப்பாடு வைத்துவிட்டுச் செல்கிறார்.

மறுநாள் காலை வகுப்பறையில் ஆசிரியர் வகுப்பறைக்கு வருகிறார். வழக்கம்போல பரஸ்பர மரியாதை, நலம்விசாரிப்பு முடிந்ததும் ஒவ்வொரிடமும் வீட்டுப்பாடத்தை கேட்டு வாங்கிப் பார்த்து 'டிக்' அடிக்கிறார். நமட்ஸதே ஒருபக்கம் திரும்பி குனிந்து அமர்ந்திருக்கிறான். அதில்தான் எவ்வளவு அர்த்தங்கள். பாவம் இந்த உலகில் ஏதேதோ பின்னணியிலிருந்து வரும் மாணவர்களுக்குத்தான் எத்தகைய வலிகள் என்றெல்லாம் நமக்குத் தோன்றுகிறது.

நட்பின் பக்கங்கள்

நல்ல வேளையாக ஆசிரியர் இவனை நெருங்குவதற்குள் அதுவரை வராதிருந்த அஹ்மத்பூர் வகுப்புக்குள் நுழைய அனுமதி கேட்கிறான். ஆசிரியர் ''ஏன் தாமதம்?'' எனக் கேட்டுவிட்டு, அவன் சொல்லும் காரணத்தை ஏற்றுக்கொண்டவராக பின்னர் அனுமதிக்க வேகமாக நுழைகிறான் அஹ்மத்பூர். தனது அருகான இருக்கை மாணவனான நமட்ஸதேவின் டெஸ்கில் குறிப்பேட்டை வைக்கிறான். ஆசிரியர் வந்து எடுத்துப் பார்த்துவிட்டு நமட்ஸதேவைப் பார்த்து ''வெரிகுட் எக்ஸலன்ட் பாய்'' என்று கூறுகிறார். டிக் அடித்த பக்கத்தில் கேமரா பார்க்கிறது. பக்கங்கள் புரட்டப்படுகிறது. ஒரு பக்கத்தில் ஒரு பூ வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிச் சிறார்களை ஒரு பூவைப் போல அணுகியுள்ள இத்திரைப்படம், மாணவர்களின் பின்புல வாழ்க்கையையும் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது. அந்த சிறுவன் தேடிச் செல்லும் கிராமமோ அந்த வழிகளோ இதுவரை அவன் அறியாததுதான். புதிய உலகம் கண்டுபிடித்த அந்த உணர்வை அவனைப்போலவே நாமும் அடைகிறோம். இதுவரை நாம் அறியாத நிலப்பரப்புகள், வாழ்வியல், மனிதாம்சங்கள் என்று கூடுதலாக அவதானிக்கத் தலைப்படுகிறோம்.

மெசபடோமியா, சுமேரிய கால நாகரிகங்களை நினைவுபடுத்தும், அடுக்கடுக்கான பழங்கால மண் வீடுகளும் கிராமமும் ஃபர்ஹத் சபாவின் ஒளிப்பதிவில் நம் கண்களைப் பறிக்கிறது. இதில் வெகுசிறப்பாக நடித்திருக்கும் சிறுவர்களான பேபெக் அஹ்மத் பூர், அஹ்மத்அஹ்மத் பூர் ஆகிய இருவருமே சரியான தேர்வு.

நாளை வகுப்பில் நண்பன் அடிவாங்குவானே என்று அவனைத் தேடி வீட்டைவிட்டு ஒரு பயணத்தை மேற்கொள்வதும் மாலை மங்கிய வேளையில் அச்சமற்ற பரவசத்தோடு இதுவரை காணாத புதிய கிராமத்தை அவன் கண்டடைவதும் குழந்தைகளுக்கே உண்டான துடிப்பும் உற்சாகமும் மனிதநேயமுள்ள விசயம்தான். ஆனால் அப்பாஸ் கியரஸ்தமி போன்ற உலகத்தரமான இயக்குநர்களின் கைகளில் இந்த மாதிரிக் கதைக்களன்கள் வசப்படும்போதுதான் குழந்தைகளின் நுட்பமான உணர்வு வெளிப்பாடுகளுக்கான கலைசெயல்பாடு மிகவும் வசீகரமானதாகி விடுகிறது என்பதற்கு இத்திரைப்படம் ஒரு சிறந்த உதாரணம்.



சென்னையை உலுக்கிய சினிமா 

 எ செபரேஷன்: ஒரு படம் 81 விருதுகள்

A Separation 


விவாகரத்து கோருகிறது அந்தத் தம்பதி.
பிடிக்கலையா, குடிப்பாரா, கொடுமைப்படுத்துகிறாரா, நடத்தை சரியில்லையா?” என்று கேட்டால் இல்லை..இல்லை.. ரொம்ப நல்லவர்! என்கிறாள் மனைவி. பின்னே எதற்கு வழக்கு?


என் மகளுக்கு வெளிநாட்டில்தான் படிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் வெளிநாடு செல்லணும். இவர் தந்தையை விட்டு விட்டு வரத் தயாராக இல்லை. அவருக்கு அல்சைமர் நோய். இவர் மகன் என்று கூட இப்போது அடையாளம் தெரியாது. நான் மகளை அழைத்துப் போகணும். அதனால் விவாகரத்து வேண்டும்

அப்பாவை விட முடியாது. விவாகரத்து தருகிறேன். ஆனால் மகள் என்னுடன்தான் இருக்கணும்

“11 வயது மகள் தந்தையிடம்தான் இருக்கணும். நீயும் குடும்பத்துடன் இரு!என்கிறது நீதிமன்றம். கோபத்தில் உள்ளூரில் உள்ள அம்மா வீட்டுக்குப் போகிறாள் மனைவி. மகள் தந்தையுடனும் தாத்தாவுடன் தங்குகிறாள்.

பகல் பொழுதில் வயதான தந்தையைப் பார்த்துக்கொள்ள ஒரு பணிப்பெண் அமர்த்தப்படுகிறாள். அவள் கர்ப்பம் தரித்திருக்கிறாள். தன் சிறு மகளுடன் வேலைக்கு வருகிறாள்.


ஒரு முறை வயதானவருக்குச் சிறுநீர் கழிக்க உதவி செய்ய நேர்கிறது. மதம் பற்றிப் பயந்துகொண்டே செய்கிறாள். அப்பாவிடம் சொல்ல மாட்டேன்என்று ஆறுதல் சொல்கிறாள் அந்தச் சிறு மகள். தனக்குப் பதில் தன் கணவனை அந்தப் பணிக்கு அமர்த்த முயல்கிறாள். கடன் திருப்பிக்கொடுக்காததால் அவன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைபடுகிறான்.

இடையில் ஒரு மருத்துவ அவசரத்துக்கு அந்தப் பணிப்பெண் பெரியவரைப் படுக்கையில் கட்டிவிட்டு வெளியே சென்று வருவதற்குள் அவர் கீழே விழுந்து அடிபடுகிறார். இதைப் பார்த்த கதாநாயகன் அவளை வேலையை விட்டு விலக்கி வீட்டை விட்டு வெளியே பிடித்துத் தள்ளுகிறான்.


மறுநாள்தான் தெரிகிறது. அவளுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டு மருத்துவ மனையில் கிடக்கிறாள் என்று. தாய் வீட்டுக்குச் சென்ற மனைவியையும் கூட்டிக் கொண்டு அங்குச் செல்கிறான். என் குழந்தையைக் கொன்று விட்டாய்!என அந்தப் பணிப்பெண்ணின் கணவன் சண்டை போட்டு, வழக்கும் தொடுக்கிறான். அவள் கர்ப்பிணி என்பது தெரியாது என்றும் தான் தள்ளிவிட்டதில் அவளுக்குக் கருச்சிதைவு ஏற்படவில்லை என்றும் வாதிடுகிறான் கதாநாயகன்.

அப்பா பொய் சொல்கிறார் என்று தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகிறாள் மகள். மனைவியும் மீண்டும் இவனையே குறை கூறுகிறாள். குற்றம் நிரூபித்தால் அங்கு 3 வருடங்கள் சிறை. நோய்வாய்ப்பட்ட அப்பாவையும் பூப்பெய்தும் நிலையில் உள்ள மகளையும் ஆதரவின்றி விட முடியாது; அதனால்தான் பொய் சொல்கிறேன் என்கிறான்.

இடையில் மனைவி தரப்பு ஜாமீன் கொடுக்கவும், பணிப்பெண் கணவனுக்கு நஷ்ட ஈடு தரவும் முன்வருகிறது. நீதிதான் வேண்டும்; பணம் வேண்டாம் என்கிறான் அவள் கணவன். பணம் வாங்கினால் தன் குழந்தைக்கு ஏதாவது நேரும் என்று அஞ்சுகிறாள் அந்தப் பணிப்பெண். பணம் தருகிறேன். ஆனால் நான் தள்ளியதால்தான் கருச்சிதைவு என்று குரான் மீது சத்தியம் செய்யக் கேட்கிறான். மறுக்கிறாள் அவள். அல்சைமர் பெரியவர் தன்னை அறியாமல் சாலையைக் கடக்கும்போது அவரைக் காப்பாற்ற ஓடி வந்து ஒரு காரில் முட்டியதுதான் பாதிப்புக்குக் காரணம். முன் பகல் சம்பவத்தை அவள் யாருக்கும் சொல்லவில்லை.

அந்த வழக்கு ரத்தாகிறது. ஆனால் மீண்டும் விவாகரத்து வழக்கு எடுக்கப்படுகிறது. நீ யாருடன் இருக்க ஆசைப்படுகிறாய்?” என்று நீதிபதி மகளைத் தனிமையில் கேட்கையில். பெற்றோர் வெளியே காத்திருக்கிறார்கள். படம் முடிகிறது.

அஸ்கர் ஃபராதி இயக்கிய இரானிய படம். 2011-ல் வெளியான படம். ஒரு ஆஸ்கர் விருதுடன் மொத்தம் 81 விருதுகளை உலகத் திரைப்பட விழாக்கள் அனைத்திலும் சேர்த்து அள்ளியது இந்தப் படம்.

ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு, வழக்கு நடக்கும் ஒரு அறை, ஒரு மருத்துவமனை அறை, பணிப்பெண் வீடு, பள்ளியின் சாலை முகப்பு என மிகக் குறைவான படப்பிடிப்புத் தளங்கள். இசை, நடனம், பாடல், சண்டை, நகைச்சுவைக் காட்சிகள் எதுவும் கிடையாது. தொலைக்காட்சி படம் போல எல்லாம் அண்மைக் காட்சிகள்.

வேகம் வேகமாக ஓடும் காமரா கதை மாந்தர்களின் தவிப்பைப் பிரதிபலிக்கிறது. மொழி புரியாமல், பாத்திரங்களின் உரையாடலை மொழிபெயர்ப்பு வாக்கியங்களாகப் பார்க்கிறோம் என்பதையும் மறந்து நம்மைக் கதைக்களத்துடன் கட்டிப்போடும் வித்தைதான் படத்தின் வெற்றி.


மகளின் வாழ்க்கைக்கு அக்கறைப்படும் நாயகி, தந்தையின் கடைசிக் காலத்தில் கடமை செய்ய நினைக்கும் நாயகன், பெற்றோர்கள் இணைய விரும்பும் மகள், பொருளாதாரச் சுமைக்காக வேலைக்கு வரும் பணிப்பெண், கருச்சிதைவுக்கு நீதி கேட்கும் அவள் கணவன், ‘என் அம்மா திருடலைஎன்று அம்மாவுக்கு ஆதரவாக இருக்கும் பணிப்பெண்ணின் மகள், நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு இந்த நாடகத்தின் மையப் பொருளாய் நின்றும் அதை அறியாத வயதான பெரியவர் என அனைவர் வாழ்வும் துயர் மிகுந்தவை.

ஆனால் அன்பும் நேர்மையும் மிக்கவர்கள். அடுத்தவர் துயர் துடைக்கவும் தயாராக இருக்கிறார்கள். இயலாமைகள் இருந்தும் இந்த மனிதாபிமானமும் நியாய உணர்வும்தான் இவர்களை வழி நடத்துகின்றன.

மனித வாழ்வின் ஒரு குறுக்கு வெட்டை இந்தப் படத்தில் காண முடிகிறது. அதனால்தான் உலகின் எந்த மொழி பேசும் மனிதனும் இந்தப் படைப்புடன் தொடர்பு கொள்ள முடிகிறது.

இந்தப் படம் ஒரு கனத்த அனுபவம். இது போன்ற எண்ணற்ற அனுபவங்கள் நம்மைச் சூழ்ந்த மனிதர்களின் கதைகளின் உள்ளன. வாழ்க்கையைப் படிக்க யத்தனிக்கும் போது நல்ல படைப்புகள் பிறக்கின்றன. இந்தத் திரைப்படத்தைப் போல!

தொடர்புக்கு: Gemba.karthikeyan@gmail.com



மீனும் பூனையும் (Fish & Cat)
சென்னை சர்வதேசத் திரைப்பட விழா 12-வது ஆண்டாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 171 திரைப்படங்கள் இதில் திரையிடப்பட்டன. இவை தவிர இந்தியன் பனோரமா பிரிவில் இந்திய மாநிலங்களிலிருந்து தேர்வு பெற்ற திரைப்படங்களும் பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தன.

மீனும் பூனையும் (Fish & Cat)

மனித உணர்வுகளையும் வாழ்வியல் சிக்கல்களையும் யதார்த்தமாக விவரிப்பதில் பொதுவாக இரானியத் திரைப்படங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் அங்கிருந்து ஹாரர் வகைமையில் ஒரு திரைப்படம் வருவதென்பது சற்று ஆச்சரியமானதுதான். அந்த வகையில் இது இரானிய சினிமாவின் முதல் திகில் வகைத் திரைப்படமாக இருக்கலாம். கதை சொல்லும் உத்தி என்கிற வகையில் இத்திரைப்படம் மிக மிக முக்கியமானதொரு படைப்பு. ஒரே தொடர்ச்சியான ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பதுதான் இதன் பிரத்யேகமான சிறப்பு.


இதற்கு முன் 2002-ல் வெளிவந்த அலெக்சாண்டர் சுக்ரவ் இயக்கிய ரஷ்யத் திரைப்படமான ரஷ்யன் ஆர்க்’ (Russian Ark) ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட 96 நிமிடத் திரைப்படம் என்கிற தனித்த சாதனையைக் கொண்டிருந்தது. ஆனால் ஷக்ராம் மோக்ரி (Shahram Mokri) இயக்கியிருக்கும் இந்த இரானியத் திரைப்படம், 134 நிமிடங்களைக் கொண்டு அந்தச் சாதனையை முறியடித்திருக்கிறது.

தொடர்ச்சியான ஒரே ஷாட்டில் எடுத்தது மாத்திரமே இதன் சிறப்பு அல்ல. ஒரே காட்சியை இரு காமிராக்களின் மூலம் வேறு வேறு கோணங்களில் பதிவு செய்வது, நான்-லீனியர் முறையில் கதை சொல்லும் உத்தி போன்ற விஷயங்களை ஒரே ஷாட்டில் சாதித்திருப்பது என்பது நிச்சயம் ஒரு மகத்தான விஷயம்.


ஒரு மாய வட்டமான புதிர்ப் பாதைக்குள் பயணிப்பதைப் போன்ற அனுபவத்தைத் தருகிறது இத்திரைப்படம். இது போன்றதொரு பரிசோதனை முயற்சியிலான ஒரு திரைக்கதையை யோசிப்பதற்கும் அதைச் செயலாக்குவதற்கும் அபாரமான துணிச்சலும் கலையுணர்வும் தேவை. இதற்காக இரண்டு மாதங்கள் ஒத்திகை பார்த்திருக்கிறார்கள்.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஓர் இரானிய உணவகத்தில் மனித இறைச்சி பரிமாறப்பட்டதாக வந்த ஒரு செய்தியின் அடிப்படையில் இதன் திரைக்கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர். திகில் திரைப்படமென்றாலும் கூடக் காட்சிப்படுத்திய விதத்தில் எந்த வன்முறையும் பயங்கரமும் இல்லை. பெரியதொரு ஏரியை ஒட்டிய பகுதியில் வருடா வருடம் நிகழும் காற்றாடி பறக்கவிடும் நிகழ்ச்சிக்காகக் கல்லூரி மாணவர்கள் வந்திருக்கின்றனர்.

ஏரியின் அருகேயுள்ள ஒரு சிறிய உணவகத்தில் உள்ள நபர்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி வருகின்றனர். பூடகமான சம்பவங்களும் நிகழ்கின்றன. பின்னணி இசையின் பங்கு மகத்தானது. சற்றுச் சலிப்பை ஏற்படுத்தும் திரைக்கதை என்றாலும், கதை சொல்லப்பட்ட உத்தியின் வகையில் இது முக்கியமான படம்.


The Past 



2012-ம் ஆண்டு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது வென்ற ஏ செபரேஷன் படத்தை இயக்கிய அஸ்கர் ஃபர்ஹடி-யின் இயக்கத்தில் 2013 வெளியான படம் த பாஸ்ட். ஏ செபரேஷன் படத்தைப் போலவே இந்தப் படமும் குடும்பம், உறவு சிக்கல்கள் என்று பயணிக்கிறது. 

உறவுகளால் பின்னப்பட்ட சிறைதான் குடும்பம். உறவுகளில் ஏற்படும் அபஸ்வரங்கள் மனிதனை ஒரு எரிமலையாக மாற்றி விடுகிறது. எப்போது வெடிக்கும், எந்த மாதிரியான பாதிப்பை உண்டாக்கும் என்று கணிக்க முடியாத எரிமலை என்றால் அது மனிதனின் மனம்தான். அப்படியான எரிமலைகளின் மத்தியில் உலவும் அனுபவத்தை தருகிறது த பாஸ்ட்.

இரானியரான அஹமத் பாரிஸுக்கு வருகிறார். விமான நிலையத்தில் மேரி  என்ற நடுத்தர வயது பெண் அவரை அழைத்துச் செல்கிறாள். பிறகுதான் அவர்கள் இருவரும் கணவன் மனைவி என்பதும் கடந்த நான்கு வருடங்களாக பிரிந்து வாழ்வதும் தெரிகிறது. அஹமதின் இந்தப் பயணம் மேரி விரும்பும் விவாகரத்தை அவளுக்கு பெற்றுத் தருவதற்குதான்.

மேரியின் வீட்டில் அஹமத் தங்குகிறார். மேரியின் முந்தைய கணவர்களின் மூலம் அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். மூத்தவள் லூசிக்கு டீன்ஏஜ் பருவம். மேரியின் வீட்டில் சிறுவன் ஒருவனும் இருக்கிறான். அவன் சமீர் என்பவ‌ரின் மகன். மேரி தற்போது சமீருடன்தான் வாழ்ந்து வருகிறாள். சமீரின் மனைவி கோமாவில் மருத்துவமனையில் இருப்பதால் சமீரின் மகனை மேரி பார்த்துக் கொள்கிறாள். சமீருடனான மேரியின் உறவு லூசிக்கு பிடிக்கவில்லை. அவள் மேரி-சமீர் உறவை கடுமையாக வெறுக்கிறாள். அவளை சமாதானப்படுத்தும் பொறுப்பை அஹமத் ஏற்றுக் கொள்கிறார்.

மனைவியின் வருங்கால கணவனுடனும், அவனது மகனுடனும் ஒரே வீட்டை பகிர்ந்து கொள்வது அஹமதுக்கு பிடிக்கவில்லை. சமீரின் மகன் எப்போதும் அந்த வீட்டைவிட்டு வெளியேறுவதிலேயே கவனமாக இருக்கிறான். வீட்டில் எப்போதும் ஒரு தர்மச் சங்கடமான நிலை நிலவுகிறது. 

குடும்ப உறவின் அபத்தமும், ஆனந்தமும் அடுத்தவர்களை நாம் ஒரு பொருட்டாக மதிப்பதிலிருந்து தொடங்குகிறது. அந்த மதிப்பை உருவாக்கும் காரணியாக விளங்குவது நம்முடைய குற்றவுணர்வு. பாஸிடிவ் கில்ட் எனப்படும் இந்த குற்றவுணர்வுதான் உறவுக்குள்ளும், அதற்கு வெளியேயும் அன்பையும், கருணையையும் நிலை நிறுத்துகிறது. தனி மனிதர்களின் நீதி நியாயம்கூட இந்த பாஸிடிவ் கில்டின் ஒரு பகுதிதான். 

ஏ செபரேஷனில் வேலைக்கார பெண்மணியின் இந்த பாஸிடிவ் கில்ட்தான் ஒரு குடும்பத்தை காப்பாற்றுகிறது. த பாஸ்டிலும் அப்படியே. மேரி - சமீர் உறவுதான் சமீரின் மனைவி தற்கொலைக்கு முயன்று கோமாவில் விழுவதற்கு காரணம் என்று லூசி நம்புகிறாள். அவள் அப்படி நம்புவதற்கு வலுவான காரணம் இருக்கிறது. அந்த காரணம் அவளுக்குள் ஏற்படுத்தும் குற்றவுணர்வே அவளை நிம்மதியில்லாதவளாக ஆக்குகிறது. அதனை அஹமதிடம் அவள் வெளிப்படுத்திய பிறகு படம் ஒரு த்ரில்லரைப் போல் நகர்கிறது.

மனித உணர்வுகளை கச்சிதமாக திரையில் வெளிப்படுத்துவதில் அஸ்கர் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். கதாபாத்திரங்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளில் இம்மியளவு மிகையில்லை. இந்தளவுக்கு உணர்ச்சிகளை கையாளும் சமகால இயக்குனர்கள் குறைவு. த செபரேஷன், த பாஸ்ட் இரண்டு படங்களையும் பார்க்கையில் பாஸிடிவ் கில்ட் இரு படங்களிலும் மிகப்பெரிய ரோலை எடுத்துக் கொண்டிருப்பதை காணலாம். 

இந்தியாவின் கார்ப்பரேட் சாமியார்கள் இந்த பாஸிடிவ் கில்டைதான் மனிதர்களிடமிருந்து அகற்றிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்துக்கும் ஆசைப்படு, இது அவன் விதி என்ற வார்த்தைகளில் ஸ்ட்ரெஸ்ஸை ரிலீஸ் செய்கிறேன் என்று சக மனிதர்களை பொருட்படுத்தும் மனிதனின் மனசாட்சியை, அவனின் பாஸிடிவ் கில்டை அகற்றுகிறார்கள்.

குடும்ப உறவுகள் பற்றிய கதை பதற்றமான த்ரில்லரின் விறுவிறுப்புடன் ஒரு முழுமையான அனுபவத்தை தர அஸ்கரின் திரைக்கதை பெரிதும் உதவியிருக்கிறது.



கலர் ஆஃப் பாரடைஸ்: 
நிறைவுறாத பால்யத்தின் எழிலோவியம்
(Color of Paradise)
உலகில் நிறைய திரைப்படங்கள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. அவற்றுள் மனித சிந்தனையை மேம்படுத்தும் மகத்தான படைப்புகள் மிகச் சிலவே. அவ்வரிசையில் என்றென்றும் முக்கிய இடத்தில் உள்ளது 'கலர் ஆஃப் பாரடைஸ்' (Color of Paradise) எனும் ஈரானிய படம்.

கண்பார்வையற்ற இளம்சிறுவன் மொஹமத். அவனை மனப் பிறழ்வுகளுக்குள் தத்தளிக்க வைத்துவிடாமல் அவனது அழகான மன உலகத்தை மெல்ல மெல்ல விரிவடையச் செய்கிறார் இயக்குநர் மஜீத் மீஜிதி.

மொஹமத் எனும் சிறுவன் டெஹ்ரானில் உள்ள ஒரு சிறப்புப் பள்ளியில் படித்துக்கொண்டிருப்பவன். தாயை இழந்த அவனுக்கு தந்தைதான் எல்லாம். ஆனால் தந்தையான ஹாஷெமுக்கு தன் மகன் பார்வையற்றவனாக இருப்பதில் சங்கடமும் அவமானமும் உண்டு. தனக்கு இரண்டாவது திருமணம் செய்துகொள்ள விரும்பும் நேரத்தில் மொஹமது தன் வீட்டிலிருக்க வேண்டாம் என நினைக்கிறார்.


அதனால் இவனை ஏதாவது செய்யவேண்டுமெ என பலவாறு முயற்சிக்கிறார். பள்ளி முடிந்ததும் விடுமுறைக்குப் பிறகு அவனை பள்ளியின் தங்கும்விடுதியில் வைத்துக்கொள்ளமுடியுமா எனக் கேட்கிறார். பள்ளியின் தலைமைஆசிரியர் முடியாது எனக் கூறிவிடுகிறார்.

வேறுவழியின்றி அவனை ஊருக்கு அழைத்து வருகிறார். கிராமத்துக்கு வரும் மொஹமத் இயற்கையெழிலின் சுகந்தத்தை. தென்றலை, குளிர்ச்சியை அனுபவிக்கிறான். அவனது சகோதரிகள் அவனை அன்போடு, பாசத்தோடு வைத்துக்கொள்கிறார்கள்.

அவனது சகோதரிகள் படிக்கும் பள்ளிக்கு மொஹமத் அழைத்துச் செல்லப்படுகிறான். அங்குள்ள ஆசிரியர், மாணவர்கள் இவனது அறிவுக்கூர்மையைக் கண்டு வியக்கிறார்கள்.வீடு திரும்பும்போது பாட்டி நான் 20 மார்க் வாங்கிட்டேன் என்று அவன் கூவிக்கொண்டே வருவதை அப்போதுதான் அங்குவந்த அவனது தந்தை ஹாஷெம் அதைக் கேட்டு வெறுக்கிறார்.

அவன் இங்கிருந்தால் திரும்பவும் படிப்பு அது இது என்று தொடர்ந்து இங்கேயே தங்கிவிடுவான், அது புதிய உறவினர்கள் வீட்டுக்கு வரும்போது மிகவும் அவமானகரமாகிவிடும். அவனை கைத்தொழில் ஒன்றைப் பழகச் சொல்லிவிட்டால் மொஹமதுவின் வாழ்க்கையே திசைமாறிவிடும் என நினைக்கிறார்.

இதனால் அடுத்தநாளே அவனை வலுக்கட்டாயமாக வேறொரு மலைக் கிராமத்தில் உள்ள ஒரு மரத் தச்சரிடம் கொண்டுபோய் விடுகிறார். தச்சரும் பார்வையற்றவரே.

மொஹமதின் தந்தையான ஹாஷெம் நிறைய பணத்தோடு பெண்வீட்டாரிடம் செல்ல, மணப்பெண் அவரை அன்பொழுக எதிர்கொள்கிறாள். அங்கு அவர்களின் சம்பிரதாயப்படி பேசி பணத்தைக்கொடுத்து பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் நாளையும் குறித்துவிட்டு வருகிறார்.

சிறுவனை அவனது அன்பான சகோதரிகளிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்றதை பாட்டி கடுமையாக எதிர்க்கிறார். அதுமட்டுமன்றி ஹாஷெமின் நடவடிக்கைகளை எதிர்த்து வீட்டைவிட்டு வெளியேறவும் செய்கிறார். கடும் மழையில் எங்கெங்கும் சேறும் சகதியுமான பாதையில் நடந்து செல்கிறார்.

இந்நிலையில் ஹாஷெம் தன் தாய் உடல்நிலை சரியில்லாத நிலையில் வீட்டைவிட்டுச் செல்வதை நினைத்து சற்றே வருந்துகிறார். தனது மூட்டை முடிச்சோடு அம்மா செல்லும்போது வேகமாக பின்தொடர்ந்து வருகிறார் ஹாஷெம். அவரது தாய் ஒரு சேற்றுக்குட்டையில் இறங்கி நீர்நிலையைக் கடக்க இருந்தவரை ஓடிவந்து பிடித்துவிடுகிறார்.

பையனை மீண்டும் அழைத்துவந்துவிடுவதாக வாக்குறுதி அளிக்கிறார். இதைக் கூறிய பிறகே சமாதானம் அடைகிறார் அவரது அம்மா. அப்போது பேரன் கொடுத்த ஹேர்பின் நீரில் விழுந்துவிட அதை எடுக்க முயன்று அது நழுவியும் போய்விடுகிறது. பாட்டிக்கு இதனால் பெரும் வருத்தம் மேலிடுகிறது. தனது அம்மாவை மீண்டும் வீட்டுக்கு அழைத்துவந்துவிடுகிறார் ஹாஷெம்.

ஹாஷெம் தனது புதிய மனைவி வரப்போகும் வீட்டுக்கு சிற்சில மராமத்து வேலைகளை உற்சாகமாகச் செய்கிறார். வீட்டுக்கு வண்ணங்களைத் தீட்டி புதுப்பொலிவு பெறச் செய்கிறார். ஹாஷெமின் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கும் முகமாக பாட்டி தன் புதிய மருமகளுக்குத் திருமணப் பரிசாக தனது விலையுயர்ந்த மணிமாலையைத் தருகிறார்.

உண்மையில் இதன்பொருட்டே அம்மாவை சமாதானப்படுத்திய ஹாஷெம், நகை கைக்கு வந்ததும் பூரிப்படைகிறார். ஹாஷெம் குணம் பாட்டிக்குத் தெரியும். பேரனை அழைத்துவருவது உறுதியானதல்ல என்பதை உணர்கிறார். பிரிந்துசென்ற தனது பேரன் மொஹமதை நினைத்து ஒரு கணம் ஏங்குகிறார். அன்று இரவே பாட்டியின் உயிர் பிரிந்துவிடுகிறது.

மறுநாள் காலை தனது தாயை அடக்கம் செய்துவிட்டு ஹாஷெம் வேலைக்குப் புறப்படுகிறார். திருமணத்துக்கு முன்பே மணமகனின் தாய் இறந்தது சகுனம் சரியில்லை என்று சொல்லிவிடுகிறார்கள் பெண்வீட்டார். இதனால் இத்திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்ததோடு அவர் கொடுத்த சீதனத்தை (பணமூட்டை)யும் ஹாஷெவிடம் கொடுத்துவிடுகிறார்கள்.

தன் தாய் இறந்ததற்குக் கூட அரற்றாத ஹாஷெம் பெண் வீட்டாரின் இந்த முடிவால் இடிந்துபோகிறார். கத்தி அரற்றுகிறார். பணமூட்டையை அப்படியே போட்டுவிட்டு இனி தனது ஒரே வாழ்வாதாரமான தன் மகனை கண்டுஅழைத்து வரச்செலகிறார் தந்தை ஹாஷெம். குதிரையில் புறப்படும்போதே மேகமூட்டமும் இடியுமாக ஒரு மாதிரியான தீய அறிகுறியை இயக்குநர் காட்டிவிடுகிறார். வழியெங்கும் மழைபெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அவர் தனது மகன் வேலை கற்றுக்கொள்ளும் பார்வையற்ற தச்சரின் தச்சுப்பட்டறைக்குச் சென்றாரா? மகனை அழைத்துவந்தாரா? அப்படி அழைத்து வரும்போது பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தை மரப்பாலத்தில் கடந்துவரும்போது என்ன ஆனது என்பதையெல்லாம் மீதிபடம் கடும்வலியோடு சித்தரித்துள்ளது.

இத்திரைப்படத்தில் மொஹமத் எனும் சிறுவன் பாத்திரம் காட்சிரீதியாக நிறுத்தியிருந்த விதம் மிகமிக கவித்துவமானது. பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே வந்து தன் தந்தை வருகைக்காக ஒரு தோட்டத்தில் அவன் காத்திருப்பான். அப்போது பறவைகளின் கூவல்கள் யாவும் அவன் முகத்தை மலர்ச்சியடைய செய்யும். அப்போது ஒரு சிட்டுக்குருவியின் குஞ்சு கூட்டிலிருந்து கீழே விழுந்துவிடுகிறது. இதை நுட்பமான ஓசையுணர்வில் அறிந்து மெல்ல மெல்ல தட்டுத்தடுமாறி செல்வான்.

அப்போது ஒரு பூனை கத்தியபடியே ஓடிவரும். கீழே விழுந்திருக்கும் குருவிக்குஞ்சை பூனை நெருங்குவதற்குள் இவன் நெருங்கி அதை விரட்டிவிட்டு குருவிக்குஞ்சை தனது சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டு மரத்தில் ஏறுவான். மரக்கணுக்களில் கால்வைத்து பின்னர் கிளைகளில் கால்வைத்து கைகளால் தடவிப் பார்த்து சிட்டுக்குருவியின் கூடு இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பான். தனது சட்டைப் பாக்கெட்டிலிருந்து குருவிக்குஞ்சை எடுத்து குருவிக்கூட்டில் எடுத்து வைக்கும்போது அவனது விரல்களை குருவி கவ்வுவதும் ரசித்து மகிழக்கூடியக் காட்சி....

பாட்டியையையும் தனது சகோதரிகளையும் சந்திக்கச் செல்லும்போது அவர்களுக்குப் பிடித்த ஹேர் பின், சோடா பாட்டில் மூடிகளைக்கொண்ட மாலை, ஓர் இயற்கை ஓவியம் என அன்பொழுகக் கொடுக்கும் மொஹமத் பாத்திரமேற்ற மோஹ்சன் ராமிசேனியின் தனது நடிப்பால் நமது இதயத்திலும் நீங்கா இடத்தைப் பிடித்துவிடுகிறான.

பள்ளியைவிட்டுப் பிரியும் போதும் சகோதரிகளை, பாட்டியைவிட்டுப் பிரியும்போதும், தன் மனக்கிளை முறிந்த சோகத்தை வெளிப்படுத்தும்போதும், இயற்கையின் உலகத்தில் திளைக்கும் உற்சாகத்தை வெளிப்படுத்தும்போதும் ராமிசேனியின் பால்யமுகம் நம்இதயத்தை கரைத்துப்போடுகிறது. பறவைகளின் கெச்சட்டத்தையும் மலைச்சாரல் மற்றும் வயல்வெளிகளின் காற்றோசையையும் அழகான பின்னணியிசையில் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் அலிரேசா கொஹாண்டேரி.

தாவூதியின் ஒளிப்பதிவு பாத்திரங்களின் மனசுக்கு நெருக்கமானது. அவர்களது வாழ்க்கைப் பாதையில் நம்மை அழைத்துச்செல்கிறது. பெருக்கெடுத்துவரும் வெள்ளத்தின் பல்வேறு திருப்பங்களிலும் மொஹமத் அடித்துச் செல்லப்படுவதும் தந்தை மகனை வெள்ளத்தில் காணாமல் அதில் விழுந்து அங்குமிக்கும் அலையும்போதும் நம்மையே தத்தளிக்க வைக்கிறது ஒளிப்பதிவு.

கடைசியில் கரை ஒதுங்கியுள்ள இறந்த மகனின் உடலை மடியில் போட்டு தந்தை கதறுகிற காட்சி மிக முக்கியமானது. இதில் தந்தையின் முதுகுப்புறம் நீட்டியுள்ள மகனின் கைவிரல்கள் மெல்ல அசைகிறது. இறந்த பிறகு காட்டும் இந்தப் பாசத்தால் எந்தப் பயனுமில்லை என்பதாக மூடியிருந்த அந்த விரல்கள் விரிகின்றன. பொன்னிற ஒளிஅதிர்வில் அந்த விரல்களின் அசைவதன்வாயிலாக எந்தப் பயனுமில்லை எனக் காட்டும் இயக்குநர் மஜீத் மஜிதி இங்கு பார்வையாளரின் மனதோடு பேசுகிறார்.

உள்ளார்ந்த உலக சினிமா ரசிகர்களை கவர்ந்த இப்படம் 1999ல் கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருதுபெற்றது. சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கும் இப்படம் பரிந்துரைசெய்யப்பட்டது.