Tuesday, June 25, 2019

ஈரான் வான்பரப்பில் அத்துமீறி ஊடுருவும் எந்த எதிரி விமானமும் சுட்டு வீழ்த்தப்படும் - ஈரான் எச்சரிக்கை...!


Iran will not wage war against any nation but will do everything to defend itself.


ஈரான் இஸ்லாமிய குடியரசு யுத்தமொன்று ஏற்படுவதை ஒருபோதும் விரும்பவில்லை. யுத்தமொன்றை ஆரம்பிக்கும் நாடாக ஈரான் ஒருபோதும் இருக்காது ஆனால், தமது நாட்டையும் இஸ்லாமிய அரசையும் காப்பாற்றுவதற்கு ஈரானிய ராணுவம் எப்போதும் தயார் நிலையில் உள்ளது ஈரானிய தலைவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளனர்..
ஈரானின் வான்பரப்பில் அத்துமீறி ஊடுருவிய அமெரிக்க ஆளில்லா உளவு விமானத்தை சில தினங்களுக்கு முன் ஈரான் சுட்டு வீழ்த்தியதை யாவரும் அறிவர். 
இது தொடர்பாக ஈரானிய கடற்படையின் தளபதி கூறுகையில், ஊடுருவும் அமெரிக்க உளவு ட்ரோன் வீழ்த்தப்படுவது அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கையாகும். இந்த அத்துமீறல் தொடருமாயின் எமது பதிலும் இதுவாகவே இருக்கும் எச்சரித்தார்.
"எதிரி அதன் மிக சக்திவாய்ந்த, அதிநவீன உளவு விமானத்தை, தடைசெய்யப்பட்ட எமது வான்பரப்புக்குள் அனுப்பியது. இந்த ஆளில்லா விமானம் நொறுங்கி வீழ்வதை அனைவரும் கண்டனர்" என்று ரியர்-அட்மிரல் ஹொசைன் கன்ஸாதி திங்களன்று கூறினார்.
"இந்த பதிலடி மீண்டும் மீண்டும் தொடரும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், எதிரிக்கும் இது நன்றாகத் தெரியும்" என்று தளபதி கூறினார்.
"அமெரிக்க ட்ரோனுடன், 35 பேருடன் ஒரு அமெரிக்க பி -8 விமானமும் இருந்தது, அதை நாம் எதுவும் செய்யவில்லை" என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவலர் படையின் (ஐஆர்ஜிசி) விண்வெளி பிரிவின் தளபதி அமீர் அலி ஹாஜிசாதே வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த வியாழன் அன்று ஜூன் 20ம் திகதி, இஸ்லாமிய புரட்சி காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) ஈரானின் தெற்கு கடலோர மாகாணமான ஹார்மோஸ்கன் வான்பரப்பில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஊடுருவும் ஆர்.க்யூ -4 ஏ குளோபல் ஹாக் கண்காணிப்பு ட்ரோனை சுட்டு வீழ்த்தியது.
அடுத்த நாள், ஈரானிய இராணுவப் படை, ஈரானின் பிராந்திய கடற்பகுதியில் இருந்து அமெரிக்க உளவு ட்ரோனின் சிதைவுகளை சேகரித்து, காட்சி படுத்தியது.
ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அப்பாஸ் மூசவி, திங்களன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரான் ஊடுருவல்களைத் தடுக்க எப்போதும் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சிறிது நேரத்திலேயே ஈரானை தாக்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்கி, பிறகு சில நிமிடத்தில் வாபஸ் வாங்கினேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்: எமக்கு பிரச்சினை அவர்கள் சட்டவிரோதமாக எமது பிராந்தியத்துக்குள் அனுப்பிய விமானமே, அதுபோல் எதுவந்தாலும் பதிலடி கொடுக்கும் தயார் நிலையில் நாம் எப்போது இருக்கின்றோம் என்று கூறினார்.
மற்ற நாடுகளுக்கு எதிராக போரை நடத்தப்போவதில்லை என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது, ஆனால் "ஆக்கிரமிப்புகளுக்கு நாங்கள் பதிலளிக்கக்கூடாது என்பதல்ல இதன் அர்த்தம்" என்று அவர் கூறினார்.
எந்த ட்ரோன்களையும் இழக்கவில்லை என்று அமெரிக்கா முதலில் மறுத்தது. ட்ரோன் சுடப்பட்ட துல்லியமான இடத்தின் வரைபடத்தை பகிரங்கப்படுத்திய பின், அமெரிக்கா அதன் ட்ரோன்களில் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதை ஒப்புக்கொண்டது. அதன் பிறகு ட்ரோன், சர்வதேச வான்வெளியில் குறிவைக்கப்பட்டதாக குற்றம் சாட்டியது.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அதிகாரத்தின் கீழ் வாஷிங்டன் ஈரானுடனான பதட்டங்களை அதிகரித்து வருகிறது.
ஈரானுக்கும் ஆறு உலக நாடுகளுக்கும் இடையிலான, ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் அளித்த அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமேரிக்கா தன்னிச்சையாக விலகியது. அது மட்டுமல்லாமல், ட்ரம்ப் ஈரான் மீது தான்தோன்றித்தனமாக பொருளாதாரத் தடைகளை விதித்துவிட்டு, தன்னுடன் பேச வாருங்கள் என்று அழைத்த வண்ணம் இருக்கின்றார்.
சர்வதேச ஒப்பந்தங்களை மதிக்காத ஒருவருடன் பேசுவதற்கு தயாரில்லை என்று ஈரான் திட்டவட்டமாக கூறியுள்ளது.


Friday, June 21, 2019

உலக தரம் வாய்ந்த உயர் கல்வி - டைம்ஸ் தரவரிசை பட்டியலில் சிறந்த ஈரானிய பல்கலைக்கழகங்கள்

World class Iranian Universities in Times list


இஸ்லாமிய புரட்சி வெற்றியை தொடர்ந்து இஸ்லாமிய குடியரசு அதிக கவனம் செலுத்திய இரண்டு முக்கிய துறைகள்: ஒன்று தேசிய பாதுகாப்பு மற்றது கல்வி. இறைவன் அருளால் இவ்விரு துறைகளிலும் அடுத்தவர் பொறாமைப்படும் அளவு வளர்ந்துள்ளது.

கல்வித்துறையில் அதன் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாகும். இன்று, ஈரானிய பல்கலைக்கழகங்கள் உலக தரத்தை எட்டியுள்ளது என்பது இஸ்லாமிய உலகுக்கு பெருமை சேர்க்கும் விடயமாகும்.

டைம்ஸ் தரவரிசை பட்டியலில் சிறந்த ஈரானிய பல்கலைக்கழகங்கள்

ஈரானிய பல்கலைக்கழகங்கள் 2019க்கான டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசையின் வெவ்வேறு பாடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன என்று அதன் வலைத்தளம் தெரிவித்துள்ளது.

இயற்பியல் அறிவியல் துறையில், உலகளவில் 963 பல்கலைக்கழகங்களில் 24 ஈரானிய பல்கலைக்கழகங்கள் உள்ளன. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் மதிப்பீடு செய்யப்பட்ட 903 பல்கலைக்கழகங்களில் ஈரானில் 21 பல்கலைக்கழகங்கள் உள்ளன.

வாழ்வியல் விஞ்ஞான அறிவிவியல் துறை தரவரிசை அட்டவணையில் உள்ள 751 பல்கலைக்கழகங்களில் 11 ஈரானிய பல்கலைக்கழகங்கள் உள்ளன மற்றும் கணினி அறிவியலில் உலக பல்கலைக்கழக தரவரிசையில் 684 பல்கலைக்கழகங்களில் 09 ஈரானிய பல்கலைக்கழகங்கள் உள்ளன.
இன்னும், மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பிற சுகாதார விடயங்களை உள்ளடக்கிய மருத்துவ, முன் மருத்துவ மற்றும் சுகாதார துறை பல்கலைக்கழக தரவரிசையில் 05 ஈரானிய பல்கலைக்கழகங்கள் பெயரிடப்பட்டுள்ளன.
வணிகம் மற்றும் பொருளாதார துறையில் உள்ள 585 பல்கலைக்கழகங்க தரவரிசை அட்டவணையில் தெஹ்ரான் பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ஃபாஹான் பல்கலைக்கழகம் உள்ளன. கலை மற்றும் மானுடவியல் கல்வி மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் சிறந்த பல்கலைக்கழகங்களில் தரவரிசைப்படுத்தப்பட்ட ஒரே ஈரானிய பல்கலைக்கழகம் தெஹ்ரான் பல்கலைக்கழகம் ஆகும்.
தரப்படுத்தலுக்கான அடிப்படைகளாக வருமானம், சர்வதேச பார்வை, ஆராய்ச்சி, கற்பித்தல் ஆகியவற்றுடன் முழுநேர சமநிலை (FTE) மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு மாணவர்களின் எண்ணிக்கை, சர்வதேச மாணவர்கள் மற்றும் பெண், ஆண் விகிதம் ஆகியவை ஆகியனவும் கருத்தில் கொள்ளப்பட்டன.

பௌதீகவியல்
பௌதீகவியல் அறிவியலுக்கான தரவரிசை அட்டவணையில் மொத்தம் 24 ஈரானிய பல்கலைக்கழகங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இது பௌதீகவியல் மற்றும் வானியல்; வேதியியல் மற்றும் சூழலியல், புவியியல் மற்றும் கடல் அறிவியல் கணிதம் மற்றும் புள்ளிவிவரவியலில் முன்னணி வகிக்கும் பல்கலைக்கழகங்களை எடுத்துக்காட்டுகிறது.

பாபுல் நோஷிர்வானி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காஷான் பல்கலைக்கழகம், அமீர்கபீர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கிலான் பல்கலைக்கழகம், ஈரான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், இஸ்ஃபஹான் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஷெரீப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் தெஹ்ரான் பல்கலைக்கழகம் ஆகியவை பட்டியலில் அடங்கியுள்ள உள்ளன.

மேலும் ஈரானிய பல்கலைக்கழகங்கள் அஸர்பைஜான் ஷஹீத் மதனி பல்கலைக்கழகம், ஃபெர்தவ்ஸி மஷாத் பல்கலைக்கழகம், மஸந்தரான்  பல்கலைக்கழகம், ஷஹீத் பெஹெஷ்டி பல்கலைக்கழகம், ஷிராஸ் பல்கலைக்கழகம், ஷிராஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், தப்ரிஸ் பல்கலைக்கழகம், சஞ்ஜான் பல்கலைக்கழகம், அல்சஹ்ரா பல்கலைக்கழகம், பிர்ஜாண்ட் பல்கலைக்கழகம், இஸ்ஃபாஹான் பல்கலைக்கழகம், கராஸ்மி பல்கலைக்கழகம், கெர்மன் ஷஹீத் பஹோனார் பல்கலைக்கழகம், ஷாஹ்ரூட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், உர்மியா பல்கலைக்கழகம் மற்றும் யஜ்த் பல்கலைக்கழகம் ஆகியனவும் பட்டியலில் அடங்கியுள்ளன.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
பொறியியல் மற்றும் தொழில்நுட்ப விடயங்களுக்காக 2019 டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசை அட்டவணையில் மொத்தம் 21 ஈரானிய பல்கலைக்கழகங்கள் பெயரிடப்பட்டுள்ளன.

சமீபத்தில் வெளியிடப்பட்ட அட்டவணையின்படி, பல்கலைக்கழகங்கள் பொது பொறியியல், சிவில் பொறியியல், ரசாயன பொறியியல், மின் மற்றும் மின்னணு பொறியியல், இயந்திர மற்றும் விண்வெளி பொறியியல் என பல்வேறு துறைகளில் மதிப்பீடு செய்யப்பட்டன. தரவரிசையில் உள்ள ஈரானிய பல்கலைக்கழகங்களில் பாபுல் நோஷிர்வானி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் தெஹ்ரான் பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளன. அவற்றைத் தொடர்ந்து ஷெரீப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மஸண்தரான் பல்கலைக்கழகம், காஷான் பல்கலைக்கழகம் மற்றும் ஜிலான்  பல்கலைக்கழகம் உள்ளன.

அமீர்கபீர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ஃபாஹான் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஷிராஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஷிராஸ் பல்கலைக்கழகம், ஃபெர்டோவ்ஸி மஷாத் பல்கலைக்கழகம் மற்றும் தப்ரிஸ் பல்கலைக்கழகம், ஷாஹித் பெஹெஷ்டி பல்கலைக்கழகம், சஞ்ஜான் பல்கலைக்கழகம், உர்மியா பல்கலைக்கழகம், ஷாஹ்ரூட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கராஸ்மி பல்கலைக்கழகம், இஸ்ஃபாஹான் பல்கலைக்கழகம் மற்றும் அஸர்பைஜான் ஷஹீத் மதனி பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் கெர்மன் ஷஹீத்  பஹோனார் பல்கலைக்கழகம் மற்றும்  யாஸ்த் பல்கலைக்கழகம் உயர் இடங்களை இடங்களைப் பெற்றுள்ளன.

இந்த உலக தரவரிசை பட்டியலில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முதல் முறையாக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவற்றை பின்தள்ளி, முன்னிலை வகிக்கிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

கணினி அறிவியல்
கணினி அறிவியலில் உலகளவில் சிறந்த ஒன்பது ஈரானிய பல்கலைக்கழகங்கள் உள்ளன. அற்றில் அமீர்கபீர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், இஸ்ஃபஹான் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஷிராஸ் பல்கலைக்கழகம், தப்ரிஸ் பல்கலைக்கழகம் மற்றும் தெஹ்ரான் பல்கலைக்கழகம் ஆகியவை தரவரிசையில் அட்டவணையில் உள்ளன.

2004 இல் ஆரம்பிக்கப்பட்ட டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசை, உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் திட்டவட்டமான பட்டியலை வழங்குகிறது.

கலை மற்றும் மானுடவியல், வணிகம் மற்றும் பொருளாதாரம், மருத்துவ, முன் மருத்துவ மற்றும் சுகாதாரம், இயற்பியல் அறிவியல், உளவியல் மற்றும் சமூக அறிவியல், கணினி அறிவியல், கல்வி, பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சட்டம், வாழ்க்கை அறிவியல், போன்ற விடயங்களை எங்கு படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க மாணவர்களுக்கு உதவும் வகையில், ஒட்டுமொத்த உலக பல்கலைக்கழகங்களில் 1000 பல்கலைக்கழகங்களை தெரிவு செய்து தரவரிசை படுத்தி வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.



உலகின் பல நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் குறைந்த செலவில், தரமான உயர் கல்விக்காக ஈரானை நோக்கி படையெடுக்கின்றனர்.


இவற்றுடன் இலங்கை, இந்தோனேசியா, பிரிட்டன், லெபனான், நோர்வே, நைஜீரியா, இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இயங்கிவரும் அல்-முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம் பின்வரும் சர்வதேச அறிவியல் மன்றங்கள் மற்றும் அமைப்புகளில் உறுப்புரிமை பெற்றுள்ளது:

Federation of the Universities of the Islamic World (FUIW)
International Association of Universities (IAU)
International Association of University Presidents (IAUP)
Association of Universities of Asia and the Pacific (AUAP)
Union of Islamic World Students (Rohama)


Saturday, June 15, 2019

அலி-சதர் எனும் அற்புத நீர் குகை

Ali Sadr and Katale Khor Caves

அலி-சதர் எனும் அற்புத நீர் குகை உலகின் மிகப்பெரிய நீர் குகை ஆகும், இது ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான உல்லாச பிரயாணிகளை ஈர்க்கிறது.  

மேற்கு ஈரானின் ஹமதானுக்கு வடக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் அலி சதர் கபுடராஹங் மாகாணத்தில் அலி சதர் கிராமத்தின் தெற்கு பகுதியில் இந்த குகை அமைந்துள்ளது.  

ஹமதான் போன்ற பெரிய நகரங்களுக்கு அருகாமையில் குகை அமைந்து இருப்பதால், உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது மிகவும் பரிந்துரைக்கப்படும் இடமாகும்.

அலி சத்ர் உலகின் மிகப்பெரிய நீர் குகை ஆகும், குகைக்குள் ஒரு படகில் சென்று பார்வை செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 'சாரி கியே' என்ற மலையின் ஒரு பகுதியில் இந்த குகைக்கு செல்லும்  நுழைவாயில் அமைந்துள்ளது.  

இம்மலையில் இதுபோன்ற இன்னும் இரண்டு குகைகள் அமைந்துள்ளன. அதிலொன்று அலிசாத்ர் குகையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'சரப்' குகையாகும், மற்றது 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'சவ்பாஷி'  ஆகும். அலிசத்ர் குகைக்கான நீர் 'சரப்' குகையில் இருந்து ஊற்றெடுப்பதாக நம்பப்படுகிறது.

அலி சதர் குகை ஹமதான், தெஹ்ரான் மற்றும் கோம் ஆகிய பெரிய நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது என்பதால், இது ஈரானிய பிரயாணிகள் பிரபலமான தரிப்பிடமாக அமைகிறது.

2001ம் ஆண்டில்  அலிஸத்ர் குகையை ஆய்வு செய்த ஜெர்மன் / பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் அது 11 கிலோமீட்டர் நீளத்தைக் கொண்டது என்று கண்டறிந்தனர். இந்த குகைக்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இக்குகையின் பிரதான அறை 100 மீட்டர் 50 மீட்டர் மற்றும் 40 மீட்டர் உயரம் கொண்டது. இது பல பெரிய, ஆழமான ஏரிகளைக் கொண்டுள்ளது.

குகையின் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் தொல்பொருள் ஆய்வுகள் 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கலைப்படைப்புகளையும் மட்பாண்டங்களையும் குடங்கள் மற்றும் குவளைகளையும் கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்தன.  

விலங்குகள், வேட்டை காட்சிகள் மற்றும் வில் மற்றும் அம்புகள் போன்றவற்றின் சித்தரிப்புகள் குகையில் இருந்து வெளியேறும் பிரிவின் சுவர்களில் காணக்கூடியதாக உள்ளன.  

இந்த சித்திரங்கள் பழங்கால மனிதன் இக் குகைகளை தங்களது வாழ்விடமாகப் பயன்படுத்தியுள்ளதை சான்று பகர்கின்றன.  

டேரியஸ் I (கிமு 521-485) ஆட்சிக் காலத்திலேயே இந்த குகை அறியப்பட்டுள்ளது என்பதை இந்த சுரங்கப்பாதையின் நுழைவாயிலில் உள்ள ஒரு பழைய கல்வெட்டு மூலம் அறியக்கூடியதாக உள்ளது. இருப்பினும், ஈரானிய மலையேறுபவர்களால் 1963 இல் கண்டுபிடிக்கப்படும் வரை, 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த குகை இருப்பதைப் பற்றிய அறிவு எவ்வாறு இல்லாமல் போனது என்பது ஆச்சரியமாகவே உள்ளது.

அலிசாத்ர் குகைக்குள் இறங்குமிட நுழைவாயில் கீழிறங்கி செல்வதற்கான இயற்கையான படிக்கட்டுகளால்  அமைந்துள்ளது.  பிரயாணிகள் வசதிக்காக கான்கிரீட்டினால் ஆன நடைபாதை  ஒன்றும் தேநீர் மற்றும் சிற்றுண்டி சாலையும் இப்போது அங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குகைக்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இரு நுழைவாயில்களிலிருந்தும் வரும் நடைபாதைகள் அலிசத்ர் குகையின் நீர் நிரம்பிய பத்திகளின் தொடக்கத்தில் இணைகின்றன. அங்கு தான் குகை வழியாக சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் படகு துறையும் அமைந்துள்ளது.

இதற்குள் இயந்திர படகுகள் அனுமதிக்கப்படுவதில்லை. சுற்றுலாப் பயணிகள் 'பெட்லோஸ்' எனப்படும் பிளாஸ்டிக்கினால் ஆன மிதி உந்து மற்றும் துடுப்பு படகுகளில் குகை வழியாக, பயிற்றப்பட்டோரால் வழிநடத்தப்படுகிறார்கள்.

அலி சத்ர் குகை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தற்காலிக பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கட்டாலே கோர் நீர் குகை
கட்டாலே கோர் என்பது ஈரானின் சன்ஜான் மாகாணத்தில் அமைந்துள்ள அலிசாத்ர் போன்ற நீர் ஒரு குகையாகும்.  

இது சன்ஜான் நகரிலிருந்து தெற்கே 120 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. (தெஹ்ரானில் இருந்து சுமார் 410 கிமீ).  

கட்டாலே கோர் என்ற பெயர் "சூரிய மலை" என்று பொருள்படும். 1984 இல் புவியியல் ஆய்வுகள் இதன் உருவாக்கம் ஜுராசிக் காலத்திற்கு முந்தியது என்பதைக் காட்டியது. இந்த குகை ஹமதான் மாகாணத்தில் அமைந்துள்ள அலி சதர் குகையுடன், எதோ ஒரு வகையில் இணைந்துள்ளதாக நம்பப்படுகிறது.

சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கட்டாலே கோர் குகைசன்ஜானின் மலைகளில் மறைக்கப்பட்ட சொர்க்கம் எனலாம்.

சன்ஜான் மாகாணத்தில் அமைந்துள்ள 'கட்டாலே கோர்' குகையானது ஈரானில் மிகவும் பிரமிப்பூட்டும் குகைகளில் ஒன்றாகும். அடுக்கடுக்காக அமைந்துள்ள குகை உருவாக்கம், ஏராளமான படிங்கள் அதனை எழில்கொஞ்சும் இயற்கையாக ஆக்கியுள்ளது. இவற்றின் அடிப்படையில் மிகவும் அழகான குகை எனக் 'கட்டாலே கோர்' குகை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.