Wednesday, June 28, 2023

சும்மா கூடிக் கலைவது தானா அரஃபா தினத்தின் நோக்கம்...?

Is the purpose of Arafah Day just gathering and dispersing...??

துல்ஹஜ் மாதத்தின் ஒன்பதாம் நாள். கறுப்பினத்தவர், வெள்ளையினத்தவர், மஞ்சளினத்தவர் போன்ற நிறத்துவ வித்தியாசங்களைக் கடந்து, அராபியர், ஆபிரிக்கர், ஆசியர், ஐரோப்பியர் என்ற பூகோள எல்லைகளைக் கடந்து, ஷீஆ, சுன்னி மற்றும் இதுபோலுள்ள பேதங்களைக் கடந்து ஒரே உம்மாவாக அரஃபா மைதானத்தில் ஒன்றுகூடும் நாள்.

ஹஜ்ஜுடைய கிரியைகளில் எந்த ஒன்று விடுபட்டாலும் ஹஜ் கடமை நிறைவேறி விடும் ஆனால் அரஃபாவில் ஒன்றுகூடுதலைத் தவிர என்பதிலிருந்து உலக முஸ்லிம்களின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம்.

"வழிகெடுப்பேன்" என்று அல்லாஹ்விடமே சவால்விட்ட ஷெய்த்தான் முஸ்லிம்களை சும்மா விடமாட்டான்; இஸ்லாமிய ஒற்றுமையை அரஃபா மைதானத்தில் பிரகடனப்படுத்திய பிறகும் கூட, அவர்களின் மனதில் புகுந்து வழிகெடுக்க எல்லா சூழ்ச்சிகளையும் செய்வான்.

இதன் காரணமாகவே நாம் அரஃபாவில் இருந்து திரும்புகையில், வழிகெடுக்கும் ஷெய்த்தானை போரிட்டு வெற்றிகொள்ள முஸ்தலிபா எனும் இடத்தில் ஆயுதங்களை (சிறு கற்களை) சேகரிக்கின்றோம்.  மினாவில் மூன்று நாள் யுத்தம். முதல் நாளே பெரிய ஷெய்த்தானை வீழ்த்திவிட வேண்டும். அதன் பிறகே ஈத் ஈனும் பெருநாள். தொடர்ந்து வரும் நாட்களில் சின்ன ஷெய்த்தான்களையும் விட்டு வைக்கக் கூடாது; அவற்றையும் தாக்கி வீழ்த்திவிட வேண்டும் என்று ஹஜ் எமக்கு பாடம் சொல்லித்தருகிறது.

மனதில் உள்ள ஷெய்த்தானிய்யத் அனைத்தையும் வெற்றிகொண்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்கின்றோம், புது வாழ்க்கை ஒன்றை ஆரம்பிக்கின்றோம்.

எமது இந்த வாழ்க்கைப் பயணத்தில், தனது வழிகெடுக்கும் முயற்சியில் இருந்து ஷெய்த்தான் ஒருபோதும் ஓய மாட்டான். சரியானதை தவறானது என்று காட்டுவதற்கும், அழகானதை அசிங்கமானதாகக் காட்டுவதற்கும் ஷெய்த்தானுக்கு அபார திறமை உண்டு.

ஆன்மிக, லௌகீக விடயங்களில் முஸ்லிம்கள் வெற்றிபெறுவதை ஷெய்த்தான் ஒருபோதும் விரும்புவதில்லை. அதற்காக அவன் கையிலேந்தும் முக்கிய ஆயுதம் பிரிவினைவாதம்.

கடந்த சில தசாப்தங்களாக, இலங்கை உட்பட, உலகின் பல பாகங்களிலும் கொழுந்துவிட்டு எரிந்த விடயம் ஷீஆ-சுன்னா பிரச்சனையாகும். ஷெய்த்தானின் இந்த சூழ்ச்சி வலையில் பல நல்ல மனிதர்கள் கூட வீழ்ந்து, ஒருவரை ஒருவர் "காஃபிர்" என்று கூறும் அளவுக்கு சென்றனர் என்பது கவலைக்குரிய விடயம். உதிரிகளில் கூடிய கவனம் செலுத்திய இவர்கள், அடிப்படைகளில் கவனம் செலுத்த தவறினர் என்பது மட்டுமல்லாமல், உதிரிகளையே அடிப்படை எனவும் நிறுவ முயற்சித்தனர். பிரிவினை வெறுக்கத்தக்கது, ஒற்றுமை விரும்பத்தக்கது என்பதை மாற்றி புரிந்துகொள்ள ஷெய்த்தான் இவர்களைத் தூண்டியிருந்தான்.

அதிர்ஷ்டவசமாக, ஷெய்த்தானின் சூழ்ச்சியில் சிக்கிவிடாது, வழிகாட்டிகளாக வாழ்ந்துக்காட்டிய மானுட பெருந்தகைகளும் எம்மத்தியில் இருந்தனர் என்பதையும் மறுக்க முடியாது.

ஷீஆ-சுன்னி ஒற்றுமைக்காக ஆணித்தரமாக குரல் எழுப்பிய உலகம் போற்றும் கண்ணியமிக்க உலமாக்கள் சிலர் கூறியவற்றை தொகுத்து கீழே தருகிறேன்:

ஷீஆக்கள் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையில் முரண்பட்டவர்களா?

முதலில் முஸ்லிம் சிந்தனையாளர்கள் இது குறித்து என்ன கூறியுள்ளனர் என்பதைக் கவனிப்போம்.

ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி (அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர்).

ஷெய்க் மஹம்மத் அல் கஸ்ஸாலி, தனது "கய்ஃப் நஃப்ஹம் அல் இஸ்லாம்" (நாம் எவ்வாறு இஸ்லாத்தை விளங்கிக் கொள்கிறோம்) என்ற நூலின் 142 ம் பக்கத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்கள். "சுயநலம், பெருமை ஆகியவற்றிற்கான இச்சை போன்ற --ஆட்சியாளர்களின் கொள்கையைப் பாதிப்படையச் செய்த--குழப்பங்களின் விதிப்பலனில் இருந்து இஸ்லாம் தப்பிக் கொள்ளவில்லை. எனவே, ஈமானுடன் தொடர்பற்ற விஷயங்கள் தீனில் (மார்க்கத்தில்) ஊடுருவல் செய்ததன் காரணமாக, முஸ்லிம்களிடையே அல் ஷீயா, அல் சுன்னா எனும் இரு பெரும் பிரிவுகள் ஏற்பட்டன. ஆயினும் இவ்விரு பிரிவினரும் ஒரே இறைவனிலும் முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதிலுமே நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களுள் யாரொருவருமே, மார்க்கத்திற்கு நன்மையளிக்கக் கூடிய (இஸ்லாமிய) நம்பிக்கையின் அம்சங்களைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்கும் விஷயத்தில், மற்றவரை விட சிறந்து விளங்குவதாகக் கூற முடியாது."

####################

ஷெய்க் ஷல்தூத் அல் அஸ்ஹரின் தலைவராயிருந்தபோது அவர் வழங்கிய வரலாற்று முக்கியத்துவமிக்க மார்க்கத் தீர்ப்பின் உள்ளடக்கம் பின் வருமாறு:

ஷீயா பிரிவையும் பின்பற்றுவதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதியளிக்கும் அவரது மார்க்கத்தீர்ப்பு தொடர்பான கேள்விகள் சில வற்றிற்கு விளக்கம் அளிக்குமாறு ஹஸரத் ஷெய்க் மஹ்மூத் ஷல்தூத் கேட்கப்பட்டார்.

கேள்வி: ஒரு முஸ்லிம் தனது வணக்க வழிபாடுகளும், கொடுக்கல் வாங்கல்களும் சரியானவையாகவும், முறயைானவையாகவம் அமைவதற்கு, ஷீயா அல் இமாமியா பிரிவையோ அல்லது அல் ஷீயா அல் ஸைதி பிரிவையோ உள்ளடக்காத அறியப்பட்ட ஏனைய நான்கு சிந்தனைப் பிரிவுகளில் ஒன்றையே பினபற்ற வேண்டுமென சிலர் கருதுகின்றனர்.

கண்ணியமிக்க தாங்கள் இக் கருத்துக்கு உடன் படுகின்றீர்களா? மேலும், உதாரணமாக அல் ஷீயா அல் இமாமிய்யா அல் இத்னா அஷரிய்யா (பன்னிரண்டு இமாமி ஷீயா) பிரிவை பின்பற்றுவதைத் தடை செய்கின்றீர்களா?

விடை: இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள், ஒரு குறிப்பிட்ட மத்ஹபையோ அல்லது ஒரு பிரிவையோ பின்பற்ற வேண்டுமென இஸ்லாம் கட்டளையிடவில்லை. இதற்கு மாறாக, சட்டங்களையும் கடப்பாடுகளையும் விஷேட கிரந்தங்களில் பதியப் பெற்றுள்ள; விளக்கமானதும், முறையானதுமானதுமாகிய பிரிவுகளில் எதையேனும் ஒன்றை ஒரு முஸ்லிம் பின்பற்ற முடியும்.

ஒரு குறிப்பிட்ட மத்ஹபை பின்பற்றும் முஸ்லிம், அதை விட்டு விட்டு இனனொரு மத்ஹபைப் பின்பற்ற விரும்புவாராகில், அதற்கும் அவர் உரிமையுடையோராவார்.

அல் ஷீயா அல் இமாமிய்யா அல் இத்னா அஷரிய்யா (பன்னிரண்டு இமாமிய்யா) என பொதுவாக அழைக்கப்படும் ஜஹ்ஃபரி மத்ஹபையும், ஏனைய சுன்னி மத்ஹபுகளைப் போல் பின்பற்றுவது சட்ட ரீதியானதாகும்.

இதனை கவனத்திற்கொண்டு, சில மத்ஹபுகள் பற்றி தாம் கொண்டுள்ள தவறான, பக்க சார்பான கருத்துக்களிலிருந்தும் முஸ்லிம்கள் தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தீனும், அவனுடைய தெய்வீக சட்டங்களும் ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கு மாத்திரம் உடபட்பட்டவையல்ல. "முஜ்தஹித்" (இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களின் அடிப்படையில், சுயாதீனமாக சட்டத்தீர்ப்பு வழங்கும் ஆற்றலுடையவர்) அல்லாத எந்த முஸ்லிமும், தமது மார்க்கக் கடமைகளிலும் சரி, அனறாட விவகாரங்களிலும் சரி, அறியப்பட்ட, சட்ட ரீதியிலான எந்த மத்ஹபையும் பின்பற்ற அனுமதியுடையோராவார்."

கையொப்பம்

மஹ்மூத் ஷல்தூத்

####################

மௌலானா அபுல் அஃலா மௌதூதி

கொமெய்னி அவர்களின் புரட்சி ஓர் இஸ்லாமியப் புரட்சியாகும்.

அதன் காப்பாளர்கள் ஜமாத் இஸ்லாமைச் சேர்ந்தவர்களே.

பொதுவாக அனைத்து முஸ்லிம்களும் குறிப்பாக இஸ்லாமிய இயக்கங்களும் இந்தப் புரட்சிக்கு ஆதரவு கொடுத்து அதன் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்தாசை வழங்குவது கடமையாகும்.

மௌலானா அபுல் ஆஃலா மௌதூதி. "அல் காஹிறா" சஞ்சிகை மலர் 29-1979.

ஜமாதே இஸ்லாமின் ஸ்தாபகரும், அமீருமான மௌலானா மௌதூதி அவர்கள் இந்த அறிக்கை விடுத்து ஓரிரு மாதங்களில் இரையடி சேர்ந்தார்கள்.

அல்லாஹ் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான ஜன்னத்துல் ஃபிர்தௌஸை நல்குவானாக!

####################

ஷீயா மத்ஹபின் தாபகரான இமாம் ஜஃபர் ஸாதிக் அவர்கள் ஹனபி மத்ஹபின் ஸ்தாபகரான இமாம் அபூ ஹனிபா (றஹ்) அவர்களினதும் மாலிகீ மத்ஹபின் தாபகரான இமாம் மாலிக் இப்னு அனஸ் (றஹ்) அவர்களினதும் ஆசிரியராக இருந்தார்கள்.

"இமாம் ஜஃபர் அவர்களிடம் யான் இரண்டு வருடங்கள் கல்வி கற்கவில்லையென்றால் யான் அழிந்தே போயிருப்பேன்."

"இமாம் ஜஃபரை விடத் தலை சிறநத மார்க்கச் சட்டக் கலைமேதை ஒருவரை யான் காணவில்லை".

இமாம் மாலிக் றஹ்

###################

ஸுன்னத் ஜமாஅத்தின் தலை சிறந்த முஜ்தஹித் ஒருவரான இமாம் அபூ ஸஹ்ரா (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நிச்சயமாக ஷீஆ ஒரு இஸ்லாமியப் பிரிவே அதில் எவ்வித சந்தேகமுமில்லை. அலீ (ரலி) அவர்களை கடவுளாக நம்பும் சபீய்யாப் பிரிவினர் ஷீஆ மத்ஹபின் பார்வையிலும் காபிர்களே.

அவர்களை நாம் ஒதுக்கிவிட வேண்டும்.

திட்டமாக ஷீஆக்கள் கூறுவது திருக் குர்ஆனோடும், திருநபி (ஸல்) அவர்களுடைய ஹதீஸ்களுடனும் நெருங்கிய ஆதாரத் தொடர்புடையவையே.

இமாம் அபூ ஸஹ்றா றஹ்

நூல்: இஸ்லாமிய மத்ஹபுகளின் வரலாறு.

பக்கம் 29

####################

இமாம் அப்துல் ஹமீத் மஹ்மூத்

எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தின் வேந்தர்.

அல் அஸ்ஹர் நமது சகோதரர்களான இமாமியாக்கள் ஸைதியாக்களுடன் எல்லா வகையிலும் அன்பைப் பரிமாறிக் கொள்ளவே விரும்புகிறது.

இப்போது நாம் ஒற்றுமைக்காகவும் சகோதரத்துவத்தை நிலை நிருத்துவதற்காகவும் அனைவரையும் அழைக்க வேண்டிய கடமைப் பாடுடையவர்களாக இருக்கின்றோம்.

இங்கோ அங்கோ ஏதாவது 'பிணக்கு' ஏற்பட்டால் அதை இணக்கமாக்கி வைப்பதற்கு நாம் முழு முயற்சி எடுக்க வேண்டும்.

சமாதானம் அன்பின் வழியில் நாம் செல்வோம்.

.........இமாம் அப்துல் ஹலீம் மஹ்மூத்.

####################

ஸுன்னத் ஜமாத்தை சேர்ந்த பின்வரும் தலை சிறந்த சிந்தனையாளர்களின் ஏகோபித்த கூற்று:

"ஷீஆ ஒரு பிரதான இஸ்லாமிய மத்ஹபாகும்"

முஹம்மத் அல் பஹ்ஹாம் ஷைஹுல் அஸ்ஹர்

அல் இமாம் இப்னு ஷல்தூத் ஷைஹுல் அஸ்ஹர்.

அஹ்மத் ஹஸன் அல் பாகூரி.

அப்துல் றஹ்மான் நஜ்ஜார்

பேராசிரியர் ஹாமித் ஹுப்னி தாவூத்

பேராசிரியர் சுலைமான் துனியா

பிக்ரி அபுன் நஸ்ர்

அப்துல் ஹாதி மஸ்ஊத் அல் இப்யாரி

அப்துல் முன்கிம் ஹுபாஜீ

அஷ் ஷெய்க் கஸ்ஸாலி.

####################

முஸ்லிம்கள் ஒற்றுமை பற்றி அஷ் ஷஹீத் ஆயதுல்லாஹ் முதஹ்ஹரி

(தெஹ்ரான் பலகலைக் கழக முன்னாள் விரிவுரையாலரும், இஸ்லாமியப் புரட்சியின் கொள்கைக் கோட்பாட்டாளரும்)

'இஸ்லாமிய ஒற்றுமை' என்பதன் கருத்தென்ன? இஸ்லாத்தின் ஒரு பிரிவை மாத்திரம் தெரிந்தெடுத்துவிட்டு, மற்றைய பிரிவுகளனைத்தையும் ஒதுக்கி விடுவதா? அல்லது, சம்பந்தப்பட்ட பல்வேறு அம்சங்களையும் புறக்கணித்துவிட்டு, வெவ்வேறு பிரிவுகளிடையே காணப்படும் பொதுப்படையான விடயங்களைத் தேரந்தெடுத்து சகல அம்சங்களிலும், எல்லாப் பிரிவுகளையும் விட விசேஷமான புதியதோர் பிரிவை அமைப்பதா? அல்லது, வெவ்வேறு பிரிவுகளையும் ஒன்றினைப்பதற்கும், இஸ்லாமிய ஒற்றுமைக்கும் இடையே எவ்விதத் தொடர்பும் இல்லையென்றும்; வேறுபாடுகள் அனைத்தும் அப்படியே இருக்க, முஸ்லிம்களை, அவர்களின் பகைவர்களுக்கெதிராக ஒன்று சேர்ப்பதென்றும் கருதப்படுகின்றதா?

இஸ்லாமிய ஒற்றுமையை எதிர்ப்பவர்கள், இஸ்லாமிய ஒற்றுமை, அர்த்தமற்றது, குதர்க்கமானது என்று காட்டுவதற்காக அதனை மத ரீதியிலான ஒற்றுமையென்று சித்தரிக்க முயற்சிக் கின்றனர். இதன் மூலம், இஸ்லாமிய ஒற்றுமை என்பது தொடக்கத்திலேயே அசாத்தியமான காரியம் எனக் காட்டப்படுகின்றது.

எனினும், எல்லா சிறப்பம்சங்களையும், வித்தியாசங்களையும் நிராகரித்துவிட்டு, பொதுப்படையான அம்சங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு, எல்லாப் பிரிவுகளையும் அகற்றிவிட்டு ஒரே பிரதான பிரிவை தோற்றுவிப்பதல்ல இஸ்லாமிய ஒற்றுமை என்பதே தெளிவு பெற்ற இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும்.

ஏனெனில், அவ்வாறு செய்வது அறிவுக்கொவ்வாததும், அசாத்தியமானதும் கூட. பொது எதிரியை எதிர் கொள்வதற்காக முஸ்லிம்களை ஒன்று திரட்டுவதே இந்த அறிஞர்களின் நோக்கமாகும்.

முஸ்லிம்களின் ஐக்கியத்திற்கு அடித்தளமாக அமையக்கூடிய உடன்பாடான பல விடயங்கள் முஸ்லிம்களிடையே அமைந்துள்ளனவென்று அவர்கள் கருத்துக்கொண்டுள்ளனர். எல்லா முஸ்லிம்களும் ஒரே இறைவனையே வழிபடுகின்றனர். அவர்களுடைய வேத நூல் குர்ஆன் ஆகும். முஸ்லிம்கள் யாவரும் கஃபாவை முனனோக்கியே தொழுகின்றனர். அவர்கள் ஒன்றாக ஒரே விதமாகவே ஹஜ்ஜை நிறைவேற்றுகின்றனர். அவர்கள் தினமும் தொழுகையை நிறைவேற்றுவதும்; நோன்பு நோற்பதும்; அவரகளின் குடும்ப அமைப்பும்; கொடுக்கல் வாங்கல்களும்; குழந்தை வளர்ப்பும்; மரித்தோரை அடக்கஞ் செய்வதும் ஒரே விதமாகவே நடாத்தப்படுகின்றன.

அற்ப வித்தியாசங்கள் சிலவற்றைத் தவிர, பெரும் வேறுபாடுகள் எதுவும் முஸ்லிம்களிடையே கிடையா.

முஸ்லிம்கள், ஒத்த உலகியல் நோக்கையும், பொதுவான கலாசாரமொனறையும், ஒரே பாரம்பரியத்தையும் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

எனவே, உலகியல் நோக்கு, கலாசாரம், பாரம்பரியம், உள்ளுனர்வு, பழக்க வழக்கங்கள், விசுவாசம், சமயம், வழிபாட்டுவஸ்து, தொழுகை, பண்பு, மரபு போனறவற்றில் முஸ்லிம்களிடையே காணப்படும் உடன்பாடும், ஒருமைப்பாடும், உலகளாவிய ஐக்கிய சமுயாதமொன்றை உருவாக்குவதில் மிகவும் சிறப்பான முறையில் பங்காற்ற முடியும்.

இது முஸ்லிம் சமுதாயத்திற்கு பெரும் வலிமையூட்டி ஏனைய உலக சக்திகளை அவர்களுக்கு அடிபணியவும் செய்யும்.

ஒற்றுமை எனும் விடயம் இஸ்லாத்தில் பெரிதும் வலியுறுத்தப் பட்டுள்ளது.

முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதரர் என்றும்; அவர்களுடைய உரிமைகளும், கடப்பாடுகளும் அவர்களை ஒன்றாக இணைக்கின்றனவென்றும் திருக் குர்ஆன் மிகவும் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

நிலைமை இவ்வாறிருக்க, முஸ்லிம்களுக்கு இஸ்லாம் எதில் தான் குறை வைத்துள்ளது?

#################$##

ஷீயாக்களும் சுன்னத் ஜமாத்தினரைப் போலவே முஸ்லிம்கள்தான்

சுன்னத் வல் ஜமாத்தினர் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளாகக் கருதும் ஏகத்துவம், நபித்துவம், மறுமை நாள் உட்பட குர்ஆன், கிப்லா, இறுதி நபி, வேதங்கள் போன்ற எல்லாவற்றையும் ஷீயாக்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.

இவற்றில் இரு பிரிவினருக்குமிடையே எவ்வித கருத்து முரன்பாடுகளோ, வேறுபாடுகளோ கிடையாது.

கிலாபத்துக்குத் தகுதியானவர் யார் என்பதிலேயே முதன் முதலில் முரண்பாடுகள் ஏற்பட்டன. அதுவும் பெருமானாரின் மறைவை அடுத்தே இம்முரண்பாடுகள் தோன்றின.

எனவே இஸ்லாத்தின் அடிப்படைக்கோட்பாடுகளுக்கும் கிலாபத் பிரச்சினைகளால் தோன்றிய முரன்பாடுகளுக்கும் தொடர்பை ஏற்படுத்துவது தவறாகும்.

பெருமானாரின் காலத்துக்கு பின்பே கிலாபத் பிரச்சினைகள் தலை தூக்கியது.

மக்கள் அதனைப் பற்றி அறிய வந்ததும் அதன் பின்னரே முதலாவது கலீபா தேர்ந்தெடுக்கப் பட்ட போது அன்சாரிகளும் முஹாஜிரீன்களும் முரன்பட்டுக் கொண்டதை அனைவரும் அறிவர்,

ஆனால் அவை வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சிகளாக இடம்பெறவில்லை.

இதே போல குலபா உர்ராஷிதீன்களுள் இறுதியானவரான இமாம் அலி அவர்களின் கிலாபத்தை அமீர் முஆவியா ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் இருவருக்கிடையே தோன்றிய முரண்பாடுகள் யுத்தமாக வெடித்த போது, அதில் ஈடுபட்ட அல்லது மாண்ட இரு சாரரும் இஸ்லாமியர்களாகவே இன்றுவரை கருதப்பட்டு வந்துள்ளனர்.

கிலாபத் முரண்பாடுகள் இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகளின் முரண்பாடுகளாக கருதப்படவில்லை என்பதையே இது காட்டுகின்றது.

அப்படிக் கருதப்பட்டு இருந்தால் ஒன்றில் அமீர் முஆவியா கூட்டத்தினர் அல்லது இமாம் அலி கூட்டத்தினர் இஸ்லாத்தில் இருந்து நீக்கப் பட்டவர்களாக கருதப் பட்டிருக்க வேண்டும்.

இஸ்லாமிய வரலாற்றில் அப்படி நடந்ததாக எவ்வித குறிப்பும் எங்கேயும் இல்லை.

எனவே அகீதா விடயத்தில் எவ்வித முரண்பாடுகளும் காணாத ஷீஆக்களும் சுன்னத் வல் ஜமாத்தினர் போலவே உண்மையான முஸ்லிம்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

- தாஹா முஸம்மில்