Friday, December 30, 2022

ஈரானைப் பற்றி நீங்கள் இதுவரை அறியாத விடயங்களும் அதற்கு எதிரான சதிகளும்

Things You Didn't Know About Iran and Conspiracies Against It

By Ali Abadi


ஈராக்கிய இஸ்லாமிய எழுத்தாளரும், பல புத்தகங்களை எழுதியவருமான அலி அல்-முஃமினின் இடுகை ஒன்றில் ஈரானிய மக்கள் பெறும் "அதிசயத்தக்க அரசாங்க நிவாரணங்கள்" பற்றி அவர் குறிப்பிடுகிறார்.

திருமணமாகி மூன்று குழந்தைகளுடன் ஈரானின் மஷ்ஹத் நகரில் வசித்து வரும் இவர் ஈரானிய தாயிடமிருந்து ஈரானிய குடியுரிமையைப் பெற்ற ஈராக்கிய இளைஞன் ஆவார். அவர் தனது அனுபவத்தை பின்வருமாறு விவரிக்கின்றார்.

ஈராக்கியரான இவர் முன்பு ஸ்டாக்ஹோமில் மூன்று ஆண்டுகள் மற்றும் துபாயில் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அவர் ஈரானின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சேவைகளைப் பற்றி விவரிக்கையில்,

ஈரானிய அரசு தனது குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் 300,000 டொமன்கள் (சுமார் $8) நிதியுதவி வழங்குகிறது. குடும்பத்தில் ஐந்து உறுப்பினர்கள் இருக்கும் ஒருவர் மாதத்திற்கு 1,500,000 டோமன்களைப் பெறுகிறார், இது 40 அமெரிக்க டொலருக்கு சமமான உள்ளூர் நாணயமாகும். இந்த தொகை அவருக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து சேவைகளின் செலவுகளையும் ஈடுகட்ட போதுமானது. இவற்றில் பின்வருவன அடங்கும்:

  • 1- தடங்கலற்ற மின்சாரத்திற்கான கட்டணம்: மாதத்திற்கு 120,000 டோமன்கள், இது 3.00 அமெரிக்க டொலருக்கு சமமான உள்ளூர் நாணயம்.
  • 2- தண்ணீருக்கான கட்டணம்: மாதத்திற்கு 80,000 டோமன்கள், இது 2.10 அமெரிக்க டொலருக்கு சமம்.
  • 3-      சமையல் எரிவாயுக்கான கட்டணம், அதாவது, வீட்டின் குழாய் வழியாக வழங்கப்படும் எரிவாயு, சராசரியாக மாதத்திற்கு 110,000 டோமன்கள், இது 3 அமெரிக்க டொலருக்கு சமம்.
  • 4-   உள்ளூர் மற்றும் தேசிய பயன்பாடு உட்பட லேண்ட்லைன் தொலைபேசி கட்டணங்கள்: மாதத்திற்கு 30,000 டோமன்கள், இது 0.80 அமெரிக்க டொலருக்கு சமம்.
  • 5-      வரம்பற்ற வைஃபை கட்டணம்: மாதத்திற்கு 90,000 டொமன்கள், இது 2.60 அமெரிக்க டொலருக்கு சமம்.
  • 6-      மூன்று தொலைபேசி லைன்களுக்கான கட்டணம் - அவருக்கு, அவரது மனைவி மற்றும் அவரது மூத்த மகனுக்கு: சராசரியாக மாதத்திற்கு 90,000 டொமன்கள், இது 2.60 அமெரிக்க டொலருக்கு சமம்.
  • 7- மூன்று மொபைல் லைன்களுக்கான வரம்பற்ற இணையத்திற்கான கட்டணம் - அவருக்கு, அவரது மனைவி மற்றும் அவரது மூத்த மகனுக்கு: மாதத்திற்கு 60,000 டொமன்கள், இது 1.80 அமெரிக்க டொலருக்கு சமம்.
  • 8-      அவர்களின் காருக்கான பெட்ரோலின் மானிய விலை (டேங்கை நான்கு முறை நிரப்புதல்): சராசரியாக மாதத்திற்கு 420,000 டோமன்கள், இது 11 அமெரிக்க டொலருக்கு சமம்.    மேலதிக பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள். ஈரானிய அரசாங்கம் ஒவ்வொரு தனிப்பட்ட காருக்கும் மாதத்திற்கு 60 லிட்டர்களை லிட்டருக்கு 1,500 டோமன்கள் என்ற குறைக்கப்பட்ட விலையில் வழங்குகிறது, இது உலகில் பெட்ரோலின் அதிகுறைந்த விலை. (பெட்ரோல் உற்பத்தி செய்யும் அண்டை அரபு நாடுகளில் கூட விலை இதைவிட அதிகம்).
  • 9-  ஐந்து நபர்களுக்கான உடல்நலக் காப்பீட்டுத் தொகைகள்: மாதத்திற்கு 300,000 டொமன்கள், 8 அமெரிக்க டொலருக்கு சமம். (காப்பீடு அனைத்து செயல்பாடுகள், சிகிச்சைகள், மருந்து, எக்ஸ்ரே மற்றும் பிற மருத்துவ நடைமுறைகளை உள்ளடக்கியது.)

இவ்வாறு, மின்சாரம், தண்ணீர், எரிவாயு, தகவல் தொடர்பு, இணையம், உடல்நலக் காப்பீடு மற்றும் பெட்ரோல் உட்பட அனைத்துச் செலவுகளையும் ஈடுகட்ட ஒரு குடிமகன் ஒவ்வொரு மாதமும் செலவிடும் மொத்தத் தொகை சுமார் 1,300,000 டொமன்கள் ஆகும், இது 34 அமெரிக்க டொலருக்கு சமம்.

இதன் பொருள் ஈரானிய அரசால் ஒருவருக்கு வழங்கப்படும் மாதாந்திர கொடுப்பனவு பல்வேறு சேவைகளுக்கான அவரது செலவுகளை விட அதிகம். ஓர் அரசு இவ்வாறு மக்கள் நலனில் அக்கறை செலுத்துவது வளர்ந்த மேற்கத்திய மற்றும் பணக்கார அரபு நாடுகள் உட்பட உலகம் முழுவதும் மிகவும் அரிதான ஒன்றாகும். இவற்றைத் தவிர, கல்வி, சமூக பாதுகாப்பு மற்றும் பொழுதுபோக்கு துறைகளுக்கு அரசு உதவி வழங்குகிறது.

மக்கள் நலன் மீது இவ்வாறெல்லாம் அக்கறை செலுத்தும் ஒரு நாட்டில் சில ஈரானியர்கள் தங்கள் நாட்டின் நிலைமைக்கு எதிராக ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? என்று சிலர் மனதில் கேள்வி எழுவது நியாயமானதே.

இஸ்லாமிய புரட்சியைத் தொடர்ந்து கடந்த நான்கு தசாப்தங்களாக ஈரானுக்கு எதிரான தொடர் பிரச்சாரம், கடுமையான பொருளாதாரத்தடை, பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்ற இன்னோரன்ன எதிர் நடவடிக்கைகள் ஈரானிய பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும் இஸ்லாத்தின் அடிப்படையிலான சில ஒழுக்கக்கட்டுப்பாடுகளும் ஈரானில் உள்ளன. இவ்வாறிருக்கையில், மேலைத்தேய தாராண்மைவாத கொள்கையினால் மட்டுமே மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என்று மேற்குலக ஊடகங்கள் செய்யும் விஷமப் பிரச்சாரம், வெளிநாட்டு வாழக்கை முறையை முன்னுதாரணமாகக் கருதும் சில மேட்டுக்குடி ஈரானிய மக்களின் புத்தியை பேதலிக்கச் செய்துள்ளது. அவ்வாறானோருக்கு மேற்கத்தேய ஊடகங்கள் வழங்கி வரும் ஆதரவு, ஈரானின் உண்மை நிலையை அறிய முடியாதவாறு உலக மக்களையும் தடுமாறச் செய்துள்ளது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க முற்றுகையால் சுமத்தப்பட்ட அழுத்தங்கள் சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமடைந்துள்ள போதிலும், மக்களுக்கு நிலையான சேவைகளை வழங்குவதில் ஈரான் மிகவும் உறுதியாகவும் உள்ளது..

நாட்டு மக்களுக்கு ஈரானிய அரசாங்கம் என்ன என்ன சேவைகளை வழங்குகிறது என்பதை அறியாத சிலரால் இன்று கண்டிக்கப்படுகிறது. ஈரான் இஸ்லாமிய குடியரசு அதன் தொடக்கத்திலிருந்தே, இஸ்லாமிய நோக்கங்களுக்கிணங்க நாட்டில் வறுமையைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை அறிந்து, சேவை மட்டத்தில் அதன் மக்களுடன் இணக்கமான உறவை கையாண்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மனித தேவைகள் மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல என்பது பொதுவாக எல்லோரும் அறிந்த உண்மை, ஆனால் ஓர் அரசால் எல்லா தேவைகளையும் நிறைவேற்ற முடியும் என்று எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமற்றது.

ஈரானிய எதிர்ப்பு பிரச்சாரம் பின்வரும் தலைப்புகளில் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது நாம் அவதானிக்கின்றோம்:

·         ஈரானில் உள்ள ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய பிரச்சனையின் மீது இலக்கு வைக்கப்பட்ட பிரச்சார யுத்தத்தை நடத்தி, அதை பெரிதுபடுத்துதல், ஈரானிய மக்கள் மகிழ்ச்சியாக இல்லை, அவர்கள் விரக்தியின் விளிம்பில் உள்ளனர் போன்ற உணர்வுகளை அதிகப்படுத்துதல் மற்றும் அவ்வாறான கதையை ஊக்குவித்தல்

·        அபிவிருத்தி, தொழில்நுட்ப வளர்ச்சி அல்லது சாதனைகளை இழிவுபடுத்துதல் அல்லது சிறுமைப்படுத்துதல் அல்லது ஈரானிய அரசு வழங்கும் சேவைகளை மட்டம் தட்டுதல்.

·         பிராந்தியத்திலேயே ஈரானிய மக்கள் தான், குறிப்பாக பெண்கள் அதிக சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர் என்ற உண்மையை மறைத்து,  ஈரானிய பெண்கள் பல துறைகளில் (நிர்வாகம், சட்டமியற்றுதல், அறிவியல், கலை மற்றும் விளையாட்டு) முக்கிய இருப்பைக் கொண்டுள்ளனர் என்ற உண்மையை மறைத்து துர்பிரசாரங்களை மேற்கொண்டு வருதல். மக்கள் ஆட்சேபனைகளை எழுப்பும் பல பிரச்சினைகளை கையாளும் போது ஈரானிய ஆட்சி நெகிழ்வுத்தன்மையைக் கடைபிடிப்பதையும், அதை சரிசெய்யும் திறனையும் கொண்டுள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்டுவது பயனுள்ளது.

·         ஈரானிய மக்கள் படும் கஷடத்திற்கு அமெரிக்கா அல்ல, ஈரானே காரணம்; முன்னைய ஆட்சியாளர்களில் அரசியல் "நெகிழ்வு" இல்லாததால் தான்  இந்த நிலை, அமெரிக்காவின் மேலாதிக்கப் போக்கினால் அல்ல என்று கூறும் அளவிற்கு மூளைச்சலவை செய்வது; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாதிப்புக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களே பொறுப்புக்கூற வேண்டும், ஆக்கிரமிப்பாளன் அல்ல என்ற மனநிலையை ஏற்படுத்துவது.

·         ஈரான் மேற்குல நாடுகளின் செல்வாக்குக்கு உட்பட்ட நாடல்ல, சர்வதேச அளவில், அமெரிக்கா தலைமையிலான சர்வதேச சமூகத்திற்கு வெளியே உள்ளது. ஈரான் மேற்குலக தரநிலைகள் மற்றும் சட்டங்களுக்கு இணங்க வேண்டும் என்பதுதான் இவர்களது எதிர்பார்ப்பு. இவர்களது ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, ஈரான் சுதந்திரமாக செயல்படுவதே ஈரானிய மக்களுக்கு தேவையான மருந்துகள் கூட சென்றடைவதைத் தடுக்கிறது என்ற எண்ணத்தை உருவாக்குவது..

பாலஸ்தீன் மீட்புக்காக செலவுசெய்தல், லெபனானிலும் பலஸ்தீனிலும் போராட்டக்குழுக்களுக்கு ஆதரவு வழங்குதல், அவற்றுக்காக செலவு செய்தல் ஈரானின் செல்வத்தை வீணடிக்கும் செயல் என்று மனதில் பதியச் செய்தல். ஈரானுக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத லெபனான் மற்றும் காஸாவில் போராட்டக்குழுக்களை ஆதரிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை, ஆகவே "லெபனானும் வேண்டாம், காஸாவும் வேண்டாம்" என்ற கோஷத்தை ஒலிக்கச் செய்தல்.

லெபனான் மற்றும் பாலஸ்தீனத்தின் விடுதலை போராட்ட குழுக்களுக்கு ஈரானின் ஆதரவு, ஈரானுக்கு எதிரான கடுமையான அச்சுறுத்தல்களை முறியடித்தது என்பது இந்த "லெபனானும் வேண்டாம், காஸாவும் வேண்டாம்" என்ற சூத்திரத்தை ஏற்றுக்கொள்பவர்கள் அறியமாட்டார்கள்.

ஈரான் பல திட்டங்களில் வெற்றிகரமான முன்னேற்றங்களைக் கண்டுள்ள போதிலும், இஸ்லாமிய குடியரசு சில விஷயங்களில் தவறான பொருளாதார நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது உண்மையே, இமாம் செய்யிதலி காமனெய் பலமுறை இதை சுட்டிக்காட்டியுள்ளார்.

நிச்சயமாக, அனுபவத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்; அது நம்பிக்கையை மீட்டெடுக்கும். ஈரானை அடிமைப்படுத்தும் நோக்கத்தோடு எதிரிகள் உள்நுழையக்கூடிய ஓட்டைகளை கண்டறிந்து அடைக்க வேண்டும்.

எனினும், பரந்து விரிந்து வாழ்ந்தாலும், தங்கள் நாட்டைப் பற்றிய தவறான பிம்பத்தால் ஏமாற்றப்பட்ட ஈரானியர்கள் சிலர் உள்ளனர் என்பதும் மறுக்க முடியாதது. அமெரிக்கமயமாக்கலாக மாறியுள்ள உலகமயமாக்கல் என்பது, தங்கள் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய ஈரானியர்களின் சுயாதீனமான அனுமானங்களைக் காட்டிலும் உயர்வானது எனும் மாயை, மேற்குலகின் கலாச்சாரம் மற்றும் ஈரானின் யதார்த்தத்தைப் பற்றிய அதன் கற்பனையான பார்வைக்கு நெருக்கமாகத் தோன்றும் பொய்யான பார்வை மற்றும் கனவுகள் கொண்ட ஒரு கலவையான யதார்த்தமாகும் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்..

இங்கு, ஈரானிய ஊடகங்களும், கலாச்சார விவகாரங்களில் அக்கறை கொண்ட அதிகாரிகளும் பொதுச் சிந்தனையை சரிசெய்வதில் முக்கியப் பொறுப்பை வகிக்கின்றனர். தற்புகழ்ச்சியை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக இலக்கை நோக்கிய ஊடகத்தை வளர்த்து, மேற்கத்திய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு இலக்காகக்கூடிய, வெளிநாட்டு ஊடகங்களால் மூளைச்சலவை செய்யக்கூடிய நிலையை மாற்றியமைக்க வேண்டும்.

https://messageofwisdom.blogspot.com/2022/12/irans-wonders-and-intensive-propaganda.html?m=1


Sunday, December 25, 2022

யெமனில் சவூதி கொடூரம் - உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா...?

Saudi Atrocities in Yemen - Does your conscience not prick...?

- தாஹா முஸம்மில்

இரண்டு புனிதத்தலங்களைக் கொண்டுள்ளது என்பதற்காக சவூதி செய்யும் அநியாயங்களையும் அட்டூழியங்களையும் மறைக்க வேண்டும் என்று சிலர் எதிர்பார்க்கின்றனர். மீறி செய்தால் சவூதி அரசு மீது காழ்ப்புணர்ச்சி என்கின்றனர்.

அல்லாஹ்வின் பின்வரும் வசனத்தை அவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா ...?

முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்;. (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்;. எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்;. மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். (குர்'ஆன் 4:135)

இஸ்லாமிய நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அழிக்கப்படுகின்றன - பலஸ்தீன், ஆப்கனிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா, எகிப்து, யெமன், பாகிஸ்தான், சூடான், நைஜீரியா, சோமாலியா என்று பட்டியல் நீளுகிறது. எவரும் கவலைப்படுவதாகத்  தெரியவில்லை.

இங்கெல்லாம் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் - எமது உடன்பிறப்புக்கள் - கொல்லப்பட்டுவிட்டார்கள்;  ஏனென்று கேட்பதற்கு நாதியில்லை. பின்னணி காரணங்களை சிந்திப்பதற்கு எவருமில்லை.

யெமன் என்பது அரேபிய தீபகற்பத்தில் உள்ள நாடுகளில் ஒரு வறியபலம் குன்றிய நாடு. இருந்தாலும் அம்மக்கள் தாமுண்டு தம் வேலையுண்டு என்று நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். அந்த அப்பாவி மக்களை கொண்று குவிக்க சவுதிக்கு எப்படித்தான் மனசு வந்ததோ...?

ரசூலுல்லாஹ் ஆசீர்வதித்த நாட்டிற்கு சவூதி செய்யும் அநியாயம்

யெமன் தற்போது உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

சுமார் 16 மில்லியன் பொதுமக்கள் பஞ்சத்தால் அவதிப்படுகின்றனர்- ஆனால் மிக மோசமானது, சுமார் 2.1 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல், பொருளாதார சரிவு மற்றும் மோசமான சுகாதார சூழல் யெமனில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கிய காரணங்களாக உள்ளன. பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கிறது. 2020 இல் 16% உடன் ஒப்பிடுகையில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு 2021 இல் 22% ஆக உயர்வடைந்தது.

யெமன் போர் எப்படி தொடங்கியது?

அரபு வசந்த எழுச்சிக்குப் பின்னர் 1990 ஆம் ஆண்டு முதல் அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதி அலி அப்துல்லா சலேவை 2011 ஆம் ஆண்டு பதவி நீக்கம் செய்து யெமனின் அப்போதைய துணை ஜனாதிபதியாக இருந்த  அப்த்ரப்புஹ் மன்சூர் ஹாடி தேர்தல் ஒன்றை நடத்தி புதிய அரசொன்றுக்கு வழிவிடப்போவதாக உறுதியளித்து, இரண்டாண்டு காலத்துக்கு யெமனின் இடைக்கால ஜனாதிபதியானார்.

கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில், 2014 ஆம் ஆண்டில், பரவலான ஊழல் மோசடி, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவை யெமன் முழுவதும் அமைதியின்மைக்கு வழிவகுத்தது, இது புரட்சியாக மாறியது. மக்கள் செல்வாக்கைக் கொண்டிருந்த ஹூதிகள் முன்னாள் ஜனாதிபதி சலேயின் உதவியுடன் 2014 செப்டம்பர் மாதம் சனாவிற்குள் நுழைந்து மன்சூர் ஹாதியை வீட்டுக் காவலில் வைத்தார்கள்.

இந்த ஆட்சி கவிழ்ப்பானது சவூதி அரேபியாவின் நீண்டகால திட்டத்திற்கு விழுந்த பேரிடியாக அமைந்தது. 2015 ஆம் ஆண்டில், மன்சூர் ஹாதியை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவரும் குறிக்கோளுடன், சவுதி அரேபியா ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் இணைந்து ஒன்பது அரபு நாடுகளின் கூட்டணியை உருவாக்கியது. இந்த கூட்டணிக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஆதரவு அளித்தன.

ஈரான் ஹூதிகளை ஆதரிக்கிறது என்று குற்றம்சாட்டி மார்ச் 2015 இல், சவூதி தலைமையிலான கூட்டணி கண்மூடித்தனமாக பொதுமக்கள் மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்பைக் குறிவைத்தது வான்வழித் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியது மட்டுமல்லாமல் யெமனுக்கு எதிராக கடற்படை முற்றுகையையும் விதித்தது.

யெமனில் போரை நடத்த சவுதி அரேபியாவின் நோக்கம் என்ன?

யெமன் பிரதேசத்தின் பாப் எல்-மண்டேப் ஜலசந்தி செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவை இணைக்கும் ஒரு முக்கியமான எண்ணெய் கப்பல் பாதையாகும். சவுதி ஆட்சியாளர்கள் இந்த ஜலசந்தி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய விரும்பினர். இந்த கடல் பாதையானது சவூதி அரேபியாவிற்கு ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான பீப்பாய்கள் எண்ணெயை நகர்த்துவதற்கு உதவுகிறது மற்றும் உலகின் எண்ணெய் விநியோகத்திற்கு மிகவும் முக்கியமானது. அதுமட்டுமல்லாமல், ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதிகள் சவுதி அரேபியாவின் தெற்கு எல்லையின் கட்டுப்பாட்டை அதன் வசம் வைத்திருப்பதையிட்டும் சவுதி தலைவர்கள் பீதியடைந்தனர்.

யெமன் போரை அப்போதைய சவூதி பாதுகாப்பு அமைச்சரும் இப்போதைய பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மான் அதிகாரத்தை பலப்படுத்தவும் தேசிய அங்கீகாரம் பெறவும் தனது அரசியல் அபிலாஷைகளை எட்டவும் பயன்படுத்திக்கொண்டார். மேலும், யெமன் மீதான கட்டுப்பாடு சவுதி அரேபியாவின் தெற்கு எல்லையிலிருந்து யெமனின் கிழக்கு மாகாணமான அல் மஹ்ரா வழியாக இந்தியப் பெருங்கடலுக்குள் எண்ணெய்க் குழாய் அமைக்க அனுமதிக்கும்; ஈரானின் எல்லையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பலில் எண்ணெய் ஏற்றுமதி செய்வதை சவுதி அரேபியா நம்பியிருப்பதை இந்த குழாய் எளிதாக்கும்.

இந்த மோதலில் அமெரிக்காவின் பங்கு என்ன?

சவுதி தலைமையிலான கூட்டணியின் யெமன் மீதான போர் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பிற மேற்கத்திய நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட அசைக்க முடியாத இராணுவ ஆதரவையும் ஆயுத விற்பனையையும் பெற்றுள்ளது. 2015 இல், ஒபாமா நிர்வாகம் யெமன் மீதான கூட்டணியின் போருக்கு இராணுவ ஆதரவுக்கான சவுதி அரேபியாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். ஆயுத விற்பனையில் பில்லியன் கணக்கான டாலர்கள் கறக்கலாம் என்பது அவர்களது திட்டம். மேலும், சாவது முஸ்லிம்கள் என்றால் அவர்கள் ஏன் தயக்கம் காட்டப்போகிறார்கள். வான்வழித் தாக்குதல்களை நடத்தும் போர் விமானங்களுக்கான பராமரிப்பு மற்றும் புலனாய்வுப் பகிர்வு மற்றும் யெமனின் வான் மற்றும் கடல் முற்றுகையைச் செயல்படுத்துதல் ஆகியவை தற்போதைய ஆதரவில் அடங்கும்

ஏன் அமெரிக்கா வரலாற்று ரீதியாக சவுதியை ஆதரித்து வருகிறது?

1945 ஆம் ஆண்டில், அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், சூயஸ் கால்வாயில் ஒரு கடற்படை கப்பலில் வைத்து அப்போதைய மன்னர் அப்துல் அஸீஸைச் ரகசியமாக சந்தித்தார் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அமெரிக்க-சவூதி கூட்டுறவுக்கு இணங்கினார். இவர்களுக்கிடையிலான ஒப்பந்தத்தின் கீழ், சவுதி அரேபியா அமெரிக்க டாலருடன் பிணைக்கப்பட்ட சவுதி எண்ணெய்க்கான அணுகலை அமெரிக்காவிற்கு வழங்கும்; அதற்கு ஈடாக சவூதி அமெரிக்க பாதுகாப்பு உதவியைப் பெறும். அதுமட்டுமல்லாமல் இஸ்லாமிய புரட்சி ஈரானின் கரையைக் கடக்காமல் பார்த்துக்கொள்ள, சவுதியின் தயவு அமெரிக்காவுக்கு எப்போதும் தேவைப்பட்டது. ஆகவே, இந்தப் பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடர ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதியும் ஒப்புக்கொண்டனர்.

"New America" என்ற சிந்தனைக் குழுவின் தரவுகளின்படி, அமெரிக்கா யெமனில் 376  ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது, இதனால் பல நூறு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

யெமன் மீதான சவுதி அரேபியாவின் முற்றுகை அங்குள்ள மனிதாபிமான நெருக்கடிக்கு எவ்வாறு பங்களிக்கிறது?

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக, சவூதி அரேபியா யெமன் மீது வான் மற்றும் கடல் முற்றுகையை விதித்துள்ளது, இதனால் யெமனில் உயிர்காக்கும் மருந்துகள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. சவுதியின் இந்த மனிதாபிமானமற்ற யுத்தம் காரணமாக 2021 ஆம் ஆண்டின் இறுதி வரை, குறைந்தது 377,000 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் மேலும் 16 மில்லியனுக்கும் அதிகமான யெமன் மக்கள் பஞ்சத்தின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர், 60% க்கும் அதிகமான இறப்புகள் உணவு, தண்ணீர் மற்றும் மருந்து கிடைக்காமல் போனதால் ஏற்பட்டவை என்று ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. Brookings Institution Senior Fellow Bruce Riedel, நடந்து கொண்டிருக்கும் சவுதி முற்றுகையை "பொதுமக்களை கொல்லும் இராணுவ நடவடிக்கை" என்று விவரித்துள்ளார்.

வணிக மற்றும் மனிதாபிமான பொருட்களின் நுழைவு மீதான சவுதி அரேபியாவின் கட்டுப்பாடுகள் யெமனில் மனிதாபிமான நெருக்கடியின் முக்கிய காரணி ஆகும். அங்கு இந்த ஆண்டு 400,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கும் அபாயத்தில் உள்ளனர், மேலும் நாடு "நவீன வரலாற்றில் மிகப்பெரிய மனித பேரவலத்தை நோக்கி தள்ளப்படுகிறது." ஜனவரி 2021 முதல், சவூதி அரேபியா எரிபொருள் இறக்குமதியை கடுமையாக கட்டுப்படுத்தியுள்ளது, இது உணவு ஏற்றுமதி மற்றும் மருத்துவமனைகள் செயல்படும் திறனை பெரிதும் மட்டுப்படுத்தியுள்ளது.

யெமனின் சனா விமான நிலையத்தை சவூதி அரேபியா வான்வழி முற்றுகையிட்டதன் மனிதாபிமான தாக்கம் என்ன?

யெமனின் முக்கிய சர்வதேச விமான நிலையமான சனா விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வணிக விமானங்கள் செல்வதை 2016 முதல் சவுதி அரேபியா தடுத்துள்ளது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான மோசமான நோய்வாய்ப்பட்ட யெமன் குடிமக்களின் மருத்துவ வெளியேற்றத்தைத் தடுத்துள்ளன மற்றும் முக்கிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை நாட்டிற்குள் நுழைவதைத் தடுத்தன.

துரதிர்ஷ்டவசமாக, புற்றுநோய் போன்ற நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்ட பல யெமனியர்கள் தேவையில்லாமல் பாதிக்கப்பட்டு உயிரைக் காக்கும் மருத்துவ வெளியேற்றங்கள் மற்றும் மருந்துகளுக்காகக் காத்திருந்து இறந்துவிட்டனர்.

மனித இனத்துக்கு எதிரான இந்தக் கொடூரச் செயலை தட்டிக் கேட்பதற்கு எவரும் இல்லை, கண்டிப்பதற்கு யாரும் இல்லை. பிராந்தியத்தில், கடும் பொருளாதார கஷ்டத்துக்கு மத்தியிலும் இஸ்லாமிய ஈரான் மட்டும் தன்னால் இயன்ற மனிதாபிமான உதவிகளை எமன் மக்களுக்கு செய்து வருகிறது.

பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) "எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக. எங்களுக்காக உன்னிடமிருந்து (தக்க) ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக. இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக" என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்;. நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள்;. ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.

(குர் ஆன் 4:75-76)