Saturday, July 13, 2024

இலக்கை அடையாளம் காணல், பாதை வகுத்தல், இலக்கை நோக்கி பயணித்தல் = கர்பலா படிப்பினை

 Identifying the goal, laying the path, traveling towards the goal = lesson of Karbala

முஹர்ரம் மாதம், இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் துயர் நிறைந்த சம்பவத்தை நினைவுகூரும் மாதமாகும். இந்த வரலாற்று நிகழ்வின்  ஞாபகார்த்தமாக ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகள், வெறும் சடங்குகளாக அன்றி தீய கொடுங்கோலர்களுக்கு எதிராக உறுதியுடன் நிற்க எம்மைத் தூண்டுவதாக அமைய வேண்டுண்டும்.

யஸித் போன்ற தீய சக்தியை நாங்கள் இமாம் ஹுசைனின் தியாகத்தை நினைவில் கொண்டு எதிர்த்து நிற்கிறோம். அசத்தியத்தை எதிர்க்கும் போராட்டத்தில் நாம் உயிர் தியாகம் செய்யவும் தயாராய் உள்ளோம் என்ற எண்ணம் எமது மனங்களில் துளிர்விட வேண்டும். இறைவனின் கருணை எமக்கு பரிபூரண உள்ளது என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.

புனித குர்ஆனின் சூரா ஆல்-இ இம்ரானின் 169 வது வசனத்தில் அல்லாஹ் இவ்வாறு வாக்களிக்கின்றான்:

"அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்".

ஒவ்வொரு ஆண்டும் மனித மனசாட்சியைத் உசுப்பும்  முஹர்ரம் மாதமிது; மார்க்கத்துக்காகவும் சமுதாயத்திற்காக்கவும் செய்ய வேண்டிய தனது கடமைகளை மனிதகுலத்திற்கு உணர்த்தும் மாதம் இது.

அந்த மாதம் மீண்டும் வந்துவிட்டது - முஹர்ரம் மாதமும், கர்பலா காவியத்தின் நினைவுகள் உண்மை முஸ்லிம்களின் வாழ்வில் தொடர்ந்து ஆழமான செல்வாக்கை செலுத்துகின்றன.

கர்பலா தினமானது கூர்மையான வாள்களை செங்குருதி வென்ற நாள்; இத்தினத்தில் மனித வாழ்க்கையை நிர்வகிக்கும் சமூககலாச்சாரஅரசியல் மற்றும் பிற பிரச்சினைகளை கொடுங்கோலர்களின் கைகளில் விட்டுவிட்டுவெளிப்புற வழிபாட்டு முறைகளில், சடங்கு சம்பிரதாயங்களில்  மட்டும் ஈடுபடுவது பொருத்தமற்றது.

இறை சட்டத்தை புறக்கணித்துதவறான  மன இச்சையின் அடிப்படையில் இயங்குவது தம்மைத் தாமே ஏமாற்றும் செயலாகும். இதன் மூலம் மக்களின் தலைவிதி சமூக அநீதிக்குள் வீழ  அனுமதிக்கிறது. இதன் விளைவு உலகில் கொடுங்கோலர்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

முஹர்ரம் என்பது பயங்கரவாதத்தின் வேர்களை அம்பலப்படுத்த மனித மனசாட்சியைத் தூண்டும் மாதமாகும். இப்போது சில ஆட்சியாளர்கள் இத்தினத்தில் இஸ்லாத்தின் மனிதாபிமான பிம்பத்தை கெடுக்க முயற்சிக்கின்றனர். நடைமுறையில் அவர்களுக்கு இஸ்லாத்தின் உயர் சட்டங்களுடன் எந்த தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால்முஹர்ரம் முதல்நாள் கொண்டாடி களிக்கும் ஒரு நாள் அல்ல. துரதிர்ஷ்டவசமாக சில அரபு நாடுகளில் இது கொண்டாட்ட தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. றஸூலுல்லாஹ்வின் பேரனான இமாம் ஹுசைனின் மாபெரும் தியாகத்தை இவர்கள் மறந்துவிட்டதாகத் தோன்றுகிறது.

ஈராக்கின் கர்பலா சமவெளியில் ஹிஜ்ரி 61 (கி.பி 680) இல் ஆஷுராவின் துயர்நிறைந்த சம்பவங்கள் அல்லது முஹர்ரம் 10 வது நாளின் துன்பகரமான சம்பவங்களை இம்மாதம் நினைவூட்டுகிறது. இமாம் ஹுசைன் (அலை) அவர்கள் உமையா ஆட்சியினால் விசுவாசப்பிரமானம் செய்ய சன்மார்க்கத்திற்கு முரணாக நிர்பந்திக்கப்படுகையில், துஷ்டன் யஸீதுக்கு விசுவாசப்பிரமானம் செய்வதை விட போரிட்டு மடிவதை உயர்வாகக் கருதினார்கள்.

ஆனால், புத்தாண்டு எனும் சாக்கில் ஏற்பாடு செய்யப்படும் கொண்டாட்டங்கள் ஜாஹிலியாவின் காலத்து நடைமுறைகளே அன்றி வேறில்லை. இத்தகைய அற்பத்தனமான யஸிதிய கொண்டாட்டங்கள் இஸ்லாத்தின் உயர் நோக்கங்களில் இருந்து முஸ்லிம்களை தூர விலக்குவதற்கான சதித்திட்டங்கள் தவிர வேறொன்றுமில்லை என்பதை புரிந்துகொள்வோம்.

மக்காவிலிருந்து மதீனாவுக்கு ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் (இடம்பெயர்வு) முஹர்ரம் மாதத்தில் நிகழ்ந்த ஒன்றல்ல. ரஸூலுல்லாஹ்வின் ஹிஜ்ரத் ரபியல்-அவ்வல் மாதத்திலேயே நிகழ்ந்ததாகும். அவ்வாறிருக்க ஏன் இந்த கொண்டாட்டங்கள்? யானறியேன்.

முஹர்ரம் என்பது முஸ்லிம்களின் பிரதிபலிப்புக்கான மாதம். இமாம் ஹுசைன் (அலை) மற்றும் கர்பலாவின் தியாகிகள் ஞாபகார்த்தமாக அனுஷ்டிக்கப்படும் நிகழ்வுகள் முஸ்லிம் உம்மாவின் நோக்கம், இலக்கு, மற்றும் சத்தியத்தை நிலைநாட்டும் வழிமுறைகள் பற்றி சிந்திக்க சிறந்த சந்தர்ப்பமாகும். அதாவது இலக்கை அடையாளம் காணல், பாதை வகுத்தல், இலக்கை நோக்கி பயணித்தல்.

அஹ்லுல்பைத்துகள் எனும் றஸூலுல்லாஹ்வின் மகோன்னத குடும்பத்தினரின் புனித இரத்தத்தால் இஸ்லாத்தின் உயர் நோக்கங்கள் இன்றளவிலும் பாதுகாக்கப்பட்டும் போஷிக்கப்பட்டும் வருகின்றன. அவற்றில் இருந்து நாம் பாடம் பெற வேண்டும்.

முஹர்ரம் தொடங்கியவுடன் உலகெங்கிலும் உள்ள உண்மை விசுவாசிகளின் இதயங்கள் கர்பலாவை நோக்கி திரும்புகிறது, அங்கு தியாகிகளுடனான சந்திப்பு இடம்பெறுகையில், உமையாக்களின் மறைக்கப்பட்ட நயவஞ்சகத்தனம் வெளிப்படுகிறது; இமாம் ஹுசைன் (அலை) அவர்கள் இரத்தம் சிந்தியதற்கான காரணம் புரிகிறது.

ஒவ்வொரு யுகத்திலும் மனிதகுலம் ஒரு தகுதியான மாதிரியைக் கொண்டிருக்க முடியும் என்பதை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேரன் உலகுக்கு உணர்த்தினார்கள். தீய சக்திகளுக்கு எதிராக ஒரு முன்மாதிரி எக்காலத்திலும் இருக்கும் என்பதை உணர்த்தினார்கள். இதுவே இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் செய்தியாகும்.

இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் வாழ்க்கை மற்றும் போதனைகளைப் பற்றி நாம் அனைவரும் ஆழமாக சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம். அவர் நீதிக்கான இயக்கத்தின் முன்னோடிநல்லவற்றை ஏவும் மற்றும் தீயவற்றை விலக்கும் இயக்கங்களுக்கான முன்னோடி. எல்லாம்வல்ல அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் பேரனால் தொடங்கப்பட்ட இவ்வியக்கம்  1380 ஆண்டுகளுக்கு மேலாகஇன்னும் பலத்திலிருந்து வலிமைக்குச் செல்லும் ஒரு பேரியக்கமாக உள்ளது.

இந்த மகத்தான பொறுப்பை இப்போது ஏந்திச் செல்லும் உண்மையான விசுவாசிகள், அதற்கு எதிரான சூழ்ச்சித் திட்டங்களை வகுக்கும் சாத்தானிய கூட்டாளிகளான கொடுங்கோலர்களை நிச்சயமாக வெற்றிகொள்ளும். நிச்சயமாக சத்தியம் வெல்லும், அசத்தியம் அழியும்.

தாஹா முஸம்மில்

 

No comments:

Post a Comment