Sunday, July 7, 2019

ஈரானின் பண்டைய பொறியியல் அற்புதம் 'யக்சால்'


Iran's ancient engineering marvel Yakhchāl

'யக்சால்' ஒரு பண்டைய பாரசீக குளிர்சாதன பெட்டிஆகும், இது மின்சாரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே உணவு மற்றும் பனியை கூட சேமித்து வைக்க உதவியது.
நவீனகால மனிதகுலத்துடன் ஒப்பிடும்போது பண்டைய மனித நாகரிகங்கள் அவ்வளவாக வளர்ச்சியடைந்து இருக்கவில்லை என்று யாராவது வாதிட முயற்சித்தால், எமது முன்னோர்கள் எவ்வாறான வியத்தகு தொழில்நுட்பங்களை  பயன்படுத்தினர் என்பதற்கு ஆதரவாக சில எடுத்துக்காட்டுகளை நாங்கள் கண்டுபிடித்தோம். அவர்கள், பல சமயங்களில், அவர்கள் கண்டுபிடித்த அக்கால  தொழில்நுட்பத்தின் தனித்துவமானவர்கள் என்பதோடு அவர்களின் அன்றாட வாழ்க்கையிலும் அதனை பயன்படுத்தி உள்ளனர்.

பொறியியலைப் பொறுத்தவரை, எகிப்தின் பிரமிடுகள், கெமர் சாம்ராஜ்யத்தின் அங்கோர் வாட் அல்லது துருக்கியின் கபடோசியா பிராந்தியத்தில் உள்ள டெரிங்குயு போன்ற முழு நிலத்தடி நகரங்களாக இருந்தாலும், ஒவ்வொரு கண்டத்திலும் கட்டடக்கலை அதிசயங்கள் எங்கும் காணப்படுகின்றன.
ஸ்மார்ட் மற்றும் நிலையான பொறியியலின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு மத்திய கிழக்கிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இது நாகரிகத்தின் தொட்டில்களில் ஒன்றாக இருப்பதற்கும் மனித கலாச்சாரங்களை வளர்ப்பதற்கும் பெயர் பெற்றது. அங்கு, கி.மு. 4 ஆம் நூற்றாண்டில், பண்டைய பாரசீகர்கள் ' யக்சால்' என்று அழைக்கப்பட்ட கட்டட அமைப்பை உருவாக்கினர்.
யக்சால் ஒரு கல்லறையாகவோ, மன்னரையாகவோ அல்லது புதைகுழியாகவோ அல்லது மக்கள் தாங்கும் இடமாகவோ இருக்கவில்லை. அதற்கு பதிலாக கடுமையான கோடைகாலத்தில் வேறொரு முக்கியமான தேவையை அது நிறைவேற்றியது. அதிகப்படியான வெப்பமும் மற்றும் வறண்ட காலநிலையும்  இப்பகுதியில் வசித்த மக்களை வாட்டி வதைத்தன. ஆகவே பண்டைய பாரசீகர்களுக்கு, கோடை காலங்களில் உணவை குளிர்விக்கவும் சேமிக்கவும் சில வழிமுறைகள் தேவைப்பட்டன, யக்சால்கள் அதற்கான தீர்வை வழங்கின. யக்சால் என்ற சொல் "பனி குழி" என்பதைக் குறிக்கிறது. இந்த வியக்கத்தக்க கட்டிட அமைப்பு பனியை (ஐஸ்) மட்டுமல்லாமல் பல வகையான உணவுகளையும் சேமித்து வைக்கக்கூடிய சீதோஷ்ண நிலையை வழங்கி, பல்வகையான உணவுப்பொருட்கள் சீக்கிரம் கெட்டுவிடும் நிலையில் இருந்து காத்தது.

வெளிப்புறத்தில், ஒரு யக்சால் அமைப்பு அதன் குவிமாட வடிவத்துடன் விண்ணை முட்டும் அளவுக்கு பிரமாண்டமாக காட்சியளிக்கும். ஆனால், சுட்டெரிக்கும் பாலைவன பிரதேசத்தில், யக்சால் கட்டிடத்தின் உள்ளே, அதன் நிலத்தடி அறைகளில் பனி மற்றும் உணவு பொருட்களை குளிர்ச்சியாகவோ அல்லது உறைந்து போகவோ கூட செய்யும்.

பண்டைய பாரசீகர்கள் பாலைவனத்தின் நடுவில் பனியை கட்டியாக சேமித்து வைத்தனர் என்பது ஆச்சரியப்படத்தக்க விடயமாகத் தோன்றலாம், ஆயினும்  அவர்களின் தொழில்நுட்பம், சாராம்சத்தில் அவ்வளவு சிக்கலானதாக இருக்கவில்லை.

பொதுவாக ஒரு யக்சால் கட்டிடம் சுமார் 60 அடி உயரம்  கொண்டதாகவும், உள்ளே சேமிப்பதற்கான சுமார் 6000 கனமீட்டர் அளவில் இருக்கும். கட்டமைப்புகளுக்குள் இருக்கும் குளிரூட்டும் முறை காற்றை உள்ளீர்த்து, 'கனாட்' எனப்படும் நிலத்தடி நீரூற்றின் மூலம் இடம்பெறுகிறது. https://thoothu2018.blogspot.com/2018/11/3000-qanat.html

இந்த குளிரூட்டல் முறையானது யக்சலுக்குள் வெப்பநிலை எளிதில் குறைய செய்து, ஒரு பெரிய குளிர்சாதன பெட்டியின் உள்ளே நிற்பது போன்ற குளிர்ச்சியான உணர்வைத் தருகிறது. அதன் சுவர்கள் மணல், களிமண் மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் ஆட்டின் மயிர் போன்ற பிற கூறுகளை கொண்ட ஒரு சிறப்பு மூலப்பொருளை பயன்படுத்தி, வெயிலிலிருந்து பாலைவன பகல் நேர உஷ்ணமோ அல்லது சூரிய ஒளியோ  உள்ளே புகாதவாறு திறமையான முறையில் கட்டமைக்கப் பட்டுள்ளது.

இந்த கட்டமைப்புகள் அவற்றின் கீழே அகழிகளைக் கொண்டிருந்தன. உருகிய பனியிலிருந்து வரும் நீரை சேகரிக்க கூடியதாகவும் அவை வடிவமைக்கப்பட்டிருந்தன. சேகரிக்கப்பட்ட இந்த நீர் பின்னர் இரவு நேர பாலைவன குளிர்ந்த வெப்பநிலையை பயன்படுத்தி பனிக்கட்டியாக சேமிக்கப்பட்டது. இது ஒரு மீள்சுழற்சி முறையாகும்.

அரச உயர் மாநில அதிகாரிகளுக்கும் யக்சல்கள் அடிப்படை உணவு வளங்கள், உபசரிப்புகள் மற்றும் பனிக்கட்டிகளை சேமித்து வழங்கியது மட்டுமல்லாமல், இந்த சேவையை சமூகத்தின் மிகவும் ஏழ்மையானவர்கள் கூட அடையக்கூடியதாக இருந்தது. நவீன காலங்களில் யக்சால்களின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது, மேலும் சில கட்டமைப்புகள் பாலைவன புயல்களால் சேதமடைந்து அரிக்கப்பட்டு அழிந்து போய் உள்ளன என்றாலும் ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளான தஜிகிஸ்தான் போன்ற இடங்களில் அப்படியே இருப்பதை காணலாம்.

நவீன கால சமையலறைகளில் காணப்படும் குளிர்சாதனப் பெட்டிகளைக் குறிக்கும் பொதுவான சொல்லாக யக்சால் என்ற வார்த்தையின் பயன்பாடு இப்பகுதியில் இன்றளவிலும் நீடிக்கிறது.




No comments:

Post a Comment