Tuesday, June 18, 2024

அமெரிக்க முகமூடி கிழிந்தது, இஸ்ரேலுக்காக அமெரிக்கா தன்னைத் தானே சீரழிக்கிறது

The American mask is torn, America is degenerating itself  for Israel

- பேராசிரியர் ஹொசைன் அஸ்கரி

அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் இஸ்ரேலிய நலன்களுக்காகவே சேவை செய்கிறார்கள், அமெரிக்க நலன்களுக்கு அல்லஜூலை 24 க்கு முன் அமெரிக்கா தனது வெளியுறவுக் கொள்கையை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்

அமெரிக்கா நீண்டகாலமாக இஸ்ரேலை ஆதரித்து வந்துள்ளது.: பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை விட தனிநபர் வருமானம் அதிகமாக உள்ள இஸ்ரேல் நாட்டிற்கு $320 பில்லியன் நிதி உதவியை நாங்கள் அனுப்பியுள்ளோம்; எங்களின் பெரும் அழிவுகரமான ஆயுதங்களை இஸ்ரேலுக்குக் கொடுத்துள்ளோம்; நாங்கள் உளவுத்துறையைப் பகிர்ந்து கொண்டோம் மற்றும் இஸ்ரேலை அதன் குற்றங்களில் இருந்து பாதுகாக்கவும், அதிகரித்து வரும் உலகளாவிய குற்றச் சாட்டு மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து பாதுகாக்கவும் ஐ.நா.விலும் மற்றும்  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பலமுறை வீட்டோக்களை பயன்படுத்தி இஸ்ரேலுக்கு அரசியல் ஆதரவுடன் வழங்கினோம்; அச்சு, அலைக்கற்றைகள், இணையம் மற்றும் பொழுதுபோக்குத் துறை போன்றவற்றின் மூலம் இஸ்ரேலிய எதிர்ப்புக் குரல்களை அடக்குவதற்காக நாங்கள் பெரும் ஊடக ஆதரவை வழங்கியுள்ளோம்.

இந்த அமோக ஆதரவிற்கான பொது நியாயம் என்னவென்றால், இஸ்ரேல் மத்திய கிழக்கின் ஒரே ஜனநாயகம் மற்றும் நமது தேசிய பாதுகாப்பிற்கு இன்றியமையாதது என்று அமெரிக்கா கூறிவருகிறது. இந்த நியாயப்படுத்தல்கள் மிகவும் அபத்தமானவை, பல உலகளாவிய பார்வையாளர்கள் இஸ்ரேலை ஒரு இனவெறி நாடாக வகைப்படுத்துகிறார்கள், அந்தஸ்தைப் பொறுத்து வெவ்வேறு சட்டங்களைக் கொண்டே இஸ்ரேலிய யூதர்கள், இஸ்ரேலிய அரேபியர்கள் நடத்தப்படுவர். இஸ்ரேலியல்லாத அரேபியர்கள் இஷ்டப்படி துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது ரகசியமல்ல.

இன்று இஸ்ரேலுக்குள், பேச்சு சுதந்திரம் கூட இருப்பதாகத் தெரியவில்லை. பாலஸ்தீனியர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் பேசுபவர்கள் வெளிப்படையாகத் தண்டிக்கப்படுகிறார்கள்.

இஸ்ரேலை ஒரு உறுதியான அமெரிக்க நட்பு நாடாகவும் வகைப்படுத்த முடியாது - அது 1967 இல் (SS Liberty) எனும் அமெரிக்கக் கப்பலைத் தாக்கியது, இத்தாக்குதல் காரணமாக 34 அமெரிக்க மாலுமிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 171 பேர் காயங்களுக்கு உள்ளாகினர்,  ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பின்னர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் எங்களுக்கு ஆதரவளிக்கவும் இஸ்ரேல் மறுத்தது, காஸா விடயத்திலும் எங்கள் கோரிக்கைகளை புறக்கணித்தது.

இஸ்ரேலுடனான எங்கள் பிரிக்க முடியாத பிணைப்பு, அதன் செயல்கள் எதுவாக இருந்தாலும், நமது தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அதற்கு ஆபத்தையும் ஏற்படுத்துகிறது. இஸ்ரேலுக்கான எங்களின் ஆதரவை உலகின் பெரும்பகுதியினர் கண்டிக்கின்றனர், குறிப்பாக இஸ்ரேலை ஒரு முரட்டு காலனித்துவ குடியேற்ற நாடாகக் கருதும் உலகளாவிய தெற்கு இஸ்ரேலுக்கு நாம் ஆதரவளிப்பதற்கு ஒரே நம்பகமான காரணம் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய லாபியின் பலம்தான் என்று நம்புகின்றனர்.

பல முறைகேடான அரபு ஆட்சியாளர்கள் பாலஸ்தீனிய மோதலையும், பாலஸ்தீன விடுதலை போராட்ட குழுக்களையும் எரிச்சலூட்டுபவையாகவும், தங்கள் ஆட்சிக்கு ஆபத்தாகவும் பார்க்கிறார்கள் என்பது உண்மைதான் என்றாலும், அரேபிய பொதுமக்களும் உலகில் உள்ள இரண்டு பில்லியன் முஸ்லிம்களும் பெரும் பாலஸ்தீனிய ஆதரவாளர்களாக உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி நடந்த வருந்தத்தக்க நிகழ்வுகளில் இருந்து, இஸ்ரேலுக்கான நமது ஆதரவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது மற்றும் அமெரிக்காவிற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் அபாயத்தில் உள்ளது. ஆம், நாங்கள் 2,000 பவுண்டு பதுங்கு குழி தகர்ப்பு குண்டுகள் (bunker buster bombs) இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளோம், இவை 37.000 பாலஸ்தீனியர்கள், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளை கொல்லவும் மற்றும் ஐ.நா மற்றும் பிற உதவி ஊழியர்களை கொல்லவும் இஸ்ரேலுக்கு உதவியது. இதற்கிடையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் சட்டவிரோதமாக குடியேறிய யூதக் குடியேற்றக்காரர்களும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் (IDF) ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களைக் கொன்று சிறையில் அடைத்துள்ளனர்.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள காஸா மக்களுக்கு உணவு வழங்குவதையும் கூட இஸ்ரேல் தடை செய்துள்ளது, மேலும் பஞ்சம் நிலவி வரும் காஸாவில் கூடுதலான உணவு லாரிகளை அனுமதிக்கவும் அவற்றின் விநியோகத்தைப் பாதுகாக்கவும் அமெரிக்காவால் அதன் "நட்பு நாடான" இஸ்ரேலை வற்புறுத்த முடியவில்லை.

இவையனைத்தும் மனிதாபிமான பேரழிவாகும், இதற்கு உடந்தையாக அமெரிக்கா இருப்பதாக உலகின் பெரும்பாலான நாடுகளால்  கருதப்படுகிறது. சர்வதேச நீதிமன்றங்களில் நடந்தவை மற்றும் அவற்றுக்கான அமெரிக்காவின் விடையிருப்பு அமெரிக்காவிற்கு ஈடுசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும்.

முதலாவதாக, ஜனவரி 26, 2024 அன்று, ஐக்கிய நாடுகள் சபையின் உச்ச நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றம் (ICJ), காஸா படுகொலை தொடர்பாக தென்னாப்பிரிக்காவால் தொடரப்பட்ட வழக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியது. அனைத்து இனப்படுகொலை செயல்களையும் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அது இஸ்ரேலுக்கு உத்தரவிட்டது. பொதுவாக, இந்த தீர்ப்புக்கு அமைய இஸ்ரேல் காஸாவில் மனிதாபிமான நிலைமையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எனினும் இந்த வழக்கு தொடர்பாக இறுதி முடிவு எடுக்க பல ஆண்டுகள் ஆகலாம் என்பதால், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என அமெரிக்கா சர்வதேச நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்தது. இது சர்வதேச சட்டத்தின் ஆட்சிக்கு அமெரிக்காவின் அவமானகரமான எதிர்ப்பாகும். ஆம், அமெரிக்கா சட்டத்தின் ஆட்சியை நம்புவதாகக் கூறுகிறது, ஆனால் அதன் இஸ்ரேல் சார்பு நடவடிக்கை காரணமாக உலகின் பெரும்பாலானவர்களின் பார்வையில் பாரபட்சமாக இருக்கிறது. இது போலித்தனமானது, மேலும் அமெரிக்காவின் உலகளாவிய நிலையை கடுமையாக பாதிக்கிறது.

இரண்டாவதாக, மே 20, 2024 அன்று, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) தலைமை வழக்கறிஞர் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் யஹ்யா சின்வார், இஸ்மாயில் ஹனியே (ஹமாஸ் அரசியல் தலைவர்) மற்றும் முகமது டெய்ஃப் (அல் காசிம் படைப்பிரிவின் தலைவர்) ஆகியோருக்கு கைது வாரண்டுகளை கோரினார்.

சர்வதேச நீதிமன்றத்தை உருவாக்கும் ரோம் சட்டங்களில் அமெரிக்கா கையொப்பமிடவில்லை (இஸ்ரேலும் தான்) என்றாலும், புடின் போன்றவர்களுக்கான முந்தைய கைது வாரண்டுகளை அமெரிக்கா ஆதரித்து பாராட்டியுள்ளது, ஆனால் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் என்று வரும்போது அவ்வாறு செய்ய மறுக்கிறது. சர்வதேச நீதிமன்றத்தின் முடிவை அமெரிக்கா கடுமையாக விமர்சித்தது மட்டுமல்லாமல் அதன் தலைமை வழக்கறிஞரை அச்சுறுத்துகிறது. அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் ICC யை பொருளாதாரத் தடைகள் விதிப்பதாக அச்சுறுத்தியுள்ளனர். சர்வதேச சட்டத்தை அமெரிக்கா எந்தளவு துச்சமாக மதிக்கிறது என்பது இதிலிருந்து புலப்படுகிறது.

இப்போது, ​​அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன், உலகெங்கிலும் உள்ள பலரால் போர்க் குற்றவாளியாகப் பார்க்கப்படும் பெஞ்சமின் நெதன்யாகுவை, ஜூலை 24 அன்று சபையின் கூட்டு அமர்வில் உரையாற்ற அழைத்துள்ளார். இந்த மரியாதையானது மதிப்பிற்குரிய உலகளாவிய ஹீரோக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்று. சில செனட்டர்கள் மற்றும் பிரதிநிதிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமர்வைத் பகிஸ்கரிக்கலாம் என்றாலும், நெதன்யாகு பலரின் கரவொலிகளுடன் கூடிய வரவேற்பைப் பெறுவார் என்பது நிச்சயம்.

இந்தக் காட்சியை உலகம் எப்படிப் பார்க்கும் என்று நினைக்கிறீர்கள்? ஆயிரக்கணக்கான அப்பாவி பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவிக்கும் ஒரு போர்க்குற்றவாளியை அமெரிக்கா கண்ணியப்படுத்தி ஆதரிக்கிறதா, அவனைப் பாராட்டி உலகையே வியக்க வைக்கப் போகிறதா? இந்த அசிங்கம் நமது எதிரிகளால் உலகம் முழுவதும் மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்தப்படும் மற்றும் நமது தேசத்திற்கு தீங்கு விளைவிக்கும் அவமானத்தையும் மற்றும் நீண்ட கால அழிவையும் கொண்டுவரும் என்பது திண்ணம்.

நாம் ஏன் நமது உலகளாவிய நிலையை நாமே தாழ்த்திக்கொள்கிறோம்? இதற்கு அமெரிக்காவில் இஸ்ரேலிய லாபியின் சக்திக்கு நாம் அடிபணிந்துள்ளோம் என்பது மட்டுமே தகுந்த விளக்கமாக இருக்க முடியும்.

இஸ்ரேல் தனது வெறித்தனத்தைத் தொடர்ந்தால், அமெரிக்கா வழங்கிவரும் ஆயுதங்களுடனும் மற்றும் அரசியல் ஆதரவுடன் நடந்துகொண்டிருக்கும் படுகொலைகளை நாங்கள் ஆதரித்தால், ICJ மற்றும் ICC மீதான எங்கள் தாக்குதல்களைத் தொடர்ந்தால், ஜூலை 24 அன்று எங்கள் சாத்தியமான காதல் விழாவை நாம் முன்னெடுத்தால், நிச்சயமாக வரும் அமெரிக்க தலைமுறை ஒரு பெரிய விலையைக் கொடுக்க வேண்டி நேரிடும் என்பது திண்ணம்.

ஹொசைன் அஸ்கரி, ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் வணிக மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான உயர் பேராசிரியர் ஆவார்.

https://www.tehrantimes.com/news/499986/American-lawmakers-are-serving-Israeli-interests-and-not-America-s

No comments:

Post a Comment