Friday, November 17, 2023

பாலஸ்தீனர்களின் எதிர்ப்பு உரிமையை கொச்சைப்படுத்த வேண்டாம் - அமீன் இஸ்ஸதீன்

 Don’t demonise Palestinians’ right to resist



நவம்பர் 15, 2023 அன்று தெற்கு காசா பகுதியில் கான் யூனிஸ் மீது இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுவீச்சைத் தொடர்ந்து தனது குழந்தையை கைகளில் ஏந்தியபடி மருத்துவமனைக்குள் விரையம் ஒரு பாலஸ்தீன பெண். AFP.

'போரில் முதலாவது பலியாவது உண்மைதான் என்பது ஒரு வழக்கமாக சொல்லப்படும் ஒன்றாக இருப்பினும், இது எல்லா காலங்களிலும் அனைத்து போரின்போதும் பொன்மொழியாக உள்ளது. இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலை காஸா போரில் இது தெளிவாகத் தெரிகிறது, இப்போது இது ஒரு மோசமான திருப்பத்தை எடுத்துள்ளது, மருத்துவமனைகள் இலக்காக மாறியுள்ளன.

ஜெனீவா ஒப்பந்தத்தின் கீழ் போரொன்றின்போது மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட்டவையாக இருக்கின்றன. ஆனால் ஹமாஸ் போராளிகள் மருத்துவமனைகளை கட்டளை மையங்களாகவும் ஆயுதக் களஞ்சியங்களாகவும் பயன்படுத்தி கீழே ஒரு சுரங்க வலையமைப்பை பராமரித்து வருவதாகக் கூறி, மருத்துவமனை தாக்குதல்களை இஸ்ரேல் நியாயப்படுத்துகிறது. இஸ்ரேலின் கூற்றை மருத்துவர்களும் உதவி ஊழியர்களும் மறுக்கின்றனர். காஸாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் சில ஆயுதங்களை இஸ்ரேலிய இராணுவ ஊடகங்கள் காட்சிப்படுத்தின.

பதிவு செய்யப்பட்ட வரலாற்றை போர் முந்துகிறது. போர் என்பது ஓர் அவசியமான தீமையாகும். ஐக்கிய நாடுகள் சாசனம் கூட பலத்தைப் பயன்படுத்துவதை அங்கீகரித்து, நீதியை நிலைநாட்டவும், சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநிறுத்தவும், ஆக்கிரமிப்பை நிறுத்தவும் ஒரு நியாயமான நோக்கத்திற்காக வன்முறையை அனுமதிக்கிறது.

இராணுவம் இல்லாத, கடற்படை இல்லாத, விமானப்படை இல்லாத பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போரில், ஐ.நா சாசனத்தின் ஏழாம் அத்தியாயம் பேசும் பலத்தைப் பயன்படுத்த யாருக்கு உரிமை உள்ளது? அக்டோபர் 7 கண்ணோட்டத்தில் மட்டும் இந்தப் பிரச்சினையைப் பார்த்தால், பதிலடி கொடுக்க இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்று சொல்லலாம். ஆனால், அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல் எதுவும் நடக்காமல் நடைபெறவில்லை. அந்தத் தாக்குதலின் பின்னணியில் ஏழு தசாப்தங்களுக்கும் மேலான ஒடுக்குமுறை, நில அபகரிப்பு மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் நிறவெறியின் கீழ் வாழும் அவமானம் ஆகியவை உள்ளன. இந்தப் பின்னணியில், வன்முறையைப் பயன்படுத்த எந்தத் தரப்புக்கு தார்மீக உரிமை உள்ளது? நிச்சயமாக, சர்வதேச சட்டத்தின்படி, பாலஸ்தீனியர்கள்தான் டன் கணக்கில் இஸ்ரேலிய குண்டுகளால் இரவும் பகலும் தாக்கப்படுகிறார்கள், இதன் ஒட்டுமொத்த சக்தி ஒரு அணுகுண்டின் கால் பகுதியை விட அதிகமாக உள்ளது.

அது மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கவில்லை என்றால், மற்ற நாடுகளைப் போலவே இஸ்ரேலுக்கும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு. ஆனால், 1948-ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து அது செய்து வருவது சர்வதேசச் சட்டம் தடை செய்த, ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ள நடவடிக்கைகளைத்தான். பாலஸ்தீனிய சிவிலியன்கள் படுகொலைகள் மற்றும் இனச்சுத்திகரிப்புகளுக்கு மத்தியில் இஸ்ரேலின் பிறப்பு இரத்தக்களரியாகவே இருந்தது— சர்வதேச சட்டம் அவற்றை போர்க்குற்றங்கள் என்று கண்டனம் செய்கிறது. 1947 மற்றும் 1948 ஆம் ஆண்டுகளில் இஸ்ரேலினால் அரபு-அழிப்பை விரும்பிய அது (அரபு) கிராமங்களில் இருந்து கால் மில்லியன் பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அப்போதிருந்தே, பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் வழக்கமான தாக்குதல்களுக்கு இலக்காகிவிட்டனர். அப்போதிருந்தே, பாலஸ்தீனியர்களிடம் எஞ்சியிருந்த நிலங்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டன. இஸ்ரேல் யூதர்களுக்கு குடியேற்றங்களை அமைத்தது. பாலஸ்தீனியர்கள் இந்த சட்டவிரோத குடியேற்றங்களை எதிர்த்தபோது, அவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன, மேலும் அவர்களின் எதிர்ப்பு பயங்கரவாதம் என்று முத்திரை குத்தப்பட்டது. காஸா, மேற்குக் கரை, லெபனான் மற்றும் தொலைதூர துனிசியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் அவர்கள் வேட்டையாடப்பட்டனர். எதேச்சதிகாரமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் குழந்தைகளும் அடங்குவர். அவர்களில் பலர் விசாரணையின்றி சிறைகளில் வாடுகின்றனர். எனினும், மத்திய கிழக்கில் உள்ள ஒரே உண்மையான ஜனநாயகம் இஸ்ரேல் என்று மேற்கத்திய நாடுகள் பாராட்டுகின்றன. ஜனநாயகத்திற்கு என்ன ஒரு அவமதிப்பு! ஜனநாயக நாடுகள் சட்டத்தை மதித்து நடப்பவை. அவர்கள் மனித உரிமைகளை மதிப்பவர்கள் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு இணங்கி நடப்பவர்கள். ஆனால் (உலகில்) எந்த ஒரு நாடும் சர்வதேச சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் அல்லது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை இஸ்ரேல் போன்ற தண்டனையின்றி மீறியதில்லை.

ஆரம்பத்தில் அரபு நாடுகளும் அணிசேரா இயக்கமும் பாலஸ்தீனர்களின் நியாயமான போராட்டத்திற்கு இடைவிடாத ஆதரவை அளித்தன. ஆனால் இன்று, சில அரபு நாடுகள் இஸ்ரேலுடனான 'ஆபிரகாமிய உடன்படிக்கை'கள் என்று அழைக்கப்படும் ஒன்றின் மூலம் கட்டுண்டுண்டுக் கிடக்கின்றன. மற்றவர்கள் தலையிட சக்தியற்றவர்கள், உதட்டுச் சேவை செய்தால் (அறிக்கைகள் விட்டுக்கொண்டு இருந்தால் போதும்) போதும் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றன. ஐ.நா. தீர்மானம் 181-ல் வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கு இஸ்ரேலை பின்னுக்குத் தள்ளுவதற்கு அரபு நாடுகள் ஒன்றிணைந்து இஸ்ரேல் மீது போர் தொடுக்க முடிவு செய்தாலும், இஸ்ரேலின் மேம்பட்ட ஆயுத பலம் மற்றும் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை இராணுவ ரீதியாக பாதுகாக்க தயாராக இருப்பதால், அவை வெற்றி பெற வாய்ப்பில்லை. வரைபடத்தில், இஸ்ரேல் பெரிய அரபு நாடுகளால் சூழப்பட்ட ஒரு சிறிய பிரதேசம் போல தோற்றமளித்தாலும், உண்மையில், இஸ்ரேல் அனைத்து அரபு நாடுகளையும் விட மிகவும் சக்தி வாய்ந்தது.

ஆக்கிரமிப்பிற்கு எதிரான ஆயுதமேந்திய எதிர்ப்பு உட்பட எதிர்ப்பு என்பது சர்வதேச சட்டங்கள் மற்றும் பல ஐ.நா தீர்மானங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் உரிமையாகும். 1980 களில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த சோவியத் துருப்புக்களை எதிர்த்துப் போராடியதால் அமெரிக்கா முஜாஹிதீன்களுக்கு ஆயுதம் வழங்கியது மற்றும் அவர்களை தற்காப்பாளர்கள் என்று அழைத்தது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை எதிர்க்க ஒவ்வொரு உக்ரேனிய குடிமகனும் ஆயுதபாணியாக இருக்க வேண்டும் என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் உரக்க கூறின. பாலஸ்தீனியர்களின் மீள்குடியேற்ற உரிமைக்கு ஏன் மேலைநாடுகளில் அங்கீகாரம் கிடைக்கவில்லை?

இஸ்ரேல் சார்பு மற்றும் சியோனிச கட்டுப்பாட்டில் உள்ள மேற்கத்திய ஊடகங்கள் பாலஸ்தீனியர்களின் எதிர்ப்பை முன்னிலைப்படுத்தாது. பாலஸ்தீன எதிர்ப்பையும் மக்களை போராட்டத்தையும் மனிதாபிமானமற்றதாகக் காட்டுவதும் பூதாகரமாக்குவதும் அவர்களின் வேலையின் ஒரு பகுதியாகும். அவர்களின் கூற்றுப்படி, ஹமாஸ் இஸ்ரேலை பூமியிலிருந்து (உலக வரைபடத்தில் இருந்து) அழிக்க உள்ளது.

ஹமாஸ் அதன் வளர்ச்சியில் அப்போதைய பிரபல பாலஸ்தீனிய விடுதலை அமைப்பை (PLO) பலவீனப்படுத்த வேண்டும் என்ற இஸ்ரேலின் நீட்டித்த நோக்கம் கொண்ட தவறான சகிப்புத்தன்மைக்கு கடன்பட்டுள்ளது. எனினும், ஹமாஸ் தனது சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காது உறுதியாக வைத்திருந்தது மற்றும் சிக்கலான பிரச்சினைகளை தீர்க்காத எந்தவொரு சமாதான ஒப்பந்தத்தையும் எதிர்த்து வந்தது: பாலஸ்தீன சுதந்திரம், பாலஸ்தீனிய நிலத்திலிருந்து இஸ்ரேல் வெளியேறுதல், இஸ்லாத்தின் மூன்றாவது மிகவும் புனிதமான மசூதி அமைந்துள்ள கிழக்கு ஜெருசலேமின் விடுதலை மற்றும் பாலஸ்தீன அகதிகள் வெளியேற்றப்பட்ட கிராமங்களுக்குத் திரும்புவதற்கான உரிமை ஆகியன.

பாலஸ்தீன சட்டமன்றத்திற்கான 2006 தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றது, ஆனால் மேற்கத்திய நாடுகள் ஹமாஸ் அரசாங்கத்தை அங்கீகரிக்க மறுத்து பாலஸ்தீனத்திற்கான உதவியை நிறுத்தின. ஏன்? மேற்கத்திய நாடுகள் ஜனநாயகத்தை மதிக்கிறோம் என்ற தங்கள் கூற்றுக்கு உண்மையாக இருந்தால், 2006 தேர்தலில் பாலஸ்தீன மக்கள் வழங்கிய ஜனநாயக தீர்ப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஹமாஸ் மற்றும் பி.எல்.ஓ.வில் ஆதிக்கம் செலுத்தும் குழுவான ஃபத்தா இடையே ஒரு ஆயுத மோதலைத் தூண்டுவதற்காக மேற்கத்திய நாடுகள் இந்த நிகழ்வுகளைக் கையாண்டன. இதன் விளைவாக ஹமாஸ் காஸாவையும், ஃபத்தா மேற்குக் கரையையும் ஆட்சி செய்தது. இரு தரப்பினருக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளும், அரபு நாடுகளின் இராஜதந்திர முயற்சிகளும் தேவைப்பட்டன.

கடந்த புதனன்று, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இறுதியாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, அது போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை, மாறாக மனிதாபிமான உதவி மற்றும் மருத்துவ வெளியேற்றத்தை எளிதாக்குவதற்காக சண்டையில் இடைநிறுத்தத்தைக் கோரியதோடு. ஹமாஸ் காவலில் உள்ள சுமார் 240 பிணைக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் அது கோரியது.

எவ்வாறாயினும், சர்வதேச சட்டம் மற்றும் பல ஐ.நா தீர்மானங்களுக்கு இஸ்ரேல் மதிப்பளிக்காத நிலையில், அது ஐ.நா.பாதுகாப்புச்சபை தீர்மானத்திற்கு இணங்குமா என்பது பெரிய கேள்வியாகும்.

https://www.dailymirror.lk/opinion/Dont-demonise-Palestinians-right-to-resist/172-271455

தமிழில்: தாஹா முஸம்மில்

No comments:

Post a Comment