Sunday, June 2, 2019

உலக முஸ்லிம்களுக்கு கண்ணியம் சேர்த்த பெருந்தகை, யுகப்புருஷர் இமாம் கொமெய்னி (ரஹ்)


Imam Khomeini - the leader of the century      

ஓர் இஸ்லாமிய தலைமைத்துவத்திடம் இருக்க வேண்டிய அனைத்து அடிப்படை பண்புகளையும் கொண்டிருந்தவர்தான் மர்ஹூம் இமாம் ஆயத்துல்லாஹ் ரூஹுல்லாஹ் கொமெய்னி (ரஹ்) அவர்கள்.

இறையச்சம், அறிவு, தாழ்மை, பொறுமை, வீரம், இலக்கை நோக்கிய உறுதியான போராட்டம், இறைவனைத் தவிர வேறு எதற்கும் அஞ்சாமை, வழிகாட்டுதல்களை இறைபோதனையில் இருந்தும் புனித இமாம்களின் வாழ்க்கையில் இருந்தும் பெறுதல், வழிநடத்துதல், சரியான தீர்மானங்களை மேற்கொள்ளுதல், எடுத்த தீர்மானத்தில் உறுதியாய் இருத்தல் போன்ற அனைத்து தலைமைத்துவ பண்புகளிலும் சிறந்துவிளங்கியவவர்தாம் மர்ஹூம் இமாம் கொமெய்னி.

ஈரான் இஸ்லாமிய புரட்சி 40 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் அரசியல் ஆய்வாளர்களை இன்றளவிலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது. அது ஓர் ஆயுதம் ஏந்திய புரட்சியல்ல, வெளிநாட்டு உதவிகளைக் கொண்டு ஆட்சிமாற்றம் கொண்டுவரப்பட்டதுமல்ல; ஓர் இராணுவ சதிபுரட்சியுமல்ல. முழுக்க முழுக்க மக்களின் சக்தியைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட புரட்சி. அதன் உந்துசக்தியாக இருந்தது இஸ்லாம் மட்டுமே. 1400 வருடங்களுக்கு முன் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட புரட்சிக்குப்பின் அது போன்ற ஒரு புரட்சி ஈரான் இஸ்லாமிய புரட்சியே ஆகும்.

இஸ்லாம் இனி ஒருபோதும் ஓர் அரசியல் சக்தியாக உருவாக முடியாத படி அதனை நலிவடைய செய்துவிட்டோம். எமக்கு வேண்டிய விதத்தில் இஸ்லாமிய உலகைத் துண்டாடி, எல்லைகளை வகுத்துள்ளோம். எல்லா முஸ்லீம் நாடுகளிலும் எம்முடைய நலன்களை காக்கும் விதத்தில் எமது முகவர்களை அமர்த்தியுள்ளோம். எமது கட்டுப்பாட்டை மீறி அவர்களால் எதுவும் செய்யமுடியாதபடி திட்டங்களையும் வகுத்துக் கொடுத்துள்ளோம் என்றெல்லாம் ஏகாதிபத்தியவாதிகள் சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கையில், மேற்குலக நாகரீகத்தில் மூழ்கிக்கிடந்த ஈரானில் இவ்வாறானதொரு புரட்சி ஏற்படுவதென்பது எவரையும் வியக்க வைக்கவே செய்யும்.

'கிழக்கும் வேண்டாம், மேற்கும் வேண்டாம் இஸ்லாமொன்றே போதும்; அல்லாஹ்வே மிகப்பெரியவன்' (லா ஷார்க்கிய்யா வலா கர்பிய்யா, இஸ்லாமிய்யா இஸ்லாமிய்யா; அல்லாஹு அக்பர்) என்ற கோஷம் மட்டுமே அவர்களது ஆயுதம். இந்த கோஷத்துக்கு முன்னால் 2500 வருடகால மன்னராட்சி தவிடுபொடியானது.

இமாம் கொமெய்னி என்ற உலமாவின் தலைமையில் வெடித்த இந்த இஸ்லாமிய புரட்சி, ஈரானுக்குள் மட்டும் மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கத்துடன் அல்லாது, உலக மாற்றத்துக்காக, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு விடியலை நோக்கிய புரட்சியாக அறிமுகப்படுத்தப் படுகிறது. அதாவது உலகில் நடைமுறையிலுள்ள அரசியல் சித்தாந்தத்துக்கே சவால் விடுகிறது.



அரசியலில் எந்த முதிர்ச்சியும் அற்ற உலாமாக்களால் ஒரு நாட்டை எவ்வாறு ஆள முடியும்? எவ்வாறு நிர்வகிக்க முடியும்? அரசியலைப்பற்றி முல்லாக்களுக்கு என்ன தெரியும் என்றெல்லாம் அப்போது அவர்கள் கேலி செய்தனர்; இஸ்லாமிய அரசு இரண்டு வருடங்களில் கவிழ்ந்து விடும், மூன்று வருடங்களில் கவிழ்ந்து விடும் என்றெல்லாம் ஹேஷ்யம் கூறினர். அல்லாஹ்வின் உதவியால் இஸ்லாமிய குடியரசு இன்று 40 ஆண்டுகளை, தலை நிமிர்ந்த நாடாக  கடந்துகொண்டிருக்கிறது.



இஸ்லாமா அல்லது ஈரானா...???



கீழே தரப்படுவது இமாம் ஆயத்துல்லாஹ் ரூஹுல்லாஹ் கொமெய்னி (ரஹ்) அவர்களுக்கும் ஆயத்துல்லாஹ் அக்பர் ஹாஷெமி ரப்சஞ்சானி (ரஹ்) அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முக்கியமான உரையாடல்.

இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் ரசூலுல்லாஹ்வின் மனைவியரை இகழ்ந்து, இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் நோக்கத்தில் புத்தகம் எழுதியதற்காக சல்மான் ருஷ்டிக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, அப்போது ஈரானின் ஜனாதிபதியாக இருந்த ஆயத்துல்லாஹ் ராப்சஞ்சாணி இமாம் கொமெய்னியிடம் சென்று "உங்கள் செயல் சர்வதேச கொள்கைகளுடன் உடன்படுவதாக இல்லை, சல்மான் ருஷ்டி ஒரு பிரித்தானிய பிரஜை, நீங்கள் இங்கிருந்து இவ்வாறான தீர்ப்பை வழங்குவது சரியல்ல; அதனை வாபஸ் பெறுங்கள் அல்லது புத்தக பதிவாக மட்டும் அதனை வைத்திருங்கள்; ஊடகங்கள் மூலம் அதனை பகிரங்கப்படுத்த வேண்டாம்" என்று ஆலோசனை கூறினார்.அது பகிரங்கப்படுத்தப்பட்டால் என்ன நடக்கும்...? என்று இமாமவர்கள் கேட்டார்கள்.நாம் பெரும் இழப்புகளை சந்திக்க நேரிடும்.அப்புறம் என்ன நடக்கும்?நாம் புறக்கணிப்புகளுக்கு ஆளாவோம்; எம்மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பர்.மேலும் என்ன நடக்கும்...?ஈரான் தாக்கப்படக்கூடும்.இமாம் மீண்டும் கேட்டார்: வேறு என்ன... ?அதனால் ஈரான் அழிவுகளை சந்திக்கக் கூடும் என்று ரப்சஞ்சானி பதிலளித்தார்.பின்னர் இமாம் கொமேனி (ரஹ்) அவர்கள் "நமது நோக்கம் இஸ்லாத்தை தியாகம்செய்து ஈரானை காப்பதல்ல, இஸ்லாம் காக்கப்பட வேண்டும், அது ஈரானின் அழிவிலாயினும் சரியே. ருஷ்டி றஸூலுல்லாஹ்வின் மனைவியரை இகழ்ந்துரைத்துள்ளான், இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியுள்ளான். இஸ்லாத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்படும்போது வாய் மூடி மௌனியாய் இருந்துவிட்டு, ஈரான் தாக்கப்படும்போது மட்டும் பேசச் சொல்கிறீர்களா...? என்று கேள்வியெழுப்பினார்கள்.நாம் வணங்குவது இறைனையன்றி ஈரானையல்ல; ஜாஹிலிய்யத்துக்கு மறுபெயரே தேசப்பற்றாகும்; இஸ்லாம் உலகில் வெற்றிபெற்று நிலைபெறுமானால் இந்த நாடு (ஈரான்) எரிந்து சாம்பலானும் பரவாயில்லை, என்று இமாமவர்கள் கூறினார்கள் என்று ஆயத்துல்லாஹ் ரப்சஞ்சானி குறிப்பிட்டார்கள்.




இதுவே இமாமின் கொள்கையாகும்; இதுவே ஆஷூரா கொள்கையுமாகும். ஸையத் அல் ஷுஹாதா இமாம் ஹுசைன் (அலை) போன்றவர்கள் இஸ்லாத்துக்காக தம் இன்னுயிரைத் தியாகம் செய்ய முன்வந்தார்கள் என்றால், அனைத்தையும் இழக்கத் தயாரானார்கள் என்றால், இஸ்லாத்துக்கு முன் வேறு எதுவுமே முக்கியமல்ல.  இஸ்லாத்தைக் காப்பதற்கு அவசியமாயின் நாம் அனைத்தையும் தியாகம் செய்ய தயாராய் இருக்க வேண்டும். இதுவே இமாம் ஹுஸைன் (அலை) கற்றுத்தரும் கர்பலா பாடமாகும்.


இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்றத்தைத் தொடர்ந்து, ஈரானின் சர்வ அதிகாரமும் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மரணிக்கும்வரை இந்த அதிகாரம் அவர் வசமே இருந்தது. முன்னைய ஆட்சியாளர்கள் கட்டிய பளிங்கு மாளிகைகள் பல இருந்தும், அவர் விரும்பி ஏற்றுக்கொண்ட எளிய வாழ்க்கை முறை, இஸ்லாமிய தலைமைத்துவத்துக்கு ஒர் எடுத்துக்காட்டாகும்.

பொறுப்புக்கூறவேண்டும் என்ற இறையச்சம், கர்வமின்மை, டாம்பீகமின்மை, படாடோபமின்மை, தன்னலமின்மை ஆகிய அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தார். அதனால்தான் இந்த மகோன்னத மனிதர் மறைந்து 30 ஆண்டுகள் கழிந்த பின்பும் கூட கோடிக்கணக்கான மக்கள் மனதில் இன்றும் உயிர்வாழ்கிறார்.


ஷீஆ - சுன்னீ ஒற்றுமைக்கான அறைகூவல்

இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் ஷீஆ-சுன்னி ஒற்றுமையை எப்போதுமே வலியுறுத்தி வந்தார். அவரது உரைகளில் சுன்னிகளை விழித்து பேசுகையில் "சுன்னி சகோதரர்கள்" என்றே அழைப்பார். இந்த ஷீஆ-சுன்னி ஒற்றுமையின் மூலம் இஸ்லாமிய உலகு எதிர்கொண்டுள்ள அநேக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று உறுதியாக நம்பினார்.



ரபீயுல் அவ்வல் மாதம் 12ம் நாளை ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் பிறந்த தினமாக சுன்னத் வல் ஜமாத்தைச் சேர்ந்த நாம் நினைவு கூறும் அதேவேளை ஷியா முஸ்லிம்கள் 17ம் நாளை ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் பிறந்த தினமாக நினைவு கூறுகின்றனர்.


வரலாற்றுரீதியாக பிரிந்திருக்கும் இவ்விரு இஸ்லாமிய சமூகங்களும் தமக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டு, ஒன்றுபடும் சந்தர்பமாக ரபீயுல் அவ்வல் மாதம் 12-17 ஐ ஒற்றுமை வாரம் என்று ஈரானிய தலைவர்கள் பிரகடனப்படுத்தி, உலக முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமையை வலியுறுத்தும் மாநாடுகளையும் வருடாந்தம் நடாத்தி வருகின்றனர். 


"உலக முஸ்லிம்கள் (ஷீஆ-சுன்னி) ஒன்றுபட்டு, ஆளுக்கு ஒரு வாளி தண்ணீரை இஸ்ரேலின் மீது ஊற்றினாலே போதும், அந்த நாடு இருந்த இடம் தெரியாது அழிந்து போய்விடும்" என்று இமாம் கொமெய்னி அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன் கூறினார்கள்.

ஆகவே, எம்மத்தியில் உள்ள வேற்றுமையைக் களைந்து செயல்படுவோமேயானால், எம் எதிரியை அழிப்பதற்கு அணுகுண்டு அவசியமில்லை; ஆளுக்கு ஒரு வாளி தண்ணீரே போதும்.


உலகில் ஷீஆ-சுன்னீ ஒற்றுமைக்காகக் குரல் கொடுத்தவர்களுள் சுன்னீ அறிஞர்களைப் போலவே ஏராளமான ஷீஆ அறிஞர்களும் இருக்கிறார்கள். இமாம் கொமெய்னி, இமாம் காமெனயி, இமாம் சீஸ்தானி, இமாம் பாகிர் ஸத்ர், ஷஹீத் முதஹ்ஹரி இன்னும் பலர்.



ஈரான் இஸ்லாமியப் புரட்சியும் கூட, ஷீஆ சுன்னீ ஒற்றுமையின் பயனால் உருவானதே. எனவேதான், ப்போதே இமாம் கொமெய்னி அவர்கள், “ஷீஆவும் வேண்டாம்; சுன்னீயும் வேண்டாம்; இஸ்லாம் மட்டுமே வேண்டும்என்ற கோஷத்தை பிரகடனப்படுத்தினார்கள்.



தீர்க்க தரிசனம்

தான் விரும்பும் சிலருக்கு அல்லாஹ் மறைஞானத்தை வழங்குவான்... 

சோவியத் ஒன்றியத் தலைவர் மிக்கேல் கோர்பச்சேவுக்கு இஸ்லாத்தை ஏற்குமாறு அழைப்பு விடுத்த இமாம் கொமைனி.

1989 ஜனவரி 3ஆம் திகதி ஆயத்துல்லாஹ் ரூஹுல்லாஹ் கொமைனி அவர்கள் மிக்கேல் கோர்பச்சேவிற்கு கடிதம் ஒன்றை எழுதினார்கள். இக்கடிதத்தை அதே மாதம் 7ஆம் திகதி ஈரானிலிருந்து மஸ்கொ சென்ற விசேட தூதுக்குழு கோர்பச்சேவிடம் கையளித்தது.

இக்கடிதத்தில் இமாம் கொமைனி அவர்கள், கோர்பச்சேவிடம் கொம்யூனிஸத்தையும் மாக்சிஸத்தையும் விட்டுவிட்டு அதற்கு பகரமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். தத்துவ ஞானிகளான இப்னு அரபி, அலி இப்னு சீனா, பராபி (அனைவரும் சுன்னிகள்) ஆகியோரின் ஆக்கங்களைக் கற்குமாறும் இமாம் கொமைனி கேட்டிருந்தார்.

இனிவரும் காலங்களில் கொம்யூனிஸத்தை உலக அரசியல் வரலாற்றின் அருங்காட்சியகங்களில் மட்டுமே காண வேண்டியிருக்கும்; மாக்சிஸத்தினால் மனிதகுலத்தின் உண்மையான தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டிருந்ததோடு மேலைத்தேய முதலாளித்துவத்தின் மாயை பற்றியும் எச்சரிக்கை செய்திருந்தார்.

இக்கடிதம் ஒப்படைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் துண்டு துண்டாக உடைந்தது.

பத்து ஆண்டுகளின் பின், 1999ம் ஆண்டு இமாம் கொமைனி ஞாபகார்த்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஈரான் சென்றிருந்த கோர்பச்சேவ் இமாம் கொமைனியின் அழைப்பை மதிக்கத் தவறியதையிட்டு வருத்தம் தெரிவித்திருந்தார்.

யுத்தநிறுத்தம்
  இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்று 18 மாதங்கள் கூட பூர்த்தியாகி இருக்கவில்லை. ஈரானுக்குள் கொம்யூனிஸவாதிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில், குண்டு வெடிப்புகளை நடத்திக்கொண்டிருக்கையில், இதனால் இஸ்லாமிய புரட்சியின் பல முன்னணி தலைவர்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில், அமெரிக்க, ஐரோப்பிய தூண்டுதலாலும் சூழவுள்ள அரபு நாடுகளின் ஊக்கப்படுத்தலாலும் சதாம் ஹுசைன் திடுதிப் என ஈரான் இஸ்லாமிய குடியரசின் யுத்தமொன்றைத் திணித்தார்; ஆரம்ப கட்டங்களில் ஈரான் பல இழப்புகளை சந்தித்தது. 
 இமாம் கொஞ்சமும் சளைக்கவில்லை; ஆரம்ப இழப்புகளினால் துவண்டுபோய் விடவுமில்லை. அமெரிக்க, ஐரோப்பிய ஆயுதங்கள், அரபிகளின் பணம் எதுவுமே அவரை அச்சம் கொள்ளச் செய்யவில்லை. சதாம் ரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்திப் பார்த்தார். எதற்குமே ஈரான் மசியவில்லை. திருப்பி அடித்தார்கள். அடித்த ஆதிஅடி அனைத்தும் இடிபோல் விழுந்தது. கொஞ்ச காலம் தான் சென்றிருக்கும், இழந்த பிரதேசங்கள் அனைத்தையும் மீட்டர்கள். சதாமும் அவரது கூட்டாளிகளும் கண்விழித்துப் பார்க்கையில் ஈரான் இஸ்லாமிய படைகள் ஈராக்குக்குள் புகுந்துவிட்டார்கள். யுத்த நிபுணர்களால் இதனை நம்பமுடியவில்லை. அமெரிக்க ஐரோப்பிய ஆயுதங்களுக்கு முன் இவர்களால் எவ்வாறு தாக்குப்பிடிக்க முடிந்ததது என்று தலையை பிய்த்துக்கொண்டார்கள். சதாமோ கதிகலங்கிப் போனார். சண்டையை நிறுத்தத் சொல்லி கெஞ்சினார். 
  இஸ்லாமிய அரசை வீழ்த்தும் நோக்கத்தோடு ஈரான் மீது வேண்டாத யுத்தம் ஒன்றைத் திணித்த சதாம் வீழும்வரை போர் தொடரும் உறுதியாக இருந்த இமாம் கொமெய்னி, திடீரென ஒருநாள் யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். பலருக்கு ஆச்சர்யம்; ஈரானியர்களால் கூட இதனை நம்பமுடியவில்லை. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொண்ட இமாம், அதன் சூட்சுமத்தை பின்னால் அறிந்துகொள்வீர்கள் என்றும் கூறினார்கள். 


பின்னால் என்ன நடந்தது...
? சதாமின் யுத்தத்துக்கு சகல விதத்திலும் உதவிய குவைத் சதாமினால் ஆக்கிரமிக்கப்படுகிறது; பணத்தை வாரி இறைத்த சவூதி அரேபியா தாக்கப்பட்டது; ஈரான் மீது படையெடுக்க சதாமை தூண்டிய எல்லா சக்திகளும் இணைந்து, சதாமின் வீழ்ச்சிக்காக யுத்தத்தில் ஈடுபட்டன. சதாம் வீழ்ந்தார், தூக்கிலடப்பட்டார். ஈராக் ஈரானின் செல்வாக்குக்கு உட்பட்ட நாடாக மாறுகிறது. இதனைத்தான் "யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொண்ட சூட்சுமம், பிறகு அறிவீர்கள்" என்று இமாமவர்கள் கூறினார்கள். இமாமின் மறைவுக்குப் பிறகே ஈரானியர்கள் கூட இதனை புரிந்துகொண்டார்கள். அல்லாஹ் தம் உண்மையான அடியார்களுக்கு மறைஞானத்தை வழங்குகிறான்.

அமெரிக்காவே எமது பாதுகாப்பு என்று அரபு ஆட்சியாளர்கள் அவர்களிடம் மண்டியிட்டிருந்த காலகட்டத்தில், இஸ்லாமொன்றே எமக்கு பாதுகாப்பளிக்க வல்லது என்று உறுதியாய் இருந்து, அதனை செயலில் காட்டி, உலக முஸ்லிம்களுக்கு கண்ணியம் சேர்த்த பெருந்தகை, யுகப்புருஷர் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள்.

தாஹா முஸம்மில்

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் நான் ஈரான் பற்றியும் ஷியாக்கள் பற்றியும் அறிய ஆவலாய் இருக்கிறேன் உதவுங்கள் 9940360615 உங்க நம்பரை தாருங்கள்

    ReplyDelete