Thursday, February 7, 2019

வல்லரசுகளையே அதிரவைத்த "அல்லாஹு அக்பர்" என்ற கோஷம்...! (இஸ்லாமிய புரட்சி - ஒரு சுருக்கமான வரலாறு)


Islamic Revolution in Iran - That shook the world



2500 ஆண்டுகால முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பஹ்லவி ஆட்சியின் 50 ஆண்டுகால கொடுங்கோன்மையை முற்றிலுமாக இல்லாதொழித்து, ஈரானில் 1979 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி இஸ்லாமிய ஆட்சி மலர்ந்தது. இதற்காக ஈரானிய மக்கள் செய்த தியாகம் கொஞ்சமல்ல சுமார் 60,000 பேர் தங்கள் இன்னுயிரை இந்த இஸ்லாமிய போராட்டத்தில் அர்ப்பணித்தனர். அவர்களது நீண்டகால போராட்டம், இறுதியில், இறையருளால் வெற்றிபெற்றது.

மன்னர் ஷா, ஈரானிய மக்களை ஏமாற்ற பல கபட நாடகங்களை ஆடினார். அதிலொன்றுதான் 1962 ஆம் கொண்டுவரப்பட்ட மாநில மற்றும் மாகாண சபைகளுக்கான சட்ட அங்கீகார மசோதா. இதற்கு ரீஸா பாஹலவி, ஷாஹ்வினதும் மக்களினதும் 'வெள்ளைப் புரட்சி' என்று பெயர் வைத்தார். இந்த சட்டத்தின் மூலம் ஷா பல இஸ்லாமிய மரபுகளை மீறினார்;. புனித குர்'ஆனில் சத்தியம் செய்து பதவி ஏற்கும் முறை நீக்கப்பட்டு, இஸ்லாத்துக்கு முரணான கொள்கைகள், வெள்ளைப் புரட்சி என்ற பெயரில் சட்டமாக்கப்பட்டது.
ஈரானிய மக்களை இஸ்லாத்தில் இருந்து தூரப்படுத்தும் சதி முயற்சியாக இதனை அறிந்துகொண்ட உலமாக்கள், ஆயத்துல்லாஹ் கொமைனியின் தலைமையில் வெகுண்டெழுந்தனர். வன்மையாக எதிர்த்தனர். 1963 ஆம் ஆண்டு ஈரானிய உலமாக்கள் அவ்வாண்டின் புதுவருடத்தை துக்கத்தினமாக அனுஷ்டிக்குமாறு வேண்டிக்கொண்டதற்கிணங்க மக்கள் அதற்கு அமோக ஆதரவு வழங்கினார். கும் நகரில் அமைந்துள்ள பாயிஸியே மதரஸாவில் துக்க தின வைபவத்தில் கலந்துகொண்டிருந்த மாணவர்கள் மீது ஷாவின் சவாக் படையினர் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் உலமாக்களையும் மக்களையும் மேலும் கொதிப்படையச் செய்தது. அவ்வாண்டு ஜூன் மாத ஆஷூரா நிகழ்ச்சிகளில் உரையாற்றிய இமாம் கொமைனி, ஷாவின் இஸ்லாம் விரோத போக்கைக் கண்டித்தது மட்டுமல்லாமல் ஈரானில் அமெரிக்க மற்றும் இரேலிய தலையீடுகளையும் வண்மையாகக் கண்டித்தார். இதனைத் தொடர்ந்து 1963 ஜூன் மாதம் 5 ஆம் திகதி இமாமவர்கள் கைது செய்யப்பட்டார்.
இந்த செய்தி காட்டுத் தீ போன்று ஈரான் முழுவதும் பரவியது. இதன் விளைவாக நாட்டின் பல பாகங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. ஷா தனது இரும்புக்கரம் கொண்டு இந்த ஆர்ப்பாட்டங்களை அடக்கலானார்; இதனால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தனர், காயப்பட்டனர். ஈரானில் இஸ்லாமிய இயக்கம் உயிர்பெற்றது இதிலிருந்தான் என்று சொல்லவேண்டும். நாட்டு மக்கள் தொடர்ச்சியாகக் கொடுத்த அழுத்தம் காரணமாக இமாம் கொமைனி 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுவிக்கப்பட்டார்.
விடுவிக்கப்பட்ட அவர் ஷாவின் இஸ்லாம் விரோத கொள்கையை இன்னும் அதிகமாக விமர்சித்தார். கும் நகரின் பள்ளிவாயலொன்றில் உரையாற்றிய இமாமவர்கள் நாட்டையும் மக்களையும் அமெரிக்காவுக்கு அடிமையாக்கும் சதித்திட்டத்தை வன்மையாகக் கண்டித்தார். இதற்கான ஒரே தீர்வு இறைவனை முன்னிறுத்திய இஸ்லாமிய எழுச்சியே என்றும் குறிப்பிட்டார்.
இமாமவர்களின் தொடர் போராட்டத்தை சமாளிக்க முடியாத ஷா, அவரை மீண்டும் கைது செய்து 1964 நவம்பர் 4, இல் துருக்கியிற்கு நாடு கடத்தினார். சுமார் ஒரு வருடத்துக்கு பிறகு இமாம் கொமைனி நஜாப்பில் இருந்த தன்னுடைய மகன் ஆயத்துல்லாஹ் முஸ்தபா கொமைனியுடன் இணைந்து கொள்கிறார்.
இமாமின் மகன் ஆயத்துல்லாஹ் முஸ்தபா கொமைனி 1977 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஷாவின் கூலிப்படையினால் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றார். இதனைத் தொடர்ந்து ஈரானிய மக்கள் கொதித்தெழுகின்றனர். நாடுதழுவிய ரீதியில் ஆர்ப்பாட்ட அலை எழுகிறது. 2500 வருடகால முடியாட்சியினது அஸ்தமனத்தின் ஆரம்பம் அதுவே எனலாம்.
ஈரானிய ஊடகங்களில் இமாமுக்கு எதிரான துர் பிரசாரங்கள், அதிகாரத்தில் உள்ளோரினால் முடுக்கிவிடப்படுகின்றன. 1978 ஜனவரி மாதம் 6ம் திகதி இமாமுக்கு எதிராக, கீழ்த்தரமான முறையில் கட்டுரையொன்று 'இத்திலாஅத்' பத்திரிகையில் பிரசுரமானது. இதனையடுத்து கும் நகரில், உலமாக்களின் தலைமையில் மாணவர்கள் வீதிக்கு இறங்கினர்; மக்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர்.
ஷா மன்னர் இதனை தன் இரும்புக்கரம் கொண்டு அடக்க முற்பட்டார். பல உயிர்கள் பறிக்கப்பட்டன. இருந்தும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஓயவில்லை. நாடு முவதுமாகப் பரவியது. கொல்லப்பட்டவர்களின் 40வது தினத்தை நாடுமுழுவதும் அனுஷ்டிக்குமாறு உலமாக்கள் கோரிக்கை விடுத்தனர். தப்ரிஸ் நகரில் இவ்வாறு அனுஷ்டித்த பலரை ஷாவின் படை 1978 பெப்ரவரி 18ம் திகதி கொண்றுகுவித்தது. அவ்வாண்டும் புதுவருடத்தை துக்கத்தினமாக அனுஷ்டிக்குமாறு ஈரானிய உலமாக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதன்போது யஸ்த் நகரில் பலர் கொல்லப்பட்டனர். அரசுக்கு எதிரான மக்களின் கோபம் இன்னும் அதிகரித்தது.
1978ம் ஆண்டு செப்டம்பர் 4 ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகையில் பல இலட்சம் பேர் கலந்து கொண்டனர். ஷாவுக்கு எதிரான மக்களின் ஆர்ப்பாட்டம் மூன்று நாட்களையும் தாண்டி தொடர்ந்தது. இதனையடுத்து ஷாவின் அரசு ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்தது. இதனை அறியாது வெளியில் வந்த மக்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.
இக்காலகட்டத்தில், ஈராக்கில் இருந்த இமாம் கொமைனிக்கு நெருக்குவாரங்கள் அதிகரித்தன் நாட்டில் இருந்து வெளியேறும்படி ஈராக்கிய அரசு உத்தரவிட்டது. அங்கிருந்து இமாம் குவைத்துக்கு சென்றார்... குவைத் எல்லையில் வைத்தே இமாம், அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பியனுப்பப்படுகிறார். இமாமவர்கள் வேறு வழியின்றி, 1978ம் ஆண்டு அக்டோபர் 6ம் திகதி பிரான்ஸின் புறநகரான நௌபெலே ஷட்டோவுக்கு குடிபெயர்கிறார். முழு உலகின் கவனமும் நௌபெலே ஷட்டோ பக்கம் திரும்புகிறது. சர்வதேச ஊடகவியலாளர்கள் அவ்விடம் நோக்கி படையெடுக்கின்றனர்.
ஈரானிய மக்கள் இமாமின் உத்தரவுக்காகக் காத்திருக்கின்றனர். ஈரானிய ஊடகங்களில் இமாமின் செய்திகளுக்கு தடை விதிக்கப்படுகின்றது. இதனை முறியடிக்கும் விதத்தில், இமாமின் சகாக்கள் ஓர் உத்தியை கையாள்கின்றனர். இமாம் கொமைனியின் செய்திகளை சூட்சுமமான முறையில் பதிவு செய்து, அந்த ஒலிப்பதிவு நாடாக்களை மக்கள் மத்தியில் சென்றடையச் செய்தனர்.
அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்; எரிபொருள் விநியோகம், தொலைத்தொடர்புகள், வங்கிகள், நீர்வழங்கல் போன்ற அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதமடைகின்றன் தொலைக்காட்சி மற்றும் வானொலியும் இணைந்துகொள்கின்றன... போராட்டம் மேலும் விரிவடைகிறது.
1978ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய பல்கலைக்கழக மாணவர்கள் பலர் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ஷாவின் அரசு சர்வதேச கண்டங்களுக்கு உள்ளாகிறது.
மன்னராட்சி முறையைப் பாதுகாத்துக்கொண்டு, மக்களை சாந்தப்படுத்தும் முறையில், அதிகார அமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இருந்தும் மக்கள் ஏமாற்றவில்லை.
இதற்கிடையில், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று சில ரஷ்ய சார்பு இடதுசாரி கொள்கையுடையோர் திட்டமிட்டனர். ஆனால் மக்களின் கோஷம் 'லா ஷர்க்கிய்யா, லா கர்பிய்யா, ஜூம்ஹூரிய்யா இஸ்லாமிய்யா' (கிழக்கும் வேண்டாம், மேற்கும் வேண்டாம், இஸ்லாமிய குடியரசே வேண்டும் என்பதாகவே இருந்தது.
பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்பைத் தொடர்ந்து, ஷாவின் ராணுவம் நடுநிலை கடைபிடிக்கப்போவதாக அறிவிக்கின்றது. மன்னராட்சியின் மரணம் நெருங்கிவிட்டது என்று அறிந்த ஷா, 1979 ஜனவரி 16ம் திகதி ஆட்சிப்பொறுப்பை ஷாபூர் பக்தியாரிடம் ஒப்படைத்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறுகிறார்.
இமாம் கொமைனி நாடு திரும்புவதாக அறிவிக்கின்றார். இதற்கிடையில், இமாம் கொமைனியை ஏற்றிவரும் எந்த விமானத்துக்கும் தரையிறங்க அனுமதி மறுக்கப்படும் என்று பக்தியார் அரசு அறிவிக்கின்றது. இதனால் இமாமின் வருகை ஒரு வார காலம் தடைப்படுகிறது.
1979ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலாம் திகதி இமாம் கொமைனி 15 வருடகால அஞ்ஞாதவாசத்தை முடித்துக்கொண்டு, பிரான்சிலிருந்து நாடு திரும்புகிறார். பல மில்லியன் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் இமாமை வரவேற்கின்றனர். 'அல்லாஹு அக்பர்' என்ற கோஷமும் ஸலவாத்தும் வின்னைப் பிழக்கிறது. இமாமவர்கள் விமான நிலையத்தில் இருந்து நேராக பெஹெஸ்த்தி ஸஹ்ரா அடக்கஸ்தலத்துக்கு சென்று, போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கின்றார். அங்கு உரை நிகழ்த்திய இமாமவர்கள் ஷாபூர் பக்தியாரின் ஆட்சி சட்டவிரோதமானது என்று பிரகடனப்படுத்துகிறார்.
அதே பிப்ரவரி மாதம் 5ம் திகதி இமாம் கொமைனியவர்கள் மெஹ்தி பஸர்கான் தலைமையில் தற்காலிக அரசொன்றை நிறுவுகின்றார். 8ம் திகதி விமானப்படையினர் இமாமிடம் விசுவாச பிரமாணம் செய்கின்றனர்.
இவ்வாறிருக்கையில் பிப்ரவரி 10ம் திகதி ராணுவனத்தின் சில பிரிவினர் அதிகாரத்தை தாம் கைப்பற்றியுள்ளதாகவும், ஊடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கின்றனர். இதற்கு இமாமவர்கள், இந்த உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டாம்' வீடுகளில் இருந்து வெளியே வாருங்கள் 'அல்லாஹு அக்பர்' என்று உரத்து கோஷமிடுங்கள் என்று மக்களை கேட்டுக் கொண்டார்.
ராணுவ உத்தரவை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ராணுவ முகாம்கள், போலீஸ், வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் அனைத்தையும் மக்கள் சூழ்ந்து கொண்டனர் 'அல்லாஹு அக்பர்' கோஷத்தோடு.


ஷாவினால் அமர்த்தப்பட்ட ஷாபூர் பக்தியார் நாட்டைவிட்டு வெளியேறினார். அடக்குமுறையில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளும் வெளியேறினர்.
ஈற்றில் 1979 பிப்ரவரி மாதம் 11ம் திகதி இஸ்லாமிய புரட்சி வெற்றி பெற்றது.
புரட்சியை வழிநடத்திய இமாம் கொமைனியினது நாமம் இஸ்லாமியர் உள்ளத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

வெற்றியின் ரகசியம்:

  • ஓர் உறுதியான கொள்கை 
  • அதில் ஈமான் கொண்ட மக்கள் கூட்டம் 
  • இறைவனையன்றி வேறு எதற்கும் அஞ்சா தலைமைத்துவம் 



- தாஹா முஸம்மில்


No comments:

Post a Comment