Contributors

Sunday, September 9, 2018

1,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் சுற்றளவை துல்லியமாக அளந்து கூறினார் அல்-பிருனி


Al-Biruni accurately measured the circumference of the earth 1,000 years ago

- தாஹா முஸம்மில் 

"அபு ரைஹான் அல்-பிருனி என்ற பாரசீக அறிஞர் வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கா இருப்பதை, கொலம்பஸ் அங்கு செல்வதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார்"
- எஸ். ஃப்ரெட்ரிக் ஸ்டார்

அபூ ரைஹான் முஹம்மது இபின் அஹ்மத் அல்-பிரூனி, (செப்டம்பர் 4, 973, பாரசீக சாம்ராஜ்யத்துக்கு உட்பட்ட கொராஸான் மாநிலத்தில் குவாரெஸ்ம் என்ற இடத்தில் பிறந்தார். 79 ஆண்டுகள் உயிர்வாழ்ந்த அவர் 1052 ஆம் ஆண்டு கஸ்னா என்ற இடத்தில் உயிர் நீத்தார்.

அல்-பிரூனி முஸ்லிம் உலகின் புகழ்பெற்ற வானியலாளர், புவியியலாளர், கணிதவியலாளர், மானுடவியலாளர் மற்றும் வரலாற்றாசிரியர் என்று அறியப்பட்டவர்.

அல்-பிரூனி கிழக்கு இஸ்லாமிய உலகில் அசாதாரண அரசியல் கொந்தளிப்பின் போது வாழ்ந்தார். அவர் 6 வெவ்வேறு இளவரசர்கள் கீழ் சேவை செய்தார், அவர்கள் அனைவரும் வாழ்வின் உண்மையான நோக்கம் அறியாது செயல்பட்டதன் காரணமாக, அவர்களில் பலர் வன்முறை மரணங்களையே சந்தித்தனர். அப்படிப்பட்டவர்களின் கீழ் சேவை செய்யினும் கூட, இஸ்லாமிய உலகின் மிகச் சிறந்த பல்துறை அறிஞராக அல்-பிரூனி தன் நிலையை உயர்த்திக்கொண்டார்.

இன்றைய உஸ்பெகிஸ்தான் என்று அழைக்கப்படும் நாட்டின் கேத் என்னும் இடத்தில் செப்டம்பர் 5 ஆம் தேதி கிபி 973 ஆம் ஆண்டு அல் பிரூனி என்று அழைக்கப்படும் அபு ரய்ஹான் முஹம்மது இப்ன் அஹ்மத் அல் பிரூனி பிறந்தார்.

அவரது ஆரம்பகால வாழ்க்கை பற்றிய குறிப்புகள் அவ்வளவாகக் காணப்படவில்லை. 'எனது தந்தை யார்? குடும்ப பின்னணி என்ன? போன்ற விடயங்களை நான் அறிய மாட்டேன்' என்று அல்-பிரூனி தனது கவிதை ஒன்றில் குறிப்பிடுகின்றார்.

இடைக்கால இஸ்லாமிய சகாப்தத்தின் மாபெரும் அறிஞர்களில் ஒருவராக அல்-பிரூனி கருதப்படுகிறார், மேலும் இயற்பியல், கணிதம், வானியல் மற்றும் இயற்கை விஞ்ஞான மேதை மட்டுமல்லாது அவர் ஒரு சரித்திராசிரியர் மற்றும் மொழியியலாளர் என்றும் போற்றப்படுகிறார்.

முஸ்லிம்களின் பாரம்பர்ய வரலாற்றினை முன்னோர்களின் வரிசைக் கிரமப்படி ஆய்வு செய்து, தொகுத்து வழங்கிய சிறப்புக்குரிய வரலாற்றாசிரியர் அல் பிரூனி.

சிலகாலம் இந்தியாவிலும் தங்கியுள்ளார். இந்து கலாச்சாரத்தின் நிலை குறித்து இவர் கி.பி. 1080 இல் எழுதிய 'கிதாபுல் ஹிந்த்' மிகப் புகழ் பெற்றதாகும். இந்துக் கலாச்சாரத்தின் நல்ல - தீய அம்சங்களை அவர் அதில் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இவர் செய்த இந்த ஆய்வு ஆரம்பகால இந்திய வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.

அவர், அநேகமாக, அனைத்து விஞ்ஞான துறையிலும் கற்றுத் தேர்ந்ததோடு, கடுமையான ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார். அவரின் அபார அறிவுத்திறன்கண்டு அக்கால ஆட்சியாளர்கள் வியந்தனர். அதிகாரத்தில் இருந்தோரும் சமுதாயத்தின் சக்திவாய்ந்த உறுப்பினர்களும் சில முக்கிய ஆராய்ச்சிகளுக்காக அல்-பிரூனியை நாடி வந்தனர்.

அல்-பிரூனி அனைத்து ஆராய்ச்சிகளுக்கும் ஊக்கமளிக்கப்பட்ட இஸ்லாமிய காலத்தில் வாழ்ந்தார். அக்காலகட்டத்தில் சிந்தனை மற்றும் ஆய்வுகள் இஸ்லாமிய வழிமுறைகளுடன் முரன்படாது, கைகோர்த்து சென்றன. வானியல் அறிமுகப்படுத்தப்பட்டு, பல துறைகளில் ஆராய்ச்சி நடத்த, அல்-பிருனி விதவிதமான ஆய்வுகளை மேற்கொண்டார். இவற்றுக்கு மேலதிகமாக, அவர் தத்துவ ஆய்விலும் நாட்டம் கொண்டார்.

பாரசீகரான அல்-பிரூனி; பன்மொழிகளிலும் பாண்டித்யம் பெற்றிருந்தார். க்வர்ஸ்மியன், அறபு, சமஸ்கிருதம், கிரேக்கம், ஹீப்ரு மற்றும் சிரியாக் ஆகிய மொழிகளையும் சரளமாக பேசக்கூடியவராய் இருந்தார்.

அல்-பிருனி தனது வாழ்க்கையில் முதல் 25 ஆண்டுகளை குவாரெஸ்மில் கழித்தார். இஸ்லாமிய சட்டவாக்க ஆய்வு, இறையியல், இலக்கணம், கணிதம், வானியல், மருத்துவம், தத்துவம் மற்றும் இயற்பியல் துறையில் மற்றும் பிற அறிவியல் துறைகளில் அவர் அங்கேயே கற்றுத் தேறினார்.

அவர் 995ம் ஆண்டு தனது தாயகத்தைவிட்டு வெளியேறி, புஹாராவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு வாழ்ந்த காலத்தில், பேரறிஞரான அலி இப்னு சீனா அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். இவ்விருவருக்கும் இடையே முக்கிய பல விடயங்களில் கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

அங்கிருந்து அவர் 998 இல், தபரிஸ்தான் சென்றார். அங்கிருந்துதான் அவர் தனது முதல் முக்கிய 'அல்-அதர் பக்கிய்யா அன் அல்-காரூன் அல்-காலியா' کتاب الآثار الباقية عن القرون الخالية (அதாவது 'கடந்த நூற்றாண்டுகளின் மீதமுள்ள தடயங்கள்') என்ற நூலை கி.பி. 1000 ஆம் ஆண்டில் எழுதினார்.

1017ல், ராய் நகர் கஸ்னி மஹ்மூதின் ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது கஸ்னி மஹ்மூத் அல்-பிருனி உட்பட பெரும்பாலான அறிஞர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டார். அல்-பிருனி அரச ஆலோசகரானார், கஸ்னி மஹ்மூதின் இந்திய படையெடுப்பின் போது அவர் கூட இருந்தார்;. அதன்பின் இந்தியாவிலேயே சில ஆண்டுகாலம் வாழ்ந்துவந்தார். அப்போது அல்-பிருனிக்கு வயது 44 ஆகும்.

இச்சமயத்தில் அல்-பிருனி இந்திய கலாச்சாரத்தை ஆய்வுசெய்தார். இந்துமத வழிபாட்டு முறைகளையும் ஆய்வு செய்த அவர் இந்தியாவுடன் தொடர்புடைய எல்லா விடயங்களையும் ஆராயலானார். இந்தியாவின் நிலப்பகுதி முழுவதும் அவர் அடிக்கடி பயணங்களைப் மேற்கொண்டார். இதன்போது சமஸ்கிருதத்தையும் கற்றுக்கொண்டார். தஹ்கீக் மா லில்-ஹிந்த் மின் மகூலாஹ் மகூலாஹ் பி அல்-அக்ல் அவ் மர்தூலாஹ் என்ற புத்தகத்தையும் எழுதினார். இதற்காக அவருக்கு 'இந்தியவியலை நிறுவியவர்' என்ற பட்டமும் வழங்கப்பட்டது. '11ம் நூற்றாண்டு இந்தியா' என்ற அவரது குறிப்பிடத்தக்க விளக்கத்தலைப்பு காரணமாக அவருக்கு 'அல்-உஸ்தாத்' என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

அதேநேரம் அவரது எழுத்துடன் சேர்ந்து, அல்-பிரூனி மேலும் ஆராய்ச்சிகளில் அறிவியல் விஞ்ஞானத்தை விரிவுபடுத்தினார். அல்-பிருனியினால் எழுதப்பட்ட 146 நூல்களில் 95, கணிதம், வானியல், புவியியல் சம்பந்தமானவையாகும்.


அல்-பிரூனியின் வானியல் படைப்புகளில் நிலாவின் கலைகள்/பிறைகள் தோன்றுவதைக் காட்டும் ஒரு விளக்கப்படம்

புவியின் ஆரம் மற்றும் சுற்றளவு மதிப்பீடு செய்ய அல்-பிருனியினால்  முன்மொழியப்பட்டு, பின்பற்றப்பட்ட ஒரு முறையை விவரிக்கும் வரைபடம்

இஸ்லாத்தினால் கடமையாக்கப்பட்டுள்ள தொழுகை, நோன்பு, ஹஜ், என்பன காலத்தையும் நேரத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. இது முஸ்லிம்கள் வாழ்ந்த அனைத்து இடங்களுக்குமுரிய அகல, நெடுங்கோடுகளையும் சூரியனின் குத்துயரத்தையும் நிர்ணயிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது. க'பாவின் திசை நோக்கலும் அவசியம் என்பதால் இவற்றை வானியல், புவியியல் தரவுகளைப் பயன்படுத்தி மட்டுமே துல்லியமாக கண்டறிய முடியும் என்பதாலும் அல்-பிரூனி இவற்றில் கூடிய கவனம் செலுத்தினார்.

விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சித் துறைகளில் ஈடுபடுவதற்குத் தூண்டக்கூடிய வகையில் அல்குர்ஆன் சில தெளிவான அறிவுறுத்தல்களை விசுவாசிகளுக்கு வழங்கியிருக்கின்றது. சந்திரனின் பல்வேறு நிலைகள், குறிப்பிட்ட விகிதாசாரத்தில் அனைத்தையும் படைத்திருத்தல், குறிப்பிட்ட வேகத்தில் சூரியன், சந்திரன் ஆகியவற்றின் சுழற்சி, குறிப்பிட்ட ஒழுங்கிற்கேற்ப அவற்றின் அமைவு, அனைத்தும் சோடி சோடியாகப் படைக்கப்பட்டிருத்தல் என்பன போன்ற பிரபஞ்ச இயற்கைத் தோற்றப்பாடுகள் பற்றி அடிக்கடி பேசும் அல்குர்ஆன் வசனங்கள், விஞ்ஞான ஆராய்ச்சிக்கான தூண்டுதல்களைத் தருகின்றன.

அவரது விளக்கத்தில் பூமியின் இயக்கம் பற்றிய சமகால விவாதங்களில் குறிப்பிடுகிறார். அவர் சமகால அறிஞரான அலி இப்னு சீனாவுடன் தொடர்பில் இருந்தபோது, சில நேரங்களில் அவர்களுக்;கிடையில் சூடான விவாதங்களும் இடம்பெற்றன. அதன்போது அல்-பிரூனி அரிஸ்டாட்டலின் வானியல் இயற்பியலை கண்டிக்கின்றார்: விண்வெளி சூன்யமாகவே இருக்க வேண்டும் என்று எளிய பரிசோதனை மூலம் வாதிடுகிறார்.

அவரது மகத்தான விண்வெளி ஆய்வு நூலான மஸ்'ஊட் கனன் இல் அல்-பிரூனி தனது ஆய்வு தரவுகளைப் பயன்படுத்தி, தொலமியின் சூரிய குடும்ப கோட்பாட்டை தகர்த்தெறிகின்றார்.

அவர் கோட்பாட்டு ஆராய்ச்சிகளில் மட்டும் ஈடுபடவில்லை, அவை தொடர்பான  ஆழமான பகுப்பாய்வுகள் செய்து, அவற்றுக்கான விளக்கத்தையும் எழுதினார்; அவற்றின் தொழிட்பாட்டு முறை பற்றியும் தெளிவாக குறிப்பிட்டார்.

மேலும் அவருடைய ஆய்வு தரவுகள் பெரியளவில் வானியல் வரலாற்று பதிப்பில் நுழைந்தது மற்றும் பூகோளவியல் மற்றும் வானியல் துறைகளில் இன்றளவிலும்  பயன்படுத்தப்படுகிறது.

அல்-பிரூனி இயந்திரவியல் அறிவியலுக்கான அறிவார்ந்த முறையை அறிமுகப்படுத்தினார், இயக்கவியல் விஞ்ஞானத்தில் புள்ளிவிபரங்களை ஒருங்கிணைத்தார். கடிகாரம், திசைகாட்டிக்கருவி போன்ற பலவற்றை வடிவமைத்தார். பின்னால் தோன்றிய விஞ்ஞானிகள் அவற்றை பூரணப்படுத்தினர்.

அடர்த்தி, எடை, மற்றும் ஈர்ப்பு ஆகியவற்றை ஆராய்வதற்காக அவர் பல்வேறு முறைகளை கையாண்டார். அவருடைய புத்தகங்களில் இயற்பியலில் மட்டுமே கவனம் செலுத்தாவிட்டாலும், அவருடைய பல படைப்புகளில் இயற்பியல் ஆய்வு உள்ளது. வெப்பம் மற்றும் ஒளி பற்றிய பல்வேறு கருத்துக்களை அல்-பிரூனி முன்வைத்தார்.

மலையின் உயரத்தை கணிப்பதன் மூலம் பூமியின் ஆரத்தை தீர்மானிப்பதற்கான ஒரு வழிமுறையை அல்-பிரூனி கண்டுபிடித்தார். புவியின் செயல்பாடு பற்றி ஆராய்வதில் அவர் அதிக சிரத்தைக் காட்டினார், மேலும் அவரது பல படைப்புகளில் கிரகங்களை பற்றிய ஆய்வுகளும் நிறையவே காணப்பட்டன. புவியின் ஆரை மற்றும் அளவு பற்றிய இன்றைய அறிவு அல்-பிரூனியின் கடினமான ஆராய்ச்சி காரணமாகவே சாத்தியப்பட்டுள்ளது என்று கூறினால் மிகையாகாது.

அவருடைய மஸ்'ஊட் கனன் (1037) நூலில், அல்-பிரூனி ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையேயான மிகப்பெரிய நிலப் பகுதி ஒன்று இருப்பதைக் கணித்தார். பூமியின் சுற்றளவில் ஐந்தில் இரண்டு மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஈர்ப்பு விசையின் அடிப்படையில், ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையேயான பரந்த கடலில் பாரிய நிலப்பரப்பு இருக்க வேண்டிய கட்டாயத்தை கணித்துணர்ந்தார். அந்த நிலப்பகுதி மனிதர்கள் வாழும் இடமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கருதினார். அதுவே இன்றைய வடக்கு, தெற்கு அமேரிக்கா என்று அறியப்படுகிறது.

மருத்துவவியல் மற்றும் கனிமவியல்

பிரூனியின் மிக முக்கியமான நூல்களில் மருத்துவம் தொடர்பான 'கிதாப் அல்-சைதாலா ஃபி அல்-திப்' வும் ஒன்றாகும். அவர் வாழ்ந்த காலத்தில் அறியப்பட்ட  அனைத்து மருந்து வகைகளையும் அதில் விபரித்துள்ளார். இது சிரிய, பாரசீக, கிரேக்க, பலூச்சி, ஆப்கான், குர்தி மற்றும் சில இந்திய மொழிகளில் காணப்படும் மருந்துக்களின் பெயர்களை ஒத்திருக்கின்றன.

அவர் சுயமாக உருவாக்கிய ஒரு கருவியின் மூலம், சில குறிப்பிட்ட உலோகங்கள் மற்றும் கனிமங்களின் ஈர்ப்புத் தன்மையை பிரமிக்கத்தக்க துல்லியத்துடன் அவரால் தீர்மானிக்க முடிந்தது.

வரலாறு மற்றும் காலவரிசை

முஸ்லிம்களின் பாரம்பர்ய வரலாற்றினை முன்னோர்களின் வரிசைக் கிரமப்படி ஆய்வு செய்து, நூல்கள் வெளியிட்ட மற்றொரு சிறப்புக்குரிய வரலாற்றாசிரியர் என்று அல்-பிரூனி போற்றப்படுகின்றார். அரசியல் வரலாற்றில் பிரூனியின் முக்கிய கட்டுரை தொகுப்பு, கிதாப் அல்-முஹம்மரா பி அக்பர் கவார்ஸம் (கவார்ஸம் விவகாரங்களில் இரவு நேர உரையாடலின் குறிப்புகள்) புத்தகமாகும். பைஹகி தனது தாரிக்கே மஸ்'ஊட் இல் இதுபற்றி குறிப்பிடுகின்றார்.

வரலாற்று நிகழ்வுகள் மற்றும் வழிமுறைகளின் பல்வேறு கலந்துரையாடல்களுக்கு மேலதிகமாக, அரசர்களின் பட்டியல்களுடன் தொடர்புபட்ட விடயங்கள் அவரது அல்-அதர் பக்கிய்யா அன் அல்-காரூன் அல்-காலியா மற்றும் மஸ்'ஊட் கானூன் நூலிலும் மேலும் ஏனைய ஆக்கங்களிலும் காணக்கூடியதாக உள்ளன. அவரின் வரலாற்றைப் பற்றி ஆய்வுகள் மேற்கூறிய தலைப்பிற்கு மட்டுமல்லாமல், பூமியின் படைப்பினங்கள் பற்றியும் சுட்டிக்காட்டியது.

மத வரலாற்றின் அதிகாரமிக்க முஸ்லிம் அதிகாரிகளில் அல்-பிரூனி மிக முக்கியமானவர் ஆவார். அல்-பிரூனி மதத்தை ஒப்பீட்டு ஆய்வு செய்வதில் முன்னோடியாக இருந்தார். அவர் சொரோஸ்திய மதம், யூதம், இந்து மதம், கிறித்துவம், புத்த மதம், இஸ்லாம் மற்றும் பிற மதங்களை மிக ஆழமாக கற்றார். அவர் மாற்று மதங்களைப் தவறாக நிரூபிக்க முயற்சிக்காமல் அவர்களது சொந்த சொற்களில் அவற்றைப் புரிந்துகொள்ள முயன்றார். எல்லா கலாச்சாரங்களும் மனித கட்டமைப்புகளே என்பதால், இவற்றுக்கிடையில் குறைந்தது தூரத்து உறவாவது இருக்கும் என்பது அவரது கொள்கையாக இருந்தது.

அல்-பிரூனியின் அற்புதமான அறிவியல் பங்களிப்பு காரணமாக பல நாடுகள் அவரை கௌரவிக்கும் முகமாக நினைவுச்சின்னங்களை எழுப்பியுள்ளன, தபால் முத்திரைகளை அச்சிட்டுள்ளன. சந்திர மேற்பரப்பில் ஓரிடம் அவர் பெயரால் அறியப்படுகிறது.





Sunday, September 2, 2018

இஸ்லாமிய புரடசியின் வித்துக்கள் - அலி ரஜாய் மற்றும் பஹோனர்

Ali Rajai and Javad Bahonar

இஸ்லாமிய புரடசியின் வித்துக்கள் - 
அலி ரஜாய் மற்றும் பஹோனர்

முஹம்மது அலி ராஜாய் 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் 30 ஆம் திகதி வரை ஈரானின் இரண்டாவது ஜனாதிபதியாக ஆட்சிபுரிந்தவர். அதற்கு முன் அவர் ஈரானின் பிரதமராக பணியாற்றினார். அவர் பிரதமராக இருந்த அதேசமயத்தில் வெளியுறவு அமைச்சராகவும் இருந்தார். 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ம் தேதி பிரதம மந்திரியாக இருந்த முஹம்மத் ஜவாத் பஹோனருடன் இவரும்; பயங்கரவாதியின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கை 

முகம்மது-அலி ரஜாய் ஜூன் 15, 1933 இல் ஈரானின் கஸ்வின் நகரில் பிறந்தார். அவரது தந்தை அப்துல்ஸமத் ஆவார். அலி ரஜாய் 4 வயதை கடக்கும்போது தந்தையை இழந்தார். அதன்பிறகு அவர் தனது தாயோடும் சகோதரனுடனும் வாழ்ந்து வந்தார். கஸ்வினில் வளர்ந்த அலி ரஜாய் 1946 ஆம் ஆண்டில் தெஹ்ரானுக்கு குடிபெயர்ந்தார். தெஹ்ரானுக்கு சென்ற பிறகு ஷா எதிர்ப்பு குழுக்களுடனும் கட்சிகளுடனும் அவர் நெருக்கமான வளர்த்துக்கொண்டார். ஆயதுல்லாஹ் மஹ்மூத் தலகானி அவர்களுடன் நெருக்கமாக செயல்பட்ட அவர் 1958 ஆம் ஆண்டில் தர்பிய்யத் மு'அல்லிம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று பட்டம் பெற்றார். ஷாவின் படைகள் அவரது எதிர்த்தரப்பு நடவடிக்கைகளுக்காக மூன்று முறை கைது செய்தன. இறுதியாக அலி ராஜாய் 1974 மே மாதத்தில் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்து விடுவிக்கப்பட்டார்.

இஸ்லாமிய புரட்சிக்கு முன்

தெஹ்ரானுக்குப் பயணித்த அவர் விமானப்படையில் இணைந்து பணியாற்றினார். ஒரு வருடம் கழித்து அவர் விமானப்படையில் இருந்து ராஜினாமா செய்தார். அக்காலகட்டத்தில் அவர் ஆயதுல்லா தலகானி அவர்களுடன் நெருங்கி செயல்பட்டார். 1955 ஆம் ஆண்டில் பிஜார் நகரில் கணித ஆசிரியராக சேவையாற்றினார்.  அதன் பின் அவர் தெஹ்ரானில் மேற் படிப்பைத் தொடர்ந்தார், 1959 இல் கணிதத்தில் தனது கல்வியை நிறைவு செய்தார். அதன்போது அவர் மெஹ்தி பஸர்கான் மற்றும் சஹாபி ஆகிய முன்னணி அரசியல் செயற்பாட்டாளர்களுடன் நன்கு பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். அவர் தெஹ்ரானில் கல்விப் பணியாற்றிய அதேவேளை புள்ளியியல் துறையில் முதுமாணி பட்டத்துக்காக கல்வியையும் தொடர்ந்தார். 1962 இல் ஈரான் சுதந்திர இயக்கத்தின் உறுப்பினராக இணைந்த அவர் 1962 ல் கைது செய்யப்பட்டார் மற்றும் ஷாவின் 'சவாக்' ரகசிய படையினால் ஐம்பது நாட்களுக்கு சிறையிலடைக்கப்பட்டார். 

சிறையிலிருந்து விடுதலையான பிறகு, முஹம்மத் ஜவாத் பஹோனார் மற்றும் ஜலாலுத்தீன் அல் பார்ஸி ஆகியோருடன் சேர்ந்து, அரசியல் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் கூடுதல் அக்கறை காட்டினார். ஷா எதிர்ப்பு சக்திகளுடன் இணைந்து செயற்பட்டதன் காரணமாக அவர் மீண்டும் 1972 ஆம் ஆண்டு  கைதுசெய்யப்பட்டு, 4 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டார். இறுதியாக அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டு, 1979 ல் ஈரானிய இஸ்லாமிய புரட்சி வெற்றிபெறும் தருவாயில் விடுவிக்கப்பட்டார். 

இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு

அவர் இஸ்லாமிய புரட்சியில் தீவிரமாக ஈடுபட்டார் மற்றும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கலாசார தாக்கங்களின் பாதிப்பை ஈரானிய பல்கலைக்கழகங்களிலிருந்து  அகற்றுவதற்கான இயக்கத்தில் ஒரு தலைவராக செயல்பட்டார், அது பின்னர் கலாச்சாரப் புரட்சி என்று அழைக்கப்பட்டது.

இஸ்லாமியப் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர் பின்வரும் முக்கியமான பதவிகளுக்கு ராஜாய் நியமிக்கப்பட்டார்.

  • கல்வி அமைச்சர் 
  • இஸ்லாமிய ஆலோசனைக் குழுவின் வேட்பாளர் 
  • பிரதம மந்திரி
  • ஜனாதிபதி

கல்வி அமைச்சு

மெஹ்தி பசர்க்கன் தலைமையிலான புரட்சிகர இடைக்கால அரசாங்கத்தில் ரஜாய் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதன்போது அவர் பல புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தினார். இஸ்லாத்தை முன்னிலைப் படுத்தி பாடத்திட்டத்தில் பல சீர்திருத்தங்களை செய்தார். ஆசிரிய கல்வி மையங்களை சீர்திருத்துதல், முஸ்லீம் சமுதாயத்திற்கான பொருத்தமான ஆசிரியர் கல்வி முறை ஒன்றை உருவாக்குதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே இஸ்லாமிய நெறிமுறைகளை வளர்த்தல், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை உருவாக்குதல், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கிடையிலான உறவை வளர்த்தல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தினார். இந்த இலக்குகள் ராஜாயிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகப் பட்டன.  அவற்றை அடைந்துகொள்ள பெரும் முயற்சிகளில் அர்ப்பணத்துடன் செயற்பட்டார். பஸர்கானின் அமைச்சரவை ராஜினாமா செய்யும் வரை அவர் ஒன்பது மாதங்களுக்கு கல்வி அமைச்சரக இருந்தார்.

பிரதமராக நியமனம்.

பஸர்கனின் அமைச்சரவையின் ராஜினாமாவைத் தொடர்ந்து அலி ரஜாய் 1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று பிரதமராக நியமிக்கப்பட்டார். இவரது இந்த பதவியின் போதே சதாம் ஹீசைன், அமெரிக்காவினதும் அறபு நாடுகளினதும் தூண்டுதலின் பேரில் ஈரான் மீது பாரிய ஆக்கிரமிப்பு யுத்தமொன்றைத் தொடுத்தார். ஈரானிய அரசின் கவனம் முழுமையாக யுத்தத்தின் பக்கம்  திருப்பப்பட்டது.  நாட்டின் பாதுகாப்பு முன்னுரிமைப் பெற்றது. இவ்வாறிருக்கையிலேயே நாட்டின் ஜனாதிபதியாக இருந்த பனீஸத்ர், உண்மையில் ஒரு சீ.ஐ.ஏ. உளவாளி என்பது கண்டறியப்பட்டடு, பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

(ஈரானில் ஏற்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய ஆட்சியை கவிழ்க்க சதி செய்கின்றனர் என்ற சந்தேகத்தின் பேரில், ஈரானிய மாணவர்கள் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த ராஜதந்திரிகளை பணயக்கைதிகளாக பிடித்துவைத்திருந்த காலம் அது. தூதரகத்தில் இருந்த ஆவணங்களை பரிசீலித்த மாணவர்கள், அமெரிக்காவின் சூழ்ச்சியை மட்டுமல்லாது, நாட்டில் ஜனாதிபதியாக இருந்த பனீஸத்ர், உண்மையில் ஒரு சீ.ஐ.ஏ. உளவாளி என்பதையும் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து பனீஸத்ர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பெண் வேடமணிந்து, நாட்டைவிட்டு தப்பித்து சென்றார்.)

இதனைத் தொடர்ந்து இமாம் கொமெய்னி அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக நிர்வாக சபைக்கு ஆயத்துல்லாஹ் பெஹெஷ்தி தலைமையில் 6 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களுள் அலி ராஜாயியும் ஒருவர். இதன் பிறகு 1981 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு அலி ரஜாய் 91 சதவிகித மக்கள் வாக்குகளால் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். அத்தோடு அவர் முஹம்மத் ஜவாத் பஹோனரை பிரதமராக நியமித்தார். இந்த நியமனத்தை ஈரானிய நாடாளுமன்றமும் உறுதி செய்ததைத் தொடர்ந்து ஒரு புதிய அரசாங்கம் உருவானது.

படுகொலை

1981 ஆகஸ்ட் 30 அன்று, ஜனாதிபதி ரஜாய் மற்றும் பிரதம மந்திரி முகமது ஜவாத் பஹோனருடன் ஈரானின் உச்ச பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கையில் ஒரு நம்பகமான உதவியாளர் மாநாட்டிற்குள் பெட்டி ஒன்றைக் கொண்டுவந்து, இரண்டு தலைவர்களுக்குமிடையில் வைத்துவிட்டுச் சென்றார் என்று சாட்சியாளர்கள் பின்னர் குறிப்பிட்டனர்;.

சிறிது நேரத்தில் அப்பெட்டியில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து சிதறியது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்;பட இன்னும் சிலரும் ஷஹீதாகினார். இச்சம்பவம் இடம்பெறுகையில், இவர்கள் இருவரும் பதவியேற்று ஒரு மாதம் கூட ஆகியிருக்கவில்லை. இந்த பயங்கர செயலைச் செய்தவன் முனாஃபிக்கீன்கள் என்று ஈரானிய மக்களால் அறியப்பட்ட முஜாஹிதீன் கல்க் அமைப்பை சேர்ந்த  மசூத் காஷ்மீரி என்பவனாகும் என்று விசாரணையின் மூலம் தெரியவந்தது. 

ஷஹீதானோரின் உடல்கள் பெஹெஸ்த்தி ஸஹ்ராவில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

========================================================

முஹம்மத் ஜவாத் பஹோனர்

முஹம்மத் ஜவாத் பஹோனர் ஒரு ஈரானிய இறையியலாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார், அவர் பிரதமராக ஆகஸ்ட் 1981 இல் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்துக்கே பணியாற்றினார். பஹோனார் மற்றும் முகம்மது-அலி ரஜாயின் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் முனாபிகீன்கள் என்று அடைக்கப்பட்ட முஜாகிதீன்-இ-கல்க் இயக்கத்தினரால் 1981 ஆம் ஆண்டு ஆகஸட் மாதம் 30ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர்.

ஆரம்ப வாழ்க்கை 

முகமது ஜவாத் பஹோனர் செப்டம்பர் 3, 1933 அன்று ஈரான், கெர்மான் நகரில் பிறந்தார். அவரது தந்தை ஒரு எளிமையான வியாபாரி, கெர்மானில் சிறிய கடை ஒன்றை நடத்திவந்தார். அவரது ஒன்பது பிள்ளைகளில் பஹோனர் இரண்டாவது பிள்ளையாகும். அவரது குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருந்தது. பஹோனர் சிறுவனாக இருக்கையில்  உள்ளூர் பெண் ஒருவர் மூலம் புனித குர்ஆனை ஓதக் கற்றுக்கொண்டார். அதேவேளை அங்கேயே எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார். அதன் பின் ஆயதுல்லாஹ் ஹகீகியின் வழிநடத்தலில் ம'சூமா சன்மார்க்கப் பள்ளியில் ஆரம்ப கல்வியை நிறைவு செய்தார். 1953 ஆம் ஆண்டில் அவர் 'கும'; சன்மார்க்கக் கல்விக்கூடத்தில் சேர்ந்த  இஸ்லாமிய புரட்சியின் தலைவரான றூஹுல்லாஹ் கொமெய்னி அவர்களின் வகுப்பில் சேர்ந்து கற்கலானார். அதன் பிறகு தெஹ்ரானின் பல்கலைக்கழகத்தில் இறையியலில் டாக்டர் பட்டம் பெற்றார். மேலும், தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் ஆசிரிய குழாம் உறுப்பினராக இருந்த அவர் இறையியல் கற்பித்தும் வந்தார்.

இஸ்லாமிய புரட்சிக்கு முன் பஹானர் பஹ்லவி பரம்பரை ஆட்சிக்கு எதிரான கலகங்களில் ஈடுபட்டதுடன் 1963 ஆம் ஆண்டு ஷாவின் 'வெண்புரட்சி' என்ற கண்துடைப்புக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தினார். இதன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார். இமாம் கொமெய்னி ஈரானிலிருந்து நாடுகடத்தப்பட்டிருந்த காலகட்டத்தில், அவரைப் பின்பற்றுவோரில் செல்வாக்கு மிகுந்தவராக பஹோனர் காணப்பட்டார். இவரின் உரையென்றால் {ஹஸைனியே இர்ஷாத் மண்டபம் மாணவர்களால் நிறைந்து காணப்படும் அளவுக்கு ஆக்ரோஷமாக உரையாற்றுவார்.

ஈரானிய இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் 

புரட்சிக்குப் பிறகு பஹோனார் இஸ்லாமிய குடியரசுக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினராகவும் ஈரான் புரட்சியின் கவுன்சிலின் ஆரம்பகால உறுப்பினராகவும் ஆனார். 1981 மார்ச்சில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர் வல்லுநர்களின் கவுன்சிலின் உறுப்பினராகவும்
இருந்தார். பஹோனார், முஹம்மத் அலி ரஜாய் அவர்களுடன் இணைந்து ஈரானிய பல்கலைக்கழகங்களை மேற்கத்திய கலாச்சார பாதிப்புகளின் தாக்கத்தில் இருந்து காக்கும் பணியில் அயராது உழைத்தார். 1981 ஜூன் 28 இல் ஆயத்துல்லாஹ் முகம்மது பெஹெஷ்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், அவர் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார், மார்ச் 1981 முதல் ஆகஸ்ட் 1981 வரை முகமட் அலி ரஜாயின் பிரதம அமைச்சரின் கீழ் பஹோனார் கலாச்சார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டலின் அமைச்சராகவும் பணியாற்றினார். 1981 ஆகஸ்ட் 5 இல் ரஜாய் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர் பஹோனரை பிரதம மந்திரியாக தேர்ந்தெடுத்தார்.

படுகொலை

1981 ஆகஸ்ட் 30 ஆம் திகதி தெஹ்ரானில் உள்ள இஸலாமிய குடியரசு கட்சியின் அலுவலகத்தில் குண்டு வெடித்தபோது, ராஜாய் மற்றும் பஹோனர் உடன் இஸ்லாமிய குடியரசுக் கட்சியினர் இதர உறுப்பினர்களும் படுகொலை செய்யப்பட்டனர். இந்து குண்டுவெடிப்பு, இஸ்லாமிய குடியரசுக் கட்சியில் ஒரு பாதுகாப்பு அதிகாரியாய்  இருந்த  மாஸூத் கஷ்மிரி என்பவனால்  நடத்தப்பட்டது. 

ராஜாயி அவரது அமைச்சரவையை இமாம் கொமெய்னிக்கு அறிமுகப்படுத்த வந்தபோது இந்த கஷ்மிரி என்பவன் பாதுகாப்பு அதிகாரியாக கூடவந்துள்ளான் என்றும் அவன் ஒரு சூட்கேஸை கையில் கொண்டுவந்ததன் காரணமா உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்றும் இமாம் கொமெய்னியின் மகனான அஹ்மத் கொமெய்னி பிறகு குறிப்பிட்டார். சதாம் ஹூசேன் ஈரான் மீது யுத்தம் தொடுத்திருந்த காலமது. இந்த காஷ்மிரி என்பவன் சதாம் ஹூசேனின் கைக்கூலியாக செயற்பட்டு வந்துள்ளான் என்ற சங்கதி பிறகு அறியவந்தது.