Contributors

Friday, August 15, 2025

அர்பயீன் யாத்திரை: அன்பு மற்றும் அர்ப்பணிப்பை உணர்த்தும் உலகின் மிகப்பெரிய யாத்திரை

 Arbaeen Walk: World’s largest pilgrimage of love and devotion

 

Arbaeen Walk: World’s largest pilgrimage of love and devotion

 

ஸியாரத் அர்பயீன் என்பது ஈராக்கில் உள்ள புனித நகரமான கர்பலாவில் நடைபெறும் வருடாந்த யாத்திரை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான யாத்ரீகர்கள் ஈராக்கின் கர்பலாவுக்கு வருகிறார்கள், பெரும்பாலும் அருகிலுள்ள நகரமான நஜாஃப்பிலிருந்து பாதயாத்திரையாக அங்கு வருகிறார்கள்.

 

இமாம் ஹுஸைன் இப்னு அலீ (அலை) அவர்கள் இஸ்லாத்திற்காக உயிர் நீத்த தியாக ஆண்டு நிறைவைக் குறிக்கும் 40 நாட்களைக் கொண்ட அர்பயீன் யாத்திரை, உலகெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் உலகின் மிகப்பெரிய அமைதியான கூட்டமாக கருதப்படுகிறது.

 

ஈராக்கில் சுன்னி சமூகத்தை ஆதரித்த ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசைன் (1979-2003) அவருடைய ஆட்சிக் காலத்தில் அர்பயீன் யாத்திரையை அரசியல் அச்சுறுத்தலாகக் கருதி தடை செய்தார். 2003 ஆம் ஆண்டில் சதாம் பதவி நீக்கம் செய்யப்பட்ட உடனேயே இந்த யாத்திரை புமீண்டும் உயிர்பெற்றது, இந்த பல நாள் நிகழ்விற்கான மொத்த வருகை எண்ணிக்கை அந்த ஆண்டில் இரண்டு மில்லியன் பங்கேற்பாளர்களிலிருந்து 2008 ஆம் ஆண்டில் ஒன்பது மில்லியனாக அதிகரித்தது, மேலும் 2014 ஆம் ஆண்டில் சுமார் இருபது மில்லியனாக அதிகரித்து, அந்த ஆண்டின் புனித யாத்திரையை வரலாற்றில் இந்து திருவிழாவான கும்பமேளாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கூட்டமாக ஆக்கியது. இந்த எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டில் இருபத்தி இரண்டு மில்லியனை எட்டியதாக ஈராக் அரசு தரப்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2016 ஆம் ஆண்டில், அல்-கோயி அறக்கட்டளை சுமார் இருபத்தி இரண்டு மில்லியன் யாத்ரீகர்களை மதிப்பிட்டுள்ளது. கும்பமேளா உலகின் மிகப்பெரிய கூட்டமாக கருதப்பட்டாலும் இது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையே நடத்தப்படுகிறது. இருப்பினும் அர்பயீன் யாத்திரை வருடா வருடம் இருபதிற்கும் மேற்பட்ட மில்லியன் மக்களால் கூடப்படுவதால், இது “உலகின் மிகப்பெரிய வருடாந்திர கூட்டம் ஆக கருதப்படுகிறது. கடந்த 3 வருடங்களில்- 2022, 2023, 2024- அர்பயீன் யாத்ரீகர்களின் வருகை அண்ணளவாக;

  • 2022 - 22.1 மில்லியன்
  • 2023 - 22 மில்லியன்
  • 2024 - 21.4 மில்லியன்

 

ஆஷுரா எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாளுக்குப் பிறகு நாற்பது நாட்களை அர்பயீன் குறிக்கிறது. ஹிஜ்ரி 61 (கி.பி. 680) இல் இந்த நாளில், உமய்யா கலீபா யஸீத் இப்னு முஆவியாவின் (ஆட்சி. 680-683) இராணுவத்திற்கு எதிரான கர்பலா போரில் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் தனது உறவினர்கள் மற்றும் அவரது சிறிய கூட்டத்தாருடன் கொல்லப்பட்டார்.

 

இஸ்லாமிய நாட்காட்டியின் இரண்டாவது மாதமான சஃபர் மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஈராக்கின் வறண்ட பாலைவனங்கள் மனிதகுலத்தின் அன்பு மற்றும் ஒற்றுமையின் மிகப்பெரிய வெளிப்பாட்டின் கட்டமாக இந்த ஸியாரத் அர்பயீன் மாற்றுகிறது. அரபு மொழியில், "அர்பயீன்" என்றால் "நாற்பது" என்று பொருள், இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் இறந்த 40 வது நாளை இது குறிக்கும், மேலும் "ஸியாரத்" என்றால் "வருகை" என்று பொருள். ஹஜ் (மக்காவுக்கு புனித யாத்திரை) போன்று ஸியாரத் அர்பயீன் யாத்திரை ஒரு இஸ்லாமிய கடமையாக கருதப்படவில்லை என்றாலும், இது ஷியாவின் ஆன்மீக வாழ்க்கையில் ஒரு ஒருங்கிணைந்த பங்கை வகிக்கிறது.

 

மூன்றாவது ஷியா இமாமும் நபிகள் நாயகத்தின் பேரனுமான இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் கி.பி 680 இல் கர்பலா போரில் ஷஹீதானார். அவர்களின் மரணத்தை கௌரவிக்கும் வகையில் இந்த யாத்திரை வருடாந்தம் மேற்கொள்ளப்படுகிறது. முஸ்லீம் வரலாற்றாசிரியர்களால் பெரும்பாலும் இறை நிந்தனையாளர் மற்றும் ஒழுக்கக்கேடானவர் என்று சித்தரிக்கப்படும் அன்றைய ஆட்சியாளரான யஸீதுக்கு விசுவாசத்தை உறுதிமொழி எடுக்க மறுத்த இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், ஒரு சிறிய குடும்பம் மற்றும் விசுவாசமான தோழர்களுடன், கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக 40,000 பேர் கொண்ட இராணுவத்தை எதிர்த்து நின்றார். அவரது தியாகம் - அவரது குழந்தை மற்றும் அன்புக்குரியவர்களுடன் - தைரியம், நீதி மற்றும் தியாகத்தின் காலமற்ற அடையாளமாக மாறியது. ஷியா கோட்பாட்டில், கர்பலா நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான நித்திய போராட்டத்தையும், சுய தியாகத்தின் உச்சத்தையும் குறிக்கிறது.

 

ஸியாரத் அர்பயீன் கர்பலாவின் இயக்கத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையைக் குறிக்கிறது. ஆஷுரா நாளின் முக்கியத்துவத்திற்கு ஒத்த இந்த நாள் பல காரணங்களுக்காக சிறப்பு பெறுகிறது – அஹ்லுல் பைத்கள் இந்த நாளில் கர்பலா நாட்டை அடைந்து இஸ்லாத்திற்காக தங்கள் உயிரைக் கொடுத்த ஸையித் அல்-ஷுஹதா இமாம் ஹுஸைன் (அலை) அவர்களுக்கும் அவர்களின் விசுவாசமான குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் தியாகத்தை மதித்து நினைவுகூரும் நாளாகும்.

 

நஜாஃப் முதல் கர்பலா வரை: நம்பிக்கையின் நடைப்பயணம்

 

அர்பயீன் பயணம் பெரும்பாலும் புனித நகரமான நஜாப்பில் தொடங்குகிறது, அங்கு யாத்ரீகர்கள் இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் தந்தையும் ஷியா முஸ்லிம்களின் முதல் இமாமுமான இமாம் அலீ (அலை) அவர்களின் ஸியாரத்திற்கு வருகை தருகிறார்கள். அங்கிருந்து கர்பலாவை நோக்கி 50 மைல் (80 கிலோமீட்டர்) மலையேற்றத்தை மேற்கொள்கின்றனர். ஈராக்கின் கடுமையான வெயிலின் கீழ் திறந்த பாலைவனத்தின் வழியாக அமையப்பெறும் இந்த நடைப்பயணம் முழுமையடைவதற்கு பல நாட்கள் எடுக்கும். இருப்பினும், வயது, உடல்நலம் அல்லது பிராந்திய எல்லைகளை கடந்து, யாத்ரீகர்கள் விடாமுயற்சியுடன் இந்த பயணத்தை மேற்கொள்கின்றனர் - தங்கள் இறைபக்தியால், ஆன்மீகத்தால் ஒன்றுபடுகிறார்கள்.

 

வழியில், ஆயிரக்கணக்கான மௌகிப்கள் (Mawkibs - தன்னார்வ சேவை நிலையங்கள்) சாலையில் வரிசையாக நின்று, இலவச உணவு, தண்ணீர், மருத்துவ உதவி மற்றும் ஓய்வு நிலையங்களை வழங்குகின்றன. இங்கு விருந்தோம்பலுக்கு எல்லையே இல்லை; ஏழைகள் கூட தங்களால் முடிந்ததை கொடுக்கிறார்கள் - வீட்டில் சமைத்த உணவு முதல் சோர்வடைந்த பயணிகளுக்கு எளிய கால் மசாஜ் வரை. ஈராக்கியர்கள், ஈரானியர்கள் மற்றும் டஜன் கணக்கான பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நிலையங்களை நடத்துகிறார்கள், இது இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் தாராள மனப்பான்மை மற்றும் தன்னலமற்ற மதிப்புகளை உள்ளடக்கியது.

 

அர்பயீன் இன் உள்ளார்ந்த அர்த்தம்

தமிழில் "நாற்பது" என்று பொருள் படும் "அர்பயீன்", பாரம்பரிய 40 நாள் துக்க காலத்தின் முடிவைக் குறிக்கிறது. ஷியா முஸ்லிம்களைப் பொறுத்தவரை, புனித யாத்திரை என்பது ஒரு மத சடங்கை விட மேலானது - இது இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் தன்னை இழந்து பாதுகாத்த இஸ்லாமிய மதிப்புகளை நிலைநிறுத்துவதற்கான ஒரு உறுதிமொழியாகும். "லப்பைக் யா ஹுஸைன்" ("நான் இங்கே இருக்கிறேன், ஓ ஹுஸைன்") என்ற பயணிகளின் கோஷம் சாலை முழுவதும் எதிரொலிக்கிறது, இது உண்மை மற்றும் நீதிக்கான தனது பணியைத் தொடர யாத்ரீகர்களின் தயார்நிலையைக் குறிக்கிறது.

 

Arbaeen Walk: World’s largest pilgrimage of love and devotion

 

ஒற்றுமைக்கான உலகளாவிய செய்தி

ஸியாரத் அர்பயீன் யாத்திரையை தனித்துவமாக்குவது அதன் உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட உள்ளார்ந்த அர்த்தம். ஷியா, சுன்னி, கிறிஸ்தவர் மற்றும் நாத்திகர்கள் என அனைத்து மதங்களையும் சேர்ந்த பார்வையாளர்கள் ஒன்றாக நடந்து, உணவு மற்றும் கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் தேசியக் கொடிகள் ஒருமித்த குரலில் அசைந்து, ஒரு சக்திவாய்ந்த செய்தியை வெளிப்படுத்துகின்றன: இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் மரபு அனைத்து மனிதகுலத்திற்கும் சொந்தமானது.

 

பலருக்கு, அர்பயீன் என்பது கற்றல் மற்றும் உரையாடலுக்கான நேரம். யாத்ரீகர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள், சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கிறார்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கிடையேயான பிணைப்புகளை வலுப்படுத்துகிறார்கள். இன்றைய உலகில் சமாதான சகவாழ்வுக்கு இது ஒரு உயிர்ப்புள்ள சிறந்த உதாரணம்.

 

கர்பலா வருகை

களைத்துப்போன பயணிகளுக்கு, கர்பலாவின் தங்க குவிமாடங்களின் காட்சி பிரமிக்க வைக்கிறது. இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் மற்றும் அவரது சகோதரர் ஹஸ்ரத் அப்பாஸ் (அலை) ஆகியோரின் அடக்கஸ்தலங்களுக்கு இடையிலான இடமான பய்ன் அல்-ஹரமைன் (Bayn al-Haramayn) இற்க்குள் நுழையும்போது கண்ணீர் ததும்புகிறது. இங்கே, அவர்கள் பெருந்திரள் துக்க அனுஷ்டானங்களில் கலந்துகொள்கிறார்கள், துஆ பிரார்த்தனைகளை ஓதுகிறார்கள், தொண்டு செயல்களைச் செய்கிறார்கள் - ஒவ்வொரு யாத்ரீகரும் தங்கள் ஆன்மீக தொடர்பை ஆழமாக வலுப்படுத்துகிறார்கள்.

 

இது ஏன் முக்கியமானது

அர்பயீன் யாத்திரை என்பது உலகின் மிகப்பெரிய வருடாந்திர கூட்டம் மட்டுமல்ல - இது தன்னலமற்ற தன்மை, ஒற்றுமை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பின் ஒரு நெகிழ்ச்சியான வெளிப்பாடு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தைகளில்: "ஹுஸைன் என்னைச் சேர்ந்தவர், நான் ஹுஸைனைச் சேர்ந்தவன். ஹுஸைனை நேசிப்போரை அல்லாஹ் நேசிக்கின்றான்."

 

மில்லியன் கணக்கானவர்கள் தாயகம் திரும்புகையில், அவர்கள் தங்களுடன் ஒரு புனிதமான பயணத்தின் நினைவுகளை மட்டும் சுமக்கவில்லை, மாறாக இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் இஸ்லாத்தை பாதுகாக்க தனது உயிரைக் கொடுத்த கொள்கைகளின்படி வாழ்வதற்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பையும் ஏந்திச் செல்கின்றனர்.

https://en.mehrnews.com/news/234993/Arbaeen-Walk-World-s-largest-pilgrimage-of-love-and-devotion

No comments:

Post a Comment