Thursday, January 11, 2024

பாலஸ்தீனர்களின் படுகொலையை நியாயம் என்று கருதுகிறது ஜேர்மனி

 Why is Germany so viciously anti-Palestinian?

ஜேர்மனி ஏன் பாலஸ்தீனத்திற்கு எதிராக இவ்வளவு கொடூரமாக உள்ளது?

அக்டோபர் 14, 2023 அன்று பிராங்பேர்ட்டில் பாலஸ்தீனிய ஆதரவு பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை கலக தடுப்பு போலீசார் கைது செய்தனர் [File: Kirill Kudryavtsev/AFP]

இஸ்ரேலுக்கான ஜேர்மனிய ஆதரவு இனவாத குடியேற்ற-எதிர்ப்பு கொள்கைகளை அதிகரிப்பதற்கும் யூதர்களுக்கு எதிராக அது இழைத்த குற்றங்களை குறைத்து மதிப்பிடுவதற்கும் ஒரு மூடிமறைப்பாக பயன்படுத்தப்படுகிறது.


Denijal Jegić

Author and researcher

Published On 7 Jan 2024

இஸ்ரேல் தனது சமீபத்திய போரை காஸா மீது தொடங்கியதில் இருந்து, ஜேர்மனி அதன் கூட்டாளிக்கு ஆதரவாக உறுதியாக நிற்கிறது. இஸ்ரேலியப் படைகள் நிகழ்த்திய இனப்படுகொலைகள் அதிகரித்த போதிலும், ஜேர்மன் அரசாங்கம் அசையவில்லை. அக்டோபர் 12 அன்று, சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ், "ஜேர்மனிக்கு உள்ள ஒரே தெரிவு இஸ்ரேலுடன் இணைந்து நிற்பதாகும்" என்று பிரகடனம் செய்தார். உண்மையில் அது இந்த நிலைப்பாட்டில் இருந்து நகரவில்லை.

ஜேர்மனிய அரசாங்கம் இஸ்ரேலுக்கு பரந்த அளவிலான அரசியல் மற்றும் இராஜதந்திர ஆதரவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பாலஸ்தீனிய குடிமக்களை இஸ்ரேல் படுகொலை செய்வதற்கு வசதியாக ஆயுத ஏற்றுமதியையும் துரிதப்படுத்தியுள்ளது.

ஜேர்மனிய அரசியல் உயரடுக்கு காஸாவில் போர்நிறுத்தத்திற்கான அழைப்புகளை கடுமையாக நிராகரித்துள்ளதுடன், சர்வதேச சட்டத்தின் கீழ், இஸ்ரேல் தான் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனிய மக்களிடமிருந்து "தன்னை தற்காத்துக்கொள்ளும் உரிமையை" கொண்டுள்ளது என்ற பொய்யான கூற்றை இடைவிடாது மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. அது பல தசாப்த காலமாக இஸ்ரேல் அரசு மேற்கொண்டு வரும் நிறவெறி மற்றும் இனச்சுத்திகரிப்பை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

ஜேர்மனிய அரசியல் உயரடுக்கு அதன் நிலைப்பாட்டை அது இழைத்த ஹோலோகாஸ்ட் மீதான குற்ற உணர்வை இஸ்ரேலை ஆதரிப்பதன் மூலம் திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்துடன் நியாயப்படுத்தியுள்ளது. ஆனால் "தார்மீகரீதியில் செயல்படுதல்" மற்றும் "அதன் குற்றங்களுக்கு பிராயச்சித்தம்" என்ற போர்வையில், ஜேர்மன் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் உண்மையில் அறபு-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத இனவாதத்தை மேலும் இயல்பாக்கவும், இன்னும் கடுமையான குடியேற்ற-விரோத கொள்கைகளை நியாயப்படுத்தவும், வெள்ளை ஜெர்மானியர்களிடையே நீடித்து வரும் யூத-விரோதத்தை குறைத்து மதிப்பிடவும் முயல்கின்றனர்.

பாலஸ்தீன எதிர்ப்பு ஒரு அரசு கொள்கை

ஜேர்மன் சமூகத்திற்குள் பாலஸ்தீனர்கள் ஓரங்கட்டப்படுவதும் பாலஸ்தீனிய-சார்பு செயல்பாடுகளை ஒடுக்குவதும் ஜேர்மனியில் ஒரு புதிய நிகழ்வு அல்ல. அக்டோபர் 7க்கு வெகு காலத்திற்கு முன்பே, ஜேர்மன் அதிகாரிகளின் மத்தியில் பாலஸ்தீன-விரோத தந்திரோபாயங்கள் ஏற்கனவே தீவிரமடைந்து கொண்டிருந்தன. சியோனிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்பட்டன, யூத ஆர்வலர்கள் உட்பட பாலஸ்தீனிய ஆதரவு குரல்கள் அடக்கப்பட்டன, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விருது வழங்கும் விழாக்கள் கூட ரத்து செய்யப்பட்டன.

எனவே சமீபத்திய வாரங்களில் ஆர்ப்பாட்டங்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் பொலிஸ் வன்முறை அதிகரித்திருப்பது ஆச்சரியமல்ல. பல பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன, சில நேரங்களில் அதுவும் அவை தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அல்லது பலத்த போலீஸ் பிரசன்னத்துடன் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படுகின்றன. பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் யூத-விரோதத்தை வெளிப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவை இந்த தடைகளுக்கான காரணங்களாக அதிகார வர்க்கம் காட்டுகிறது.

காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்த முதல் வாரங்களில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் போலீஸ் வன்முறையை அனுபவித்துள்ளனர், சிலர் வெறுப்பைத் தூண்டினர் என்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சிறிய யூத சிறுபான்மையினரிடையேயான சியோனிச எதிர்ப்புக் குரல்கள் கூட நசுக்கப்பட்டு.

பாலஸ்தீன ஆதரவு செயல்பாடுகள் தொடர்பான பேச்சு சுதந்திரமும் நசுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஜெர்மன் மத்திய உள்துறை அமைச்சு இஸ்ரேலை அழிப்பதற்கான அழைப்பாகக் கருதி, "ஆற்றிலிருந்து கடல் வரை" என்ற கோஷத்தை தடை செய்தது. பவேரியா அரசு இந்த சொற்றொடரை "பயங்கரவாதத்தின் சின்னம்" என்று அறிவித்துள்ளது.

ஜேர்மனியின் முன்னணி கட்சிகளில் ஒன்றான கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU), "சுதந்திர பாலஸ்தீனம்" என்ற வார்த்தைகளுக்கு ஜேர்மனியில் இடமில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளதுடன், இந்த சொற்றொடரை "சர்வதேச அளவில் செயலூக்கமுள்ள பயங்கரவாத கும்பலின் போர்க்குரல்" என்று கண்டனம் செய்துள்ளது.

கல்வி நிறுவனங்களிலும் பேச்சு சுதந்திரம் அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ளது. ஜேர்மன் பல்கலைக்கழகங்கள் அரசாங்கத்தின் இஸ்ரேல் சார்பு நிலைப்பாட்டைப் பின்பற்றி வரும் நிலையில், வளாகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் பொலிஸ் வன்முறை மற்றும் ஊடகங்களில் அவதூறு பிரச்சாரங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கெஃபியே தாவணி போன்ற பாலஸ்தீன ஆதரவு சின்னங்கள் சில நிறுவனங்களால் தடை செய்யப்பட்டுள்ளன. பெர்லினில் உள்ள ஒரு பள்ளியில், பாலஸ்தீனக் கொடியை ஏற்றிய ஒரு மாணவரை ஆசிரியர் ஒருவர் உடல்ரீதியாகத் தாக்கியுள்ளனர்.

பாலஸ்தீன-சார்பு செயல்பாட்டின் இந்த திட்டமிட்ட ஒடுக்குமுறை ஜேர்மனியின் டிஸ்டோபியன் போன்ற யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது, இதில் இனப்படுகொலையை எதிர்ப்பது ஜேர்மன் அரசுக்கு விசுவாசமற்ற செயலாக பார்க்கப்படுகிறது, இதனால் குற்றமயமாக்கலை நியாயப்படுத்த முடியும்.

ஜேர்மனிய அதிகாரிகள் பாலஸ்தீன எதிர்ப்புவாதத்தை ஒரு தேசிய நலன் மற்றும் ஒரு அரசு கொள்கையாக தெளிவாக அடையாளம் கண்டுள்ளனர். பழங்குடி பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக தொடர்ச்சியான வன்முறை தேவைப்படும் தற்போதைய நிறவெறி வடிவத்தில் இஸ்ரேலின் இருப்பை அவர்கள் முழு மனதுடன் ஆதரிக்கின்றனர். நிச்சயமாக, ஜேர்மனியின் சொந்த இனப்படுகொலை வரலாறு மற்றும் தொடர்ச்சியான இனவாதத்திற்கு இது முரணானது அல்ல.

ஜேர்மன் இனவெறிக்கு புலம்பெயர்ந்தவர்கள் மீது குற்றம் சாட்டுதல்

காஸாவில் நடந்த இனப்படுகொலை ஜேர்மனியில் ஏற்கனவே நிலவும் வெளிநாட்டவர் விரோத மற்றும் இனவாத உணர்வுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ஜேர்மனிய அதிகாரிகள் குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் அரேபியர்களையும், பொதுவாக இன சிறுபான்மையினரையும் ஜேர்மன் சமூகத்திற்கு ஆபத்தானவர்களாக சித்தரிக்க தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

நவம்பர் 8 அன்று, ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் பாலஸ்தீன மற்றும் அறபு வம்சாவளியைச் சேர்ந்த ஜெர்மானியர்கள் ஹமாஸ் மற்றும் யூத-எதிர்ப்புவாதத்திலிருந்து விலகி இருக்குமாறு அழைப்பு விடுத்தார். எனவே, பாலஸ்தீன எதிர்ப்பு இயக்கம் ஜேர்மன் அரசால் "பயங்கரவாத அமைப்பு" என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர் மறைமுகமாக ஒரு முழு சமூகத்தையும் பயங்கரவாதத்தின் பொதுவான சந்தேகத்துடன் பார்க்க தலைப்பட்டுள்ளார்.

நவம்பரில், மத்திய நீதித்துறை அமைச்சர் மார்கோ புஷ்மன் ஒரு பேட்டியில் "யூத-விரோதிகள் ஜேர்மன் குடிமக்களாக மாறுவதை நாங்கள் விரும்பவில்லை." என்று கூறினார்:

புலம்பெயர்ந்தவர்கள் ஒரு பயங்கரவாத ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள் மற்றும் யூத-விரோதத்துடன் வருகிறார்கள், அதை பரப்புகிறார்கள் என்ற கூற்றுக்கள் ஜேர்மனியின் புலம்பெயர்வு மற்றும் அகதிகள் கொள்கையை மாற்றுவதற்கான ஒரு நியாயப்படுத்தலாக பயன்படுத்தப்படுகின்றன.

CDU தலைவர் பிரெடெரிக் மெர்ஸ், காஸாவில் இருந்து அதிகமான அகதிகளுக்கு ஜேர்மனி இடமளிக்க முடியாது என்று கூறினார், "நாட்டில் போதுமான யூத-விரோத இளைஞர்கள் உள்ளனர்" என்று கூறினார்.

ஏற்கனவே, குடியேற்றத்தைக் குறைக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அக்டோபரில், நிராகரிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை வெளியேற்றுவதை எளிதாக்கும் ஒரு கடுமையான நாடுகடத்தல் கொள்கையை அனுமதிக்கும் வரைவு சட்டத்தை கூட்டாட்சி அரசாங்கம் ஆதரித்தது.

ஆனால் நாட்டில் நிலவும் இனவாத மற்றும் இனவெறி உணர்வுகள் கொள்கைகளில் மட்டும் பிரதிபலிக்கவில்லை. ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவுரைகளை வழங்கி, ஜேர்மன் வலதுசாரி சிறுபத்திரிகையான BILD வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சமூகம் தழுவிய ஒருமித்த கருத்து என்னவென்று அவர்கள் இப்போது வரையறுக்கின்றனர்.

கடந்த தசாப்தத்தில் அறபு அகதிகளின் வருகையைக் குறிப்பிட்டு, செய்தித்தாள் ஜேர்மனியில் எது அனுமதிக்கப்படுகிறது அல்லது ஏற்றுக்கொள்ளப்படாதது என்பது குறித்து 50 அறிவுறுத்தல்களை முன்வைத்தது.

அறிக்கையின் முன்னுரை பின்வருமாறு கூறுகிறது: "எங்கள் உலகம் குழப்பத்தில் உள்ளது, நாம் அதன் நடுவில் இருக்கிறோம். இஸ்ரேல் மீதான ஹமாஸின் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, எங்கள் மதிப்புகள், ஜனநாயகம் மற்றும் ஜேர்மனிக்கு எதிராக நாட்டில் வெறுப்பின் ஒரு புதிய பரிமாணத்தை நாங்கள் அனுபவித்து வருகிறோம்”.

யூத-எதிர்ப்புவாதத்திற்கு ஜேர்மனி "இல்லை" என்றும், "நாங்கள் வாழ்க்கையை நேசிக்கிறோம், மரணத்தை அல்ல", "தயவுசெய்து நன்றி கூறுகிறோம்", "நாங்கள் முக்காடு அல்லது பர்தா அணிவதில்லை" மற்றும் "நாங்கள் குழந்தைகளை திருமணம் செய்வதில்லை", "ஆண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருக்க முடியாது" என்று அறிவிக்கிறோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும்.

தேர்தல் அறிக்கையின் வெறித்தனமான இஸ்லாமோபோபியா வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் அதையும் தாண்டி, பாலஸ்தீன மக்கள் தங்கள் சொந்த தாயகத்தில் இனப்படுகொலையை எதிர்கொண்டுள்ள நேரத்தில் வெள்ளை ஜெர்மானியர்கள் தங்களை "அச்சுறுத்தலில்" இருப்போராக மற்றும் "பாதிக்கப்பட்டவர்கள்" என்று கருதும் அபத்தத்தை இது பிரதிபலிக்கிறது.

இது ஜேர்மன் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள வெள்ளை மேலாதிக்கத்தையும் அம்பலப்படுத்துகிறது. உண்மையில், காஸாவில் என்ன நடக்கிறது என்பதற்கு ஜேர்மன் அதிகாரிகளின் எதிர்வினை, அவர்கள் ஜேர்மன் சமூகத்தில் இனவாத படிநிலைகளை வலுப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் விரும்புகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது: மேல்மட்டத்தில் உள்ள வெள்ளை ஜெர்மானியர்கள் எஜமானர்களாக இருந்துகொண்டு இருக்கையில் "மூன்றாம் உலக" மக்கள், இஸ்ரேலிய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட, அடிமட்டத்தில், மௌனமாக கீழ்த்தரமான வேலைகளைச் செய்கிறார்கள். அவர்கள் சக மனிதர்களாகக் கூட மதிக்கப்படுவதில்லை. அதே நேரம் தங்கள் நன்றியைக் காட்டவும் ஜேர்மன் சமூகத்துடன் "ஒருங்கிணைக்கவும்" எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

ஜேர்மன் யூத-எதிர்ப்புவாதத்தை மூடிமறைத்தல்

ஆனால் ஜேர்மனியில் வெள்ளை இனத்தவர் அல்லாத புலம்பெயர்ந்தவர்களால் கொண்டு வரப்பட்டது தான் யூத-விரோதம், அது நாட்டிற்கு ஒரு வெளிநாட்டு "இறக்குமதி" என்று தவறாக சித்தரிப்பதில் இன்னும் தீங்கு விளைவிக்கும் ஒன்று உள்ளது. பலம்பெற்றுவரும் வரும் இந்த பிரபலமான பொய் ஜேர்மனியின் மிருகத்தனமான, யூத-விரோத வரலாற்றை குழப்புகிறது மற்றும் எப்படியாவது யூத மக்களின் துன்பத்திற்கான பழியை ஐரோப்பிய இனவெறி, குடியேற்ற-காலனித்துவ ஆட்சியால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்கள் மீது சுமத்துகிறது.

இது ஜெர்மன் சமூகத்தின் யூத-விரோத நிகழ்காலத்தையும் மறைக்கிறது. ஜெர்மனியில் யூத எதிர்ப்பு உணர்வு இன்னும் நீடிக்கிறது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஆவணப்படுத்தப்பட்ட யூத-விரோத சம்பவங்களில் பெரும்பாலானவை அரசியல் வலதுசாரிகளாலேயே  செய்யப்படுகின்றன.

தீவிர வலதுசாரி கட்சியான ஏஎஃப்டி (AfD) சமீபத்திய வாரங்களில் பிரபலத்தில் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது தற்செயலானது அல்ல. டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து வந்த கருத்துக்கணிப்புகளின்படி, அது இப்போது 23 சதவீதமாக நிற்கிறது, இது வலதுசாரி கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது மற்றும் தற்போதைய ஆளும் கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியையும் விட மிகவும் முன்னணியில் உள்ளது.

ஏஎஃப்டி பிரதிநிதிகள் ஜேர்மன் இன-தேசியவாதத்தை மகிமைப்படுத்தியுள்ளனர் மற்றும் நாஜி ஆட்சியின் குற்றங்களை பெரிதுபடுத்துவதில்லை. அதே நேரத்தில் புலம்பெயர்ந்தவர்கள் யூத-விரோதவாதிகள் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் மற்றும் "இறக்குமதி செய்யப்பட்ட யூத-எதிர்ப்புவாதத்தை" எதிர்த்துப் போராடுவதற்கு கூட்டாட்சி அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோருகின்றனர்.

சியோனிசம் மற்றும் ஜேர்மனிய நச்சு தேசியவாதத்தின் இந்த கலவையானது யூத சமூகம் உட்பட சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத வன்முறையை மேலும் தூண்டக்கூடும்.

ஜேர்மனியின் பாலஸ்தீனிய எதிர்ப்பு என்பது ஜேர்மனியின் இனவெறி குற்றங்களுக்கு எதிர்வினையாக பார்க்கப்படாமல் அதன் தொடர்ச்சியாக பார்க்கப்பட வேண்டும். பாலஸ்தீனியர்கள் உட்பட இஸ்ரேலிய மற்றும் ஜேர்மன் வன்முறையால் பாதிக்கப்பட்ட பிறர் ஒருபோதும் போதுமான மனிதர்கள் என்ற நிலையில் கருதப்படுவதில்லை.

ஜேர்மனியின் காலனித்துவ இனப்படுகொலைகள் மற்றும் தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு மற்றும் பிற இடங்களில் இனவாத ஆட்சிகளுக்கு அது வழங்கிய ஆதரவு - அவை ஒருபோதும் பொது விவாதங்களில் போதுமான கவனத்தைப் பெறவில்லை - போலவே பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையில் அதன் பங்கு இனவாத படிநிலைகளையும் ஒரு "நாகரிகமான" மற்றும் "தார்மீக ரீதியாக உயர்ந்த" நாடு என்ற அதன் சொந்த சுய பிம்பத்தையும் நிலைநிறுத்த முயற்சிக்கிறது.

இவ்வாறு ஜேர்மனிய ஆதரவுடன் பாலஸ்தீனர்களை படுகொலை செய்வது வெள்ளையின, இனவாத ஜேர்மன் மேலாதிக்கத்தின் கற்பனைகளை வலுப்படுத்த உதவுகிறது.

https://www.aljazeera.com/opinions/2024/1/7/why-is-germany-so-viciously-anti-palestinian 

No comments:

Post a Comment