Abu-Muhammad
Muslih al-Din bin Abdullah Shirazi, Saadi Shirazi
அபு-முஹம்மது முஸ்லிஹ் அல்-தீன் பின்
அப்துல்லா ஷிராஸி (ஸஅதி ஷிராஸி). மத்திய காலத்தில் இருந்த முக்கிய பாரசீக
கவிஞர்களில் ஸஅதி ஷீராஸியும் ஒருவராவார். அவர் ஷிராஸ் நகரில் 1184 ஆம் ஆண்டில்
பிறந்து,
1283 அல்லது
1291 ஆம் ஆண்டில், ஈரானில் உள்ள அதே நகரில் உயிர் நீத்தார். இவரின்
பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் எங்கும் பதியப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. ஆயினும் அவரது கவிதை ஒன்றில் தனது சிறு
வயதில், திருவிழாவின் போது தனது தந்தையுடன் வெளியே
செல்லும் நினைவுகளை அவர் விவரிக்கிறார். இதிலிருந்து ஸஅதி சிறுவனாய் இருக்கும்
போதே தனது தந்தையை இழந்துள்ளார் என்று அறிய முடிகிறது.
ஈரான் மீதான மங்கோலிய படையெடுப்பு காரணமாக
இடம்பெயர்ந்த, ஸஅதி 30 ஆண்டுகாலமாக நாடுநாடாக சுற்றியலைந்தார்.
ஸஅதியின் தரமான எழுத்துக்களும் அவருடைய கவிதைகளில் பொதிந்திருந்த ஆழமான சமூக
மற்றும் அறநெறி கருத்துக்களும் அவருக்கு ஒரு பெரும் அங்கீகாரத்தை வழங்கியது
எனலாம்.

ஸஅதி ஷிராசியின் "குலிஸ்தான்"
(மலர் தோட்டம்) மற்றும் "புஸ்தான்" (பழத்தோட்டம்) ஆகிய படைப்புகள் அவரது ஒழுக்க
நெறிமுறை அடிப்படையினை வழங்கும் படைப்புகளில் இரண்டு சிகரங்கள் எனலாம்.

மங்கோலிய படையெடுப்புக்குப் பிறகு ஏற்பட்ட
கெடுதலான நிலைமைகள் காரணமாக அவர் முப்பது ஆண்டுகளாக பல நாடுகளுக்கும் விஜயம்
செய்தார். அனட்டோலியா (துருக்கியின் ஒரு பகுதி)க்குச் சென்று அதானா துறைமுகம்
சென்றதை பற்றியும் கொன்யாவில் சில பிரபுக்களை சந்தித்தது பற்றியும், சிரியாவில் (டமாஸ்கஸில்) அப்போது
ஏற்பட்டிருந்த பஞ்சம் பற்றியும், எகிப்தின் இசை, சந்தை, அல்-அஸ்ஹரின்
உயர் உலமாக்கள் மற்றும் உயரதிகாரிகள்
ஆகியோருடனான சந்திப்பு பற்றியும், மற்றும் ஈராக்
(பாஸ்ரா) மற்றும் டைக்ரிஸ் ஆற்றின் துறைமுகத்தை பார்வையிட்டது பற்றியும் அவரது
எழுத்துக்களில் விவரிக்கிறார்.
ஹலபில், சிலுவை
ஆக்கிரமிப்பாளர்களுடன் கடும் சமரில் ஈடுத்திருந்த சூஃபி குழு ஒன்றில் இணைந்து செயலாற்றுகின்றார்.
இதன் காரணமாக ஸஅதி கைது செய்யப்பட்டு, ஏழாண்டுகள்
அடிமையாக நடத்தப்படுகின்றார். இதன் பிறகு மம்லுக் ஆட்சியாளர் முஸ்லிம் கைதிகளின்
விடுதலைக்காக பணம் செலுத்தியதை தொடர்ந்து ஸஅதியும் விடுதலை ஆகிறார்.
இதனைத் தொடர்ந்து ஜெருசலத்துக்கு விஜயம்
செய்த ஸஅதி, அங்கிருந்து
மக்கா மற்றும் மதீனாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்டார். இதன்போது அவர் அரேபிய
தீபகற்பத்தின் தெற்கே ஓமான் மற்றும் பிற நிலங்களுக்கும் விஜயம் செய்ததாக
நம்பப்படுகிறது.
மங்கோலிய ஆக்கிரமிப்புகளின் காரணமாக அவர்
தனிமையான இடங்களில் வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதுடன்,
அச்சம்
கொண்டிருந்த வர்த்தக பரிவாரங்களுடனும் தொடர்புகள்
ஏற்பட்டன.
அகதி முகாம்களிலும் காலத்தை கடத்தி வந்த
ஸஅதிக்கு இமாம்கள், பெரு செல்வந்தர்களாக இருந்தோர்,
ராணுவ
அதிகாரிகள், அறிவுஜீவிகள் ஆகியோருடன் பொதுமக்களுடன்
கலந்திருந்த கொள்ளையர்களுடனும் தொடர்புகள் ஏற்பட்டன. எனினும்,
போரினால்
பாதிக்கப்பட்ட சாதாரண மக்களுடனேயே ஸஅதி நெருக்கமாக இருந்தார். அஜர்பைஜானில் மங்கோலிய கொள்ளைக்கு பயப்படும்
தேன் சேகரிப்பாளர்கள் பற்றியும் ஸஅதி குறிப்பிடுகிறார்.
இரவு நேரங்களில் அவர் தேநீர் விடுதிகளில்
தங்கியிருக்கையில் வியாபாரிகள், விவசாயிகள், மார்க்கப் பிரச்சாரகர்கள், வழிப்போக்கர்கள், திருடர்கள் மற்றும் சூஃபி
பக்கீர்மார்கள் ஆகியோருடன் கருத்துக்களை
பரிமாறினார்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் கற்றலிலும் மக்களுக்கு நல்லுபதேசம்
செய்வதிலும் அறிவுரைகள் வழங்குவதிலும் கடும்
பிரயாசை எடுத்துக்கொண்டார். இவையனைத்தும் அவரது ஞானத்தை பிரதிபலித்தன.
ஸஅதியின்
படைப்புகள் அநேகமாக, மங்கோலிய
படையெடுப்புகளின் கொந்தளிப்பான காலங்களில் இடப்பெயர்வு, வேதனை மற்றும் மோதல் ஆகியவற்றினால்
பாதிக்கப்பட்ட சாதாரண ஈரானியர்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாய் அமைந்துள்ளன.
அவர் இறுதியாக பெர்சியாவிற்குத் திரும்பி, இஸ்பஹானிலும் மற்ற நகரங்களிலும் தனது
பிள்ளைப்பருவ நண்பர்களை சந்திக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் அவருக்கும் துக்ரால்
எனும் அமீருக்கு இடையில் நட்பு ஏற்படுகிறது. அவருடன் இணைந்து சிந்து நாட்டுக்கு விஜயமொன்றை
மேற்கொள்ளும் ஸஅதி பாரசீக பெரும் சூஃபி ஞானியான ஷேய்க் உஸ்மான் மார்வந்தியின்
சீடரான பீர் பித்தூர் என்பவரையும் சந்திக்கின்றார்.
ஐரோப்பிய இலக்கியத்தின் மீது ஸஅதியின்
செல்வாக்கு கணிசமானது. ஸஅதியின் நூல்கள் பல மேற்கத்திய புராணக்கதைகள் மற்றும்
உருவக கதைகளுக்கு ஆதாரமாக விளங்கின. மேற்குலக பண்டைய நூல்கள்,
குறிப்பாக
ஜெர்மனிய நூல்கள் பலவற்றை ஆராய்ந்த அறிஞர்கள் அவற்றில் ஸஅதியின் சிந்தனையின்
அதிகரித்த செல்வாக்கினை கண்டனர்.
ஸஅதியின் குலிஸ்தான் (மலர் தோட்டம்) பண்டைய
பாரசீக காவியங்களையும் சிறுகதைகளையும் குறுங்கவிதைகளையும் கொண்டுள்ளது. இவை,
மக்கள்
ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்ள ஊக்கப்படுத்துதுவதோடு சக மனிதர்களின்
உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள ஊக்குவிக்கும் முறையிலும் சிறப்பாக அமைந்துள்ளன.
புஸ்தான் (பழத்தோட்டம்) இசைநயத்துடனான பாரசீக
கவிதைகளைக் கொண்ட ஸஅதியின் படைப்புகளின்
மற்றொரு மகத்தான தொகுப்பு ஆகும்.
குலிஸ்தான் பாகம் 1ல் ‘அரசர்களின்
நடத்தைகள்’ தொடர்பான 10வது கதையில், மனிதர்களை ஓருடலின் அங்கங்களாக கருதும் படி மக்களை
நோக்கி அறைகூவல் விடுகின்றார். அதில்
புரிந்துணர்வை மிகவும் அழகான முறையில் விபரிக்கின்றார். ‘ஓருடலின் ஒரு பாகம் காயப்பட்டால்,
முழு உடலும்
வேதனையை அனுபவிப்பது போல், ஒருவனுக்கு ஏற்படும் துன்பம் உலக மாந்தர்
அனைவரையும் கவலையுறச் செய்ய வேண்டும்’ என்று
தெளிவுபடுத்துகிறார். அவரது மற்றும்
சில வரிகளில் "ஐம்பது வருடங்கள் கடந்தும் ஏன் இன்னும் உறக்கம்...?" என்று தன்னை
நோக்கியே கேள்வி எழுப்புகிறார்.

ஆதமின் மக்களே...!
நீங்கள் அனைவரும் ஓருடலின் பாகங்கள்
படைத்தவனின் ஆத்மாவை சுமந்த சாரங்கள்.
ஓரங்கம் பாதிக்கப்படின் வலியால்
ஏனைய அங்கம் வேதனையை உணரும்.
அடுத்தவரின் துயரங்களை நீங்கள் உணரவில்லை எனில்,
உங்களை ஒரு மனிதன் என்றழைப்பதில் அர்த்தமில்லை.
இந்த கவிதையில்,
ஸஅதி மனிதர்களை "பனீ ஆதம்" எனக்
குறிப்பிடுகிறார். இந்த கவிதை சமாதானத்திற்கும் புரிந்துணர்வுக்குமான அவரது
பிரகடனமாக அறியப்படுகிறது. கூடுதலாக, இது மனிதநேய பண்புக்கு அடிப்படை அடையாளமாக
கருதப்படுகிறது. ஈரானிய மற்றும் உலக இலக்கியங்களில் இந்த கவிதை "பனீ
ஆதம்" என்ற தலைப்பில் மிகவும் பிரபல்யம் வாய்ந்தது.
அடுத்தவர்பற்றிய புரிந்துணர்வற்ற ஒருவரை,
"பனீ ஆதம்"மின் ஒரு பகுதியாக கருதுவது பொருத்தமானது அல்ல என்று
ஸஅதி வலியுறுத்துகிறார். பனீ ஆதமின் ஓர்
அங்கம் காயம் காயமடைந்தால் (அதாவது, உலகில் யாராவது ஒருவர்
பாதிக்கப்பட்டிருந்தால்), மற்ற மற்ற பாகங்கள் அதன் வலியை
உணர்ந்துகொள்ளும் (அதாவது, மற்றவர்கள் அதனை உணருவார்கள்,
காயமடைந்த
ஒருவரின் உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள்) என்று ஸஅதி விவரிக்கிறார்.
இந்த அழகான மற்றும் சிறந்த கருத்து பதின்மூன்றாம் நூற்றாண்டின் இடைக்கால ஈரானின்
சமாதானத் தூதினை எளிமையாக விளக்கும் ஒன்றாகும்.
மனிதம் தழைக்க அத்தியாவசியமாக மனிதரில்
இருக்க வேண்டிய இந்த மனிதாபிமான உணர்வின் பன்முகத்தன்மையை கலைத்துவ இரசனையுடன் வழங்கியதற்காக
உலக மாந்தர்கள் அனைவரும் புகழ்பெற்ற ஈரானிய கவிஞரான "ஸஅதி" க்கு நன்றியுள்ளவர்களாக
இருக்கிறோம்.
No comments:
Post a Comment