Contributors

Friday, July 25, 2025

கர்பலா முதல் காசா வரை: அநீதிக்கு எதிரான அணிதிரள்வு முழக்கம்

 From Karbala to Gaza: A rallying cry against injustice that won't be silenced

 

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு கர்பலாவின் பாலைவன சமவெளியில் எதிர்ப்பையும் தார்மீக தைரியத்தையும் மறுவரையறை செய்த 'தியாகிகளின் தலைவரை' கௌரவிப்பதற்காக உண்மை மற்றும் நீதியின் குரல்கள், இனம், பிரிவு மற்றும் சித்தாந்தத்தின் கோட்பாடுகளைக் கடந்து ஒன்றுபட்டு எழும் ஆண்டின் அந்த தருணம் இது.

 

யஸீதின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக ஹிஜ்ரி 61 இல் (கி.பி. 680) இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் நடத்திய எழுச்சி, மனித வரலாற்றில் இணையற்ற மற்றும் உலகெங்கிலும் உண்மை மற்றும் நீதியின் பிரச்சாரகர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து உந்துதல் அளிக்கும் ஒரு சிறந்த தமைத்துவமாகும்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புப் பேரன் ஹுஸைன் இப்னு அலீ (அலை) அவர்கள் அதிகாரத்திற்காகவோ, பதவிக்காகவோ அல்லது சலுகைக்காகவோ போராடவில்லை. உண்மை மற்றும் பொய்மை, நீதி மற்றும் கொடுங்கோல் ஆட்சி, கண்ணியம் மற்றும் அவமதிப்பு ஆகியவற்றின் முனையில் நின்று, வரலாற்றின் சத்திய பாதையில் பயணிக்க முடிவு செய்தார்.

 

பாரசீக கவிஞன் இக்பால் லஹோரியின் பிரபல கூற்றை போல், "ஹுஸைன் (அலை) அவர்கள் சுதந்திரத்தின் வறண்ட தோட்டத்தை தனது இரத்த அலையால் ஈரலிப்பாக்கி, சர்வாதிகாரத்தை வேரோடு பிடுங்கி, துயிலில் இருந்த முஸ்லீம் தேசத்தை எழுப்பினார்."

 

கர்பலா போர் அதிகாரத்திற்கான போராட்டம் அல்ல. அது இரத்தத்திற்கும் வாளுக்கும் இடையிலான மோதல். ஹுஸைன் (அலை) அவர்கள், 71 விசுவாசமான தோழர்களுடன், 30,000 பேர் கொண்ட இராணுவத்தை எதிர்த்து நின்றார். அவரது தெரிவு தெளிவாக இருந்தது, நோக்கம் ஆன்மீக நியமங்களை அடிப்படையாகக் கொண்டது.

 

மதீனாவின் ஆளுநர் வலீத் இப்னு உக்பா, ஹுஸைன் (அலை) அவர்களை யஸீதுக்கு விசுவாசியாக உறுதிமொழி எடுக்க அழைத்தபோது, ஹுஸைன் (அலை) அவர்கள், காலத்தின் அடிவாரங்களில் இன்னும் எதிரொலிக்கும் ஒரு பிரகடனத்துடன் பதிலளித்தார்: "என்னைப் போன்ற ஒரு மனிதன் அவரைப் போன்ற ஒரு மனிதனுக்கு விசுவாசத்தை உறுதிமொழி எடுக்க முடியாது."

 

ஒவ்வொரு ஆண்டும், முஹர்ரம் மாதத்தில், விசுவாசிகள் கர்பலாவின் நடவடிக்கைகள் மூலம் ஹுஸைன் (அலை) அவர்களின் நித்திய கொள்கைகளுக்கு தங்கள் உறுதிமொழியை மீண்டும் உறுதிப்படுத்துகிறார்கள். இந்த வருடாந்த நினைவுகூரல்கள் துக்கத்தை மையமாகக் கொண்ட சடங்குகள் அல்ல, இவை எதிர்ப்பின் சக்திவாய்ந்த செயல்களாகும், மற்றும் அதிகாரத்திற்கு உண்மையைப் பேசுவதற்கான உறுதியை மீண்டும் தூண்டுகிற செயல்களாகும், கர்பலாவில் ஹுஸைன் (அலை) அவர்கள் தனது இரத்தத்தின் மூலம் செய்ததைப் போல, அவரது சகோதரி ஸைனப் பின்த் அலீ (ரலி) அவர்கள் கர்பலாவுக்குப் பிறகு தனது வார்த்தைகளால் செய்தார்.

 

கர்பலாவின் செய்தி காலத்தால் அழியாதது. ஸியாரத் அஷுராவில், நம்பிக்கையாளர்கள் துஆ பிரார்த்தனை செய்கிறார்கள்: "யா அல்லாஹ், நீதிக்காக எழுந்து நிற்க எங்களுக்கு கண்ணியத்தை வழங்குவாயாக..." இது எங்கெல்லாம் அநீதி தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம் கர்பலாவின் இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்ற உறுதிமொழியின் வெளிப்பாடாகும்.


காஸா இன்றைய கர்பலா என்று சொன்னால் அது மிகையாகாது. ஊழல் மற்றும் கொடுங்கோலன் உமய்யாத் ஆட்சிக்கு எதிராக ஹுஸைன் (அலை) அவர்களின் எழுச்சி, கடந்த காலத்திலிருந்த ஒரு அத்தியாயம் மட்டுமல்ல, அது நிகழ்காலம் வரை உயர்த்திப் போற்றப்பட்ட ஒரு பிரதிபலிக்கும் கண்ணாடியாகும்.

 

"ஒவ்வொரு நாளும் ஆஷுரா, ஒவ்வொரு நிலமும் கர்பலா" என்று அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் சொற்றொடர் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் ஒரு மறு கூற்றாக தோன்றலாம், ஆனால் அதன் உள்ளார்த்தம் மிகவும் பொருத்தமானது. உரிமைக்கும் வலிமைக்கும் இடையிலான போராட்டம் காலம் அல்லது புவியியலால் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதை நமக்கு நினைவூட்டுகிறது - நேற்று கர்பலா, இன்று காஸா.

 

அக்டோபர் 2023 முதல் முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரங்கள், ஒரு காலத்தில் கர்பலா சமவெளியில் இருந்து எழுந்த ஒடுக்கப்பட்டவர்களின் கூக்குரல்களை எதிரொலிக்கின்றன. பயங்கரமும் கொடுங்கோலும் பல முகங்களை அணிந்து பல கொடிகளை பறக்கவிடுகின்றன, ஆனால் அவற்றின் தன்மை மாறவில்லை. நம் காலத்து யஸீதை இனங்கண்டு ஹுஸைன் (அலை) அவர்கள் நமக்கு போதித்தபடி பதிலளிப்பது நமது கடமையாகும்.

 

"அவமானத்துடன் வாழ்வதை விட கண்ணியத்துடன் கூடிய மரணம் சிறந்தது" என்று சவால்களின் தலைவர் கூறினார். ஒரு நிறவெறி ஆட்சி, 76 ஆண்டுகளாக, பாலஸ்தீனிய நிலத்தை ஆக்கிரமித்துள்ளது, குடும்பங்களை இடம்பெயர்த்துள்ளது, வீடுகளைக் கொள்ளையடிக்கிறது, எதிர்ப்பின் தீயை அணைக்க முயன்றுள்ளது.

 

அக்டோபர் 2023 முதல், காசாவில் 56,000 க்கும் மேற்பட்டவர்கள், பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெண்கள், கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு குடும்பத்தின் கர்பலா ஆகிவிட்டது.

 

உயிரற்ற குழந்தைகளை தொட்டிலில் போடும் தாய்மார்கள், தங்கள் அன்புக்குரியவர்களுக்காக இடிபாடுகளை தோண்டும் தந்தைகள், முழு அண்டை பகுதிகளும் சல்லடை கண்ணாக தூளாகிவிட்டதை, மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் ஈவு இரக்கமின்றி, மனிதாபிமானமின்றி குண்டுவீசித் தகர்க்கப்படுவதை, அகதி முகாம்கள் இலக்கு வைக்கப்படுவதை நாம் காண்கிறோம். இது ஒடுக்குமுறையாளரின் எல்லையில்லா கொடுமையை உணர்வுபூர்வமாக காட்டுகிறது.

 

ஆனாலும் பாலஸ்தீன மக்கள் மண்டியிட மறுத்துவிட்டனர். தங்கள் மன உறுதியையும் நேர்மையையும் தவிர வேறெதுவும் இல்லாத நிலையில், உலக வல்லரசுகளின் ஆதரவுடன் மிகவும் கொடூரமான இராணுவ இயந்திரங்களில் ஒன்றை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் எதிர்ப்பு ஹுஸைனி உணர்வை; "மரணம் வரை, எந்த சரணடைதலும் இல்லை." என்பதை பிரதிபலிக்கிறது.

 

கர்பலாவில் தாகத்தால் தவித்த ஒரு குழந்தை அம்பினால் தாக்கப்பட்டது. வீரம் செறிந்த இளைஞன் ஒருவன் போர்வீரனைப் போல போரிட்டான். கொடி ஏந்தியவர் தண்ணீர் எடுக்க அணிவகுத்துச் சென்றவர் திரும்பி வரவேயில்லை. அதே தியாகத் தன்மையே இன்று பாலஸ்தீனியர்களின் நரம்புகளில் ஓடுகிறது, அவர்கள் தங்கள் எதிர்ப்பை அசாதாரண தைரியத்துடன் சுமக்கிறார்கள்.

 

"எனக்கு உதவ யாராவது இருக்கிறார்களா?" என்ற ஹுஸைன் (அலை) அவர்களின் கூக்குரல் யஸீதின் இராணுவத்திற்கான ஒரு வேண்டுகோள் அல்ல. இது மனிதகுலத்தின் மனசாட்சிக்கு காலமற்ற அழைப்பு. ஒவ்வொரு ஆண்டும், நஜாஃபிலிருந்து கர்பலாவுக்கு அர்பீனில் லட்சக்கணக்கானோர் அணிவகுத்துச் செல்லும்போது, அவர்கள் பதிலளிக்கிறார்கள்: லப்பைக் யா ஹுஸைன் - "இதோ நான் இருக்கிறேன், ஹுஸைனே!"

 

ஹுஸைன் (அலை) அவர்களின் தீபத்தை ஏந்துபவர்கள் ஒருபோதும் வஞ்சகத்துக்கும் பொய்க்கும் அடிபணிய மாட்டார்கள். அது எவ்வளவு செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தாலும் சரி, எவ்வளவு வன்முறையான எதிர்வினையாக இருந்தாலும் சரி, அதிகாரத்திடம் உண்மையைப் பேசுகிறார்கள்.

 

இன்று, பாலஸ்தீனியர்கள் அதே புனிதமான மறுப்பைப் பிரதிபலிக்கிறார்கள். ஆக்கிரமிப்புக்கும், உடைமை பறிப்புக்கும், அவமானத்துக்கும் தலைவணங்க மறுக்கிறார்கள். அதனால்தான் முஹர்ரம் என்பது வெறுமனே ஒரு துக்க மாதம் அல்ல - அது உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட ஆன்மாவுடனும் ஒருமைப்பாட்டின் கீதமாகும்.

 

டாக்டர் அலி ஷரியாதி நமக்கு நினைவூட்டுவது போல், மனித வரலாறு என்பது "இறைவனின் துருவங்களுக்கும் ஷைத்தானுக்கும் இடையிலான நித்திய மோதலின் வெளிப்பாடு", பெயர்களும் முகங்களும் மட்டுமே மாறுபடும் ஒரு போராட்டம். இன்று ஹுஸைன் (அலை) அவர்களின் வெற்றியையும், யஸீதின் அவமானத்தையும் வரலாறு பதிவு செய்கிறது.

 

டாக்டர் ஷரியாதி மேலும் கூறுகிறார், ஒவ்வொரு புரட்சிக்கும் இரண்டு முகங்கள் உள்ளன: இரத்தம் மற்றும் செய்தி. ஹுஸைன் (அலை) அவர்கள் மற்றும் அவரது தோழர்கள் தங்கள் இரத்தத்தைக் கொடுத்தனர்; "கர்பலாவின் இரட்சகர்" ஸைனப் (ரலி) அவர்கள் அந்தச் செய்தியை எடுத்துச் சென்றார்கள். நாமும் அவ்வாறே செய்ய வேண்டும்.

 

நம் காலத்தின் யாஸிதுகளின் பெயரைச் சொல்லி அவமானப்படுத்துவதும், அவர்களின் கொடுங்கோல் தன்மையை அம்பலப்படுத்துவதும், அசைக்க முடியாத உறுதியுடனும் தைரியத்துடனும் ஒடுக்கப்பட்டவர்களுடன் நிற்பதும் ஆஸாதாரியின் (துக்கம்) பணியாகும். வெறுமனே வார்த்தைகளால் மட்டுமல்ல, செயலாலும், உறுதியாலும், மனசாட்சியாலும் ஆகும்.

 

ஆஸாதாரியின் பாரம்பரியம் கர்பலாவின் கைதிகளான சையதா ஸைனப் (ரலி) அவர்கள், உம்மு குல்சூம் (ரலி) அவர்கள், மற்றும் இமாம் ஜைனுல் ஆபிதீன் (அலை) அவர்கள் ஆகியோருடன் தொடங்கியது. அவர்களின் சொற்பொழிவுகள் யஸீதின் வலிமைமிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரத்தையே அசைத்தன. பேசப்பட்ட வார்த்தையும் எழுதப்பட்ட வார்த்தையும் ஒடுக்குபவனுக்கு எதிரான ஆயுதங்களாயின.

 

மதீனாவில் கர்பலாவுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் கூட்டங்கள் பற்றி யஸீதுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர் பீதியடைந்து, கிளர்ச்சிக்கு பயந்து இமாம் ஜைனுல் ஆபிதீன் (அலை) அவர்களை மீண்டும் கைது செய்தார். ஆனாலும் எதிர்ப்புணர்வு ஏற்கெனவே வேரூன்றி விட்டது. ஆஸாதாரி விரைவில் பரவினார் – பாக்தாத்திலிருந்து கூஃபா வரை, ஈரானிலிருந்து இந்தியா வரை.

 

இமாம் ஜைனுல் ஆபிதீன் (அலை) அவர்கள் ஆஸாதாரி நிறுவனத்தை நிறுவனமயமாக்கினார்கள். தியாகிகளின் நினைவை உயிரோட்டத்துடன் வைத்திருக்க கவிஞர்கள் அழைக்கப்பட்டனர், அவர்களில் ஒருவர் கலீபா ஹிஷாம் அவர்களின் படைகளால் கைது செய்யப்பட்ட புகழ்பெற்ற கவிஞர் ஃபராஸ்டாக் ஆவார்.

 

இமாம் முஹம்மத் பக்கீர் (அலை) மற்றும் இமாம் ஜாபர் சாதிக் (அலை) ஆகியோர் தங்கள் காலத்தில் ஆஸாதாரிக்கு மேலும் உத்வேகம் அளித்தனர். அவை கர்பலாவின் தத்துவத்தைப் பற்றிய புரிதலை மக்களிடையே ஆழப்படுத்தின. இமாம் மூஸா காசிம் (அலை) அவர்கள் கவிஞர்களை தங்கள் தாய்மொழிகளில் எழுத ஊக்குவித்தார், இது எல்லையை விரிவுபடுத்தியது.

 

பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, கர்பலாவின் கூக்குரலை யஸீதுகளால் அடக்க முடியாததை போலவே, இன்றைய யஸீதுகளாலும் உண்மையை மௌனமாக்க முடியவில்லை. ஹுஸைன் (அலை) அவர்களின் இரத்தம் இன்னும் பேசுகிறது. ஸைனப் (ரலி) அவர்களின் தூதுக்குழு இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.

 

ஏனெனில், கர்பலா என்பது வெறும் இடம் அல்ல. உண்மை நசுக்கப்படும் ஒவ்வொரு நிலமும் கர்பலா தான். ஆஷுரா என்பது ஒரு நாள் மட்டுமல்ல. அநீதிக்கும், அடக்குமுறைக்கும் எதிராக யாராவது ஒருவர் நிற்கும் ஒவ்வொரு கணமும் ஆஷுரா தான்.

 

அடக்குமுறையாளர்கள் இருக்கும் வரை கர்பலாக்கள் இருப்பார்கள். ஹுசைனிகள் இருக்கும் வரை அநீதிக்கு எதிர்ப்பு இருக்கும். இறுதியில், அதிகாரம் மறைந்துவிடும், அதே நேரத்தில் சத்தியம் நிலைத்திருக்கும்.

 

ஆக்கம்: சையத் ஸபர் மஹ்தி

தமிழில் மஹ்ஜுபா முஸம்மில்

https://www.presstv.ir/Detail/2025/07/05/750670/Islam-Shiism-Imam-Hussain-Karbala-Gaza-Muharram-Ashura-Zeinab-Yazid-Prophet-Mohammad

 

Monday, July 14, 2025

இஸ்லாமிய உலகுக்கான அடித்தளம் இஸ்லாமிய ஒற்றுமை


Islamic unity is the foundation for the Islamic world


இஸ்லாமிய ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலீ காமெனயீ அவர்களின் பார்வையில் இஸ்லாமிய ஒற்றுமை

 

உச்ச தலைவரின் அண்மைக்கால உரைகளின் ஒரு ஆய்வு.

 

“ஈரான் முக்கியமல்ல இஸ்லாமே முக்கியம்” எனும் இஸ்லாமிய ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலீ காமெனயீ அவர்களின் சமீபத்திய கூற்று, இஸ்லாத்திற்காக ஈரானிய மக்களின் தியாகத்திற்கான தயார்நிலையைக் குறிப்பிடும் அதே வேளை, இஸ்லாமிய ஒற்றுமையை வலியுறுத்தும் மற்றும் உலக முஸ்லிம்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு அருமையான கூற்றாகும்.

 

இஸ்லாம் என்பது அமைதி, கருணை, ஒற்றுமை மற்றும் மனிதகுல நலனுக்காக வந்த ஒரு ஆன்மீக மார்க்கம் ஆகும். இதன் அடிப்படை தத்துவங்களுள் ஒன்றாக அமைவது “இஸ்லாமிய உம்மத்தின் ஒருமைப்பாடு” – இது முஸ்லிம்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் நேசித்து, துணைபுரிந்து வாழ வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. இன்று உலகம் முழுவதும் முஸ்லிம்கள் பல்வேறு பிரிவுகள், மொழிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் பண்பாடுகள் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களை ஒன்று சேர்க்கும் சக்தி தான் இஸ்லாமிய ஒற்றுமை.

 

இஸ்லாமிய ஒற்றுமை (இத்திஹாத்) என்பது பல்வேறு இஸ்லாமிய பிரிவுகளிடையே நல்ல மற்றும் அமைதியான உறவுகளை நிறுவுவதைக் குறிக்கும் ஒரு சொல். இஸ்லாமிய ஒற்றுமையின் முதன்மை நோக்கம் உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைப்பதாகும். முஸ்லிம்களிடையே சுன்னி / ஷியா போன்ற சில பிளவுகள் இருந்தாலும், ஆயத்துல்லாஹ் இமாம் காமெனயீ அவர்கள் போன்ற இஸ்லாமிய ஒற்றுமையின் ஆதரவாளர்களின் கூற்றுப்படி இப் பிளவுகள் என்பது ஒரு அற்பமே. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமான உறவுகளை உருவாக்க வேண்டும் என்பதே இவர்கள் வலியுறுத்தும் கடமையாகும்.

 

சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வு பற்றிய முக்கியத்துவத்தைப் பற்றியும், முஸ்லிம்கள் மற்ற இனத்தவர்களுடனான உறவு பற்றியும், இனம், தேசிய அல்லது பிராந்தியம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் செய்யவேண்டியதென்ன என்பதைப் பற்றியும் பரிசுத்த குர்ஆன் ஆலோசனை வழங்குகிறது. “இறைநம்பிக்கையாளர்கள், ஒருவர் மற்றவருக்குச் சகோதரர் ஆவார்கள். எனவே, உங்கள் சகோதரர்களுக்கிடையே தொடர்புகளைச் சீர்படுத்துங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் மீது கருணை பொழியப்படக் கூடும்.” (49:10)

 

ஆயத்துல்லாஹ் இமாம் காமெனயீ அவர்களின் அண்மைக்கால சொற்பொழிவுகள் சர்வதேச அளவில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவைஇஸ்லாமிய ஒற்றுமைஅரசியல், பண்பாடு, சாதி, மற்றும் மொழி எல்லையைத் தாண்டிய ஒரு உயர்வான நிகழ்வாக, இஸ்லாமிய சகோதரத்துவத்தை நுணுக்கமாக வெளிப்படுத்துகின்ற அருமையான உரைகளாகும்.

 

சூரா அல்-ஹஜ்ஜில் புனித குர்ஆனின் உன்னத வசனத்தை மேற்கோள் காட்டி, ஆயத்துல்லாஹ் இமாம் காமெனயீ அவர்களின் இவ்வருட புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு மே 30, 2025 ஆற்றிய உரையில், ஹஜ் ஒன்றுகூடலின் நோக்கம் பல்வேறு மனித நன்மைகளை அடைவதாக அடையாளமாகவும், "இன்று இஸ்லாமிய உம்மத்திற்கு ஒற்றுமையை விட பெரிய நன்மை எதுவும் இல்லை. அத்தகைய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர ஒத்திசைவு இருந்திருந்தால், காஸா மற்றும் பாலஸ்தீனத்தில் இன்றைய துயரங்கள் நடந்திருக்காது, என்பதை வலியுறுத்தும் இஸ்லாமிய ஒற்றுமையின் வெளிப்பாடாகும். “The Hajj gathering is for the benefit of humanity and there is no benefit for the Islamic Ummah greater than unity… If the Islamic Ummah were united, the issues of Palestine and Gaza would not happen.” (presstv.ir)

 

12 நாள் இஸ்ரேல் உடனான ஈரானிய போரில் வெற்றிகொண்ட ஈரானிய தேசத்துக்கு தனது வாழ்த்துக்களை ஜூன் 26, 2025 ஆற்றிய உரையில் ஆயத்துல்லாஹ் இமாம் காமெனயீ அவர்கள் தெரிவிப்பதாவது;

 

“ஈரானிய தேசம் காட்டிய குறிப்பிடத்தக்க ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்துக்கும் எனது வாழ்த்துகள். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி, சுமார் 90 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு தேசம் ஒன்றாக நின்றது, குரலில் ஒன்றுபட்டது, தோளோடு தோள் நின்றது, தங்கள் கோரிக்கைகளிலோ அல்லது அவர்கள் வெளிப்படுத்திய இலக்குகளிலோ எந்த வேறுபாடுகளையும் காட்டவில்லை. அவர்கள் ஒன்றாக நின்று, கோஷங்களை எழுப்பினர், குரல் கொடுத்தனர், ஆயுதப்படைகளின் நடவடிக்கைகளை ஆதரித்தனர், இது எதிர்காலத்திலும் தொடரும். இந்த நிகழ்வில் ஈரானிய தேசம் அதன் மகத்துவத்தையும் அதன் தனித்துவமான, தன்மையையும் வெளிப்படுத்தியது. தேவைப்படும்போது, ​​இந்த தேசத்திலிருந்து ஒன்றுபட்ட குரல் ஓங்கி ஒலிக்கும், அல்லாஹ்வின் கருணையில் இதுதான் இன்று வெற்றிக்கு வழிவகுத்தது.” இக் கூற்று புனித அல்குர்ஆனில் குறிப்பிடப்படும் "அல்லாஹ் நீட்டிய ஒற்றுமை எனும் கயிற்றை நீங்கள் அனைவரும் உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், உங்களிடையே பிரிந்து விடாதீர்கள்." (3:103) எனும் இறைமறையின் வெளிப்பாடாகும்.

 

இஸ்ரேல் உடனான போரில் இஸ்லாமிய குடியரசுக்கு தனது குழு "முழு ஆதரவை" வெளிப்படுத்தியதாகக் கூறிய இயக்கத்தின் செயல் தலைவர் சலா அப்தெல் ஹக் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லாஹ் அலீ காமெனயீ அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், "எங்கள் முதன்மை ஆயுதம்... இஸ்லாமிய உம்மத்தின் ஒற்றுமை" என்று கூறியதோடு, முஸ்லிம் சக்திகள் கடந்த கால பிளவுகளைக் கடந்து "சியோனிச அமைப்பை எதிர்கொள்வதில்" தங்கள் கவனத்தை திருப்பிவிட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இது ஈரானிய தமைத்துவம் இஸ்லாமிய இணக்கப்பாட்டை வலியுறுத்தும் கொள்கையை கொண்டதாக கோடிட்டு காட்டுகிறது.

 

மார்ச் 31, 2025 அன்று அதிகாரிகள், இஸ்லாமிய நாடுகளின் தூதர்கள் மற்றும் பல்வேறு மக்கள் குழுவினரிடையே உரையாற்றிய ஆயத்துல்லாஹ் அலீ காமெனயீ அவர்கள், அனைத்து இஸ்லாமிய அரசாங்கங்களுடனும் ஈரானின் சகோதரத்துவ நிலைப்பாட்டையே உறுதிப்படுத்தினார். அவர் இஸ்லாத்தின் அதிகரித்து வரும் கண்ணியம் மற்றும் உலகளாவிய ஆணவத்திற்கு எதிரான எதிர்ப்பு ஆகியவை இஸ்லாமிய உம்மாவின் ஒற்றுமை மற்றும் ஆன்மீக அறிவைப் பொறுத்தது என்று வலியுறுத்தினார். பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் சியோனிச ஆட்சியின் கொடூரமான குற்றங்கள் உட்பட, இஸ்லாமிய உலகம் முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொண்டுள்ள ஒரு நேரத்தில், முஸ்லிம் நாடுகளிடையே ஒற்றுமைக்கான அழைப்பு குறிப்பிடத்தக்க மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அல்லாஹ் புனித அல் குர்ஆனில் கூறுகிறான்: "முஃமின்கள் ஒரே சகோதரரே. நீங்கள் உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, அல்லாஹ்வை அஞ்சுங்கள் (49-10). இஸ்லாமிய ஒருமைப்பாட்டுக்கான முக்கியத்துவம் இதில் புலப்படுகிறது.

 

இஸ்லாமிய ஒற்றுமை பற்றி உச்ச தலைவர் ஆயத்துல்லாஹ் அலீ காமெனயீ அவர்கள் வரையறுப்பதாவது, "ஒற்றுமை என்பது அரசியல் சித்தாந்தங்களில் அமையப்பெறும் சீரான தன்மை அல்ல, மாறாக உள்ளார்ந்த முரண்பாடுகளை தவிர்க்கும் பொதுவான நலன்களைப் பற்றிய பகிரப்பட்ட புரிதல் ஆகும்." மேலும் அவர் "இஸ்லாமிய உலகம் தன்னை ஒரு குடும்பமாகப் பார்க்க வேண்டும்" என்பதை வலியுறுத்தி, அனைத்து இஸ்லாமிய நாடுகளுடனும் ஈரானின் திறந்த நட்புறவை ஆன்மீக தலைவர் உறுதி செய்தார்.


இறைவன் அருளால் ஈரானிய தேசம் வெற்றி பெற்றது, தொடர்ந்தும் வெற்றி பெறும். எல்லாம் வல்ல இறைவன் இந்த தேசத்தை தனது கிருபையின் கீழ் தொடர்ந்து பாதுகாப்பார், அதை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் பாதுகாப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் இமாம் கொமெய்னி (ரலி) அவர்களின் ஆன்மீக அந்தஸ்தை உயர்த்தட்டும். மேலும் இமாம் மஹ்தி (அவருக்காக எங்கள் ஆன்மாக்கள் தியாகம் செய்யப்படட்டும்) இந்த தேசத்தில் மகிழ்ச்சியடைந்து திருப்தி அடையட்டும், மேலும் அவர் தனது உதவியுடன் அதை ஆதரிக்கட்டும் என்ற துஆவோடு தனது ஈரான் வெற்றியின் பின்னரான நன்றி உரையை முடித்தார்.

 

இவ்வாறு ஆயத்துல்லாஹ் இமாம் காமெனயீ அவர்களின் அண்மைக்கால   உரைகள், இஸ்லாமிய ஒன்றிணைப்பின் முக்கியத்துவத்தை உலகத்தின் முன் குர்ஆனிய அடிப்படையோடும், அதற்கு இருக்கும் சவால்களை எதிர்கொள்ளும் அறிவினையும் பிணைத்து நுட்பமாக விளக்குகின்றன.


 

Saturday, June 14, 2025

ஈரானின் ஆடம்பரத்தை வெளிப்படுத்தும் கம்பள நெசவு

     Carpet weaving that reveals the luxury of Iran

 

“உலகம் முழுவதும் ஆடம்பரமான கலைக்கு சான்றாக அமைவது ஈரானிய கம்பளங்கள்” ஆர்தர் போப்

 


நாம் கம்பளங்கள் அல்லது தரைவிரிப்புகள் குறித்து பேசும்போது, இயல்பாகவே மனதில் தோன்றும் நாடு, ஈரான். உலகின் சிறந்த கலை நிபுணர்கள் இதை ஒருமுகமாக ஏற்றுக்கொள்கிறார்கள். "கம்பளம்" என்றால் "பாரசீகம்" என்பதே பெரும்பான்மையினரின் எண்ணம். எனவே, கம்பளங்கள் என்பது ஈரானிய கலைக்குப் பிரதிநிதியாகவும், அதன் தோற்றத்தைக் கூறும் தெளிவான அடையாளமாகவும் விளங்குகின்றன. கம்பள நெசவு பாரசீக கலாச்சார கலையின் ஒரு முக்கிய பகுதியாகும். ஈரானில் கம்பள நெசவு செய்யும் கலை ஈரானிய மக்களின் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களுடன் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளது.

 

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 10 ம் திகதி, ஈரான் தனது சிறந்த கலாச்சார மற்றும் பொருளாதார அடையாளங்களில் ஒன்றான கம்பள நெய்தலை கொண்டாடுகிறது. இக்கலைக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், 2021ஆம் ஆண்டு ஈரானிய கலாச்சார புரட்சி உயர் ஆணைக்குழுவால் இந்நாள் அதிகாரப்பூர்வமாக தேசிய நாளாக அறிவிக்கப்பட்டது. இந்த நாள், ஈரானியர்களின் படைப்பாற்றல், அடையாளம் மற்றும் கைவினை ஆக்கம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் பல நூற்றாண்டுகள் பழமையான கலையை நினைவுகூரும் தினமாகும்.

 

பாரசீக கம்பளம் என்பது பல்வேறு வகையான பயன்பாட்டு மற்றும் குறியீட்டு நோக்கங்களுக்காக ஈரானில் தயாரிக்கப்படும் ஒரு கனமான துணி ஆகும். உலகின் மிகச்சிறந்த மற்றும் ஆடம்பரமான தரைவிரிப்புகள் ஈரானிலேயே நெசவு செய்யப்படுகின்றன என்பதை நாம் சந்தேகமின்றி உறுதிப்படுத்த முடியும்.

 

கிராமம் மற்றும் நகரப் பட்டறைகளில் நாடோடி பழங்குடியினராலும், அரச உற்பத்தியாளர்களாலும், பாரசீக கம்பளங்கள் நெய்யப்படுகின்றன. அவை பல்வேறு பாரம்பரிய அம்சங்களை - ஈரானின் வரலாறு, பாரசீக கலாச்சாரம் மற்றும் அதன் பல்வேறு மக்களை பிரதிபலிக்கின்றன.

 

கம்பள நெய்தலின் ஆரம்பம்

 

ஈரானிய கம்பளம் என்பது பாரசீகக் கலையின் உயிரோட்டமான வெளிப்பாடு. இருப்பினும், பாரசீகத்தில் முதல் கம்பளம் எங்கு நெய்யப்பட்டது என்பது உறுதியாகத் தெரியவில்லை. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கலை வரலாற்றாசிரியர்கள், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்ட மக்களால் கம்பள நெசவு கண்டுபிடிக்கப்பட்டதாக  நம்புகின்றனர்.

 

ஈரானிய பீடபூமியில் வசித்த மக்களின் முதன்மைத் தொழில்களான விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு, கம்பள நெசவின் தோற்றத்திற்கு முக்கிய பங்காற்றின. கால்நடைகளுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த இம்மக்கள், கம்பளி மற்றும் அதன் பல்வேறு பயன்களைப் பற்றி படிப்படியாக அறிந்து கொண்டனர்.


ஆரம்பத்தில் கம்பளியைக் கொண்டு ஆடைகளைத் தயாரித்தவர்கள், பின்னர் தரையை மறைப்பதற்கான விரிப்புகளையும் நெசவு செய்யத் தொடங்கினர். மிருகத் தோல்களைத் தரைவிரிப்பாகப் பயன்படுத்தி வந்த மக்கள், காலப்போக்கில் கம்பளியால் நெய்யப்பட்ட விரிப்புகளின் பயன்பாட்டிற்கு மாறினர்.

 

இவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, ஈரானிய பீடபூமியில் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தில் ஈடுபட்ட மக்களே கம்பளத்தின் முதல் நெசவாளர்கள் மற்றும் இந்தக் கலையின் கண்டுபிடிப்பாளர்கள் என்பது தெளிவாகிறது.

 

ஈரானிய கம்பளங்களின் தனித்துவமான தரம்

 

பாரசீக கம்பளங்கள் அவற்றின் உயர் தரம், நுட்பமான வடிவமைப்புகள் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் காரணமாக தனித்துவமானவை. இவை அவற்றின் நீடித்துழைப்பு, கலைத்திறன் மற்றும் உயர்தர இயற்கை பொருட்களின் பயன்பாடு ஆகியவற்றிற்காக பெரிதும் மதிக்கப்படுகின்றன. பாரசீக கம்பளங்கள் பெரும்பாலும் கையால் பின்னப்பட்டவை; இதற்கு பல வருட பயிற்சி மற்றும் திறமை தேவைபடுகிறது. கம்பளி, பட்டு மற்றும் பருத்தி போன்ற இயற்கை பொருட்களிலிருந்து இவை தயாரிக்கப்படுகின்றன. மேலும், பயன்படுத்தப்படும் சாயங்கள் பெரும்பாலும் இயற்கை தாவரங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து பெறப்படுகின்றன. பாரசீக கம்பளங்கள் நெசவாளரின் திறமை மற்றும் கலாச்சார மரபை பிரதிபலிக்கும் அழகான வடிவங்களைக் கொண்டுள்ளன. பொருட்களின் தரம் மற்றும் கையால் பின்னப்பட்ட இந்த கம்பளங்கள் தலைமுறைகளுக்கு நிலைத்திருக்க உதவுகிறது, இதனால் அவை குடும்பப் பாரம்பரியச் சின்னங்களாக மாறுகின்றன. பாரசீக கம்பளங்கள் ஈரானிய கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ளன, மேலும் அவற்றின் வடிவமைப்புகள் பெரும்பாலும் குறியீட்டு அர்த்தங்களை தாங்கி நிற்கின்றன. இவை கலைப்படைப்புகளாகக் கருதப்படுவதுடன், சேகரிப்பாளர்கள் மற்றும் கலை ஆர்வலர்களால் பெரிதும் போற்றப்படுகின்றன.

 

பதினாறாம் நூற்றாண்டில் இஸ்ஃபஹானின் சஃபாவிட் தொழிற்சாலைகளில் நெய்யப்பட்ட கம்பளங்கள் அவற்றின் விரிவான வண்ணங்கள் மற்றும் கலை வடிவமைப்பிற்குப் பெயர் பெற்றவை, மேலும் இன்று உலகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் தனியார் சேகரிப்புகளில் இப் புராதன, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கம்பளங்கள் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படுகின்றன.

 

ஈரானிய கம்பள நெசவாளர்கள் தங்கள் அற்புத திறமையால் பாராட்டத்தக்க வண்ணங்களில் அழகிய வடிவங்களை நெய்கிறார்கள், இது திறமைமிக்க ஓவியர்களிடமிருந்து மட்டுமே எதிர்பார்க்கக்கூடிய தரம். உலகின் கலை நிபுணர்கள் ஈரானிய கம்பளங்களை வண்ணமயமான பூக்கள் மலர்ந்த அழகிய தோட்டத்துடன் ஒப்பிடுகிறார்கள். இக்கம்பளங்களில் காய்கறிகள், பறவைகள், மிருகங்கள், நிலப் படங்கள் மற்றும் கற்பனை உயிரினங்களைப் போல நுணுக்கமான ஓவியங்கள் இடம்பெற்றிருக்கும். இவ்வண்ணமயமான காட்சியை காணும் ஒவ்வொருவரும் இந்த சிறிய அழகான தோட்டத்தைத் தங்கள் வீட்டில் ஒருபகுதியாகக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் மலைக்காமல் இருக்க முடியாது.

 

தப்ரிஸ், கெர்மன், ராவர், நெய்ஷாபூர், மஷ்ஹத், காஷான், இஸ்ஃபஹான், நைன் மற்றும் கும் போன்ற நகரங்கள் மற்றும் பிராந்திய மையங்களில் நெய்யப்படும் கம்பளங்கள் அவற்றின் குறிப்பிட்ட நெசவு நுட்பங்கள், உயர்தர பொருட்கள், வண்ணங்கள் மற்றும் வடிவங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வகைப்படுத்தப்படுகின்றன. தப்ரிஸ் போன்ற நகர உற்பத்தி நிறுவனங்கள், வீழ்ச்சியடைந்த காலங்களுக்குப் பிறகு கம்பள நெசவு பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் ஒரு முக்கிய வரலாற்றுப் பங்கைக் கொண்டுள்ளன. கிராமவாசிகள் மற்றும் ஈரானின் பல்வேறு பழங்குடியினரால் நெய்யப்பட்ட கம்பளங்கள் அவற்றின் நேர்த்தியான கம்பளி, பிரகாசமான மற்றும் துல்லியமான வண்ணங்கள் மற்றும் குறிப்பிட்ட, பாரம்பரிய வடிவங்களால் வேறுபடுகின்றன.

 

"காஷானின் விலைமதிப்பற்ற வரலாற்று கம்பளங்கள் ஈரானிய பாரம்பரிய கலையின் உண்மையான அடையாளங்களாகும். இந்தக் கலை ஈரானியரின் வெவ்வேறு காலகட்டங்கள், வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளன," என்று ஈரானிய கலை குறித்து நீண்ட ஆய்வுகளை செய்த அமெரிக்க நிபுணர் பேராசிரியர் ஆர்தர் உபாம் போப் குறிப்பிடுகின்றார்.

 

உலக அங்கீகாரம்

 

மிகப் பழமையான ஈரானிய கம்பளமான பஸிரிக் கம்பளம், லெனின்கிரேட்டில் உள்ள ஹெர்மிடேஜ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது மொகோலெஸ்தானின் பனிக்கட்டுகளில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக பேராசிரியர் ரோடென்கோ அறிக்கையிடுகிறார். கிமு 33–350 காலத்திலிருந்த ஹக்கமனேஷியன் கவர்னரின் சவப்பெட்டியில் இருந்து இது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஈரானில் தரைவிரிப்பு நெசவு குறைந்தது 2500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்பது புலப்படுகிறது. பஸிரிக் கம்பளம் பார்ஸ் அல்லது மாத் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டதெனவும், குதிரைகளை மூட பயன்படுத்தப்பட்டது எனவும் கருதப்படுகிறது. அதன் பருமன் 2 x 1.83 மீட்டர், மேலும் அதன் சரியான நகல் ஒன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

 

வடிவமைப்பு மற்றும் நெசவின் நுட்பத்தைப் பொறுத்தவரை, லண்டனில் உள்ள “விக்டோரியா மற்றும் ஆல்பர்ட்” அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் “அர்தபில்” கம்பளம் உலகின் மிக முக்கியமான மற்றும் மதிப்பீடு செய்ய முடியாத தரைவிரிப்புகளில் ஒன்றாகும். கி.பி 1539ஆம் ஆண்டில் நெய்யப்பட்ட இந்த கம்பளத்தின் விளிம்புகள் மற்றும் நெசவின் அடித்தளமான குறுக்கிழை பட்டினால் தயாரிக்கப்பட்டுள்ளன.

 

ஆஸ்திரியாவில் உள்ள "கலை மற்றும் தொழில்" அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் "வேட்டை மைதானம்" என்ற கம்பளம், உலகின் மிகவும் ஆடம்பரமான மற்றும் விலைமதிப்பற்ற தரைவிரிப்புகளுள் ஒன்றாகும். இதில் வேட்டைக்காரர்கள் பலவிதமான விலங்குகளை வேட்டையாடும் காட்சிகள் ஒவ்வொன்றும் துல்லியமாக பதிக்கப்பட்டுள்ளன. இந்த கம்பளம் 16ஆம் நூற்றாண்டில் முழுமையாக பட்டினால் நெய்யப்பட்டது. புகழ்பெற்ற ஈரானிய தரைவிரிப்புகளின் பிற சிறந்த மாதிரிகள் பாரிஸ், லண்டன் மற்றும் மஷாதில் உள்ள அஸ்தானே கோதேஷ் ரஸாவி அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும் கி.பி 1601 ஆம் ஆண்டில், போலந்தின் மன்னர் சிக்மண்ட் வாஸாவின் ஆணையின்படி காஷானில் பல உயர்ந்த தரமுடைய பட்டுக் கம்பளங்கள் நெய்யப்பட்டன.

 

இன்றைய காலக்கட்டத்தில், சிறந்த வடிவமைப்பாளர்கள் கம்பளி உலகில் புதிய ஆக்கங்களை உருவாக்கி வருகின்றனர். உலகில் தரைவிரிப்புகளுக்கான சிறந்த வடிவமைப்புகள் தோன்றும் இடமாக ஈரான் கருதப்படுகிறது. ஈரானிய தரைவிரிப்புகளின் வடிவமைப்புகள் பெரும்பாலும் ஈரானிய சுவர் ஓவியங்கள் மற்றும் சிறுபடங்களின் (மினியேச்சர்) மீது அடிப்படையாகக் கொண்டவை. தோட்டக் காட்சிகள், பூக்கள், மரங்கள், பலவகையான பறவைகள், மிருகங்கள் மற்றும் வேட்டையாடும் காட்சிகள் போன்றவை, இந்தக் கம்பளங்களுக்கு தனித்துவமான அழகை தருகின்றன.

 

ஈரானிய கம்பளங்கள் நேர்த்தி, அழகு மற்றும் நீண்ட காலம் நீடிக்கும் தன்மை ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்துள்ளன. இத்தகைய தரம் கொண்டதாலேயே, உலக அளவில் ஈரானிய தரைவிரிப்புகள் தனி அடையாளம் பெற்றுள்ளன. இக் கலைதுறையில் பங்களிக்கின்ற நெசவாளர்களில் பலர் பெயரற்ற கலைஞர்களாகவே இருந்து வருகின்றனர். பழமை வாய்ந்த சில தரைவிரிப்புகளின் நெசவாளர்கள் மட்டுமே வரலாற்றில் பதிவாகியுள்ளனர்.

 

2010 ஆம் ஆண்டில், ஃபார்ஸ் மாகாணம் மற்றும் காஷானில் உள்ள "பாரம்பரிய கம்பள நெசவுத் திறன்கள்" யுனெஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரியப் பட்டியல்களில் பொறிக்கப்பட்டன.

 

உள்நாட்டு பொருளாதரத்தில் கம்பளி நெசவின் பங்களிப்பு

 

ஈரானிய கம்பள நெசவுத் தொழில், அந்நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இது எண்ணெய் அல்லாத ஏற்றுமதிகள் மற்றும் வேலைவாய்ப்பிற்கு, குறிப்பாக பெண்களுக்கு, கணிசமான பங்களிப்பை அளிக்கிறது. வரலாற்று ரீதியாக, ஈரானிய கையால் நெய்யப்பட்ட கம்பளங்கள் நாட்டின் வருவாய்க்கு ஒரு முக்கிய ஆதாரமாக இருந்துள்ளன, பொருளாதாரத் தடைகளுக்கு முன்னர் ஏற்றுமதிகள் $300 மில்லியனைத் தாண்டியுள்ளன, மேலும் இந்தத் தொழில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஆதரவளிக்கிறது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், பொருளாதாரத் தடைகள், நாணய ஏற்ற இறக்கங்கள் மற்றும் உலகளாவிய சந்தைகளில் அதிகரித்து வரும் போட்டி போன்ற சவால்களை இந்தத் தொழில் எதிர்கொண்டுள்ளது. 2017 இல் $426 மில்லியனாக இருந்த ஏற்றுமதி 2023 இல் $50 மில்லியனுக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரத் தடைகள் சர்வதேச வர்த்தகத்தை கடினமாக்கியுள்ளன, மேலும் ரியால் நாணயத்தின் சரிவு, கம்பளங்களை வாங்குவதை ஈரானியர்களுக்கு விலை உயர்ந்ததாக ஆக்கியுள்ளதுடன், சர்வதேச பரிவர்த்தனைகளை கடினமாக்கியுள்ளது. இந்தியா, துருக்கி மற்றும் சீனா போன்ற நாடுகள் தங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி திறன்களை விரிவுபடுத்தியுள்ளதால், உலகளாவிய கம்பள சந்தையில் ஈரானின் பங்கு குறைந்துள்ளது. சர்வதேச கொடுப்பனவுகளில் உள்ள சவால்கள் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் இந்தத் தொழிலை மேலும் பாதித்துள்ளன. இந்த குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்ட போதிலும், பாரம்பரிய நெசவு நுட்பங்கள் மற்றும் இயற்கை சாயங்களின் பயன்பாட்டை புத்துயிர் பெறுவதிலும், நவீன மற்றும் புதுமையான வடிவமைப்புகளை இணைப்பதிலும், உயர்தர தயாரிப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துவதன் மூலம் இந்தத் தொழில் மாறிவரும் உலகளாவிய நிலப்பரப்பிற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு, உலகளாவிய சந்தையில் அதன் நிலையை மீட்டெடுக்க நோக்கமாகக் கொண்டுள்ளது.

Saturday, June 7, 2025

இஸ்லாமிய ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலீ காமெனயீ அவர்களின் கண்ணோட்டத்தில் ஹஜ்

Hajj from the perspective of Ayatollah Seyyed Ali Khamenei, Supreme Leader of Islamic Republic of Iran


ஹஜ் யாத்திரை என்பது உளத்தூய்மை, பொறுமை நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்தல் மற்றும் இறையச்சம் மூலம் ஆன்மாவின் அசுத்தங்களைத் தூய்மைப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும்.

 

உள்ளத்தை அழகுபடுத்துதல் மற்றும் ஒழுக்க நற்பண்புகளை அடைதல் ஆகியவை ஹஜ்ஜின் மகத்தான நன்மைகளில் உள்ளடங்கும். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் இல்லத்திற்கு ஹாஜிகள், பொறுமை, மன்னிப்பு, கருணை, மரியாதை, நேர்மை, மற்றும் பணிவு ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம், தங்கள் ஆன்மாக்களை செம்மைப்படுத்தி, தாராள மனப்பான்மை, இறையச்சம் மற்றும் உன்னதம் போன்ற குணங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். இந்த ஆன்மீக பயணம், புனித இடங்களுடனான தொடர்பு மற்றும் சக விசுவாசிகளுடனான தோழமை மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

ஈரான் இஸ்லாமிய குடியரசின் உச்ச தலைவர் ஆயத்துல்லாஹ் இமாம் காமெனயீ அவர்கள் மகத்துவமிக்க அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று புனித மக்காவில் ஹஜ் கடமையை நிறைவேற்ற ஒன்றுகூடியுள்ள ஹாஜிகளை விழித்து ஒவ்வொரு வருடமும் உரை நிகழ்த்துவதுண்டு. இமாம் அவர்களின் ஒவ்வொரு சொற்பொழிவுகளும் ஒரு மையக் கருத்தை உள்வாங்கியதாக அமையும்.

 

2021 ஆம் ஆண்டு தனது ஹஜ் சிறப்பு உரையில் ஆயத்துல்லாஹ் இமாம் காமெனயீ அவர்கள் தனிநபர் மற்றும் சமூக மாற்றத்திற்கான ஒரு வாய்ப்பாக ஹஜ் கடமையை நோக்குவதாக கூறினார். இஸ்லாத்தின் மையமான மற்றும் மிக உன்னதமான மதக் கடமைகளில் ஒன்றான ஹஜ், முஸ்லிம்கள் மீது ஆழமான மற்றும் நீடித்த விளைவுகளை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது எனவும், ஹஜ்ஜின் பின்னணியில் உள்ள தத்துவத்தை விளக்குகையில், எல்லாம் வல்ல இறைவன் சூரா ஹஜ் இன் 28வது வசனத்தில், "அவர்கள் அவர்களுக்கேயான நன்மைகளை உணரட்டும்" என்ற புனித அல்குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டி, இந்த வசனம், ஹஜ் எனும் புனிதமான கடமை அனைத்து முஸ்லிம்களுக்கும் ஏந்தி வரும் திறன்களையும் வாய்ப்புகளையும் குறிக்கிறது எனவும் வலியுணர்த்தினார்.

 

'ஹஜ் என்பது இஸ்லாமிய உலக ஒற்றுமையின் சின்னம்' என்று மேற்கோள் காட்டிய 2022 ஆம் ஆண்டு இமாம் அவர்களின் செவ்வியில் முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமை என்பது ஹஜ் யாத்திரையின் இரண்டு அடிப்படை அடித்தளங்களில் ஒன்றாகும்; ஆன்மீகம் மற்றும் அல்லாஹ்வை நினைவு கூருதல் (திக்ர்) அவ்விரண்டில் அடங்கும் என்றும் கூறினார்.

 

இமாம் காமெனயீ அவர்கள் தனது 2023 சர்வதேச ஹஜ் செய்தியில், "வாழ்க்கைப் பாடமான ஹஜ் செய்தியின் இரண்டு முக்கிய அடித்தளங்கள் 'ஒற்றுமை' மற்றும் 'ஆன்மீகம்'" என்று வலியுறுத்தினார். பின்னர் இந்த இரண்டு முக்கிய கூறுகளின் சில பரிமாணங்களை அவர் விரிவாகக் கூறினார்.

 

2024 ஹஜ் செய்தியின் பிரதான கருப்பொருளாக ஒருமைப்பாட்டுடனான, ஒடுக்குமுறைக்கு எதிரான, சமத்துவத்தின் அடையாளமாக மற்றும் நெறிப்படுத்தப்பட்ட அரசியல் விழிப்புணர்வாக ஹஜ் கடமையை அனைத்து முஸ்லிம்களும் உணர வேண்டிய கட்டாயத்தை வலியுணர்த்தினார்.


ஈரான் இஸ்லாமிய குடியரசின் உச்ச தலைவர் ஆயத்துல்லாஹ் இமாம் காமெனயீ 30 மே 2025 அன்று அல்லாஹ்வின் திருநாமத்திலும், நபி (ஸல்) அவர்கள் மீதும் அஹ்லுல் பைத்தினர் மீதும் ஸலவாத்துடன் ஆரம்பித்த தனது இவ்வருட ஹஜ் சொற்பொழிவில் பின்வரும் கருப்பொருளில் உரையாற்றினார்.

 

·       ஹஜ் – ஒரு ஆன்மீகப் பயணம்

முஃமின்களின் பேராசையாக இருக்கும் ஹஜ், ஆன்மீகத்தை தூய்மையாக்க எல்லாம் வல்ல இறைவனால் அருளப்பட்ட ஒரு மகத்தான பரிசு ஆகும். இது ஒரு சாதாரண சுற்றுலா அல்ல; இவை தௌஹீதின் அடிப்படையிலான வாழ்வை நோக்கி இடமாற்றும் பயணம்.

 

·       ஹஜ்ஜின் செயல்முறை மற்றும் அதன் அர்த்தம்

ஹஜ்ஜின் செயல்பாடுகளான தவாஃப் (கஃபாவை சுற்றி வருதல்), சஃயி (சஃபா மற்றும் மர்வா மலைகளுக்கு இடையில் தொங்கோட்டம் ஓடுதல்), ரமீ (ஷைத்தான் மீது கற்களை எறிதல்), திக்ர் ​​மற்றும் பிரார்த்தனைகளுடன் கூடிய வுகூப் (ஓய்வு) போன்ற செயல்கள் ஆன்மீக சுத்திகரிப்பு மற்றும் மனித ஒற்றுமையை வலியுறுத்தும் செயல்பாடுகளாகவும் இவை சமத்துவம், சேவை, பாதுகாப்பு போன்ற இஸ்லாமிய விழுமியங்களை வளர்க்கும் ஒரு பயணமாக கருதுவதாக இமாம் அவர்கள் கூறுகிறார்கள்.

 

·       ஹஜ் – வாழ்வின் ஒரு தத்துவம்

ஹஜ் கற்றுத்தரும் வாழ்வியல் பயிற்சிகளை; உள்ளும் புறமும் சுத்திகரிக்க வேண்டிய ஓர் அழைப்பாக கருத்தில் கொண்டு அனைவரும், குறிப்பாக சமூக வழிகாட்டிகள், அறிவாளிகள், மற்றும் அரசியல்வாதிகள், நடைமுறைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

 

·       இன்றைய காலப்பொழுதில் ஹஜ்ஜின் முக்கியத்துவம்

தற்போது நடைபெறும் இந்த ஹஜ், சமகாலத்தின் சியோனிஸத்தின் கொடூரங்கள், குழந்தைகள் உட்பட பலரின் உயிரிழப்பை ஏற்படுத்தும் காஸா மற்றும் மேற்கு ஆசியாவின் பேரழிவுகள் நடைபெறும் காலமாகும். பாக்கியம் பெற்ற ஹாஜிகள் சமூக நலன் கருதி காசா மக்களுக்காக துஆ செய்ய வேண்டும்.

 

·       இஸ்லாமிய உலகத்தின் பொறுப்பு

இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தங்களது அரசியல் வேறுபாடுகளை கருத்திற்கொள்ளாது காஸாவின் மக்கள் பாதுகாப்புக்காக முன்னிறைவாக செயல்பட வேண்டும் என்றும் ஒற்றுமையுடன் சியோனிஸத்திற்கு எதிராக ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் தனது இவ்வருட ஹஜ் உரையை முடித்தார்.

 

 

https://english.khamenei.ir/news/11712/Islamic-governments-and-nations-responsible-to-stand-up-against

 


 

Tuesday, June 3, 2025

சிறந்த தலைமைத்துவத்தின் எடுத்துக்காட்டு புரட்சித் தலைவர் ஆயத்துல்லாஹ் இமாம் கொமெய்னி அவர்களின் வாழ்க்கை

The life of revolutionary leader Ayatollah Imam Khomeini, an example of great leadership


ஜூன் 3, 2025, இமாம் ருஹுல்லா முசவி கொமெய்னி அவர்களின் மறைவின் 36வது ஆண்டு நினைவு தினமாகும்.



 

வரலாற்றின் போக்கை ஆழமான வழிகளில் மாற்றிய ஒரு உயர்ந்த ஆளுமை ஆயத்துல்லாஹ் இமாம் கொமெய்னி அவர்கள். உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் இந்த உலகத்தை விட்டு பிரிந்த இந்த மகத்தான மனிதரின் 36 வது ஆண்டு நிறைவை (ஜூன் 3) நினைவுகூரும் வேளையில், உலக அரங்கில் அவரது மரபு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அவர் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் வெற்றிகரமான புரட்சியாளராகவும், யாராலும் ஒப்பிடமுடியாதவராகவும், நிகரற்றவராகவும் இருந்தார் என்பதை ஏகமனதாக கூறலாம்.

 

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் மார்க்க செயல்பாடு

 

1902 செப்டம்பர் 24 அன்று பிறந்த ரூஹுல்லாஹ் முஸ்தபாவி முசவி கொமெய்னி அவர்கள் ஒரு ஈரானிய ஷியா மார்க்க அறிஞர் ஆவார். அவர் 1979 இல் முகமது ரிசா ஷா பஹ்லவியை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிந்த இஸ்லாமிய புரட்சியை வழிநடத்தி, வெற்றிக்கு இட்டுச்சென்று, அடுத்த 10 ஆண்டுகளுக்கு இஸ்லாமிய குடியரசொன்றை ஸ்தாபித்து அதன் உச்ச தலைவராக வழிநடத்தினார். இம்மாமனிதர் 1989 ஜூன் 3 அன்று இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றார்.

 

ஆயத்துல்லாஹ் கொமெய்னி அவர்கள் ஹஸரத் பாத்திமாவின் பரம்பரையில் வந்த ஷியா மதத் தலைவர்களின் வம்சத்தில் பிறந்தவர். அவர் ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது, ​​அவரது தந்தை அப்போதைய அநியாயக்கார ஆட்சியாளர்களின் கூலிப்படைகளால் கொமெய்ன் நகருக்கும் அராக்கிற்கும் இடையில் உள்ள வீதியில் ஷஹீத் ஆக்கப்பட்டார். தந்தையின் மறைவுக்கு பிறகு, ஆயத்துல்லாஹ் கொமெய்னி அவர்களை அவரது தாயார் வளர்த்தார், தாயின் மரணத்திற்குப் பிறகு, அவரது மூத்த சகோதரர் முர்தசா அவரை பொறுப்பேற்றார். ரூஹுல்லாஹ் கொமெய்னி அவர்கள் பல்வேறு இஸ்லாமியப் பள்ளிகளில் கல்வி பயின்றார், மேலும் 1922 ஆம் ஆண்டில் அவர் ஷியா புலமைக்கான ஈரானின் அறிவுசார் மையமான கும் நகரில் குடியேறினார். 1930 களில் அவர் அங்கு ஒரு முக்கிய மார்க்க அறிஞரானார், மேலும் அவரது சொந்த ஊரான கொமெய்ன் என்ற பெயரால் அறியப்பட்டார்.

 

ஒரு ஷியா மார்க்க அறிஞராகவும், ஆசிரியராகவும், ஆயத்துல்லாஹ் கொமெய்னி அவர்கள் இஸ்லாமிய தத்துவம், பிக்ஹ் சட்டம் மற்றும் நெறிமுறைகள் குறித்து ஏராளமான ஆக்கங்களை எழுதியுள்ளார், ஆனால் ஈரானின் ஆட்சியாளர் முகமது ரிசா ஷா பஹ்லவிக்கு அவர் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தது, மேற்கத்திய தாக்கங்களை அவர் கண்டித்தது மற்றும் இஸ்லாமிய தூய்மையை அவர் சமரசமின்றி ஆதரித்ததே ஈரானின் இளைஞர்கள் அவரை பின்தொடர மிக முக்கியமான காரணிகளாக அமைந்தன.

 

1950 களில் அவர் ஒரு ஆயத்துல்லாஹ்வாக, ஒரு முக்கிய மதத் தலைவராகப் பாராட்டப்பட்டார், மேலும் 1960 களின் முற்பகுதியில் அவர் ‘சிரேஷ்ட ஆயத்துல்லாஹ்’ என்ற பட்டத்தைப் பெற்றார், இதன் மூலம் ஈரானில் உள்ள ஷியா சமூகத்தின் உச்ச மதத் தலைவர்களில் ஒருவரானார். ஷாவின் திட்டத்தை வெளிப்படையாக விமர்சிப்பவராக இருந்ததனாலும், அரசாங்க எதிர்ப்பு கலவரங்களைத் தூண்டிய குற்றச்சாட்டிலும் 1963 இல் ஆயத்துல்லாஹ் கொமெய்னி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு வருட சிறைவாசத்திற்குப் பிறகு, ஆயத்துல்லாஹ் கொமெய்னி அவர்கள் நவம்பர் 4, 1964 அன்று ஈரானில் இருந்து நாடுகடத்தப்பட்டார். இறுதியில் அவர் ஈராக்கின் நஜாஃப் நகரில் குடியேறினார். இக்காலத்திலேயே அவர் ஈரானில் ஒரு இஸ்லாமிய குடியரசின் அடித்தளத்தை அமைக்கும் "சட்ட வல்லுநரின் பாதுகாவலர்" பற்றிய தனது கோட்பாடுகளை உருவாக்கி அறிவிக்கத் தொடங்கினார். 1970 களின் நடுப்பகுதியில் இருந்து, ஷாவின் ஆட்சியின் மீது பொதுமக்களிடையே அதிருப்தி அதிகரித்ததால், ஈரானுக்குள் ஆயத்துல்லாஹ் கொமெய்னி அவர்களின் செல்வாக்கு வியத்தகு முறையில் வளர்ந்தது. மேலும் 1978 இன் பிற்பகுதியில் நடந்த பாரிய ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை ஆகியவை ஜனவரி 16, 1979 அன்று ஷா ஈரானில் இருந்து வெளியேற்ற வழிவகுத்தது. பிப்ரவரி 1, 1979 அன்று ஆயத்துல்லாஹ் கொமெய்னி அவர்கள் தெஹ்ரானுக்கு வெற்றியுடன் திரும்பினார், மேலும் ஈரானின் புரட்சியின் மதத் தலைவராகப் பாராட்டப்பட்டார்.

 

சிறந்த ஆளுமை

 

ரூஹுல்லாஹ் கொமெய்னி அவர்கள் ஒரு பன்முக ஆளுமை கொண்டவர்: முஜ்தஹித் (இஸ்லாமிய சட்டத்தில் அதிகாரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நபர்), ஃபகீஹ் (இஸ்லாமிய சட்ட அறிஞர்), அரசியல்வாதி, புரட்சியாளர், அதே போல் ஒரு கவிஞர்.

 

வெளி உலகிற்கும், பல முஸ்லிம்களுக்கும், இமாம் கொமெய்னி அவர்கள் மிகவும் பிரபலமானவர், 1978-1979 இல் ஈரானின் இஸ்லாமியப் புரட்சி சமகால முஸ்லிம் வரலாற்றில் உண்மையிலேயே ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும், ஏனெனில் இக்காலம் வரை முஸ்லிம்கள் தோல்வியையும் அவமானத்தையுமே மிகையாக சந்தித்திருந்தனர்.

 

200 ஆண்டுகள் காலனித்துவத்தில், காலனித்துவவாதிகள் சமூக-அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளை மாற்றியது மட்டுமல்லாமல், கல்வி முறைகளையும் மாற்றினர், உள்ளூர் மொழிகளை காலனித்துவ மொழிகளால் மாற்றினர், மேலும் காலனித்துவ சமூகங்களின் சுவைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்களை மாற்றினர். ஷாவின் ஆட்சிக் காலத்தில் ஈரான் விதிவிலக்கல்ல. ஏராளமான எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் கொண்டிருந்தாலும், ஈரானில் பெரும்பான்மையான மக்கள் வறுமையில் வாடினர்; ஷாவைச் சுற்றியுள்ள ஒரு சிறிய ஒட்டுண்ணி வர்க்கம் மட்டுமே மகத்தான செல்வத்தைப் பெற்றது. ஷாஹின்ஷா (மன்னர்களின் மன்னன்) என்று தன்னை அடையாளப்படுத்தும் ஷா, மேற்கத்திய நாடுகளுக்கு முற்றிலும் அடிபணிந்தவராக இருந்தார்.

 

இந்தப் பின்னணியில்தான் இமாம் கொமெய்னி அவர்கள் களத்தில் இறங்கினார். இந்தப் புரட்சி, அதன் இயல்பு காரணமாக, ‘புரட்சிகளை புரட்சிமயப்படுத்தும் புரட்சி என்று அடையாளம் காணப்பட்டது, ஏனெனில் இது நிராயுதபாணியான மக்கள் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அந்நியச் சார்பிலிருந்து முற்றிலும் விடுபட்டது.

 

இமாம் கொமெய்னி அவர்களுக்கு நாட்டின் விவகாரங்களில் ஏறக்குறைய முழு அதிகாரமும் ஒப்படைக்கப்பட்டது, ஆனால் அவர் மக்களின் விருப்பப்படி இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில் குடியரசு ஆட்சி முறையைத் தேர்ந்தெடுத்து நிறுவினார். (தாஹா முஸம்மில், 2022)

 

அவரது வாழ்க்கையைப் படிக்கும்போது, ​​இஸ்லாத்தைப் பற்றிய ஆழமான ஆய்வு மற்றும் அன்றாட வாழ்க்கையின் யதார்த்தத்தைப் பற்றிய கூர்மையான விழிப்புணர்வு, முக்கிய அரசியல் முடிவுகள் மற்றும் மக்களின் வாழ்க்கையில் அவற்றின் தாக்கம் ஆகியவை அவரது அரசியல் செயல்பாடுகளுக்கு அடித்தளமாக அமைந்திருப்பதைக் காணலாம்.

 

முஸ்லிம் உலகின் பிற பகுதிகளில், குறிப்பாக "சுன்னி" உலகில், அவரது முன்னோடிகள் அல்லது சமகாலத்தவர்களைப் போலல்லாமல், இமாம் மூன்று பெரிய தடைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது. முதலாவது ஷியா அரசியல் சிந்தனை; இரண்டாவது அடக்குமுறை ஆட்சி; மூன்றாவது பலவீனமான நாடுகளின் கொள்கைகளில் இன்றளவிலும் ஆதிக்கம் செலுத்தும் மேற்கத்திய அதிகாரம்.

 

பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்ட வரலாற்றின் மந்த நிலையை வெல்வது உண்மையிலேயே ஒரு மிகவும் கடினமான பணியாகும். இமாம் இதை ஹிக்மா (ஞானம்) மற்றும் துணிச்சலுடன் சாதித்தார். ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் முடிவுக்கு வரும் வகையில், ஈரானிய இளைஞர்களை - ஆண்களையும் பெண்களையும் - தூண்டுவதன் மூலம் அவர் அணிதிரட்டினார். புரட்சியின் போது ஷாவின் அதிக ஆயுதம் ஏந்திய இராணுவத்தை எதிர்கொண்டு தோற்கடித்தது அவரைப் பின்தொடர்ந்த இளைஞர்கள்தான்.

 

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீதான முழுமையாக நம்பிக்கையே, இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கான போராட்டத்தில் அவருக்கு பெரும் சவால்களைத் தாண்டிச் செல்ல உதவியது.

 

இமாமின் தனிப்பட்ட வாழ்க்கை

 

ஆடம்பரத்தை முற்றிலும் துறந்த ஆயத்துல்லாஹ் இமாம் கொமெய்னி அவர்கள் மிகவும் எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்து வந்தார்கள். சமகால தோழர்கள், சகாக்கள், அரசியல்வாதிகள் ஆகியோரிடம் எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்கள். உலக தலைவர்களுடனான சந்திப்புகளிலும் கூட தன்னிலையை மாற்றிக்கொள்ளாமல் எளிமையை கடைபிடித்தார்கள். அவரது சமூக நடத்தை, நீதி நிர்வாகம் மற்றும் விருப்பு வெறுப்பு அனைத்தும் இறை திருப்தியை நாடியதாகவே இருந்தன.

 

இறைவனுடனான அவரது நெருக்கம் மற்றும் அவரது தூய்மை ஆயத்துல்லாஹ் இமாம் கொமெய்னி அவர்களை தனித்துவமான ஒருவராக பிரதிபலித்துக் காட்டுகிறது. இமாமின் ஆன்மீக நிலைகள், அவரது ஏகத்துவ புரிதல், அவரது வழிபாட்டுச் செயல், ஆகியவை உண்மையில் சாதாரண மனிதர்களால் இலகுவில் அடைய முடியாத உச்சமாகும்.

 

Wednesday, May 28, 2025

முல்லா சத்ரா - பாரசீக தத்துவஞானி மற்றும் இறையியலாளர்

 Mulla Sadra - Persian philosopher and theologian

 

Mulla Sadra's Quotes: A Journey into Transcendent Philosophy

 

முல்லா சத்ரா என்று பிரபலமாக அறியப்படும் முஹம்மது இப்னு இப்ராஹிம் கவாமி ஷிராசி ஒரு முன்னணி பாரசீக தத்துவஞானி, இறையியலாளர், ஷியா அறிஞர் மற்றும் சட்ட வல்லுநர் ஆவார், சஃபாவிட் ஷா அப்பாஸ் I இன் கீழ் தத்துவத்தின் மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த இவர் அவரது சொந்த ஊரான ஷிராஸில் உள்ள மதரஸா-யி கான் இல் மிகவும் செல்வாக்கு மிக்க ஆசிரியரும் ஆவர். முல்லா சத்ரா புனித குர்ஆன் மற்றும் ஹதீஸ்களைப் பற்றிய ஆழமான அறிவைக் கொண்டிருந்தார், மேலும் அவர் சந்தித்த தத்துவ சிக்கல்களின் தீர்வுக்கு அவற்றின் ஆழமான கருத்துக்களை நாடினார்.

 

முல்லா சத்ராவின் வாழ்க்கை அறிவுசார் நோக்கங்கள் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பால் தனித்துவம் பெற்றது. 1571 இல் பிறந்த இவர் ஷிராஸின் ஒரு உன்னத குடும்பத்தின் ஒரே மகனாக இருந்தார். இவரது தந்தை குவாஜா இப்ராஹிம் கவாமி ஒரு மார்க்க அறிஞர் மற்றும் மார்க்கப்பற்றுள்ள அரசியல்வாதி. செல்வம், மரியாதை மற்றும் அந்தஸ்து இருந்தபோதிலும், அவருக்கு குழந்தைகள் இருக்கவில்லை, இறைவனிடம் மனமுகர்ந்த பிரார்த்தனையின் விளைவாக, அவருக்கு ஒரு மகன் பிறந்தார், இந்த ஒரே மகனே பின்னர் முல்லா சத்ரா என்று அறியப்பட்டார். ஃபார்ஸ் எனும் பரந்த பிராந்தியத்தின் ஆளும் அமைச்சரின் ஒரே மகனாக இருந்த முல்லா சத்ரா, தனது குழந்தை மற்றும் இளமைப் பருவத்தில் மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ்ந்தார்.

 

சிறுவயதிலிருந்தே அவர் கற்றலில் அதிக திறனை வெளிப்படுத்தினார், அக்கால அறநெறி கல்லூரிகளில் கற்பிக்கப்பட்ட பொதுவான பாடநெறிகளுக்கு மேலதிகமாக, பாரசீக மற்றும் அரபு இலக்கியங்கள், வானியல், தர்க்கம், நீதித்துறை, இறையியல் மற்றும் தத்துவம் போன்ற பாடங்களிலும் அவர் தேர்ச்சி பெற்றார், மருத்துவம் மற்றும் இஸ்லாமிய சட்டம் ஆகியவற்றிலும் தேர்ச்சி மட்டத்தை அடைந்திருந்தார். இருப்பினும், அவரது உண்மையான ஆர்வம் தத்துவக் கல்வியில் வெளிப்பட்டது. அக்காலத்தில், தத்துவத்தில் அவரது சொந்த ஊர் ஷிராஸ் மகிமையைப் பெற்றிருந்தாலும், அது அவரது அறிவு தாகத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட இடமாக அவர் கருதினார். மேம்பட்ட மத மற்றும் தத்துவப் பயிற்சியை நாடி, அவர் 1591 இல் ஷிராஸை விட்டு காஸ்வின் நகருக்கு (ஈரானின் முன்னாள் தலைநகரம்) சென்றார். இறுதியில், அவர் 1597 இல் இஸ்ஃபஹானில் குடியேறினார், அங்கு அவர் அன்றைய மிகச் சிறந்த புத்திஜீவிகளான மிர் தமாத் மற்றும் ஷேக் பஹாய் ஆகியோரிடம் கல்வி கற்றார், அவர்கள் அவருக்கு தத்துவம், இறையியல், மற்றும் ஹதீஸ் ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தார்கள்.

 

கற்றலின் பின் ஷிராஸ் நகருக்கு திரும்பிய முல்லா சத்ரா, அங்கு அவரின் தர்க்க ரீதியான தத்துவத்திற்கு விரோதமான மற்றும் அடக்குமுறையான சூழலைக் கண்டார். அவர் தர்க்கரீதியான பகுத்தறிவு, ஆன்மீக உத்வேகம் மற்றும் முக்கிய வேத ஆதாரங்கள் ஆகியவற்றின் கலவையின் மூலம் யதார்த்தத்தைப் புரிந்துகொள்வதன் அவசியத்திற்காக வாதிட்டார். சில நீதித்துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்த அவரது கருத்துக்கள் அக்காலத்தின் பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்துக்களிலிருந்து வேறுபட்டதால், முல்லா சத்ரா மதத்திற்கு எதிரான கொள்கை கொண்டவர் என்று குற்றம் சாட்டப்பட்டு, மதக் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, இஸ்ஃபஹானிலிருந்து மத்திய ஈரானின் புனித நகரமான கும் பிராந்தியத்திற்கு அருகிலுள்ள அமைதியான கிராமமான கஹாக் என்ற கிராமத்திற்கு தனிமை மற்றும் சிந்தனைக்காகப் புறப்பட்டார், அங்கு அவர் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலம் தனிமையில் கழித்தார். மேலும் ஆன்மாவின் தூய்மைபடுத்தலுக்கான தஹ்திப் அல்-நஃப்ஸுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அங்கு இருந்த காலகட்டத்தில், அவர் சூபித்துவதில் ஆர்வம் காட்டியதோடு தனது போதனைகள் மற்றும் ஆராய்ச்சியைத் தொடர்ந்தும் மேற்கொண்டார். இந்தக் காலகட்டத்தில்தான் இஸ்லாமிய தத்துவத்தை மாற்றிய "அல்-ஹிக்மா அல்-முத'ஆலியா ஃபீ அல்-அஸ்ஃபர் அல்-'அக்லியா அல்-அர்பா'" (நான்கு அறிவுசார் பயணங்களைப் பற்றிய ஆழ்நிலை ஞானம்) என்ற புத்தகத்தை அவர் எழுதினார். இந்த தத்துவத்தின் மையத்தில் சத்ராவின் மகத்தான படைப்பான இப் புத்தகம் "நான்கு பயணங்கள்" என பொதுவாக அறியப்பட்டது. பல தொகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட இந்தப் படைப்பு, ஈமானுக்கான ஒரு வழிகாட்டும் ஊடகமாக கருதப்படுகிறது. இருப்பினும், அஸ்ஃபர், படிக்க எளிதான புத்தகமல்ல. இன்றும் கூட, அறநெறிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அதன் பக்கங்களைத் திறப்பதற்கு முன்பே இறையியல் மற்றும் தத்துவத்தின் உன்னதமான நூல்களில் தேர்ச்சி பெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஷிராஸ், இஸ்ஃபஹான், கும், காஷான் நகரங்களிடையே பல பயணங்களும், மக்காவிற்கு ஏழு யாத்திரைகளும் மேற்கொண்ட முல்லா சத்ரா, இப் பயணங்கள் இவரது அறிவுசார் மற்றும் ஆன்மீக வளர்ச்சியைக் கணிசமாகப் பாதித்ததாக உணர்ந்தார்.

 

1612 ஆம் ஆண்டில், முல்லா சத்ராவை அலீ குலி கான் ஷிராஸுக்குத் திரும்பிச் சென்று புதிதாகக் கட்டப்பட்ட கான் அறநெறி பள்ளியில் கற்பிக்க அழைத்தார். முல்லா சத்ரா அழைப்பை ஏற்றுக்கொண்டு, தனது வாழ்க்கையின் இறுதிப்பகுதி முழுவதையும் ஷிராஸில் கழித்தார், அறிவுசார் அறிவியல்களை, குறிப்பாக ஆழ்நிலை இறையியல் பற்றிய தனது சொந்த போதனைகளை கற்பிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்.

 

மே 22, 1999 அன்று நடைபெற்ற சர்வதேச முல்லா சத்ரா மாநாட்டின் போது, ​​இஸ்லாமியப் புரட்சியின் உச்சத் தலைவரான ஆயத்துல்லாஹ் கமேனியீ ஒரு செய்தியை வெளியிட்டார். அவர் குறிப்பிடுவதாவது; அஸ்ஃபர் புத்தகம் வெளியிட்டு சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகும், இப்போது வரை அனைத்தும் முல்லா சத்ராவின் தத்துவ இலட்சியங்களால் வளர்க்கப்படுகின்றன. அவரது முக்கிய புத்தகங்கள் மற்றும் கருத்துக்கள் - அவற்றில் பல, அவற்றின் வாதம் மற்றும் பகுத்தறிவு தொடர்பாக, அவரது சொந்த முயற்சிகள் - கற்பித்தல், ஆராய்ச்சி, விளக்கம் மற்றும் தூய்மைப்படுத்தலுக்கான அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. முல்லா சத்ராவின் தத்துவப் பள்ளி, மற்ற எல்லா தத்துவங்களைப் போலவே, தேசியம் மற்றும் புவியியல் எல்லைகளைக் கடந்து, அனைத்து மனிதர்களுக்கும் சமூகங்களுக்கும் ஒரு வலுவான பகுத்தறிவு கட்டமைப்பை கொண்ட படிப்பினையை வழங்குகிறது. இஸ்லாமிய தத்துவம், குறிப்பாக முல்லா சத்ராவின் தத்துவத்தின் அமைப்பு மற்றும் உள்ளடக்கங்கள், இன்று மனிதகுலத்தின் மனதில் அதன் இடத்தைத் தேடுகின்றன என்று நாங்கள் நம்புகிறோம்; அது என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் ஆயத்துல்லாஹ் கமேனியீ கூறினார்.

 

முல்லா சத்ராவின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட அவரது அறிவுசார் வலையமைப்பு பின்னர் "இஸ்பஹான் பள்ளி" என்று அழைக்கப்பட்டு ஒரு தனித்துவமான அரசியல் மற்றும் மத சூழலில் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

 

தத்துவம் மற்றும் அறிவியலைப் பெறுவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மார்கபற்றான வாழ்க்கைக்குப் பிறகு, முல்லா சத்ரா 1640 இல் மக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் வழியில் பாஸ்ராவில் இறந்தார் அவரது உடல் நஜாப்பில் அடக்கம் செய்யப்பட்டது.