Contributors

Saturday, June 14, 2025

ஈரானின் ஆடம்பரத்தை வெளிப்படுத்தும் கம்பள நெசவு

     Carpet weaving that reveals the luxury of Iran

 

“உலகம் முழுவதும் ஆடம்பரமான கலைக்கு சான்றாக அமைவது ஈரானிய கம்பளங்கள்” ஆர்தர் போப்

 


நாம் கம்பளங்கள் அல்லது தரைவிரிப்புகள் குறித்து பேசும்போது, இயல்பாகவே மனதில் தோன்றும் நாடு, ஈரான். உலகின் சிறந்த கலை நிபுணர்கள் இதை ஒருமுகமாக ஏற்றுக்கொள்கிறார்கள். "கம்பளம்" என்றால் "பாரசீகம்" என்பதே பெரும்பான்மையினரின் எண்ணம். எனவே, கம்பளங்கள் என்பது ஈரானிய கலைக்குப் பிரதிநிதியாகவும், அதன் தோற்றத்தைக் கூறும் தெளிவான அடையாளமாகவும் விளங்குகின்றன. கம்பள நெசவு பாரசீக கலாச்சார கலையின் ஒரு முக்கிய பகுதியாகும். ஈரானில் கம்பள நெசவு செய்யும் கலை ஈரானிய மக்களின் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களுடன் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளது.

 

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 10 ம் திகதி, ஈரான் தனது சிறந்த கலாச்சார மற்றும் பொருளாதார அடையாளங்களில் ஒன்றான கம்பள நெய்தலை கொண்டாடுகிறது. இக்கலைக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், 2021ஆம் ஆண்டு ஈரானிய கலாச்சார புரட்சி உயர் ஆணைக்குழுவால் இந்நாள் அதிகாரப்பூர்வமாக தேசிய நாளாக அறிவிக்கப்பட்டது. இந்த நாள், ஈரானியர்களின் படைப்பாற்றல், அடையாளம் மற்றும் கைவினை ஆக்கம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் பல நூற்றாண்டுகள் பழமையான கலையை நினைவுகூரும் தினமாகும்.

 

பாரசீக கம்பளம் என்பது பல்வேறு வகையான பயன்பாட்டு மற்றும் குறியீட்டு நோக்கங்களுக்காக ஈரானில் தயாரிக்கப்படும் ஒரு கனமான துணி ஆகும். உலகின் மிகச்சிறந்த மற்றும் ஆடம்பரமான தரைவிரிப்புகள் ஈரானிலேயே நெசவு செய்யப்படுகின்றன என்பதை நாம் சந்தேகமின்றி உறுதிப்படுத்த முடியும்.

 

கிராமம் மற்றும் நகரப் பட்டறைகளில் நாடோடி பழங்குடியினராலும், அரச உற்பத்தியாளர்களாலும், பாரசீக கம்பளங்கள் நெய்யப்படுகின்றன. அவை பல்வேறு பாரம்பரிய அம்சங்களை - ஈரானின் வரலாறு, பாரசீக கலாச்சாரம் மற்றும் அதன் பல்வேறு மக்களை பிரதிபலிக்கின்றன.

 

கம்பள நெய்தலின் ஆரம்பம்

 

ஈரானிய கம்பளம் என்பது பாரசீகக் கலையின் உயிரோட்டமான வெளிப்பாடு. இருப்பினும், பாரசீகத்தில் முதல் கம்பளம் எங்கு நெய்யப்பட்டது என்பது உறுதியாகத் தெரியவில்லை. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கலை வரலாற்றாசிரியர்கள், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்ட மக்களால் கம்பள நெசவு கண்டுபிடிக்கப்பட்டதாக  நம்புகின்றனர்.

 

ஈரானிய பீடபூமியில் வசித்த மக்களின் முதன்மைத் தொழில்களான விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு, கம்பள நெசவின் தோற்றத்திற்கு முக்கிய பங்காற்றின. கால்நடைகளுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த இம்மக்கள், கம்பளி மற்றும் அதன் பல்வேறு பயன்களைப் பற்றி படிப்படியாக அறிந்து கொண்டனர்.


ஆரம்பத்தில் கம்பளியைக் கொண்டு ஆடைகளைத் தயாரித்தவர்கள், பின்னர் தரையை மறைப்பதற்கான விரிப்புகளையும் நெசவு செய்யத் தொடங்கினர். மிருகத் தோல்களைத் தரைவிரிப்பாகப் பயன்படுத்தி வந்த மக்கள், காலப்போக்கில் கம்பளியால் நெய்யப்பட்ட விரிப்புகளின் பயன்பாட்டிற்கு மாறினர்.

 

இவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, ஈரானிய பீடபூமியில் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தில் ஈடுபட்ட மக்களே கம்பளத்தின் முதல் நெசவாளர்கள் மற்றும் இந்தக் கலையின் கண்டுபிடிப்பாளர்கள் என்பது தெளிவாகிறது.

 

ஈரானிய கம்பளங்களின் தனித்துவமான தரம்

 

பாரசீக கம்பளங்கள் அவற்றின் உயர் தரம், நுட்பமான வடிவமைப்புகள் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் காரணமாக தனித்துவமானவை. இவை அவற்றின் நீடித்துழைப்பு, கலைத்திறன் மற்றும் உயர்தர இயற்கை பொருட்களின் பயன்பாடு ஆகியவற்றிற்காக பெரிதும் மதிக்கப்படுகின்றன. பாரசீக கம்பளங்கள் பெரும்பாலும் கையால் பின்னப்பட்டவை; இதற்கு பல வருட பயிற்சி மற்றும் திறமை தேவைபடுகிறது. கம்பளி, பட்டு மற்றும் பருத்தி போன்ற இயற்கை பொருட்களிலிருந்து இவை தயாரிக்கப்படுகின்றன. மேலும், பயன்படுத்தப்படும் சாயங்கள் பெரும்பாலும் இயற்கை தாவரங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து பெறப்படுகின்றன. பாரசீக கம்பளங்கள் நெசவாளரின் திறமை மற்றும் கலாச்சார மரபை பிரதிபலிக்கும் அழகான வடிவங்களைக் கொண்டுள்ளன. பொருட்களின் தரம் மற்றும் கையால் பின்னப்பட்ட இந்த கம்பளங்கள் தலைமுறைகளுக்கு நிலைத்திருக்க உதவுகிறது, இதனால் அவை குடும்பப் பாரம்பரியச் சின்னங்களாக மாறுகின்றன. பாரசீக கம்பளங்கள் ஈரானிய கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ளன, மேலும் அவற்றின் வடிவமைப்புகள் பெரும்பாலும் குறியீட்டு அர்த்தங்களை தாங்கி நிற்கின்றன. இவை கலைப்படைப்புகளாகக் கருதப்படுவதுடன், சேகரிப்பாளர்கள் மற்றும் கலை ஆர்வலர்களால் பெரிதும் போற்றப்படுகின்றன.

 

பதினாறாம் நூற்றாண்டில் இஸ்ஃபஹானின் சஃபாவிட் தொழிற்சாலைகளில் நெய்யப்பட்ட கம்பளங்கள் அவற்றின் விரிவான வண்ணங்கள் மற்றும் கலை வடிவமைப்பிற்குப் பெயர் பெற்றவை, மேலும் இன்று உலகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் தனியார் சேகரிப்புகளில் இப் புராதன, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கம்பளங்கள் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படுகின்றன.

 

ஈரானிய கம்பள நெசவாளர்கள் தங்கள் அற்புத திறமையால் பாராட்டத்தக்க வண்ணங்களில் அழகிய வடிவங்களை நெய்கிறார்கள், இது திறமைமிக்க ஓவியர்களிடமிருந்து மட்டுமே எதிர்பார்க்கக்கூடிய தரம். உலகின் கலை நிபுணர்கள் ஈரானிய கம்பளங்களை வண்ணமயமான பூக்கள் மலர்ந்த அழகிய தோட்டத்துடன் ஒப்பிடுகிறார்கள். இக்கம்பளங்களில் காய்கறிகள், பறவைகள், மிருகங்கள், நிலப் படங்கள் மற்றும் கற்பனை உயிரினங்களைப் போல நுணுக்கமான ஓவியங்கள் இடம்பெற்றிருக்கும். இவ்வண்ணமயமான காட்சியை காணும் ஒவ்வொருவரும் இந்த சிறிய அழகான தோட்டத்தைத் தங்கள் வீட்டில் ஒருபகுதியாகக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் மலைக்காமல் இருக்க முடியாது.

 

தப்ரிஸ், கெர்மன், ராவர், நெய்ஷாபூர், மஷ்ஹத், காஷான், இஸ்ஃபஹான், நைன் மற்றும் கும் போன்ற நகரங்கள் மற்றும் பிராந்திய மையங்களில் நெய்யப்படும் கம்பளங்கள் அவற்றின் குறிப்பிட்ட நெசவு நுட்பங்கள், உயர்தர பொருட்கள், வண்ணங்கள் மற்றும் வடிவங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வகைப்படுத்தப்படுகின்றன. தப்ரிஸ் போன்ற நகர உற்பத்தி நிறுவனங்கள், வீழ்ச்சியடைந்த காலங்களுக்குப் பிறகு கம்பள நெசவு பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் ஒரு முக்கிய வரலாற்றுப் பங்கைக் கொண்டுள்ளன. கிராமவாசிகள் மற்றும் ஈரானின் பல்வேறு பழங்குடியினரால் நெய்யப்பட்ட கம்பளங்கள் அவற்றின் நேர்த்தியான கம்பளி, பிரகாசமான மற்றும் துல்லியமான வண்ணங்கள் மற்றும் குறிப்பிட்ட, பாரம்பரிய வடிவங்களால் வேறுபடுகின்றன.

 

"காஷானின் விலைமதிப்பற்ற வரலாற்று கம்பளங்கள் ஈரானிய பாரம்பரிய கலையின் உண்மையான அடையாளங்களாகும். இந்தக் கலை ஈரானியரின் வெவ்வேறு காலகட்டங்கள், வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளன," என்று ஈரானிய கலை குறித்து நீண்ட ஆய்வுகளை செய்த அமெரிக்க நிபுணர் பேராசிரியர் ஆர்தர் உபாம் போப் குறிப்பிடுகின்றார்.

 

உலக அங்கீகாரம்

 

மிகப் பழமையான ஈரானிய கம்பளமான பஸிரிக் கம்பளம், லெனின்கிரேட்டில் உள்ள ஹெர்மிடேஜ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது மொகோலெஸ்தானின் பனிக்கட்டுகளில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக பேராசிரியர் ரோடென்கோ அறிக்கையிடுகிறார். கிமு 33–350 காலத்திலிருந்த ஹக்கமனேஷியன் கவர்னரின் சவப்பெட்டியில் இருந்து இது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஈரானில் தரைவிரிப்பு நெசவு குறைந்தது 2500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்பது புலப்படுகிறது. பஸிரிக் கம்பளம் பார்ஸ் அல்லது மாத் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டதெனவும், குதிரைகளை மூட பயன்படுத்தப்பட்டது எனவும் கருதப்படுகிறது. அதன் பருமன் 2 x 1.83 மீட்டர், மேலும் அதன் சரியான நகல் ஒன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

 

வடிவமைப்பு மற்றும் நெசவின் நுட்பத்தைப் பொறுத்தவரை, லண்டனில் உள்ள “விக்டோரியா மற்றும் ஆல்பர்ட்” அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் “அர்தபில்” கம்பளம் உலகின் மிக முக்கியமான மற்றும் மதிப்பீடு செய்ய முடியாத தரைவிரிப்புகளில் ஒன்றாகும். கி.பி 1539ஆம் ஆண்டில் நெய்யப்பட்ட இந்த கம்பளத்தின் விளிம்புகள் மற்றும் நெசவின் அடித்தளமான குறுக்கிழை பட்டினால் தயாரிக்கப்பட்டுள்ளன.

 

ஆஸ்திரியாவில் உள்ள "கலை மற்றும் தொழில்" அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் "வேட்டை மைதானம்" என்ற கம்பளம், உலகின் மிகவும் ஆடம்பரமான மற்றும் விலைமதிப்பற்ற தரைவிரிப்புகளுள் ஒன்றாகும். இதில் வேட்டைக்காரர்கள் பலவிதமான விலங்குகளை வேட்டையாடும் காட்சிகள் ஒவ்வொன்றும் துல்லியமாக பதிக்கப்பட்டுள்ளன. இந்த கம்பளம் 16ஆம் நூற்றாண்டில் முழுமையாக பட்டினால் நெய்யப்பட்டது. புகழ்பெற்ற ஈரானிய தரைவிரிப்புகளின் பிற சிறந்த மாதிரிகள் பாரிஸ், லண்டன் மற்றும் மஷாதில் உள்ள அஸ்தானே கோதேஷ் ரஸாவி அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும் கி.பி 1601 ஆம் ஆண்டில், போலந்தின் மன்னர் சிக்மண்ட் வாஸாவின் ஆணையின்படி காஷானில் பல உயர்ந்த தரமுடைய பட்டுக் கம்பளங்கள் நெய்யப்பட்டன.

 

இன்றைய காலக்கட்டத்தில், சிறந்த வடிவமைப்பாளர்கள் கம்பளி உலகில் புதிய ஆக்கங்களை உருவாக்கி வருகின்றனர். உலகில் தரைவிரிப்புகளுக்கான சிறந்த வடிவமைப்புகள் தோன்றும் இடமாக ஈரான் கருதப்படுகிறது. ஈரானிய தரைவிரிப்புகளின் வடிவமைப்புகள் பெரும்பாலும் ஈரானிய சுவர் ஓவியங்கள் மற்றும் சிறுபடங்களின் (மினியேச்சர்) மீது அடிப்படையாகக் கொண்டவை. தோட்டக் காட்சிகள், பூக்கள், மரங்கள், பலவகையான பறவைகள், மிருகங்கள் மற்றும் வேட்டையாடும் காட்சிகள் போன்றவை, இந்தக் கம்பளங்களுக்கு தனித்துவமான அழகை தருகின்றன.

 

ஈரானிய கம்பளங்கள் நேர்த்தி, அழகு மற்றும் நீண்ட காலம் நீடிக்கும் தன்மை ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்துள்ளன. இத்தகைய தரம் கொண்டதாலேயே, உலக அளவில் ஈரானிய தரைவிரிப்புகள் தனி அடையாளம் பெற்றுள்ளன. இக் கலைதுறையில் பங்களிக்கின்ற நெசவாளர்களில் பலர் பெயரற்ற கலைஞர்களாகவே இருந்து வருகின்றனர். பழமை வாய்ந்த சில தரைவிரிப்புகளின் நெசவாளர்கள் மட்டுமே வரலாற்றில் பதிவாகியுள்ளனர்.

 

2010 ஆம் ஆண்டில், ஃபார்ஸ் மாகாணம் மற்றும் காஷானில் உள்ள "பாரம்பரிய கம்பள நெசவுத் திறன்கள்" யுனெஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரியப் பட்டியல்களில் பொறிக்கப்பட்டன.

 

உள்நாட்டு பொருளாதரத்தில் கம்பளி நெசவின் பங்களிப்பு

 

ஈரானிய கம்பள நெசவுத் தொழில், அந்நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இது எண்ணெய் அல்லாத ஏற்றுமதிகள் மற்றும் வேலைவாய்ப்பிற்கு, குறிப்பாக பெண்களுக்கு, கணிசமான பங்களிப்பை அளிக்கிறது. வரலாற்று ரீதியாக, ஈரானிய கையால் நெய்யப்பட்ட கம்பளங்கள் நாட்டின் வருவாய்க்கு ஒரு முக்கிய ஆதாரமாக இருந்துள்ளன, பொருளாதாரத் தடைகளுக்கு முன்னர் ஏற்றுமதிகள் $300 மில்லியனைத் தாண்டியுள்ளன, மேலும் இந்தத் தொழில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஆதரவளிக்கிறது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், பொருளாதாரத் தடைகள், நாணய ஏற்ற இறக்கங்கள் மற்றும் உலகளாவிய சந்தைகளில் அதிகரித்து வரும் போட்டி போன்ற சவால்களை இந்தத் தொழில் எதிர்கொண்டுள்ளது. 2017 இல் $426 மில்லியனாக இருந்த ஏற்றுமதி 2023 இல் $50 மில்லியனுக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரத் தடைகள் சர்வதேச வர்த்தகத்தை கடினமாக்கியுள்ளன, மேலும் ரியால் நாணயத்தின் சரிவு, கம்பளங்களை வாங்குவதை ஈரானியர்களுக்கு விலை உயர்ந்ததாக ஆக்கியுள்ளதுடன், சர்வதேச பரிவர்த்தனைகளை கடினமாக்கியுள்ளது. இந்தியா, துருக்கி மற்றும் சீனா போன்ற நாடுகள் தங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி திறன்களை விரிவுபடுத்தியுள்ளதால், உலகளாவிய கம்பள சந்தையில் ஈரானின் பங்கு குறைந்துள்ளது. சர்வதேச கொடுப்பனவுகளில் உள்ள சவால்கள் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் இந்தத் தொழிலை மேலும் பாதித்துள்ளன. இந்த குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்ட போதிலும், பாரம்பரிய நெசவு நுட்பங்கள் மற்றும் இயற்கை சாயங்களின் பயன்பாட்டை புத்துயிர் பெறுவதிலும், நவீன மற்றும் புதுமையான வடிவமைப்புகளை இணைப்பதிலும், உயர்தர தயாரிப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துவதன் மூலம் இந்தத் தொழில் மாறிவரும் உலகளாவிய நிலப்பரப்பிற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு, உலகளாவிய சந்தையில் அதன் நிலையை மீட்டெடுக்க நோக்கமாகக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment