Contributors

Saturday, June 20, 2020

COVID-19 - அலீ இப்னு சீனாவின் பக்கம் திரும்பியுள்ள நவீன மருத்துவ உலகின் கவனம்

COVID-19 - Modern medical world's focus has been turned towards Ali Ibn-Sina

மருத்துவத் துறையில் ஆழமான அறிவையும் மற்றும் நீடித்த செல்வாக்கையும் கொண்டிருந்த ஈரானைச் சேர்ந்த ஒரு முஸ்லிம்  விஞ்ஞானி அலீ இப்னு சினா (980-1037)

நவீன மருத்துவத்தின் தந்தை அவிசென்னா என்று மேற்கில் அறியப்பட்ட ஈரானிய முஸ்லிம் விஞ்ஞானி அபு ‘அலி அல்-ஹுசைன் இப்னு சினா (980-1037) “தனிமைப்படுத்தல்” முறையை வகுத்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதாவது, சில நோய்கள் நுண்ணுயிரிகளால் பரவுகின்றன என்று அவர் சந்தேகித்தார், மேலும் நோய் (தொற்று) நபருக்கு நபர் பரவுவதைத் தடுக்க, 40 நாட்களுக்கு மக்களை தனிமைப்படுத்தும் முறையை அவர் வகுத்தார். அவர் இந்த முறையை அல்-அர்பஈனியா (“நாற்பது - நாற்பது நாட்கள்“) என்று அழைத்தார்.

COVID-19 வெடித்ததிலிருந்து, அவிசென்னா அல்லது முஸ்லிம் உலகில் அறியப்பட்ட அலீ இப்னு சினா (980-1037) மீது உலகின் கவனம் திரும்பியுள்ளதை பார்க்கிறோம். அலீ இப்னு சினா ஈரானைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் விஞ்ஞானி, மருத்துவத் துறையில் ஓர் ஆழமான அறிவை மற்றும் நீடித்த செல்வாக்கைக் கொண்டிருந்தார்.

அவரது ஆரம்பகால படைப்பான, "அல்-கானுன்", மருத்துவ இலக்கியம் மற்றும் கல்வித் திட்டங்களின் வளர்ச்சியில் முக்கியமானது மற்றும் மருத்துவ வரலாற்றில் ஒரு மூலக்கல்லாக இருந்தது. அலீ இப்னு சினாவின் படைப்புகள் அவர் மரணித்து 600 வருடங்கள் கடந்தும் முஸ்லிம்  உலகிலும் ஐரோப்பாவிலும் மருத்துவ வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தன என்று வரலாற்றாசிரியர் ஜமால் மூசவி குறிப்பிடுகிறார்.

அலீ இப்னு சினாவின் மருத்துவ படைப்பு உலகெங்கிலும் உள்ள தொற்றுநோய்க்கு எதிரான முயற்சிகளுக்கு உதவுகிறது என்பதை இன்று முஸ்லிம்கள் பெருமையுடன் உலகுக்கு நினைவுபடுத்துகிறார்கள். "ஒரு நுண்ணிய வைரஸை எதிர்த்துப் போராட, ஆரம்பகால நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் பாரசீக முஸ்லிம், பல்துறை விற்பன்னர் இப்னு சினாவினது கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான பரிந்துரைகளின் பால் உலகின் கவனம்  திரும்பியுள்ளது" என்று ஓர் எழுத்தாளர் கூறுகின்றார்.

அலீ இப்னு சினாவின் மருத்துவ விஞ்ஞானப் பணிகளில் தனிமைப்படுத்தலின் யோசனை எவ்வாறு வேரூன்றியுள்ளது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர், "அவரது ஐந்து தொகுதி மருத்துவ கலைக்களஞ்சியமான "அல்-கானுன்" [The Canon], மருத்துவத்தில் தொற்று நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தலை வலியுறுத்தினார். "அல்-கானுன்" முதலில் 1025 ஆம் ஆண்டில், அதாவது, சுமார் 1000 வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்டது".

அவிசென்னா ஒரு மருத்துவ விஞ்ஞானி மட்டுமல்ல, அவர் ஒரு உயர்ந்த தத்துவஞானியும் கூட என்பது நினைவுகூரத்தக்கது.

அலீ இப்னு சினாவின் வாழ்நாள் சாதனைகளைப் பற்றிய ஒரு கூர்மையான பார்வை, அவரை அறிவியல் மற்றும் தத்துவம் ஆகிய துறைகளுக்குள் மட்டும் அடக்கி விடாது; பலதரப்பட்ட விடயங்களில் அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

ஐரோப்பிய நவீனத்துவத்தினால் இதுவரை முறியடிக்கப்படாத ஒரு அறிவுசார் முன்னறிவிப்பாக அவரது ஆக்கங்கள் வெளிப்பட்டது.

அலி இப்னு சீனா தர்க்கவியல், மனோதத்துவவியல் மற்றும் ஆன்மிகம், உளவியல் மற்றும் இசை, கணிதம் ஆகியவற்றுடன் மருத்துவம் குறித்தும் எழுதினார் - மேலும் அவர் ஆழ்ந்த கற்றறிந்த மற்றும் பண்பட்ட மற்றும் தத்துவ மனதின் உறுதியிலிருந்து அவ்வாறு செய்தார். அவரது தலைசிறந்த ஆன்மீக நூலான அல்-இஷரத் வ அல்-தன்பிஹாத் (குறிப்புகள் மற்றும் அறிவுரைகள்) க்கு அடுத்ததாக அவரது தத்துவ மற்றும் விஞ்ஞான அறிவியலை நாம் வைத்து நோக்குவோமாயின், அவருடைய உள்ளுணர்வின் வரைபடத்தை முழுமையாக காணலாம்.

அல்-இஷரத் என்பது அலி இப்னு சினாவின் முதிர்ச்சியடைந்த சிந்தனையின் உருவகம் என்று போற்றப்படும் அதேவேளை அதன் விசித்திரமான உரைநடை பல அறிஞர்களை பிரமிக்கச் செய்துள்ளது. இந்த புத்தகம் எந்தவொரு விஞ்ஞானத்திற்கும் அல்லது தத்துவத்திற்கும் பொருந்தாது, ஏனெனில் அதன் தர்க்கம் மற்றும் ஒன்றின் இருப்பு தொடர்பான ஆய்வு,  தத்துவ இன்பங்கள் மற்றும் தத்துவார்த்த ஆத்ம அறிவு பற்றிய விவாதங்களுக்கு வழிவகுக்கிறது.

இஸ்லாமிய கற்றல் வரலாற்றில் விஞ்ஞானத்தையும் தத்துவத்தையும் இணைத்த ஒரே நபர் அலி இப்னு சீனா மட்டுமல்ல. மற்றுமொரு ஈரானிய  அறிஞரான நசீர் அல்-தின் அல்-துசி (1201-1274). அலி இப்னு சீனாவைப் போலவே விஞ்ஞானம், வானியல் மற்றும் தத்துவத்தில் சிறந்துவிளங்கினார்.

இவ்வளவுக்கும் அலி இப்னு சீனா ஒரு தொழில்முறை மருத்துவர் அல்ல, தத்துவ பேராசிரியராகவும் இருந்ததில்லை. மிகவும் மாறுபட்ட சிந்தனையின் ஊடாக  தார்மீக கற்பனைக்கு வந்த ஒரு தனித்துவமான கல்வி கற்றலின் ஆழத்திலிருந்து அவர் எழுதினார்.

உலகெங்கிலும் உள்ள மனிதகுலத்தின் வியக்கத்தக்க விஞ்ஞான சாதனைகளை நிராகரிப்பதோ அல்லது ஏனையோரின் தத்துவ சிந்தனையை குறைத்து மதிப்பிடுவதோ இங்கு நோக்கமல்ல.

கோவிட்-19 என்ற இந்த தொற்றுநோயின் பயங்கரமான பரம்பலுக்குப் பிறகு உலகத்தின் மாறிவரும் சூழலுடன் இணங்குவதும், நமது உலகத்தைப் பற்றிய நமது சுய சிந்தனையின் அடிப்படையில் நாம் ஒரு புதிய அறிவியல்பூர்வமான முன்னேற்றகாரமான கட்டத்தில் இருக்கிறோமா என்று ஆராய்வது இதன் முக்கிய நோக்கமாகும். நாம் எங்கு நிற்கிறோம், என்ன செய்ய வேண்டும், எந்த வகையான அறிவு மற்றும் சுய விழிப்புணர்வு மனிதகுலத்தை இதனிடமிருந்து காப்பாற்ற முடியும்?

நியூயார்க்கில் ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு, நாங்கள் எங்கள் பல்கனிகளில் அல்லது முன் கதவுகளுக்கு அருகில் நின்றுகொண்டு கையில் கிடைக்கும் வீட்டுப் பாவனைப் பொருட்களைக்கொண்டு ஒலி எழுப்புகிறோம் மற்றும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்து குணப்படுத்த தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவையாற்றும்  மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பொது சுகாதார ஊழியர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இராணுவ வன்பொருட்களுக்காக உயிக்கொல்லும் பயங்கர ஆயுதங்களுக்காகவும் பில்லியன் கணக்கான டாலர்களை செலவழிக்கும் ஒரு இராணுவ கலாச்சாரத்தின் காரணமாக மோசமாகியுள்ள மருத்துவ சூழலில், உயிர் காக்கும் முயற்சியில் சளைக்காது, குறைந்த வசதிகளுடன் கடுமையாக பணியாற்றும் மருத்துவ மற்றும் சுகாதாரத் துறையினருக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

நோயை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான அறிவு மற்றும் உயிரியல் மருத்துவ முன்னேற்றங்களை வழங்க உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் செய்யும் பணிகளையும் அதே நேரத்தில் வைரஸை கட்டுப்படுத்த என்னென்ன கொள்கைகளை செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து அரசாங்கங்களுக்கு அவர்கள் அறிவுறுத்தல்கள் வழங்கி வருவதையும் நாங்கள் பாராட்டுகிறோம்.

அமெரிக்கா, பிரேசில், அல்லது இந்தியா போன்ற செயலற்ற மற்றும் தோல்வியுற்ற மாநிலங்களின் நிழலில் மற்றும் அவர்களின் திறமையற்ற தலைவர்கள் - டொனால்ட் டிரம்ப், ஜெய்ர் போல்சனாரோ மற்றும் நரேந்திர மோடி - மக்கள் ஆரோக்கியத்தை விட அவர்கள் பொருளாதார மற்றும் கருத்தியல் குழுக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை கொண்டவர்களாய் இருக்கின்றனர்.

உலக சுகாதார அமைப்பு (WHO) டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் மற்றும் அமெரிக்க ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் தேசிய இயக்குனர் அந்தோனி பவ்சி போன்றவர்கள், குழப்பங்களுக்கு மத்தியில், போற்றத்தக்க நபர்களாக வெளிவந்துள்ளனர்.

உண்மையில், மருத்துவ ஊழியர்களும் விஞ்ஞானிகளும் இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் தயக்கமில்லாத ஹீரோக்களாக உருவெடுத்துள்ளனர்.

அறிவியல் போராட்டங்கள்

இத்துறையில் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் சாதனை படைப்பதில் மிகவும் புகழ்பெற்ற பாத்திரங்களாக, ஒருவித மீட்பராக கருத்தப்பட்ட போதும் விஞ்ஞானம் அதன் சொந்த சவால்களை எதிர்கொள்ளவே செய்கிறது.

தொற்றுநோய்களுக்கு மத்தியில், விஞ்ஞான சமூகங்கள் நல்ல அறிவியலுக்கும் மோசமான அறிவியலுக்கும் இடையில் வேறுபாடு காண போராடுகின்றன. "விஞ்ஞானம் ஒரு அசிங்கமான, சிக்கலான இருண்ட பக்கத்தைக் கொண்டுள்ளது" என்று Mother Jones பத்திரிகையின் சமீபத்திய கட்டுரையில் ஜாக்கி ஃபிளின் மொகென்சன் எழுதியுள்ளார், "கொரோனா வைரஸ் அதையே வெளியே கொண்டு வருகிறது. இங்கே அவரது வாதம் என்னவென்றால்: "ஒரு காலத்தில் ஓட்டப்பந்தயம் போல்: முடிவுகளை வழங்க ஆராய்ச்சியாளர்களும், கல்வி சஞ்சிகைகளும் முந்திக்கொண்டு பொதுமக்களுக்கு புதிய தகவல்களைக் கொண்டுவருவதற்காக செயற்பட்டுக் கொண்டு இருக்கையில் ஊடகங்களும் மக்களை அச்சுறுத்த போட்டாபோட்டியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றன.

இதுபோன்ற முக்கியமான பிரச்சனைகளை நிவர்த்தி செய்வது யார்? மருத்துவர்களா? விஞ்ஞானிகளா? அல்லது தார்மீக தத்துவவாதிகளா? விமர்சன சிந்தனையாளர்களா? அல்லது எவரும்  இல்லையா? என்ற கேள்விகளுடன் மருத்துவத் துறையும் அறிவியலும் சவாலுக்கு முகம்கொடுக்க தயாராக இல்லையா என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.

இத்தகைய சிக்கல்கள் விஞ்ஞான சமூகவியல் துறையில் பல தலைமுறை அறிஞர்களின் ஆய்வுக்கு உட்பட்டவையாகும். எந்தவொரு விஞ்ஞான விசாரணையோ அல்லது விஞ்ஞான முறையோ சமூக மற்றும் அரசியல் காரணிகளிலிருந்தும் மத போதனைகளில்  இருந்தும் முற்றிலும் விடுபட்ட சுயாதீனமானதும் அல்ல.

நிச்சயமாக பிரச்சினை மிகவும் தீவிரமானது. அறிவியலுக்கும் மனிதநேயத்திற்கும் இடையிலான தற்போதைய பிளவுகளுக்குப் பின்னால் உள்ள அடிப்படைக் காரணிகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சமூகங்களில் ஆழமான முதலாளித்துவ வேர்களைக் கொண்டுள்ளன.

இவை தத்துவ சிக்கல்களைப் போலவே விஞ்ஞான சிக்கல்கள் நிறைந்தவை. சிக்கல்களில் இருந்து விடுபட புதிதாக ஓர் அலி இப்னு சினா தோன்றுவாரா...?

(இது, 2020 ஜூன் மாதம் 16ம் திகதி அல்-ஜஸீரா இணையதளத்தில் பிரசுரமான ஹாமித் தபாஷி அவர்களின் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது).

https://www.aljazeera.com/indepth/opinion/avicenna-teach-time-coronavirus-


Friday, June 12, 2020

கம்பளம் என்றாலே பாரசீகம் தான், இந்த இரண்டு சொற்களும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாதவை

Carpet Weaving in Iran:

  “All around the world, Iranian carpets are the symbol of poetical luxury”


நாம் கம்பளம் அல்லது தரைவிரிப்புகளைப் பற்றி பேசும்போது, இயல்பாகவே, ஈரானின் பெயர் நினைவுக்கு வருகிறது. உலகின் சிறந்த கலை வல்லுநர்கள் இந்த உண்மையை எவ்வித தயக்கமும் இன்றி ஏற்றுக்கொள்கின்றனர். கம்பளம் என்றாலே பாரசீகம் தான். இந்த இரண்டு சொற்களும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாதவை. எனவே, கம்பளங்கள் ஈரானிய கலையின் வெளிப்படையான அடையாளமாகும்.

உலகின் மிகச்சிறந்த மற்றும் ஆடம்பரமான தரைவிரிப்புகள் ஈரானிலேயே நெசவு செய்யப்படுகின்றன என்பதை நாம் சந்தேகமின்றி உறுதிப்படுத்த முடியும். ஈரானில் கம்பள நெசவு கலை ஈரானிய மக்களின் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களுடன் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளது, மேலும் ஒவ்வொரு கம்பளமும் அவர்களது உள்ளுணர்வின் வெளிப்பாடாக உருவாகிறது. திறமையான ஈரானிய கம்பள நெசவாளர்கள் அற்புதமான வடிவங்களை போற்றத்தக்க வண்ணங்களுடன் கலக்கிறார்கள், இது ஒரு அற்புத கலை சிறந்த ஓவியர்களிடமிருந்து மட்டுமே இதுபோன்ற நுட்பத்தை எதிர்பார்க்க முடியும். 

உலகின் கலை வல்லுநர்கள் ஈரானிய கம்பளத்தை பல வண்ண பூக்கள் பூத்துக்குலுங்கும் ரம்மியமான தோட்டத்துடன் ஒப்பிடுகின்றனர். அவை காய்கறிகள், பறவைகள் மற்றும் மிருகங்கள், நிலப்பரப்பு மற்றும் கற்பனை உயிரினங்கள் போன்ற வேலைப்பாடுகளைக் கொண்டிருக்கும். இவற்றைக் காணும் ஒவ்வொருவரும் தனது வீட்டில் இந்த சிறிய அழகான தோட்டத்தை வைத்திருக்க ஆசைப்படுவதை தவிர்க்க முடியாது.

"காஷானின் வரலாறு கூறும் விலைமதிப்பற்ற கம்பளங்கள் ஈரானிய பாரம்பரிய கலையின் உண்மையான அடையாளங்களாகும். இந்தக் கலை ஈரானியரின் வெவ்வேறு காலகட்டங்கள், வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளன," என்று ஈரானிய கலை குறித்து நீண்ட ஆய்வுகளை செய்த அமெரிக்க நிபுணர் பேராசிரியர் ஆர்தர் உபாம் போப் குறிப்பிடுகின்றார்.

ஈரானிய கம்பளம் என்பது பாரசீக நாட்டின் பல்வேறு கலைகளின் உயிரோட்டத்தை விளக்கும் படைப்பாகும். பாரசீகத்தில் முதல் கம்பளம் எங்கு, எப்போது நெய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. கலை வரலாற்றின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கால கணிப்பீட்டு வல்லுநர்கள் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்ட பண்டைய பாரசீக மக்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்புகின்றனர்.


ஈரானிய பீடபூமியில் வசிப்பவர்களின் முதல் தொழில்களில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவை அடங்கும். கால்நடைகளுடன்  தொடர்பு கொண்டிருந்த இந்த மக்கள் படிப்படியாக கம்பளி மற்றும் அதன் ஏனைய பயன்பாட்டை நன்கு அறிந்துக்கொண்டனர். கம்பளியைக்கொண்டு ஆடை தயாரித்தலில் ஆரம்பித்து படிப்படியாக தரையை மறைப்பதற்காக விரிப்புகளை நெசவு செய்யத் தொடங்கினர். மிருகத் தோலை தரைவிரிப்பாக பயன்படுத்தி வந்த மக்கள் காலப்போக்கில் கம்பளியினால் நெய்யப்பட்ட விரிப்பை பயன்படுத்தலாயினர். இந்த செயல்முறையை கருத்தில்கொண்டு பார்க்கையில், ஈரானிய பீடபூமியில் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தில் ஈடுபட்ட மக்கள் தான், கம்பளத்தின் முதல் நெசவாளர்கள் என்றும் நெசவு கலையை கண்டுபிடித்தவர்கள் என்றும் தெளிவாகப் புரிகிறது.

மிகவும் பழமையான ஈரானிய கம்பளம் லெனின்கிரேடில் உள்ள “ஹெர்மிடேஜ்” அருங்காட்சியகத்தின் அரங்குகளில் ஒன்றை அலங்கரிக்கிறது. ஓரளவு அப்படியே இருக்கும் இந்த கம்பளம் பேராசிரியர் ரோடென்கோவால், மொகோலெஸ்தானின் எல்லையில், “பஸிரிக்” என்று அழைக்கப்படும் ஒரு பகுதி, பனிக்கட்டிகளின் கீழ் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது.


இந்த பஸிரிக் கம்பளம் ஹக்கமனேஷியன் கவர்னராக இருந்த ஜெனரல் (கிமு33~35O) என்பவரின் பாதுகாக்கப்பட்ட உடலைக்கொண்டிருந்த சவப்பெட்டியில், உடலுக்கு அருகில் வைக்கப்பட்திருந்து, கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே, அதைக்கொண்டு குறைந்தது 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஈரானில் தரைவிரிப்பு நெசவு இருந்துள்ளது என்பதை அறியக்கூடியதாக உள்ளது. பஸிரிக் கம்பளம் மாத் அல்லது பார்ஸ் (ஹக்கமனேஷியன்) கலைஞர்களால் உருவாக்கப்பட்டது என்றும் அது குதிரைகளை மறைக்கப் பயன்படுத்தப்பட்டது என்றும் ஆய்வாளர் ரோட்லென்கோ குறிப்பிடுகின்றார். இந்த கம்பளத்தின் அளவு 2x1.83 மீட்டர் ஆகும். இப்போது அதன் அசலையொத்த நகல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் கம்பள நெசவு கலையின் ஆரம்ப காலத்திலிருந்து படைப்புகள், உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்கள் மற்றும் தனியார் சேகரிப்புகளில் ஏராளமான மாதிரிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஈரானிலும் உலகெங்கிலும் உள்ள கலை வல்லுநர்கள் ஈரானின் மிகச்சிறந்த தரைவிரிப்புகள் பற்றி ஏராளமான புத்தகங்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளனர். இந்த இலக்கிய படைப்புகள் ஈரானில் கம்பள நெசவுகளின் பொற்காலத்தை நினைவூட்டுகின்றன. 

வடிவமைப்பு மற்றும் நெசவு ஆகியவற்றின் பார்வையில் லண்டனில் உள்ள “விக்டோரியா மற்றும் ஆல்பர்ட்” அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள “அர்தபில்” கம்பளம் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் விலைமதிப்பற்ற தரைவிரிப்புகளில் ஒன்றாகும். இந்த கம்பளம் கி.பி 1539 இல் நெய்யப்பட்டது, அதன் விளிம்புகள் மற்றும் மற்றும் குறுக்கிழை பட்டினால் நெய்யப்பட்டுள்ளது.


ஆஸ்திரியாவின் "கலை மற்றும் கைப்பணி" அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள "வேட்டை மைதானம்" கம்பளம் உலகின் மிக ஆடம்பரமான மற்றும் விலைமதிப்பற்ற தரைவிரிப்புகளில் ஒன்றாகும். உருவங்கள், வெவ்வேறு வகையான விலங்குகளை வேட்டையாடும் வேட்டைக்காரர்களை சித்திரிக்கிறது. இந்த கம்பளம் 16 ஆம் நூற்றாண்டில் முற்றிலும் பட்டினால் நெய்யப்பட்டதாகும். ‘புகழ்பெற்ற ஈரானிய தரைவிரிப்புகளின் பிற மாதிரிகள் பாரிஸ், பெருநகரிலும் மற்றும் மஷ்ஹத் நகரில் உள்ள அஸ்தானே கோதேஷ் ரஸாவி அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மற்றும் கி.பி 1601 இல், போலந்தின் மன்னர் சிக்மண்ட் வஸாவின் உத்தரவின் பேரில் காஷானில் விலையுயர்ந்த பல பட்டுக் கம்பளங்கள் நெய்யப்பட்டன.

சஃபாவி சகாப்தத்தின் கலைஞர்கள் உலகின் மிக அற்புதமான தலைசிறந்த படைப்புகளை உருவாக்கியுள்ளனர், மேலும் சஃபாவி ஆட்சி காலம் இந்த கலையின் அற்புதமான சகாப்தமாக கருதப்படுகிறது. சஃபாவி சகாப்தத்தின் ஓவியர்கள் தரைவிரிப்புகளின் வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளில் ஆழமான மாற்றத்தைக் கொண்டுவந்தனர். மற்றும் திறமையான நெசவாளர்கள் சிறந்த, தரமான கம்பளி மற்றும் பட்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்கள் கற்பனைகளுக்கு உயிரூட்டினர்.


இந்த சகாப்தத்தின் தரைவிரிப்புகள் பொதுவாக பட்டினால் நெய்யப்பட்டவை ஆகும். அவற்றின் வடிவங்களின் காணப்படும் பொருட்கள்: சைப்ரஸ் மரங்கள், மலர் வடிவமைப்புகள், வேட்டை மைதானங்களின் காட்சிகள் மற்றும் ஏனைய கண்கவர் வடிவங்களாக அமைந்திருக்கின்றன. கம்பளத்தின் முக்கிய பகுதி குறிப்பிட்ட கால சூழலையும் மற்றும் விளிம்புகளில் உள்ள வடிவங்கள் சூழலின் அழகையும் வெளிப்படுத்த உதவுகின்றன. ஈரானிய தரைவிரிப்புகள் 3 வகையானவை: தரைவிரிப்புகள் (carpets), சிறிய தரைவிரிப்புகள் (Rags) மற்றும் சுவர் விளிம்பு தரைவிரிப்புகள் ஆகும். தரைவிரிப்புகளை விட ஏனைய விரிப்புகள் சிறியவை மற்றும் தாழ்வாரங்கள் மற்றும் ஒரு அறையின் ஓரங்களை மறைக்க பக்க தரைவிரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. ஈரானிய கம்பளங்களின் வடிவமைப்புகளும் வண்ணங்களும் தனித்துவமானவை மற்றும் மிகவும் மாறுபட்டவை. இதன் காரணமாக சில சமயங்களில் கம்பளமொன்றின் விலை, ஏலத்தில் பல மில்லியன் டொலர்களைத் தாண்டுவதுமுண்டு. இப்போதும் கூட, உயர்ந்த கம்பளங்களின் வடிவங்கள் சஃபாவி சகாப்தத்திலிருந்து உத்வேகம் பெறுகின்றன.


கம்பள நெசவு கலை ஈரானின் அனைத்து நகரங்களிலும் கிராமங்களிலும் பொதுவான ஒன்று. நகரங்கள், கிராமங்கள் மற்றும் பழமையான பகுதிகள், தரைவிரிப்பு உற்பத்தியின் முக்கிய மையங்களாகும். காஷான், இஸ்ஃபாஹான், தப்ரிஸ், மஷ்ஹத், கெர்மான், கோம், நாஇன், சனந்தாஜ், அராக் மற்றும் ஹமதான் நகரங்கள் விலையுயர்ந்த தரைவிரிப்புகள் நெய்யப்படும் முக்கிய மையங்களாகும். பழங்காலத்திலிருந்து, பெண்கள் மற்றும் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் சிறுவர்கள் ஈரானில் சிறந்த கம்பள நெசவாளர்களாக இருக்கின்றனர். தரைவிரிப்புகளை வடிவமைக்கும் கலை அவர்களின் உள்ளங்களில் எப்போதும் இயல்பாகவே உள்ளது. காலப்போக்கில், இந்த தரைவிரிப்புகளின் வடிவமைப்புகள் சிறந்த ஆசான்களால் ஆக்கப்படுகின்றன.

இன்று, சிறந்த வடிவமைப்பாளர்கள் இத்துறையில் புதுமைகளை படைத்து வருகின்றனர். தரைவிரிப்புகளுக்கான அற்புதமான வடிவமைப்புகளின் பிறப்பிடம் ஈரான் என்றால் மிகையாகாது. ஈரானிய தரைவிரிப்புகளின் வடிவங்கள் பெரும்பாலும் தனித்துவமான, ஈரானிய சுவர் ஓடு-படைப்புகள் மற்றும் மினியேச்சர் ஆகியவற்றிலிருந்து ஈர்க்கப்பட்டுள்ளன. மலர்த் தோட்டங்கள், பூக்கள் மற்றும் மரங்கள் நிறைந்த வனங்கள், பல்வேறு வகையான பறவைகள் மற்றும் விலங்குகள், மற்றும் உயிரினங்கள், வேட்டை மைதானம் போன்ற வடிவமைப்பின் காட்சிகள், ஈரானிய கம்பளங்களுக்கு பேரழகை வழங்குகின்றன. 


ஈரானிய கம்பளங்கள் மற்றும் தரைவிரிப்புகள் நேர்த்தி, அழகு மற்றும் நீண்ட ஆயுள் ஆகிய 3 குணங்களை ஒரே நேரத்தில் கொண்டுள்ளன, இந்த காரணங்களுக்காக உலகில் தனித்துவமானதாக அவை விளங்குகின்றன.

திறமையான கம்பள நெசவாளர்கள் பலர் அநாமதேய கலைஞர்கள். கடந்த காலத்திலிருந்து எஞ்சியிருக்கும் தரைவிரிப்புகள் ஒரு சில நெசவாளர்கள் மட்டுமே அறியப்படுகின்றனர்.

கம்பள நெசவு என்பது ஒரு சிக்கலான கலை, ஈரானிய கலைஞர்களின் திறமை, ரசனை, விடாமுயற்சி மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை மிக உயர்ந்த மட்டத்தில் காட்டுகிறது. கூடுதலாக, இதற்கு பல மாதங்கள் இடைவிடாத முயற்சி, சிரமம் மற்றும் அதிக செலவுகள் தேவை.

ஈரானிய கம்பள நெசவு கலையை ஆராய்வதற்கு, கலை வரலாற்றில் விரிவான மற்றும் நுணுக்கமான அறிவு தேவைப்படுகிறது. எவ்வளவு தான் ஆய்வு செய்தாலும் அப்படியான ஆய்வு முடிவின்றி தொடர்ந்து கொண்டே செல்லும் என்பது மட்டும் நிச்சயம்.


காஷானில் "கம்பள நெசவுகளின் பாரம்பரிய திறன்கள்" 2010 இல் யுனெஸ்கோ அமைப்பினால் கலாச்சார பாரம்பரியமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு குழுக்கள் பாரசீக விரிப்புகளை நெய்திருப்பதால், அவை ஈரானின் வரலாறு மற்றும் அதன் மக்கள் வாழ்வின் பிரதிபலிப்பாகும். ஈரானின் கம்பளங்கள் மற்றும் தரைவிரிப்புகள் அருங்காட்சியகம் இந்த ஈரானிய கைவினைப் பொருட்களின் கண்கவர் வரலாற்றையும் விவரங்களையும் வழங்குகிறது.

அரச மாளிகைகளில் பாரசீக தரைவிரிப்புகளை கொண்டிருத்தல் தனி கௌரவமாக இன்றும் கருதப்படுகிறது.

https://www.irantravelingcenter.com/carpet_weaving_iran/

https://theculturetrip.com/middle-east/iran/articles/a-brief-history-of-persian-rugs-in-iran/

 


Monday, June 8, 2020

இனவாதத்தால் அழியும் அமேரிக்கா..!

US implodes due to racism 

அமெரிக்க கறுப்பினத்தவரான ஜார்ஜ் பெர்ரி ஃபிலாய்ட் ஜூனியர் (அக்டோபர் 14, 1973 - மே 25, 2020)  மே 25, 2020 அன்று மினியாபோலிஸில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு முழங்காலினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க மக்கள் கொதித்தெழுந்தனர். இந்த இனவெறி கொலைக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

அமெரிக்காவில் பரந்த அளவில் தொடர்ச்சியாக கறுப்பின மக்களை இலக்குவைத்து போலீசார் மேற்கொண்டுவரும் வன்முறைக்கு எதிராக அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஆர்ப்பாட்டங்கள் பரவின. மூன்று வாரங்களைக் கடந்து, கொரோனா தோற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில், இவ்வார்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கறுப்பின மக்களுக்கு எதிரான இந்த பாரபட்சம், இன்று நேற்றல்ல, பல நூற்றாண்டுகளாகவே தொடர்கிறது.

அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் பாரபட்சம் என்ற ஓர் ஆய்வில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:

  1. 2015–2016 கல்வி ஆண்டில், கறுப்பின மாணவர்கள் மொத்த அமெரிக்க மாணவர் சேர்க்கையில் 15% மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தினர்.
  2. நியூயார்க் நகரில், 2018 ஆம் ஆண்டில் 88% பொலிஸ் சோதனைகள் கருப்பு மற்றும் லத்தீன் மக்களையும், 10% வெள்ளை மக்களையும் உள்ளடக்கியது. (அந்த சோதனைகளில், 70% முற்றிலும் நிரபராதிகள்.)
  3. ஓர் அமெரிக்க கணக்கெடுப்பில், 15.8% மாணவர்கள் இனம் சார்ந்த கொடுமைப்படுத்துதல் அல்லது துன்புறுத்தலை அனுபவிப்பதாக தெரிவித்தனர். இன அடிப்படையில் மாணவர்கள் கொடுமைப்படுத்துதல் மற்றும் எதிர்மறை மன மற்றும் உடல் ஆரோக்கியம் உள்ளதை ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
  4. 2013 முதல் 2017 வரை, ஹிஸ்பானிக் நோயாளிகள், கருப்பு நோயாளிகள் மற்றும் பூர்வீக அமெரிக்க நோயாளிகளை விட அமெரிக்காவில் வெள்ளை நோயாளிகள் சிறந்த தரமான சுகாதார சேவையைப் பெற்றனர்.
  5. பிரசவம் தொடர்பான மரணங்களில் கறுப்பின பெண்கள் வெள்ளை பெண்களை விட 3 முதல் 4 மடங்கு அதிகம் சந்திக்கின்றனர்.  வருமானம் மற்றும் கல்வி மட்டங்களில் கூட இதே அளவிலான உயர்வு தாழ்வைக் காணலாம்.
  6. கைது செய்யப்படும் வெள்ளை அமெரிக்கர்களை விட கருப்பு அமெரிக்கர்கள் அதிகம். கைது செய்யப்பட்டவுடன், அவர்கள் குற்றவாளிகளாக காணப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் நீண்டகால சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
  7. போதைப்பொருள் பயன்படுத்துவோர்  கறுப்பின அமெரிக்கர்களும் வெள்ளை அமெரிக்கர்களும் ஒரே விகிதத்தில் இருந்தபோதும், கறுப்பின அமெரிக்கர்கள் கைது செய்யப்படும் சந்தர்ப்பங்கள் 6 மடங்கு அதிகம்.
  8. சராசரியாக, அமெரிக்காவில் உள்ள கறுப்பின ஆண்கள் அதே குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட வெள்ளை ஆண்களை விட 19.1% அதிகமான தண்டனைகளைப் பெறுகிறார்கள்.
  9. அமெரிக்காவில், கறுப்பின நபர்கள் வெள்ளை நபர்களை விட இரண்டு மடங்கு வேலையற்றவர்களாக உள்ளனர். பணியமர்த்தப்பட்டா லும் கறுப்பின நபர்கள் வெள்ளைக்காரர்களை விட கிட்டத்தட்ட 25% குறைவாக ஊதியத்தையே பெறுகிறார்கள்.
  10. அமெரிக்காவில், தம் திறமைக்கும் தகைமைக்கும் ஏற்ற தொழில் வாய்ப்பு பெறுவதில் கறுப்பினத் தொழிலாளர்கள் வெள்ளைத் தொழிலாளர்களைக் காட்டிலும் குறைவானவர்கள்.

https://www.dosomething.org/

காலனித்துவ காலத்திலிருந்தே அமெரிக்காவில் இனவெறி நிலவுகிறது. வெள்ளை அமெரிக்கர்களுக்கு சட்டரீதியாக அல்லது சமூக ரீதியாக அனுமதிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் வழங்கப்பட்ட உரிமைகள் மற்ற இனங்களுக்கும் சிறுபான்மையினருக்கும் மறுக்கப்பட்டே வந்துள்ளன.

ஐரோப்பிய அமெரிக்கர்கள்-குறிப்பாக வசதியான வெள்ளை ஆங்கிலோ-சாக்சன் புராட்டஸ்டன்ட்டுகள்-கல்வி, குடியேற்றம், வாக்களிக்கும் உரிமைகள், குடியுரிமை, நிலம் கையகப்படுத்தல் மற்றும் அமெரிக்க வரலாறு முழுவதும் குற்றவியல் நடைமுறை போன்ற விஷயங்களில் பிரத்தியேக சலுகைகளை அனுபவித்தனர்.

ஐரோப்பாவிலிருந்து வந்த புராட்டஸ்டன்ட் அல்லாதவர்கள், குறிப்பாக ஐரிஷ் மற்றும் இத்தாலியர்கள், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அமெரிக்க சமுதாயத்தில் இனவெறி துன்புறுத்தல் மற்றும் பிற இன அடிப்படையிலான பாகுபாடுகளை அனுபவித்தனர்.

அமெரிக்க வரலாற்றின் பெரும்பகுதி முழுவதும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தங்கள் அரசியல், சமூக மற்றும் பொருளாதார சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகளை எதிர்கொண்டே வந்துள்ளனர்.

இன்னும் கறுப்பினத்தவர் மட்டுமல்லாது, முஸ்லிம்கள் மற்றும் அரேபியர்கள் போன்ற குழுக்கள் அமெரிக்காவில் தொடர்ச்சியான பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளன, இதன் விளைவாக, வெள்ளையர் அனுபவித்துவந்த எல்லா உரிமைகளையும் இந்த குழுக்களைச் சேர்ந்தோரால் அனுபவிக்க முடியவில்லை.

அமெரிக்காவில் இன அரசியல் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது, மேலும் இனவாதம் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளிலும்  தொடர்ந்து பிரதிபலிக்கிறது.

வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, கல்வி, கடன் வழங்கல் மற்றும் அரசாங்கத்தில் இனரீதியான பாகுபாடு தொடர்கிறது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்க மனித உரிமைகள் வலையமைப்பின் பார்வையில், "அமெரிக்காவில் பாகுபாடு வாழ்வின் அனைத்து அம்சங்களையும் ஊடுருவி வெள்ளையர் அல்லாத அனைத்து சமூகங்களுக்கும் பரவியுள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக சராசரி அமெரிக்கர்கள் சிறுபான்மையினர் தொடர்பாக கொண்டுள்ள கருத்துக்களின் தன்மை கணிசமாக மாறியுள்ள நிலையில், ஏபிசி நியூஸ் போன்ற அமைப்புகளால் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நவீன அமெரிக்காவில் கூட, ஏராளமான அமெரிக்கர்கள் தாங்கள் ஏனையோர் விடயத்தில் பாகுபாடு காட்டுவதாக ஒப்புக்கொள்கின்றனர்.

எடுத்துக்காட்டாக, 2007 ஆம் ஆண்டு ஏபிசியின் ஒரு கட்டுரை, அமெரிக்கர்களில் பத்து பேரில் ஒருவர் ஹிஸ்பானிக் மற்றும் லத்தீன் அமெரிக்கர்களுக்கு எதிராக தப்பெண்ணங்களை வைத்திருப்பதாக ஒப்புக் கொண்டதாகவும், நான்கு அமெரிக்கர்களில் ஒருவர் அரபு அமெரிக்கர்களுக்கு எதிராக தப்பெண்ணங்களை வைத்திருப்பதாக ஒப்புக் கொண்டதாகவும் குறிப்பிடுகிறது.

பராக் ஒபாமா 2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக, நாட்டின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக ஆனதும் சில அமெரிக்கர்கள் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்ததற்கான அடையாளமாக அதை பார்த்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த காணவில்லை. 2010 களில், அமெரிக்க சிறுபான்மை சமூகம் தொடர்ந்து உயர் மட்ட இனவெறி மற்றும் பாகுபாட்டை அனுபவித்து வந்தது. அமெரிக்காவிலிருந்து சிறுபான்மையினரை வெளியேற்ற முற்படும் ஒரு வெள்ளை தேசியவாத கூட்டணியான "Alt-Right" இயக்கத்தின் எழுச்சி ஒரு புதிய பரிமாணத்தை பெற்றது. டொனால்ட் ட்ரம்ப் அவரின் ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பிறகு அவ்வியக்கத்தின் கொள்கையை தீவிரமாக கடைபிடிக்கலானார்.

அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பின் உரைகளிலும் செயல்களிலும் இனவாதம் வெளிப்படையாகவே தெரிந்தது. பத்திரிகையாளர்கள், நண்பர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்கள் அவர் அமெரிக்காவில் இனவெறியைத் தூண்டுவதாக குற்றம் சாட்டியுள்ளனர் மற்றும் சில அறிஞர்கள் டிரம்பின் சொல்லாட்சிக் கலை மற்றும் செயல்திறனை வெள்ளை மேலாதிக்கத்தின் பின்னணியில் வைத்து கணிக்கின்றனர். ட்ரம்ப் பலமுறை இனவெறி குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்,  அவரது நெருங்கிய சகாக்கள் சிலரும் அவர் இனவெறி அற்றவர் என்று பதிவுசெய்துள்ளனர்.

1973 ஆம் ஆண்டில், டிரம்ப்உடன் அவரது நிறுவனமான டிரம்ப் மேனேஜ்மென்ட் ஆப்பிரிக்க-அமெரிக்க வாடகைதாரர்களுக்கு எதிரான வீட்டு பாகுபாடு காரணமாக நீதித் துறையால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது; தவறுகளை ஒப்புக் கொள்ளாமல் நடைமுறைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்புதல் ஆணைக்கு இணங்கினார். ஒப்புதல் ஆணையை மீறும் வகையில் தொடர்ந்து இன பாகுபாடு காட்டுவதாகக் கூறி 1978 ஆம் ஆண்டில் நீதித்துறை மீண்டும் அவர் மீது வழக்குத் தொடர்ந்தது.

2011 முதல் 2016 வரை, ஜனாதிபதி பராக் ஒபாமா அமெரிக்காவில் பிறந்தவரல்ல என்ற பிரசாரத்தை மேற்கோடு ஏற்கனவே கிடப்பில் போடப்பட்டிருந்த "Birtherism" சதிக் கோட்பாட்டின் முன்னணி ஆதரவாளராக டிரம்ப் இருந்தார். 1989 ஆம் ஆண்டு ஒரு வெள்ளை பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கருப்பு மற்றும் லத்தீன் இளைஞர்கள் குழு ஒன்று குற்றம்சாட்டப்பட்டு, விசாரணையின் பின் அவர்களை குற்றவாளிகள் அல்ல என்று நிரூபணமானத்தைத் தொடர்ந்து ஐந்து ஆண்கள் அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்பட்டனர். அக்குற்றத்தை செய்தவர் வெள்ளையினத்தை சேர்ந்த தொடர் கற்பழிப்பாளரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் டி.என்.ஏ ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்பட்டது. இருந்த போதிலும் இனரீதியாக குற்றம் சாட்டப்பட்டு, கிரிமினல் வழக்கில் கோர்த்துவிடப்பட்ட கருப்பு மற்றும் லத்தீன் இளைஞர்கள் குற்றவாளிகள் தான் என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

டிரம்ப் தனது 2016 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார ஆரம்ப உரையில்  குடியேறிய மெக்சிகன் மக்கள் பற்றி பேசினார்: "அவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், அவர்கள் குற்றங்களைக் இங்கு கொண்டு வருகிறார்கள், அவர்கள் கற்பழிப்பாளர்கள். அவர்களில் சில நல்ல மனிதர்களும் இருக்கக்கூடும் என்று நான் கருதுகிறேன்." "மெக்சிகன் பாரம்பரிய பின்னணி கொண்ட ஒரு நீதிபதி தனக்கு எதிரான வழக்குகளைத் தீர்மானிப்பதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வெள்ளை அமெரிக்கர்களின் பெரும்பான்மையான கொலைகளுக்கு ஆப்பிரிக்க அமெரிக்கர்களே காரணம் என்று கூறி தவறான புள்ளிவிவரங்களை அவர் ட்வீட் செய்தார், மேலும் சில உரைகளில் அவர் ஆப்பிரிக்க அமெரிக்கர்களையும் ஹிஸ்பானியர்களையும் வன்முறைக் குற்றங்களுடன் பலமுறை இணைத்து பேசியுள்ளார். பிரச்சாரத்தின்போது, ட்ரம்ப் கறுப்பினத்தவர்கள் பற்றிய வெள்ளை தொழிலாள வர்க்க வாக்காளர்களின் அச்சங்களைப் பயன்படுத்தினார், மேலும் தேசத்திற்கு ஒரு சவாலாகக் கருதப்படும் குழுக்களின் உலகளாவிய ஆபத்து பற்றிய தோற்றத்தை உருவாக்கினார்.

2018 ஆம் ஆண்டில், குடியேற்ற சீர்திருத்தம் குறித்த ஓவல் அலுவலகக் கூட்டத்தின் போது, டிரம்ப் எல் சால்வடார், ஹைட்டி மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை "shitholes" (சாக்கடை) என்று குறிப்பிட்டார், இது ஒரு இனவெறி கருத்து என்று பரவலாக கண்டிக்கப்பட்டது. ஜூலை 2019 இல், ட்ரம்ப் ஜனநாயக காங்கிரஸின் கறுப்பினத்தவரான பெண்ணைப் பற்றி ட்வீட் செய்தார்: "அவர்கள் ஏன் திரும்பிச் சென்று, அவர்கள் வந்த முற்றிலும் சிதைந்த மற்றும் குற்றச் செயல்களால் நிறைவந்துள்ள இடங்களை சரிசெய்ய உதவக்கூடாது என்று வினா எழுப்பியிருந்தார். அதன் பின்னர் அவர்கள் திரும்பி வந்து அது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை எங்களுக்கு சொல்லிக்காட்டட்டும் என்று குறிப்பிட்டார். அட்லாண்டிக் போன்ற செய்தி நிறுவனங்கள் இந்த கருத்தை ஒரு பொதுவான இனவெறி சொல்லாடல் என்று விமர்சித்தன. பின்னர் அவர் தனது கருத்துக்களை இனவெறி என்று குற்றம்சாட்டப்படுவதை நிராகரித்தார், "எங்கள் நாட்டில் யாருக்காவது பிரச்சினை இருந்தால், யாராவது நம் நாட்டில் இருக்க விரும்பவில்லை என்றால், அவர்கள் வெளியேற வேண்டும்" என்று கூறினார்.

டிரம்பின் இதுபோன்ற எண்ணற்ற சர்ச்சைக்குரிய அறிக்கைகள் உலகெங்கிலும் உள்ள பல ஆய்வாளர்களால் கண்டிக்கப்பட்டுள்ளன. ஆனால் டிரம்பின் அரசியல் ஆதரவாளர்கள் சிலரில் அவரின் செயல்பாட்டை சரிக்கண்டு நியாயப்படுத்தும் ஒரு சிலரும் உண்டு. பல ஆய்வுகள் மற்றும் கருத்துக்கணிப்புகள் இனவெறி மனப்பான்மையும் இன வெறுப்பும் டிரம்பின் அரசியல் உயர்வுக்கு தூண்டுதலாக அமைந்துள்ளன என்றும், அமெரிக்க வாக்காளர்களின் கட்சி விசுவாசத்தை தீர்மானிப்பதில் பொருளாதார காரணிகளை விட முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் கூறியுள்ளன. இனவெறி மற்றும் இஸ்லாம் வெறுப்பு அணுகுமுறைகள் ட்ரம்பிற்கு ஆதரவின் சக்திவாய்ந்த குறிகாட்டியாகக் காட்டப்பட்டுள்ளன.

தேர்தல் வெற்றிக்காகவும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும் ட்ரம்ப் போன்றோர் செய்யும் இனவாத அரசியல், நாட்டை அழிவுப் பாதைக்கே  இட்டுச்செல்லும் என்பதற்கு இன்றைய அமேரிக்கா நல்ல எடுத்துக்காட்டாகும்.

- தாஹா முஸம்மில்