The Grace, Wisdom and
Beautiful Example of the Prophet
இஸ்லாத்தின்
இறுதி தூதரான முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஈரானிய ஊடகமான
இக்னாவில் வெளியிடப்பட்ட இரு மார்க்க அறிஞர்களின் வெவ்வேறு நேர்காணல்கள் இங்கு ஆக்கமாக
தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய
அறிஞர் அப்துல்ஜவாத் மொகதஸியன் நபிகளாரின் கருணை மற்றும் ஞானத்தை பற்றி விளக்கும் அதே
வேளை மார்க்க அறிஞர் ஹஸன் ஷிர்சாத் நபிகள் நாயகம் அவர்களை ஒழுக்கம் மற்றும் ஒற்றுமையின்
அழகிய முன்மாதிரியாக சித்தரிக்கிறார். இவ்விரு மார்க்க அறிஞர்களின் சிந்தனைகள் விவரமாக
கீழ்வருமாறு;
நபிகளாரின்
கருணை, ஞானம் கோத்திரத்தை ஒன்றுபட்ட சமூகமாக மாற்றியது: மார்க்க அறிஞர் அப்துல்ஜவாத்
மொகதஸியன்
இறை
தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது கருணை மற்றும் அன்பைப் பயன்படுத்தி பிரிந்த
இனக்குழுக்களிலிருந்து ஒன்றுபட்ட சமூகத்தை உருவாக்க முடிந்தது என்று இஸ்லாமிய அறிஞர்,
பல்கலைக்கழக மற்றும் அறநெறி விரிவுரையாளரான ஹுஜ்ஜதுல்-இஸ்லாம் அப்துல்ஜவாத் மொகதஸியன்
கூறுகிறார். அவர் ஈரானிய ஊடகமான இக்னாவுக்கு அளித்த நேர்காணலில் பேசுகையில், ஈமானுடன்
கலந்த உணர்வுடன் வாழ்வது உள் அமைதியையும் ஆன்மீக நம்பிக்கையையும் தருகிறது என்றும்,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை முழுமையாக உள்ளடக்கியுள்ளதாகவும் விளக்கினார்.
"அவரது
ஆளுமை, நடத்தை மற்றும் கொள்கைகள் எப்போதும் சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாகவும் உத்வேகமாகவும்
இருந்தன," என்று கூறிய அவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நேர்மை மற்றும் ஒழுக்க
நடத்தையால் எதிர்ப்பாளர்கள் கூட ஈர்க்கப்பட்டனர் என்று கூறினார்.
அறிஞரின்
கூற்றுப்படி, இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியா நீண்டகால பகைமைகளாலும் மற்றும் கொடூரங்களாலும்
பிணைக்கப்பட்ட கோத்திரங்களின் துண்டு துண்டான நிலமாக இருந்தது. இருப்பினும், பொறுமை,
தைரியம், நீதி மற்றும் இரக்கம் மூலம், நபி (ஸல்) அவர்களுக்கு "இதயங்களை ஒன்றிணைத்து
ஒரு ஒத்திசைவான சமூகத்தின் அடித்தளத்தை உருவாக்க முடிந்தது."
நபி
(ஸல்) அவர்கள் நன்னெறி போதனைகள் மற்றும் நடைமுறை சித்தாந்தங்கள் இரண்டையும் எவ்வாறு
பயன்படுத்தினார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக மதீனாவின் அரசியலமைப்பு மற்றும் முஹாஜிருன்களுக்கும்
அன்சார்களுக்கும் இடையிலான சகோதரத்துவ ஒப்பந்தத்தை அறிஞர் மொகதஸியன் சுட்டிக்காட்டினார்.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களின் பணி ஒரு காலத்திற்கோ அல்லது இடத்திற்கோ மட்டுப்படுத்தப்பட்டதல்ல,
மாறாக அது "உலகளாவிய மற்றும் அனைத்து மனிதகுலத்திற்கும் வழிகாட்டுவதற்குமானது"
என்று அவர் வலியுறுத்தினார்.
"இன்று
நான் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன், என் அருட்கொடையை உங்கள்
மீது முழுமையாக்கி விட்டேன், மேலும் இஸ்லாத்தை உங்கள் மார்க்கமாக ஏற்றுக்கொண்டேன்"
(அல்குர்ஆன் 5:3) என்ற குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டி, நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய
ஒற்றுமை அவரது இறைப்பணி நிறைவடைந்தவுடன் அதன் உச்சத்தை எட்டியது என்று கூறினார். ஆன்மீக
வழிகாட்டுதல் சமூகங்களை அடிப்படையில் மாற்றியமைக்கும் சக்தியைக் கொண்டுள்ளது என்பதை
இது காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
நபி
(ஸல்) அவர்களின் வெற்றிக்கு கருணை மையமாக இருந்தது என்பதை அறிஞர் எடுத்துரைத்தார்.
"அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறீர்;
நீங்கள் கடுமையானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருந்தால், அவர்கள் உங்களைச்
சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சிதறிப் போயிருப்பார்கள்" (அல்குர்ஆன் 3:159) நபிகளாரின்
கருணை "இதயங்களை மென்மையாக்கியது, எதிரிகளையும் வென்றது." நியாயம், மன்னிப்பு
மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் தொடர்ச்சியான நிரூபணம், சமூகத்தில் தார்மீக மற்றும்
ஆன்மீக மதிப்புகளை உட்பொதித்துள்ளது என்று அவர் கூறினார்.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களின் அணுகுமுறை முஸ்லிமல்லாதவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.
"அகிலத்தாருக்கு ரஹ்மத்தாக அன்றி நாம் உம்மை அனுப்பவில்லை" (அல்குர்ஆன்
21:107) என்ற திருக்குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டி அறிஞர் கூறினார்.
மதீனாவில்
உள்ள யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற குழுக்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
தொடர்புகள் நீதி மற்றும் பரஸ்பர உரிமைகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், மதீனா சாசனம்
அமைதியான சகவாழ்வுக்கான முன்னோடி கட்டமைப்பாக செயல்படுகிறது என்றும் அவர் விளக்கினார்.
"அவர் ஒருபோதும் மக்களை இஸ்லாத்திற்குள் கட்டாயப்படுத்தவில்லை" என்று அறிஞர்
கூறினார். "அதற்கு பதிலாக, அவர் நேர்மை, நெறிமுறைகள் மற்றும் தனிப்பட்ட உதாரணத்தின்
மூலம் அழைத்தார்."
இன்றைய
உலகிற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொருத்தப்பாடு பற்றி கேட்டபோது, நபியின் போதனைகள்
சமகால தார்மீக மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு தீர்வுகளை வழங்குகின்றன என்று அறிஞர்
கூறினார்.
"இரட்சிப்பின்
திறவுகோல் 'லா இலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை) கொள்கையில் உள்ளது,"
என்று அவர் கூறினார். இந்த மையக்கருவை சுற்றியே அறநெறி, சமூக முறைமை, மானுடச் செழிப்பு
ஆகியவை சுழல்கின்றன என்று அவர் வாதிட்டார்.
சூரியனும்
சந்திரனும் துல்லியமான விதிகளைப் பின்பற்றும் இயற்கையுடன் ஒரு உருவகத்தை அவர் ஒப்பீட்டுக்கு
எடுத்தார்: "மனிதர்கள் ஆன்மீக ஒற்றுமையுடன் தங்களை இணைத்துக் கொண்டால், சமூகம்
இயற்கை ஒழுங்கைப் போலவே இணக்கமாகவும் அழகாகவும் மாறும்."
தொழுகையே
இந்த சமத்துவத்தையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது என்றும், அனைத்து பின்னணியைச்
சேர்ந்த மக்களும் ஒரே திசையில் தொழுகைக்காக ஒன்றாக நிற்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருணை,
நன்னெறி நடத்தை மற்றும் சமூக நீதி குறித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பாடங்கள்
உலக அமைதிக்கு இன்றியமையாதவை. "இன, மத மற்றும் சமூக பிளவுகளின் இன்றைய உலகில்,
கருணை, மன்னிப்பு மற்றும் மற்றவர்களுக்கு மரியாதை அளித்தல் ஆகியவற்றின் நபி (ஸல்) அவர்களின்
உதாரணத்திற்குத் திரும்புவது மனிதகுலத்தை ஸ்திரத்தன்மை, நீதி மற்றும் சகவாழ்வை நோக்கி
வழிநடத்தும்."
நபிகள்
நாயகம் ஒழுக்கம் மற்றும் ஒற்றுமையின் அழகிய முன்மாதிரி: அறிஞர்
கும்மில்
உள்ள ஒரு மத அறிஞர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மனிதகுலத்திற்கு இறுதி முன்மாதிரியாக
வர்ணித்துள்ளார், அவரது தார்மீக தன்மை இன்று முஸ்லிம்களுக்கு ஒரு வழிகாட்டியாக செயல்படுகிறது
என்று வலியுறுத்தினார்.
கலாச்சாரம்
மற்றும் குர்ஆன் அறிவு மையத்தின் ஆராய்ச்சியாளரான ஹுஜ்ஜதுல்-இஸ்லாம் ஹஸன் ஷிர்சாத்,
"ஒரு மனிதனின் மிகப்பெரிய சொத்து அவர்களின் வாழ்நாள்" என்று கோடிட்டுக் காட்டினார்.
"மனிதகுலத்திற்கு
இறைவன் அறிமுகப்படுத்திய சிறந்த முன்மாதிரி நபிகள் நாயகம் (ஸல்) ஆவார், அவரது உன்னத
குணம் ஒரு துண்டு துண்டாக சிதைந்த சமூகத்தை ஒன்றிணைத்தது, இன்றளவிலும் அவரின் முன்மாதிரியை
கொண்டு முஸ்லிம் சமூகத்தை வழிநடத்த முடியும்" என்று ஷிர்சாத் ஒரு நிகழ்வில் உரையாற்றினார்.
குர்ஆனின்
சூரா அல்-அஹ்ஸாபின் 21 வது வசனத்தை மேற்கோள் காட்டிய அவர் இவ்வாறு தெரிவித்தார்:
"அல்லாஹ்வின் தூதரில் உங்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரி இருக்கிறது - அல்லாஹ்வையும்
இறுதி நாளையும் எதிர்பார்த்து, அல்லாஹ்வை அதிகம் நினைவு செய்வோருக்கு." நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவது எவ்வாறு ஆன்மீக மற்றும் நடைமுறை பரிமாணங்களைக்
கொண்டுள்ளது என்பதை இந்த வசனம் எடுத்துக்காட்டுகிறது என்றும், அல்லாஹ் மீதான நம்பிக்கை,
மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் ஆன்மீகத்தை தொடர்ந்து நினைவுகூர
வேண்டும் என்றும் அறிஞர் விளக்கினார். "நபியின் வழி உங்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக
அமைவதற்கு போதுமானது" என்ற இமாம் அலீ (அலை) அவர்கள் கூறியதையும் அவர் மேற்கோள்
காட்டினார்.
ஷிர்சாத்தின்
கூற்றுப்படி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய்மை மற்றும் நேர்மை அவரை பின்பற்றுபவர்களுக்கு
கண்ணியத்தின் ஆதாரமாக ஆக்குகிறது, "நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி அவரது அடிச்சுவடுகளில்
நடப்பவர் மிகவும் மரியாதைக்குரிய சேவகர் " என்று குறிப்பிட்டார்.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் 23 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகவும், 63 ஆண்டுகள் மக்களிடையே வாழ்ந்ததாகவும்
ஷிர்சாத் சுட்டிக்காட்டினார். "இஸ்லாமிய சமூகங்கள் மற்றும் அவற்றின் ஆட்சியாளர்கள்
அவரது ஒழுக்கங்கள் மற்றும் நடத்தை ஆகியவற்றை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டால், குறிப்பாக
அதன் விளைவுகள் ஆழமானதாக இருக்கும்," என்று அவர் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களைப் பற்றி குறிப்பிடும் சூரா அல் கலாமின் 4 வது வசனத்தையும் அவர் மேற்கோள் காட்டினார்,
"நிச்சயமாக நீங்கள் ஒரு சிறந்த குணம் கொண்டவர்”.
முஸ்லிம்
சமூகத்தின் ஒற்றுமைக்கு தார்மீக நடத்தை அவசியம் என்று அறிஞர் வலியுறுத்தினார். நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை மேற்கோள் காட்டினார்: "நம்பிக்கை கொண்டவர்களில்
மிகவும் முழுமையானவர்கள் சிறந்த குணம் கொண்டவர்கள்" மற்றும் "நம்பிக்கை கொண்டோரில்
மிகவும் நல்லொழுக்கமுள்ளவர்கள் சிறந்த குணம் கொண்டவர்கள்."
அவர்
நபிகளாரின் மற்றொரு கூற்றைச் சேர்த்தார்: "நாளை கியாம நாளில் எனக்கு மிக நெருக்கமானவர்கள்
சிறந்த குணம் கொண்டவர்கள்."
"இந்த போதனைகள் இஸ்லாத்தின் மகத்தான நபி (ஸல்) அவர்கள் மனிதகுலத்திற்கு மகிழ்ச்சி, ஒழுக்கம் மற்றும் இரட்சிப்பின் நித்திய
முன்மாதிரி என்பதை காட்டுகின்றன" என்று ஷிர்சாத் கூறினார்.
https://iqna.ir/en/news/3494298/prophet-muhammad-a-perfect-role-model-of-morality-unity-researcher
No comments:
Post a Comment