Tuesday, July 14, 2020

ஈரானிடம் தோல்வி கண்டு வரும் டொனால்ட் ட்ரம்ப்

Iran ‘Becoming Immune to Pressure’

ஈரான் இஸ்லாமிய குடியரசை நோக்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஜூன் 5 ம் தேதி "நீங்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, ஒரு சிறந்த ஒப்பந்தத்தை என்னுடன் செய்துகொள்ள முடியும்" என்று கூறினார்.

ஈரானிய மருத்துவர் மஜித் தாஹெரிக்கு ஈடாக ஈரானில் இருந்து விடுவிக்கப்பட்ட அமெரிக்க கடற்படை வீரர் மைக்கேல் ஒயிட்டை அண்மையில் கைதி பறிமாற்றம் செய்த பின்னர் டிரம்பின் இக்கருத்துக்கள் வந்துள்ளன.

Admiral Ali-Shamkani

ஈரானின் முடிவெடுக்கும் உயர் அமைப்புகளில் ஒன்றான உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி ஷம்கானி, ஒரு ஒப்பந்தத்திற்கான டிரம்ப் முன்வைத்த கோரிக்கைக்கு  பதிலளிக்கும் விதமாக, "கைதிகளின் பரிமாற்றம் பேச்சுவார்த்தைகளின் விளைவாக இடம்பெற்ற ஒன்றல்ல, டிரம்புடன் எதிர்காலத்திலும் சரி, எந்த பேச்சுவார்த்தைகளும் நடக்காது" என்று மிகத் தெளிவாக குறிப்பிட்டார். ஷம்கானியின் கருத்துக்கள் தெஹ்ரானில் ஒரு நிலையான கொள்கையை பிரதிபலிக்கின்றன என்பதையே காட்டுகின்றன: அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் எமது நிகழ்ச்சி நிரல் அட்டவணையில் இல்லை. ஜனாதிபதி ஹசன் ரூஹானி, வெளியுறவு மந்திரி முஹம்மது ஜவாத் ஸரீஃப் மற்றும் செய்தித் தொடர்பாளர் அலி ரபீ ஆகியோர் கூட கைதிகள் பரிமாற்றம் பேச்சுவார்த்தை இல்லாமலே இடம்பெறலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் பயங்கரவாதச் செயலுக்குப் பழிவாங்க வேண்டும் என்று பல மில்லியன் மக்கள் ஈரானின் நகரங்களில் திரண்டனர். பிப்ரவரியில் ரூஹானி இவ்வாறு தெரிவித்தார்: "அதிகபட்ச அழுத்தத்தினால் அவர்கள் எங்களை பலவீனமான நிலையில் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துச் செல்ல முடியும் என்று நினைத்தார்கள் ... இது ஒருபோதும் நடக்காது.


ஈரானின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எந்தவொரு முயற்சிக்கும் விரோதமாக மாறியுள்ளது. பராக் ஒபாமா ஆட்சி கால  அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர், பல ஆண்டுகளாக இருந்த தடையை ட்ரம்ப் நிர்வாகம் மீண்டும் மூர்க்கமாக நிறுவியுள்ளது என்று அந்த அமெரிக்க சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

"உலகளாவிய ஆணவத்தின் மைய புள்ளியான அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் சமரசம் பயனற்றது மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடியது" என்றும் ஈரானின் புதிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபஃப் தனது கன்னி உரையில் "பயங்கரவாத அமெரிக்காவை நோக்கிய எங்கள் மூலோபாயம் தியாகி சோலைமானியின் இரத்தத்திற்காக நமது பழிவாங்கலை நிறைவு செய்வதாகும்", என்றும் கூறினார்..

Iran's Majlis Speaker Muhammad Baqer Qalibaf

இஸ்லாமிய புரட்சி காவல்படைப் படையின் முன்னாள் தளபதியும் சுலைமானியின் பழைய நண்பருமான கலிபாஃப் ஈரானின் 2013 மற்றும் 2017 ஜனாதிபதித் தேர்தல்களில் ரூஹானிக்கு எதிராக போட்டியிட்டவராகும். கடந்த பிப்ரவரியில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, மே மாதம் அவர் தனது நாடாளுமன்ற சபாநாயகர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

எவ்வாறாயினும், ட்ரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், அமெரிக்கத் தேர்தலுக்கு முன்னர் ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் செய்து தனது நற்பெயரை வலுப்படுத்த விரும்பினாலும், ஈரான் மீதான அவரது "அதிகபட்ச அழுத்தம்" கொள்கை அனைத்தும் அமெரிக்க-ஈரானிய இராஜதந்திரத்திற்கான வாய்ப்பை இல்லாதொழித்துள்ளது, என்று "வெளியுறவுக் கொள்கை" (Foreign Policy) என்ற முன்னணி சஞ்சிகை கூறுகிறது. "அமெரிக்க அழுத்தத்தை எதிர்கொள்வதில் ஈரான் அதனது திறமையை நிரூபித்துள்ளது" என்று அது எழுதியுள்ளது.

பல சாதாரண ஈரானியர்கள் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், வாஷிங்டன் எதிர்பார்த்தபடி பொருளாதாரம் முற்றுமுழுதாக வீழ்ச்சியடையவில்லை. அதற்கு பதிலாக, உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதால், நாடு பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளது.

ஈரான் மத்திய வங்கியின் தலைவர் அப்துல் நாஸர் ஹெம்மதியின் கூற்றுப்படி, ஈரானின் எண்ணெய் அல்லாத மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டு 1.1 சதவீதம் அதிகரித்துள்ளது. ஈரானின் பொருளாதாரம் கொரோனா வைரஸ் தொற்று மத்தியிலும் இந்த ஆண்டு மேலும் வளர்ச்சியை அனுபவிக்கக்கூடும் என்றும் பிரபல ஈரானிய பொருளாதார நிபுணர் சயீத் லேலாஸ் வாதிடுகிறார்.

"ட்ரம்பின் போர்க்குணமிக்க வாய்ச் சவடால் மற்றும் நடவடிக்கைகள் காரணமாக அவருடன் ஓர் ஒப்பந்தம் செய்ய ஈரான் அதிக விருப்பம் காட்டவில்லை, அதேவேளை, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை ஆதரித்த ஈரானிய அதிகாரிகளையும் கூட அதிலிருந்து தூரப்படுத்தியுள்ளது. மேலும் டிரம்ப்பின் கொள்கை மற்றும் புத்திசாதுரியமற்ற முடிவுகள் இராஜதந்திரத்திற்கான கதவுகளை மூடிவிட்டன" என்று "வெளியுறவுக் கொள்கை" சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

"வெளியுறவு கொள்கை" சஞ்சிகையின் படி சில மாதங்களுக்கு முன்பு நிலைமை இவ்வாறு இருக்கவில்லை. டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவும் ஈரானும் கைதிகளை பரிமாறிக்கொண்ட ஒரே நேரம் 2019 டிசம்பரில், ஈரானிய விஞ்ஞானி மசூத் சுலைமானிக்கு பகரமாக ஈரான் அமெரிக்கரான சியுவாங்கை விடுவித்ததாகும்.

சமீபத்திய வைட்-தாஹிரி கைதிகள் பரிமாற்றத்தைப் போலல்லாமல், டிசம்பர் பரிமாற்றம் அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகளுக்கிடையில் உயர்மட்ட சந்திப்புகளைக் கண்டது, இது டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இருதரப்பு அமெரிக்க-ஈரானிய பேச்சுவார்த்தைகளின் அரிய நிகழ்வாகும்.

இதுபோன்ற கூட்டத்திற்கு மீண்டும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது, ஆனால் ஈரானிய அதிகாரிகள் இப்போது இராஜதந்திர முயற்சிகளை ட்ரம்பின் நடவடிக்கைகள்  நாசப்படுத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர். தெஹ்ரான் பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கவில்லை என்று ரூஹானி வெளிப்படையாக அறிவித்தார், ஆனால் ஈரானின் அரசியல் சூழ்நிலை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எந்தவொரு முயற்சிக்கும் விரோதமாக மாறியுள்ளது.

2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட (கைதிகள் பரிமாற்றம் தொடர்பான) நேர்மறையான இராஜதந்திர நடவடிக்கையானது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் இராஜதந்திர முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும், ஈரானிய இராணுவத் தளபதி ஜெனரல் காஸெம் சுலைமானியின் படுகொலையுடன் நசுக்கப்பட்டது.

ட்ரம்ப்பின் மறு தேர்தல் வெற்றி வாய்ப்புகள் அருகிவரும் நிலையில், ஈரான் தொடர்பான ஐ.நா. கூட்டத்தில் இடம்பெற்ற சூடான விவாதம், அமேரிக்காவை எதிர்ப்பதற்கு உலக சக்திகளிடம் இருந்த அச்சம் நீங்கிக்கொண்டு வருவதை காட்டுகிறது. ஈரான் மீதான ஆயுதத் தடையை புத்துயிர்ப்பதற்கான  அமெரிக்க முயற்சி, ஒப்பந்தத்தின் மீதிருந்த குறைந்தளவு நம்பிக்கையையும் இல்லாதொழித்துள்ளது.

'அதிகபட்ச அழுத்தம்' ஈரானை தன்னுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதற்காக இழுத்துவரும் என்று ட்ரம்ப் நம்புகிறார். ஆனால் ட்ரம்பின் இந்த கொள்கை ஈரானின் சரணடைதலுக்கோ அல்லது சரிவுக்கோ ஒருபோதும் வழிவகுக்காது, மாறாக அமெரிக்க-ஈரான் விரோதப் போக்கை அதிகப்படுத்தி, மத்திய கிழக்கு பிரதேசத்தில் நீண்டகால யுத்த சூழ்நிலைக்கே இட்டுச்செல்லும் என்று அந்த சஞ்சிகை மேலும் தெரிவித்துள்ளது.

"ஒரு மாற்று அணுகுமுறை சாத்தியமே, ஆனால் டிரம்ப் பயனளிக்காத அதிகபட்ச அழுத்தத்தைத் தள்ளிவிட்டு வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்குத் தேவையான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.

சர்வதேச உறவுகள் மற்றும் ரியல் எஸ்டேட் சந்தை ஆகியவை ஒத்தவை அல்ல. இருபக்க நன்மையின், பரஸ்பர மரியாதை அடிப்படையில் சமரசம் செய்துகொள்ளல் அன்றி அச்சுறுத்தல், கடும் தடைகளை விதித்தல் ஒருபோதும் ஒப்பந்தங்களை வெல்லாது.

ட்ரம்ப் தன்னை ஒரு டீலராக வடிவமைத்துக் கொண்டாரே அன்றி நடக்கவிருக்கும் நவம்பர் தேர்தலுக்கு முன்னதாக அவர் வெளியுறவுக் கொள்கை வெற்றிகளைப் பெறவில்லை. நேர்மறையான வெளியுறவுக் கொள்கை மரபின் ஏதேனும் ஒன்றை அவர் விரும்பினால், அவர் போருக்கான பாதையிலிருந்து விலகி ஈரானுடனான பேச்சுவார்த்தைகளுக்கான பாதையில் செல்ல வேண்டும், ”என்று அந்த சஞ்சிகை மேலும் கூறியது.

http://kayhan.ir/en/news/80214/iran-%E2%80%98becoming-immune-to-pressure%E2%80%99

 


No comments:

Post a Comment