Tuesday, June 3, 2025

சிறந்த தலைமைத்துவத்தின் எடுத்துக்காட்டு புரட்சித் தலைவர் ஆயத்துல்லாஹ் இமாம் கொமெய்னி அவர்களின் வாழ்க்கை

The life of revolutionary leader Ayatollah Imam Khomeini, an example of great leadership


ஜூன் 3, 2025, இமாம் ருஹுல்லா முசவி கொமெய்னி அவர்களின் மறைவின் 36வது ஆண்டு நினைவு தினமாகும்.



 

வரலாற்றின் போக்கை ஆழமான வழிகளில் மாற்றிய ஒரு உயர்ந்த ஆளுமை ஆயத்துல்லாஹ் இமாம் கொமெய்னி அவர்கள். உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் இந்த உலகத்தை விட்டு பிரிந்த இந்த மகத்தான மனிதரின் 36 வது ஆண்டு நிறைவை (ஜூன் 3) நினைவுகூரும் வேளையில், உலக அரங்கில் அவரது மரபு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அவர் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் வெற்றிகரமான புரட்சியாளராகவும், யாராலும் ஒப்பிடமுடியாதவராகவும், நிகரற்றவராகவும் இருந்தார் என்பதை ஏகமனதாக கூறலாம்.

 

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் மார்க்க செயல்பாடு

 

1902 செப்டம்பர் 24 அன்று பிறந்த ரூஹுல்லாஹ் முஸ்தபாவி முசவி கொமெய்னி அவர்கள் ஒரு ஈரானிய ஷியா மார்க்க அறிஞர் ஆவார். அவர் 1979 இல் முகமது ரிசா ஷா பஹ்லவியை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிந்த இஸ்லாமிய புரட்சியை வழிநடத்தி, வெற்றிக்கு இட்டுச்சென்று, அடுத்த 10 ஆண்டுகளுக்கு இஸ்லாமிய குடியரசொன்றை ஸ்தாபித்து அதன் உச்ச தலைவராக வழிநடத்தினார். இம்மாமனிதர் 1989 ஜூன் 3 அன்று இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றார்.

 

ஆயத்துல்லாஹ் கொமெய்னி அவர்கள் ஹஸரத் பாத்திமாவின் பரம்பரையில் வந்த ஷியா மதத் தலைவர்களின் வம்சத்தில் பிறந்தவர். அவர் ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது, ​​அவரது தந்தை அப்போதைய அநியாயக்கார ஆட்சியாளர்களின் கூலிப்படைகளால் கொமெய்ன் நகருக்கும் அராக்கிற்கும் இடையில் உள்ள வீதியில் ஷஹீத் ஆக்கப்பட்டார். தந்தையின் மறைவுக்கு பிறகு, ஆயத்துல்லாஹ் கொமெய்னி அவர்களை அவரது தாயார் வளர்த்தார், தாயின் மரணத்திற்குப் பிறகு, அவரது மூத்த சகோதரர் முர்தசா அவரை பொறுப்பேற்றார். ரூஹுல்லாஹ் கொமெய்னி அவர்கள் பல்வேறு இஸ்லாமியப் பள்ளிகளில் கல்வி பயின்றார், மேலும் 1922 ஆம் ஆண்டில் அவர் ஷியா புலமைக்கான ஈரானின் அறிவுசார் மையமான கும் நகரில் குடியேறினார். 1930 களில் அவர் அங்கு ஒரு முக்கிய மார்க்க அறிஞரானார், மேலும் அவரது சொந்த ஊரான கொமெய்ன் என்ற பெயரால் அறியப்பட்டார்.

 

ஒரு ஷியா மார்க்க அறிஞராகவும், ஆசிரியராகவும், ஆயத்துல்லாஹ் கொமெய்னி அவர்கள் இஸ்லாமிய தத்துவம், பிக்ஹ் சட்டம் மற்றும் நெறிமுறைகள் குறித்து ஏராளமான ஆக்கங்களை எழுதியுள்ளார், ஆனால் ஈரானின் ஆட்சியாளர் முகமது ரிசா ஷா பஹ்லவிக்கு அவர் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தது, மேற்கத்திய தாக்கங்களை அவர் கண்டித்தது மற்றும் இஸ்லாமிய தூய்மையை அவர் சமரசமின்றி ஆதரித்ததே ஈரானின் இளைஞர்கள் அவரை பின்தொடர மிக முக்கியமான காரணிகளாக அமைந்தன.

 

1950 களில் அவர் ஒரு ஆயத்துல்லாஹ்வாக, ஒரு முக்கிய மதத் தலைவராகப் பாராட்டப்பட்டார், மேலும் 1960 களின் முற்பகுதியில் அவர் ‘சிரேஷ்ட ஆயத்துல்லாஹ்’ என்ற பட்டத்தைப் பெற்றார், இதன் மூலம் ஈரானில் உள்ள ஷியா சமூகத்தின் உச்ச மதத் தலைவர்களில் ஒருவரானார். ஷாவின் திட்டத்தை வெளிப்படையாக விமர்சிப்பவராக இருந்ததனாலும், அரசாங்க எதிர்ப்பு கலவரங்களைத் தூண்டிய குற்றச்சாட்டிலும் 1963 இல் ஆயத்துல்லாஹ் கொமெய்னி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு வருட சிறைவாசத்திற்குப் பிறகு, ஆயத்துல்லாஹ் கொமெய்னி அவர்கள் நவம்பர் 4, 1964 அன்று ஈரானில் இருந்து நாடுகடத்தப்பட்டார். இறுதியில் அவர் ஈராக்கின் நஜாஃப் நகரில் குடியேறினார். இக்காலத்திலேயே அவர் ஈரானில் ஒரு இஸ்லாமிய குடியரசின் அடித்தளத்தை அமைக்கும் "சட்ட வல்லுநரின் பாதுகாவலர்" பற்றிய தனது கோட்பாடுகளை உருவாக்கி அறிவிக்கத் தொடங்கினார். 1970 களின் நடுப்பகுதியில் இருந்து, ஷாவின் ஆட்சியின் மீது பொதுமக்களிடையே அதிருப்தி அதிகரித்ததால், ஈரானுக்குள் ஆயத்துல்லாஹ் கொமெய்னி அவர்களின் செல்வாக்கு வியத்தகு முறையில் வளர்ந்தது. மேலும் 1978 இன் பிற்பகுதியில் நடந்த பாரிய ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை ஆகியவை ஜனவரி 16, 1979 அன்று ஷா ஈரானில் இருந்து வெளியேற்ற வழிவகுத்தது. பிப்ரவரி 1, 1979 அன்று ஆயத்துல்லாஹ் கொமெய்னி அவர்கள் தெஹ்ரானுக்கு வெற்றியுடன் திரும்பினார், மேலும் ஈரானின் புரட்சியின் மதத் தலைவராகப் பாராட்டப்பட்டார்.

 

சிறந்த ஆளுமை

 

ரூஹுல்லாஹ் கொமெய்னி அவர்கள் ஒரு பன்முக ஆளுமை கொண்டவர்: முஜ்தஹித் (இஸ்லாமிய சட்டத்தில் அதிகாரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நபர்), ஃபகீஹ் (இஸ்லாமிய சட்ட அறிஞர்), அரசியல்வாதி, புரட்சியாளர், அதே போல் ஒரு கவிஞர்.

 

வெளி உலகிற்கும், பல முஸ்லிம்களுக்கும், இமாம் கொமெய்னி அவர்கள் மிகவும் பிரபலமானவர், 1978-1979 இல் ஈரானின் இஸ்லாமியப் புரட்சி சமகால முஸ்லிம் வரலாற்றில் உண்மையிலேயே ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும், ஏனெனில் இக்காலம் வரை முஸ்லிம்கள் தோல்வியையும் அவமானத்தையுமே மிகையாக சந்தித்திருந்தனர்.

 

200 ஆண்டுகள் காலனித்துவத்தில், காலனித்துவவாதிகள் சமூக-அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளை மாற்றியது மட்டுமல்லாமல், கல்வி முறைகளையும் மாற்றினர், உள்ளூர் மொழிகளை காலனித்துவ மொழிகளால் மாற்றினர், மேலும் காலனித்துவ சமூகங்களின் சுவைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்களை மாற்றினர். ஷாவின் ஆட்சிக் காலத்தில் ஈரான் விதிவிலக்கல்ல. ஏராளமான எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் கொண்டிருந்தாலும், ஈரானில் பெரும்பான்மையான மக்கள் வறுமையில் வாடினர்; ஷாவைச் சுற்றியுள்ள ஒரு சிறிய ஒட்டுண்ணி வர்க்கம் மட்டுமே மகத்தான செல்வத்தைப் பெற்றது. ஷாஹின்ஷா (மன்னர்களின் மன்னன்) என்று தன்னை அடையாளப்படுத்தும் ஷா, மேற்கத்திய நாடுகளுக்கு முற்றிலும் அடிபணிந்தவராக இருந்தார்.

 

இந்தப் பின்னணியில்தான் இமாம் கொமெய்னி அவர்கள் களத்தில் இறங்கினார். இந்தப் புரட்சி, அதன் இயல்பு காரணமாக, ‘புரட்சிகளை புரட்சிமயப்படுத்தும் புரட்சி என்று அடையாளம் காணப்பட்டது, ஏனெனில் இது நிராயுதபாணியான மக்கள் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அந்நியச் சார்பிலிருந்து முற்றிலும் விடுபட்டது.

 

இமாம் கொமெய்னி அவர்களுக்கு நாட்டின் விவகாரங்களில் ஏறக்குறைய முழு அதிகாரமும் ஒப்படைக்கப்பட்டது, ஆனால் அவர் மக்களின் விருப்பப்படி இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில் குடியரசு ஆட்சி முறையைத் தேர்ந்தெடுத்து நிறுவினார். (தாஹா முஸம்மில், 2022)

 

அவரது வாழ்க்கையைப் படிக்கும்போது, ​​இஸ்லாத்தைப் பற்றிய ஆழமான ஆய்வு மற்றும் அன்றாட வாழ்க்கையின் யதார்த்தத்தைப் பற்றிய கூர்மையான விழிப்புணர்வு, முக்கிய அரசியல் முடிவுகள் மற்றும் மக்களின் வாழ்க்கையில் அவற்றின் தாக்கம் ஆகியவை அவரது அரசியல் செயல்பாடுகளுக்கு அடித்தளமாக அமைந்திருப்பதைக் காணலாம்.

 

முஸ்லிம் உலகின் பிற பகுதிகளில், குறிப்பாக "சுன்னி" உலகில், அவரது முன்னோடிகள் அல்லது சமகாலத்தவர்களைப் போலல்லாமல், இமாம் மூன்று பெரிய தடைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது. முதலாவது ஷியா அரசியல் சிந்தனை; இரண்டாவது அடக்குமுறை ஆட்சி; மூன்றாவது பலவீனமான நாடுகளின் கொள்கைகளில் இன்றளவிலும் ஆதிக்கம் செலுத்தும் மேற்கத்திய அதிகாரம்.

 

பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்ட வரலாற்றின் மந்த நிலையை வெல்வது உண்மையிலேயே ஒரு மிகவும் கடினமான பணியாகும். இமாம் இதை ஹிக்மா (ஞானம்) மற்றும் துணிச்சலுடன் சாதித்தார். ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் முடிவுக்கு வரும் வகையில், ஈரானிய இளைஞர்களை - ஆண்களையும் பெண்களையும் - தூண்டுவதன் மூலம் அவர் அணிதிரட்டினார். புரட்சியின் போது ஷாவின் அதிக ஆயுதம் ஏந்திய இராணுவத்தை எதிர்கொண்டு தோற்கடித்தது அவரைப் பின்தொடர்ந்த இளைஞர்கள்தான்.

 

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீதான முழுமையாக நம்பிக்கையே, இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கான போராட்டத்தில் அவருக்கு பெரும் சவால்களைத் தாண்டிச் செல்ல உதவியது.

 

இமாமின் தனிப்பட்ட வாழ்க்கை

 

ஆடம்பரத்தை முற்றிலும் துறந்த ஆயத்துல்லாஹ் இமாம் கொமெய்னி அவர்கள் மிகவும் எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்து வந்தார்கள். சமகால தோழர்கள், சகாக்கள், அரசியல்வாதிகள் ஆகியோரிடம் எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்கள். உலக தலைவர்களுடனான சந்திப்புகளிலும் கூட தன்னிலையை மாற்றிக்கொள்ளாமல் எளிமையை கடைபிடித்தார்கள். அவரது சமூக நடத்தை, நீதி நிர்வாகம் மற்றும் விருப்பு வெறுப்பு அனைத்தும் இறை திருப்தியை நாடியதாகவே இருந்தன.

 

இறைவனுடனான அவரது நெருக்கம் மற்றும் அவரது தூய்மை ஆயத்துல்லாஹ் இமாம் கொமெய்னி அவர்களை தனித்துவமான ஒருவராக பிரதிபலித்துக் காட்டுகிறது. இமாமின் ஆன்மீக நிலைகள், அவரது ஏகத்துவ புரிதல், அவரது வழிபாட்டுச் செயல், ஆகியவை உண்மையில் சாதாரண மனிதர்களால் இலகுவில் அடைய முடியாத உச்சமாகும்.

 

No comments:

Post a Comment